க. பாலசுப்பிரமணியன்

 

திருகொடித்தானம் அருள்மிகு மகாவிஷ்ணு திருக்கோவில்

 

அருள்மிகு அற்புத நாராயணப் பெருமாள்

venkateswara-swamy-8

பாற்கடலில் படுத்துறங்கும் பத்மநாபன் அற்புதமே

படுத்திருக்கும் பரந்தாமன் பாம்பணையம் அற்புதமே

பக்கத்தில் துணையிருக்கும் பங்கயவல்லி அற்புதமே

பதுமத்தில் அமர்ந்திருக்கும் பிரம்மனும் அற்புதமே !

 

சங்கோடு சக்கரமும் கைகளில் அற்புதமே

மங்காத அழகென்றும் மனதிற்கு அற்புதமே

பாங்கான திருநாமம் முகத்தினிலே அற்புதமே

பாதங்கள் தொட்டவுடன் பலனளிக்கும் அற்புதமே !

 

பாரெல்லாம் காக்கின்ற பண்பென்றும் அற்புதமே

பாவங்கள் அழித்திடவே பிறப்பெடுத்தாய் அற்புதமே

பாயிரங்கள் நாலாயிரமும் பேர்சொல்லும் அற்புதமே

பாவையர்கள் உள்ளத்திலே உருவெடுத்த அற்புதமே !

 

வாமனனாய் உருவெடுத்து வந்ததும் அற்புதமே

வானளாவி நின்றிருந்த விஸ்வரூபம் அற்புதமே

வான்மழைக்கு மலைதூக்கி நின்றதுவும் அற்புதமே

வந்தவினை தீர்த்துவிடும் அற்புதமே நாரணனே !

 

தேரோட்டி வந்தாய் பார்த்தனுக்கே அற்புதமே

தேரமர்ந்து தந்தாய் கீதையென்றும் அற்புதமே

தேடிவரும் அடியார்கள் குறைதீர்க்கும் அற்புதமே

தீதில்லா வாழ்க்கைக்கு நினைவென்றும் அற்புதமே !

 

மூவடியால் உலகளந்த மூதறிவும் அற்புதமே

சேவடியால் அகலிகைக்கு அருள்தந்த அற்புதமே

பூவிழியாள் மார்பினிலே வைத்திருக்கும் அற்புதமே

பூந்தமிழில் உனைப்பாடும் பாடலெல்லாம் அற்புதமே !

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *