மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 27
க. பாலசுப்பிரமணியன்
திருக்காட்கரை
அருள்மிகு காட்கரையப்ப பெருமாள் கோவில்
முப்புரி நூலோடும் மூன்றடி உயரத்தோடும்
முன்மழித்த சடையும் மழைக்காக்கும் குடையும்
முன்செல்லும் அறமும் முடிவில்லா அருளும்
முன்னிருக்க அளந்தாயே மூவுலகும் வாமனனே !
வாமனனாய் வந்தவனே வானெல்லாம் அளந்தவனே
வாழையெல்லாம் வீழ்ந்திடவே வாழ்விழந்த மக்களுக்கு
வாழ்வளித்தாயே வளமான தங்கவண்ண வாழைதந்து
வாழியவே! வேங்கடவா வருந்துயரைக் காப்பவனே !
மலைநாட்டில் குடிகொண்ட மாதவனே மாயவனே
மடைதிறந்த வெள்ளமென அருள்சுரக்கும் அச்சுதனே
மனம்கட்டும் கோவில்களில் மறக்காமல் இருப்பவனே
மகுடங்கள் தேவையில்லை மலர்ப்பாதம் போதுமய்யா !
மண்ணுண்ட வாயினில் அண்டங்கள் காட்டினாய்
மனமயர்ந்த பார்த்தனுக்கோ மூவுலகும் காட்டினாய்
மன்றத்திலே கௌரவர்க்கோ வானுயர்ந்து நின்றாய்
மாயவனே தூயவனே மனமெல்லாம் நிற்பவனே !
ஒருபருக்கை உண்டவுடன் பசிதீர்த்தாய் பலருக்கு
ஒருபிடியை உண்டதுமே விடைகொடுத்தாய் வறுமைக்கு
ஒருபழத்தைத் தந்தவுடன் அருள்தந்தாய் சபரிக்கு
ஒருமுறை அழைத்ததும் ஓடிவந்தாய் ஆதிமூலமே !
கரைகாணாத் துயர்நீக்கக் கைகொடுக்கும் காட்கரையப்பா
கலையான வாழ்விற்குக் கருத்தான மலையப்பா !
நிலையில்லா உணர்வெல்லாம் எனைவாட்டும் நேரத்தில்
சிலையாக நில்லாமல் சீக்கிரமே வருவாயோ ?