மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) -12
க. பாலசுப்பிரமணியன்
திருவானவண்டூர் – அருள்மிகு கோசாலப்பன் பெருமாள்
வாழ்க்கைப் போரின் வசந்தங்கள் முடிய
வந்தனர் பாண்டவர் வனங்களைத் தேடி
வேதவன் கண்ணன் காட்டிய வழியில்
விடுதலை பெற்றிட வாழ்வை வென்றிட !
கோவினம் காத்த கோவிந்தன் நினைவில்
கோவிலைக் கட்டினான் பம்பையின் கரையில்
கோமகன் நகுலனும் கோசாலக் கண்ணனனை
கோவிலில் வைத்துக் குறைகள் சொல்லிட !
பம்பையின் கரையில் பாம்பணை அப்பனாய்
பண்டரிபுரத்திலே பாசத்தில் புண்டரி காட்சனாய்
பாதங்கள் போற்றிட கயையிலே விஷ்ணுவாய்
பாலங்கள் அமைத்தாய் பக்தர்கள் நெஞ்சுடன் !
கண்களில் நிறைந்ததோ கருணையின் கடலே
சொற்கள் படைத்ததோ அமுதெனும் கீதை
கைகளில் அபயம் காலங்கள் காத்திடும்
கண்ணனின் நெஞ்சமோ காதலின் சுரங்கம் !
வெம்பிய நெஞ்சங்களின் வேதனை களைந்திட
நம்பிய உள்ளங்கள் நலமுடன் வாழ்ந்திட
மங்கிய பாதைகளில் மங்களம் பெருகிட
மறவாமல் வணங்குவோம் மாதவன் மலரடி !