க. பாலசுப்பிரமணியன்

திருக்காட்கரை

vaithamanidhi-perumal-temple

அருள்மிகு காட்கரையப்ப பெருமாள் கோவில்

 

முப்புரி நூலோடும்  மூன்றடி உயரத்தோடும்

முன்மழித்த சடையும் மழைக்காக்கும் குடையும்

முன்செல்லும் அறமும் முடிவில்லா அருளும்

முன்னிருக்க அளந்தாயே மூவுலகும் வாமனனே !

 

வாமனனாய் வந்தவனே வானெல்லாம் அளந்தவனே

வாழையெல்லாம் வீழ்ந்திடவே வாழ்விழந்த மக்களுக்கு

வாழ்வளித்தாயே வளமான தங்கவண்ண வாழைதந்து

வாழியவே! வேங்கடவா வருந்துயரைக் காப்பவனே !

 

மலைநாட்டில் குடிகொண்ட மாதவனே மாயவனே

மடைதிறந்த வெள்ளமென அருள்சுரக்கும் அச்சுதனே

மனம்கட்டும் கோவில்களில் மறக்காமல்  இருப்பவனே

மகுடங்கள் தேவையில்லை மலர்ப்பாதம் போதுமய்யா !

 

மண்ணுண்ட வாயினில் அண்டங்கள் காட்டினாய்

மனமயர்ந்த பார்த்தனுக்கோ மூவுலகும் காட்டினாய்

மன்றத்திலே கௌரவர்க்கோ வானுயர்ந்து நின்றாய்

மாயவனே தூயவனே மனமெல்லாம் நிற்பவனே !

 

ஒருபருக்கை உண்டவுடன் பசிதீர்த்தாய் பலருக்கு

ஒருபிடியை உண்டதுமே விடைகொடுத்தாய் வறுமைக்கு

ஒருபழத்தைத் தந்தவுடன் அருள்தந்தாய் சபரிக்கு

ஒருமுறை அழைத்ததும் ஓடிவந்தாய் ஆதிமூலமே !

 

கரைகாணாத் துயர்நீக்கக் கைகொடுக்கும் காட்கரையப்பா

கலையான வாழ்விற்குக் கருத்தான மலையப்பா !

நிலையில்லா உணர்வெல்லாம் எனைவாட்டும் நேரத்தில்

சிலையாக நில்லாமல் சீக்கிரமே வருவாயோ ?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *