தீபவிளக்கு எரிகிறது!
-தேனுகாமணி
விடியல் விடிகிறது
நல்விடியல் விடிகிறது
அனுதினம் மனம்கொண்ட
தீமைகள் மடிகிறது
இயலாமைகள் முடிகிறது!
அதிகாலை நீராடுவோம்
மனத்தீமைகளுக்குத் தீயூட்டுவோம்
எண்ணெயில் இலட்சுமி தேவி
அரப்பில் சரஸ்வதி தேவி
தண்ணீரில் கங்கா தேவி
குங்குமத்தில் கெளரி தேவி
சந்தனத்தில் பூமா தேவி
ஆம் இவர்கள்
வாசம் புரிகிறார்கள்…
மனத்தின்
பொய்வேசம் களைகிறார்கள்!
தீப ஒளித்திருநாள்
நரகன் உயிர் மடிந்த நாள்
ராமன் வனவாசம் முடித்த நாள்
மகாவீரர் நிர்வாணம் அடைந்த நாள்
பொற்கோயில் பணி தொடக்க நாள்
ஆம் இப்படித்தான்…
தீப ஒளித்திருநாளை
பல நாடுகள்
பல இனங்கள்
கொண்டாட வேறு வேறு
காரணங்கள்
கொண்டாட்டங்களில் தான்
மனம் அடைகிறது
உண்மை நெறியின்
பூரணங்கள்!
வாருங்கள்…
புத்தாடை அணிந்து
புதிதாகப் பிறப்போம்
இனிப்புகள் பகிர்ந்து
இனிதாக இருப்போம்
இயன்றதைச் செய்து
இவ்வுலகில்
மானுடம் காப்போம்!
விடியல் விடிகிறது
நல்விடியல் விடிகிறது
தீபவிளக்கு எரிகிறது
தீமைகள் மடிகிறது!