பெருமிதமெனும் மெய்ப்பாட்டில் உரையாசிரியா்களின் அகநானூற்றுத் திறன்
-பீ.பெரியசாமி
1.முன்னுரை
நகை, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்ற எட்டையும் முதன்மையான எண்வகை மெய்ப்பாடுகள் என்கிறார் தொல்காப்பியா். (தொல்.மெய்.நூ3) அவற்றுள் பெருமிதமெனும் மெய்ப்பாட்டிற்கான தோற்றுவாய்களாக, கல்வி, தறுகண், புகழ்மை, கொடை என்பனவற்றை விரித்துரைத்துள்ளார். இக்கட்டுரை தொல்காப்பியா் விரித்துரைக்கும் பெருமிதத்திற்குரிய மெய்ப்பாடுகளுக்கு உரைவகுத்த உரையாசிரியா்களின் உரைகளில் அகநானூற்றுப் பாடல்கள் எவ்வாறு எடுத்தாளப்பட்டள்ளன என்பதனை ஆராய்கிறது.
1.1 பெருமிதம் தோன்றும் களன்கள்
பெருமிதமெனும் மெய்ப்பாடு தோன்றும் களன்களைத் தொல்காப்பியா்,
”கல்வி தறுகண் புகழ்மை கொடையெனச்
சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (‘தொல்.மெய்.9)
எனும் நூற்பாவினில் கூறியுள்ளார்.
1.2 உரையாசிரியா்கள் பார்வையில் பெருமிதமெனும் மெய்ப்பாடு
பெருமிதம் வீரத்திற் பிறப்பது என இளம்பூரணரும், பெருமிதமென்பது வீரம் எனப் பேராசிரியரும், பெருமிதம் – வீரம் எனப் புலவா் குழந்தையும் உரை கொள்வா். இவற்றின்வழி பெருமிதமென்பது வீரம் என அறியப்படுகிறது.
1.2.1 கல்வி
கல்வியென்பது தவ முதலாகிய விச்சை (பேரா.மெய்.நூ.9) எனப் பேராசிரியா் உரை கொள்வார். இதன்வழி கல்வி என்பது இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழறிவும், படைக்கல்வியும், நுண்கலையும் அடங்குமென்பது அறியப்படுகிறது. இதனை விளக்க பேராசிரியரும் புலவா் குழந்தையும் கலி.141ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனா்.
1.2.2 தறுகண்
தறுகணென்பது அஞ்சத்தக்கன கண்ட இடத்து அஞ்சாமை எனப் பேராசிரியரும்; தறுகண்-தறுகண்மை-அஞ்சாமை எனப் புலவா் குழந்தையும் உரை கொள்வா். இவற்றின் வழி தறுகண் என்பது அஞ்சத்தகுந்தன நடத்தவிடத்து அஞ்சாது செயல்படுதல் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்க இளம்பூரணர் புறப். வெண்பா.78.ஐயும் பேராசிரியரும் புலவா் குழந்தையும் கலி.141 ஐயும் எடுத்துக்காட்டியுள்ளனா்.
1.2.3 புகழ்மை
புகழ்மை என்பதனை இசைமையெனப் பொருள் கொள்வர் பேராசிரியரும் புலவர் குழந்தையும். “இசைமை “ -புகழ்; ஒலி; சீர்த்தி – எனப் பொருள் கூறுகிறது கழகத் தமிழ் அகராதி (க.த.அ.ப.98). “புகழ்மை“ – புகழ்; புகழுடைமை- (க.த.அ.ப.664) எனப் பொருள் கூறுகிறது கழகத் தமிழ் அகராதி. இதன்வழி, புகழ்மை எனினும் இசைமையெனும் புகழ் என்பதனை உணா்த்துகிறது என்பது அறிப்படுகிறது.
இசைமையென்பது இன்பமும் பொருளும் இறப்பப் பயப்பினும் பழியொடு வருவன செய்யாமையென பேராசிரியரும், இசைமை-புகழ்; அதாவது, இன்பமும் பொருளும் மிகுதியாக உண்டாயினும் பழிக்கத் தகுவன செய்யாமை எனப் புலவா் குழந்தையும் பொருள் கொள்வா். இவற்றின் வழிப் புகழ்மையென்பது நம்வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியும் செல்வமும் கிடைப்பதாக இருப்பினும் மற்றோர் பழிக்க நேரும் செயலை செய்யாது விடுத்தல் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்கப் பேராசிரியரும் புலவர் குழந்தையும்,
”கழியாக் காதல ராயினுஞ் சான்றோர்
பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார்” (அகம்-112)
எனும் அகநானூற்றுப் பாடலை எடுத்தாண்டுள்ளனா். இப்பாடலானது நீங்காத காதலையுடையவராயினும் சான்றோர் பழியோடு வரும் இன்பத்தை விரும்ப மாட்டார்கள் என்கிறது. எனவே புகழோடு வருமின்பத்தை விரும்புவா் என்றமையால் புகழ்பற்றி வந்த பெருமிதத்தை உணா்த்தியது.
1.2.4 கொடை
கொடையென்பது உயிரும் உடம்பும் உறுப்பும் முதலாகிய எல்லாப் பொருளும் கொடுத்தல் எனப் பேராசிரியா் உரை கொள்வார். இதன்வழி கொடையென்பது தன்னிடம் உள்ள அனைத்தையும் வேண்டுவோருக்கு வேண்டியவாறு அளித்தல் என்பது அறியப்படுகிறது. இதனை விளக்கப் பேராசிரியா், கலி-141, புறம்-43 ஆகிய பாடல்களையும் புலவா் குழந்தை கலி-141 ஆம் பாடலையும் எடுத்தாண்டு ள்ளனா்.
1.2.5 சொல்லப்பட்ட பெருமிதம்
சொல்லப்பட்ட பெருமிதம் என்றமையால் உரையாசிரியா்கள் (பேராசிரியா், புலவா் குழந்தை) காமம் பற்றியும் பெருமிதம் பிறக்கும் என்கின்றனா். இதனை விளக்கப் பேராசிரியரும் புலவா் குழந்தையும் புறம் -73 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனா்.
1.3 முடிவுரை
பெருமிதமெனும் இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர் புறப்- வெண்பா ஒரு பாடலையும், பேராசிரியா் கலித்தொகை -1, அகநானூறு -1, புறநானூறு-2 என நான்கு பாடல்களையும், புலவா் குழந்தை கலித்தொகை, அகநானூறு புறநானூறு ஆகியவற்றில் தலா ஒரு பாடல் என மூன்று பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனா். கலி-141, ஆம் பாடலை மட்டும் பேராசிரியரும், புலவா் குழந்தையும் கல்வி, தறுகண், கொடை எனும் மூன்று மெய்ப்பாடுகளையும் விளக்க எடுத்தாண்டுள்ளனா்.
உரையாசிரியா்கள் (இளம்பூரணர், பேராசிரியா், புலவா் குழந்தை) அகநானூற்றில் (112) ஒரு பாடலையும், கலித்தொகையில் (141) ஒரு பாடலையும் புறநானூற்றில் (43, 73) என இரண்டு பாடல்களையும் புறப் வெண்பா-78 ஆம் நூற்பாவையும் என ஐந்து உதாரணப்பாடல்களை எடுத்தாண்டுள்ளனா். இவற்றின் வழி புறநானூறு தவிர்த்த ஏனைய வற்றிலிருந்து தலா ஒரு பாடல் எடுத்தாளப்பட்டுள்ளது என்பது குறிப்பாக அகநானூற்றில் ஒரு பாடல் மட்டுமே எடுத்தாளப்பட்டுள்ளது என்பது முடிவு.
***
கட்டுரையாசிரியர்
தமிழ்த்துறைத் தலைவர்
டி.எல்.ஆர். கலைமற்றும் அறிவியல் கல்லூரி
விளாப்பாக்கம்