மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி)-21
க. பாலசுப்பிரமணியன்
திருகொடித்தானம் அருள்மிகு மகாவிஷ்ணு திருக்கோவில்
அருள்மிகு அற்புத நாராயணப் பெருமாள்
பாற்கடலில் படுத்துறங்கும் பத்மநாபன் அற்புதமே
படுத்திருக்கும் பரந்தாமன் பாம்பணையம் அற்புதமே
பக்கத்தில் துணையிருக்கும் பங்கயவல்லி அற்புதமே
பதுமத்தில் அமர்ந்திருக்கும் பிரம்மனும் அற்புதமே !
சங்கோடு சக்கரமும் கைகளில் அற்புதமே
மங்காத அழகென்றும் மனதிற்கு அற்புதமே
பாங்கான திருநாமம் முகத்தினிலே அற்புதமே
பாதங்கள் தொட்டவுடன் பலனளிக்கும் அற்புதமே !
பாரெல்லாம் காக்கின்ற பண்பென்றும் அற்புதமே
பாவங்கள் அழித்திடவே பிறப்பெடுத்தாய் அற்புதமே
பாயிரங்கள் நாலாயிரமும் பேர்சொல்லும் அற்புதமே
பாவையர்கள் உள்ளத்திலே உருவெடுத்த அற்புதமே !
வாமனனாய் உருவெடுத்து வந்ததும் அற்புதமே
வானளாவி நின்றிருந்த விஸ்வரூபம் அற்புதமே
வான்மழைக்கு மலைதூக்கி நின்றதுவும் அற்புதமே
வந்தவினை தீர்த்துவிடும் அற்புதமே நாரணனே !
தேரோட்டி வந்தாய் பார்த்தனுக்கே அற்புதமே
தேரமர்ந்து தந்தாய் கீதையென்றும் அற்புதமே
தேடிவரும் அடியார்கள் குறைதீர்க்கும் அற்புதமே
தீதில்லா வாழ்க்கைக்கு நினைவென்றும் அற்புதமே !
மூவடியால் உலகளந்த மூதறிவும் அற்புதமே
சேவடியால் அகலிகைக்கு அருள்தந்த அற்புதமே
பூவிழியாள் மார்பினிலே வைத்திருக்கும் அற்புதமே
பூந்தமிழில் உனைப்பாடும் பாடலெல்லாம் அற்புதமே !