அறிஞர் நன்னன் அவர்களுக்கு அஞ்சலி
தமிழர் நெஞ்சம் நிறைந்திருக்கும்.
நானிலத்தோர் நாளும் வாழ
நல்ல தமிழ் நவின்ற நன்னா!
நற்றமிழர் வாழ்வுயர நற்றமிழைக்
காத்த தமிழ்க் காரி!
இன்தமிழ் இலக்கணத்தை
இன்சுவையாய் எடுத்துரைத்து
இளையோரின் இதயத்தில்
இடம்பிடித்த இலக்கண மன்னா!
கொடிகாத்த குமரனைப் போல்
தமிழ் மொழி காத்த தூயவனே!
பகுத்தறிவுப் பகலவனாய்
பார்போற்ற தமிழ் வளர்த்தாய்
நன்னன் முறை என்றுலகோர்
நற்றமிழ் வளர வழிவகுத்தோய்!
சாத்துக்குடலில் பிறந்திட்ட தமிழ்க்கடலே!
பதினேழு ஆண்டுகளாய் பாமரரும்
பைந்தமிழைக் கற்றுக் கொள்ள
பைந்தமிழைக் கற்பித்த பாவலனே!
என்றமிழைக் கற்பதற்கோ
எமனுன்னை வானுலகம் அழைத்திட்டான்
எழுபது நூல்களையே எளிதாய் எழுதி எங்கள்
ஏற்றத்திற்கு வித்திட்ட
ஏற்றமிகு தமிழ்ப் புலவ!
தொடக்க கல்வி முதல் உயர்கல்வி நிலையம் வரை
தொடங்கியதே உம் பணியே!
நற்றமிழ் வளர்க்கும் அறப்பணியே!
தன்னை வளர்க்காது
தமிழ்தனையே வளர்த்திட்ட
தரணி புகழ் தமிழ் நன்னா! உலகில்
வந்த பணி முடிந்ததென்று
வானுலகப் பணியேற்று
வானுலகம் சென்றனையோ?
மொழிகாத்து இனம் காத்து
தமிழர் நலம் காத்த தமிழ் நன்னா!
தமிழும் தமிழுலகும்
உலகும் உள்ளவரை
உம்புகழ் நிலைத்திருக்கும்
தமிழர் நாவில் நன்னா உம் பெயரொலிக்கும் அதில்
தமிழர் நெஞ்சம் நிறைந்திருக்கும்.
முனைவர் சி.சேதுராமன் தமிழாய்வுத் துறைத்தலைவர்,
மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
Malar.sethu@gmail.com
முனைவர் சி.சேதுராமன் அவரது வாழ்க்கை வரலாறு பற்றி கூறுக