-மேகலா இராமமூர்த்தி

kids with a young lady

கண்ணைக் கவரும் வண்ணப் பசுமைக்குமுன் காண்போர் எண்ணம் கவரும் வன்ன மழலையர் மாநாடு நடத்த, அதனைக் கைகோத்து வேடிக்கை பார்க்கிறார் இளம்பெண்ணொருவர்! ஆர்வத்தைத் தூண்டும் இந்த இனிய காட்சியைத் தன் படப்பிடிப்புக் கருவியில் அள்ளிவந்திருப்பவர் திரு. கோகுல்நாத். படக்கவிதைப் போட்டிக்கு இதனைத் தேர்ந்தெடுத்துத் தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

நம் உளம் களிக்கும் வண்ணம், விழிகள் குளுமையில் குளிக்கும் வண்ணம் எங்கும் படர்ந்திருக்கின்றது இச்சையூட்டும் மரகதப் பச்சை வண்ணம்!

எங்கெங்கு காணினும் பசுமையடா – அங்கே
தங்க மழலையர் பேசிடும் காட்சி அருமையடா! என்று பாடத்தோன்றுகிறது இவ்வெழிற் காட்சிகண்டு!

இனி, கவிதையெனும் பொற்தூரிகையால் இக்காட்சிக்கு மேலும் வலிவும் பொலிவும் சேர்க்கப் புறப்பட்டு வருகிறார்கள் பாவலர்கள்.

*****

மருள்நீக்கியை நாவுக்கரசர் ஆக்கினார் அக்கை திலகவதியார்; அருள்மொழியை இராசராசன் ஆக்கினார் அவர் தமக்கை குந்தவை நாச்சியார். அதுபோல் அன்னையாய் அறிவுரை பகரும் அக்கை சொல் கேட்டால் அகிலத்தை வெல்லலாம் எனும் வாழ்வியல் உண்மையைத் தன் கவிதையில் சிறப்பாய்ப் செப்பியிருக்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

தமக்கையும் தாயாவாள்:

பச்சை வண்ண ஆடைகட்டிய மலை மகள்!
மலைமகள் அருகே குழந்தைகளோடு நிற்கும் தாய் இவள்!
பிள்ளைகளைப் பெற்றுத் தந்ததால் அவள் பெற்றவள்!
அன்னையாய் இவளை அடைந்ததால்
இப்பிள்ளைகள் பேறு பெற்றவர்கள்!
கல்விச்சாலைக்கு செல்லக் காத்திருக்கும் பிள்ளைகள்!
நாளைய நல்ல பாரதத்தை நிர்மாணிக்கக் ,
காத்திருக்கும் சிற்பிகள்!
பட்டி தொட்டியெல்லாம் பள்ளிக்கூடம் கட்டிவைத்து
கல்விக் கண் திறந்து வைத்த கர்ம வீரன் காமராசர்!
கனவுகளை நனவாக்க வந்த நல்முத்துக்கள்!
அக்கா வார்த்தைகளை அப்படியே கேட்கின்ற
அன்புத் தம்பிதனை இங்கே பாருங்கள்!
தமக்கையும், இன்னொரு தாய், தம்பிக்கென்ற
உண்மையை உணருங்கள்!.
திலகவதியார் வளர்ப்பாலே, மருள் நீக்கியார்
நாவுக்கரசரானது நாமறிவோம்!
குந்தவை வளர்ப்பாலே, ராச ராச சோழன்
சிகரம் தொட்டதை நாமறிவோம்!
அருணகிரி நாதர், முருகன் அருள் பெற்றதும்
அக்கா வளர்ப்பாலே நாமறிவோம்!
தமக்கை இருந்துவிட்டால் தம்பியர் வாழ்க்கை எல்லாம்
தரணியில் உயர்ந்தோங்கும்!

*****

சோலையில் விளையாட விரும்பும் தம்பியைப் பார்த்து, ”கல்விச்சாலைக்கு வா அன்புத் தம்பி! ஒழுங்காய்ப் படித்தால்தான் ’நீட்’ தேர்வில் நாம் பெறலாம் வெற்றி!” என்று மனமுதிர்ச்சியோடு வாழ்வில் வெல்லும் வழிசொல்லும் அறிவார்ந்த அக்காவைக் காண்கிறோம் திரு. எஸ். கருணானந்தராஜாவின் கவிதையில்.

கொழுந்தெடுக்க யாருமின்னும்
கூடிடாத காலையில்
குழந்தைகளைப் பள்ளிக் கூடம்
கூட்டிச் செல்லும் தாயுடன்
விளைந்த தேயிலைப் பரப்பின்
விளிம்பிலுள்ள வீதியில்
விருப்ப மின்றிப் பள்ளி போக
வெறுத்த தம்பி சொல்கிறான்

தம்பி-
பச்சைவயல் அழகாகப் படர்ந்திருக்கு தேக் கொழுந்துப்
பற்றையெல்லாம் ஓடி விளையாடி – நாம
இச்சைப்படி இன்பமாக இந்த நாளைக் கழிச்சிடலாம்
என்னோட நீயும் கூட வாடி!

அக்கா-
நீட்டுத் தேர்வில் நீயும் நானும்
நெறைய மார்க்கு வாங்க வேணும் தம்பி -அதுக்கு
நேரகாலத்தோட நாம
பாதை போட்டு வச்சுக்கணும் தம்பி.
ஆட்டுவிக்கிற அம்மாவுக்கும்
அது தாண்டா ஆனந்தம் தம்பி
அதுக்காச்சும் பள்ளிக்கூடம்
அலுப்பில்லாமப் போக வேணும் தம்பி.

அடை மழை வந்தாலு மெண்ணு
கொடயக் கையில எடுத்துக்கிட்டு
கூட்டிப் போற அம்மாவுக்குத் தம்பி-நல்ல
பாட்டி போட மார்க் கெடுத்து
பரீட்சையில பாஸு பண்ணி
காட்ட வேணும் திறமையெல்லாம் தம்பி.

இப்பருந்தே படிச்சாத்தான்
எதிர்காலம் நமக்கிருக்கும்
தப்ப விட்டா தோத்துப் போவம் தம்பி-நாம
எப்ப வேணு முண்ணாலும்
எறங்கி விளையாடிக்கலாம்
இப்ப போவம் பள்ளிக்கூடம் தம்பி.

அன்னை-
நெஞ்சமெங்கும் தன் குழந்தை
நீட்டுத் தேர்வில் வெல்லணும்
கொஞ்சமும் குறைந்திடாது
மார்க்கு வாங்கிக் கொள்ளணும்
தஞ்சமது கல்விதான் தமக்கு என்று தாயவள்
தன்குழந்தை சொல்லும் வார்த்தை
தன்னிலே மகிழ்கிறாள்.

*****

”தேயிலை பறித்து நமைக் காக்கும் தாயிலையேல் நம் வாழ்வு என்னாகும் தம்பி? அந்த அன்னைக்கு நாம் செய்யும் கைம்மாறு, நன்கு கற்று வாழ்வில் நல்லபெயர் பெற்று வாழ்வதே!” என்று இளவலுக்கு இன்மொழி கூறும் தமக்கையின் உருவில் தோன்றுகிறாள் மற்றோர் அன்னை!” என்று சிலிர்க்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

இன்னொரு அன்னை…

வெளியூரு போன அப்பா
வரவில்லை நெடுநாளா..
வெளியே காட்டாமல் துக்கத்தை,

வெயிலினிலும் மழையினிலும்
தேயிலை பறித்துத் தேய்ந்து
வேலை பார்த்து நம்மைப்
படிக்கவைக்கிறாள் அம்மா..

வேடிக்கை விளையாட்டு
வேண்டாமடா தம்பி இப்போது,
நன்றாய் நாம் படித்து
நல்லபெயர் எடுப்போம்,
பொல்லாத உலகத்தில்
பெற்ற தாய்க்குப்
பெருந்துணையாய் இருப்போம்
அவள்
பேர் சிறக்க வாழ்வோம்..

அங்கே பிறக்கிறாள்
அக்கா உருவிலோர்
அன்னை…!

*****

குறும்பாவில் தேனிதழ் மழலையரைப் போற்றியிருக்கிறார் திரு. பா.வசிம். (பிழைநீக்கிப் பதிவிடுக கவிதைகளை). 

தேயிலைத் தோட்டத்தில் தேய்ந்த முகத்திற்கு பின்னால் நிற்கும்
தேன்இதழ்ச் செல்வங்கள்…

*****

அன்னையவள் தன் பிள்ளைகளை ஒழுக்கத்தோடும், நல்லநெறியோடும் வளர்ப்பதிலேயே குறியாயிருந்து குவலயம் போற்றும் உயர்ந்தோராய் அவர்கள் விளங்கப் பாடுபடும் திறத்தைச் சிறப்பாய்த் தன் கவிதையில் பதிவுசெய்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

எங்கள் அன்னை..!

எழில்கொஞ்சும் பசுமைத் தோட்ட மருகே..
…………எதிர்காலக் கனவுகளை ஏந்திய நினைவுடன்.!
அழகாய் மகிழும் குழந்தைகள் அவளருகே..
…………ஆனந்தமாய்ப் பள்ளி செல்லும் எண்ணமுடன்.!
ஒழுக்கமுடன் வளர்ந்து அவர்கள் உலகிலோங்க..
…………உற்றதுணையாக என்று மிருப்பார் அன்னை.!
நிழலாய்த் தம் பிள்ளைகளைத் தொடருவார்..
…………நெறியாய் வளர்ப்பதில் கவனமிகு கொள்வார்.!

கண்ணாகப் பெற்ற குழந்தையுடன் மகிழ்வார்..
…………கனிவான அன்பை அளவின்றிக் கொடுப்பார்.!
கண்ணசையா கவனமுடன் அவரைக் காத்து..
…………கருத்துடனே பள்ளிசெல்ல தினம் அனுப்புவார்.!
வண்ணச் சீருடையில் பள்ளிசெலும் அவர்களை..
…………வாழ்த்துடன் முத்தம் பொழிந்து அனுப்புவார்.!
எண்ணமுதச் செய்கையால் அன்னை என்பவள்..
…………எப்போதும் இதயத்தில் நிறைந்தே இருப்பாள்.!

*****

நல்ல கருத்துக்களைக் கனிமழலையருக்குத் தம் கவிதைகள்வழிச் சொல்லியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

*****

இன்றைய இயந்திர உலகில் இயற்கையை இரசிப்பதற்கோ, மழலையரோடு மனம் மகிழ்வதற்கோ யாருக்கும் நேரமில்லை. உருண்டோடும் செல்வத்தைத் துரத்திக்கொண்டே மக்கள் திரண்டோடுகின்றனர். அதனால் அன்பினால் நிரப்பப்படவேண்டிய இல்லங்கள்கூட வெறும் உறங்குமிடங்களாக (dormitories) மாறிவிட்டிருப்பது கண்கூடு. கணவனும் மனைவியும் காசைத் தேடுவதிலேயே கவனமாயிருப்பதால் அவர்தம் மாசற்ற மழலையரைத் தாங்க, அவர்களோடு விளையாட, கதைபேசப் பணிப்பெண்கள் தேவைப்படுகின்றார்கள். ஆம், அவர்களே இன்றைய மழலையர்க்குச் ’செவிலித் தாயர்.’ அந்த மாற்றுத் தாயின் அன்பு(ம்), அன்னையெனும் பொன்னில்லா இடத்தில் வைக்கப்படும் பூவைப்போல் நறுநாற்றமுடையதே (மணம்) என்பதைத் தன் தம்பிக்குப் பொறுப்போடு விளக்கும் சிறந்த அக்கையைத் தன் கவிதையில் அடையாளப்படுத்தியிருக்கும் திருமிகு. சொல்லின் செல்வியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

அவருடைய கவிதை…

மாற்றுத் தாய் இவளடா..தம்பி..!

வெறுப்பு காட்டாதேயடா தம்பி…
இவள் வேலைக்கு வந்தவள்தானே என்று!
அக்கா நான் கூறும் பேச்சைக் கேள் அமைதியாய் நீ நின்று!

அன்னைக்கோ நேரமில்லை அன்புகாட்ட
தந்தைக்கு நேரமில்லை பாசம் காட்ட

வேலைக்கு ஆளிருக்கு என்று அடிமையென இவளை ஏவி விட்டு
காசுக்கு அடிமைகளாய்
கம்பெனிக்குச் சென்றுவிட்டார் நம் பெற்றோர்!

நாம் கண்விழிக்கும் காலை முதல் கால்பதித்த பள்ளிவரை
உணவு ஊட்டி உறக்கம் காட்டி,
காசு வாங்கிப் பாசம் காட்டும் கண்ணியமான அன்னையிவள்!

பட்டுத்துணியும் கட்டுப் பணமும் தராத பாசத்தைத்
தட்டுநிறை உணவு தீர்க்காத நம் பசியை,
தேக்குக் கட்டிலும், பஞ்சு மெத்தையும் கொடுக்காத உறக்கத்தை
அடிமையென வந்தஇவள் அற்புதமாய்த் தந்தனளே!

முதல் தரத்துத் தேயிலைகள் வெளிதேசம் போவது போல்
வெளிநாட்டுக் கம்பெனியில் அடிமையாய் போயினரே நம் பெற்றோர்!
மூன்றாம் தரத் தேயிலைகள் தாய்நாட்டில் சுவைப்பதுபோல்
தாய்ப்பாசம்தனைக் காட்டி நம் வாழ்வில் சுவை ஊட்டுகிறாள் வேலைக்குவந்த இவள்!

வேசம் காட்டி நாசம் செய்யும் வஞ்சக உலகினிலே
பாசம் காட்டும் பாமரப் பெண்ணிவளை
நாசம் செய்யாதே உன் கடும் சொல்லால்!
மோசம் ஒன்றும் போக மாட்டாய் அவள் அன்பை ஏற்றுக் கொண்டால்!

எதிர்காலம் என்ற கணக்கை நோக்கிப்
பணத்தை சேர்க்க ஒடுகின்ற பெற்றோர் நமக்கிருந்தாலும்,
அன்னைபோல அன்புகாட்ட தந்தைபோல பாசம் காட்ட அடிமையிவள் இல்லையென்றால் அன்புக்கு ஏங்குகின்ற அனாதைகளே நாமுமின்று!

அன்னையெனப் பாவித்து அவள் மடி நீ சாய்ந்திட்டால்
விண்ணையும் வளைத்திட்ட சந்தோசம் கொண்டிடுவாள்
ஆசையாய் நீ பேசிவிட்டால் அகிலத்தையே தந்திடுவாள்!

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 132-இன் முடிவுகள்

  1. நன்றி தேர்வாளர்களே . மாண்புமிகு கவிஞர்களே.. தமிழை பயிலும் எனக்கு சிறந்த ஊட்டச்சத்து உங்கள் பாராட்டுக்கள். மிக்க நன்றி.. நன்றி.. நன்’றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *