மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி ) 20
க. பாலசுப்பிரமணியன்
திருமொழிக்குளம் அருள்மிகு லட்சுமணஸ்வாமி திருக்கோயில்
வேள்வியில் சிறந்த வேதியன் அரீசன்
வேண்டிய நேரத்தில் விஷ்ணுவும் வந்தான்
வந்திடும் கலியில் வாழ்ந்திடும் வழியை
வரமெனத் தந்தான் திருமொழி சொன்னான் !
இறைவனின் திருமொழி இன்னல்கள் நீக்கிடும்
இடைவரும் தடைகள் எளிதினில் நீங்கிடும்
இதயத்தில் இராமனை இனிதே வைத்தால்
இன்பங்கள் அருளிடும் திருமொழிக் கூடம் !
இரகுகுலம் தழைத்திட இரகுவரன் நினைவை
இதயத்தில் ஏந்தியே பரதனும் வந்தான்
இலக்குவன் சினத்தை இராமனே தணித்திட
இளையவர் இருவரும் அண்ணலைப் பணிந்தார் !
கோசலை மைந்தன் கோதண்ட இராமன்
குலத்தின் பெருமைக்கே கலங்கரை விளக்கம் !
குணத்தின் குன்றாய் குடிகளின் நெஞ்சில்
கானகம் இருந்தும் கடமைகள் ஆற்றினான் !
பாதுகை அருளிட பரதனின் ஆட்சி
பார்த்ததும் வியந்ததே அண்டங்கள் அனைத்தும் !
பாதங்கள் பணிந்த அனுமனை அணைத்து
பாவங்கள் அழித்தான் பண்புடை மன்னன் !
சினத்தால் செய்த சிறிதொரு பாவத்தை
மனத்தால் உணர்ந்தே இலக்குவன் படைத்தான்
குணத்தால் உயர்ந்த இராகவன் கோவில்
நினைத்தால் விலகும் பாவங்கள் அனைத்தும் !