க. பாலசுப்பிரமணியன்

 

திருமொழிக்குளம் அருள்மிகு லட்சுமணஸ்வாமி திருக்கோயில்

download

வேள்வியில் சிறந்த வேதியன் அரீசன்

வேண்டிய நேரத்தில் விஷ்ணுவும் வந்தான்

வந்திடும் கலியில் வாழ்ந்திடும் வழியை

வரமெனத் தந்தான் திருமொழி சொன்னான் !

 

இறைவனின் திருமொழி இன்னல்கள் நீக்கிடும்

இடைவரும் தடைகள் எளிதினில் நீங்கிடும்

இதயத்தில் இராமனை இனிதே வைத்தால்

இன்பங்கள் அருளிடும் திருமொழிக் கூடம் !

 

இரகுகுலம் தழைத்திட இரகுவரன் நினைவை

இதயத்தில் ஏந்தியே  பரதனும் வந்தான்

இலக்குவன் சினத்தை இராமனே தணித்திட

இளையவர் இருவரும் அண்ணலைப் பணிந்தார் !

 

கோசலை மைந்தன் கோதண்ட இராமன்

குலத்தின் பெருமைக்கே கலங்கரை விளக்கம் !

குணத்தின் குன்றாய் குடிகளின் நெஞ்சில்

கானகம் இருந்தும் கடமைகள் ஆற்றினான் !

 

பாதுகை அருளிட பரதனின் ஆட்சி

பார்த்ததும் வியந்ததே அண்டங்கள் அனைத்தும் !

பாதங்கள் பணிந்த அனுமனை அணைத்து

பாவங்கள் அழித்தான் பண்புடை மன்னன் !

 

சினத்தால் செய்த சிறிதொரு பாவத்தை

மனத்தால் உணர்ந்தே இலக்குவன் படைத்தான்

குணத்தால் உயர்ந்த இராகவன் கோவில்

நினைத்தால் விலகும் பாவங்கள் அனைத்தும் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *