மலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்கம் செய்தி – மு.இளங்கோவன்

0

மலேசியாவில் உலகத் தொல்காப்பிய மன்றம் தொடக்க விழா!

 

     தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைப் பரப்பும் வகையில் தமிழகத்திலும், பிற நாடுகளிலும் உலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை மலேசியாவில் தொடங்கப்பட உள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பந்திங்கில் உள்ள தெலுக் பங்ளிமா காராங் என்ற இடத்தில் 23.12.2017 சனி(காரி)க் கிழமை மாலை 6 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளை தொடக்க விழாவும், தொல்காப்பியர் நூலகம் திறப்பு விழாவும் நடைபெறுகின்றன.  இந்த நிகழ்ச்சிக்குத் தமிழகத்திலிருந்து முனைவர் மு.இளங்கோவன் வருகை தந்து சிறப்புரையாற்ற உள்ளார்.

     மலேசிய நாட்டில் வாழும் தமிழ்மக்கள் பல்வேறு இலக்கிய அமைப்புகளை ஏற்படுத்தித் தமிழ்மொழிக்குத் தொண்டாற்றி வருகின்றனர். இந்த நாட்டில் வாழ்ந்த தொல்காப்பிய அறிஞர் செ. சீனி நைனா முகம்மது அவர்கள் தொல்காப்பியப் பரவலுக்குப் பல்வேறு முயற்சிகளைச் செய்துவந்தார். அன்னாரின் மறைவு மலேசியத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது. அவரின் தொண்டினைத் தொடரவும், அவர் செய்த பணிகளை இயன்ற வரை நினைவுகூரவும், தொல்காப்பிய நூல் அறிமுகத்தைப் பரவலாக்கும் வகையிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளையை மலேசியாவில் தொடங்க உள்ளனர். உலகத் தொல்காப்பிய மன்றம் இந்தியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் பல கிளைகளுடன் இயங்குகின்றது.

     தொல்காப்பியத்தில் ஈடுபாடுடைய அறிஞர்களை அழைத்து, தொல்காப்பியத்தை மக்களுக்கும், மாணவர்களுக்கும் அறிமுகம் செய்யவும், தொல்காப்பியப் பணிகளில் ஈடுபடுவோரைச் சிறப்பிக்கவும் இந்த அமைப்பு விரும்புகின்றது.

     மலேசியாவின் மூத்த தமிழறிஞரான முனைவர் முரசு. நெடுமாறன், திரு. ம. மன்னர் மன்னன், திரு. திருச்செல்வம், திரு. கம்பார் கனிமொழி உள்ளிட்ட அறிஞர்கள் நெறியாளர்களாக இருந்து இந்த அமைப்பை நெறிப்படுத்த உள்ளனர். தமிழகத்திலிருந்து தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தொல்காப்பியச் சிறப்புகள் குறித்து உரையாற்ற உள்ளனர்.

     தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தைத் தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்யும் எங்கள் முயற்சி வெற்றியடைய அனைவரின் மேலான ஒத்துழைப்பினையும் வழிகாட்டலையும் வழங்க வேண்டும் என்று இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான ம. முனியாண்டி, சரசுவதி வேலு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

உலகத் தொல்காப்பிய மன்றம்  மலேசியாக் கிளை தொடங்கும் விவரம்:

தேதி: 23.12.2017 காரி(சனி)க் கிழமை

நேரம் : மாலை 6.00 மணி

இடம்: 32 B, ஜாலான் உத்தாமா 2, தாமான் ஜெயா உத்தாமா, தெலுக் பங்ளிமா காராங்,  பந்திங்,  சிலாங்கூர்

தொடர்புக்கு:

ம. முனியாண்டி 0060 164442029

சரசுவதி வேலு 0060 123189968

ஒருங்கிணைப்பாளர்கள்,

உலகத் தொல்காப்பிய மன்றம் – மலேசியாக் கிளை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *