( எம் . ஜெயராமசர்மா … மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

 

தோல்கொடுத்துப் பால்கொடுத்து தோழ்கொடுக்கும் விலங்குகளை

வாழ்வெல்லாம் மனிதவினம் வசைபாடல் முறையாமோ

விலங்குகளோ தம்பாட்டில் இருக்கின்ற வேளைதனில்

வேணுமென்று மனிதன்சென்று வீண்தொல்லை கொடுப்பதேனோ !

 

பசுவந்து தன்பாலை கறவென்று சொன்னதில்லை

மான்வந்து தனைக்கொன்று தின்னென்று சொன்னதில்லை

ஆனைவந்து மனிதனிடம் அடிமையாக்கச் சொன்னதுண்டா

ஆனாலும் மனிதன்சென்று அத்தனையும் செய்கின்றான் !

 

காட்டிலே வாழ்ந்துவிட்டு நாட்டுக்கு வந்தபின்பும்

காட்டையே அழிப்பதற்குக் காரணந்தான் தெரியவில்லை

காட்டிலே இருக்கின்ற விலங்குகளை அழித்தொழிக்க

நாட்டிலே இருப்பார்க்கு யார்கொடுத்தார் அதிகாரம் !

 

அரசியலும் தெரியாது ஆட்சியிலும் ஆசையில்லை

அலைபாயும் மனங்கூட அவற்றுக்குக் கிடையாது

நிலபுலனும் சேர்க்காது நிம்மதியும் இழக்காது

வனமதிலே தன்பாட்டில் வசிக்கிறது விலங்கினம் !

 

சிங்கத்தைப் பிடிக்கின்றான் சிறுத்தையையும் பிடிக்கின்றான்

வெங்கரிகள் தனைநாளும் விரட்டியே பிடிக்கின்றான்

காட்டிலே இருப்பவற்றை நாட்டுக்கே கொண்டுவந்து

காட்சிப் பொருளாக்கிக் காசெடுத்து நிற்கின்றான் !

 

வேட்டையெனும் பெயராலே காட்டையே கலக்குகிறீர்

விலங்குகளைக் கொன்றுவிட்டு வீறாப்பும் பேசுகிறீர்

காட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாடும் மனிதர்களே

நாட்டிலுள்ள விலங்குகளை வேட்டையாட யார்வருவீரா !

 

மிருகவதை கூடாது எனச்சொல்லும் சட்டமெலாம்

வேட்டையாடும் வெறியர்களை விட்டுவைத்தல் எப்படியோ

காட்டைவிட்டு வந்தபின்பும் காருண்யம் தொலைத்துவிடின்

நாட்டிலே வாழுவதில் நம்வாழ்வு உயிர்ப்பெறுமா !

 

குரங்கென்றும் கழுதையென்றும் கரடியென்றும் திட்டுகிறோம்

நாயென்றும் மாடென்றும் நரியென்றும் நகைக்கின்றோம்

மிருகமாய் இருந்தாலும் இவைதிட்டை நினைப்பதுண்டா

மனிதராய் இருக்கும்நாம் திட்டுவது முறையாமோ !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *