குறளின் கதிர்களாய்…(189)
செண்பக ஜெகதீசன்
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோ னெனக்கேட்ட தாய்.
-திருக்குறள் -69(புதல்வரைப் பெறுதல்)
புதுக் கவிதையில்…
அன்னைக்கு ஆனந்தம்
தன்னை
அம்மாவென அழைக்க
மகன் பிறந்தபோது..
அதைவிடப் பேரானந்தம்,
அவனை அடுத்தவர்
சான்றோன் என
சொல்வதைக் கேட்கும்போதுதான்…!
குறும்பாவில்…
பெற்ற பொழுதைவிடப் பேரானந்தம்
பெற்ற தாய்க்கு, மற்றவரவனைச்
சான்றோனென்பதைக் கேட்கையில்தான்…!
மரபுக் கவிதையில்…
அன்னை யென்றே அழைத்திடத்தான்
அன்பு மகனைப் பெற்றவுடன்
அன்னை யடைவாள் ஆனந்தமே,
அகில வாழ்வில் அவளுந்தான்
இன்னும் மேலாய் மகிழ்ந்திடுவாள்
இந்தப் பிள்ளைக் கற்றுயர்ந்தே
மன்றம் மெச்சிடும் சான்றோனென
மற்றவர் சொல்லக் கேட்கையிலே…!
லிமரைக்கூ..
தாய்மகிழ்வாள் தன்மகன் பிறப்பில்,
அதைவிட அதிகமாய் மகிழ்ந்திடுவாள்
அம்மகன் சான்றோனெனும் சிறப்பில்…!
கிராமிய பாணியில்…
சந்தோசம் சந்தோசம்
சம்சார வாழ்க்கயில
புள்ளபொறப்பு சந்தோசம்..
அம்மாண்ணு கூப்புடத்தான்
மகன்பொறந்தா
பெத்தவளுக்கு சந்தோசம்..
அதுலயும்
அவன்வளந்து பெரியவனா
நாலெழுத்து படிச்சி
நல்லவண்ணு
நாலுவரு சொல்லக்கேட்டா
பெத்தவளுக்கு அது பெரும்சந்தோசம்..
சந்தோசம் சந்தோசம்
சம்சார வாழ்க்கயில
புள்ளபொறப்பு சந்தோசம்…!