மார்கழி மணாளன் (மூன்றாம் பகுதி) – 29
க.பாலசுப்பிரமணியன்
திருப்புலியூர் – அருள்மிகு மாயபிரான் திருக்கோவில்
மார்கழிக் காலையிலே மனதெல்லாம் நீயிருக்க
ஊர்வழிச் சாலையிலே உன்புகழைப் பாடிச்செல்ல
ஊழ்வழி வந்தவினை உனைக்கண்டே ஒதுங்கிவிட
பூவிழி மணாளனே புவிக்காக்க வந்திடுவாய் !
சூடிக்கொடுத்த சுடர்க்கொடியைச் சொந்தமெனே ஏற்றவனே
சூதுகொண்ட கௌரவரைக் குலத்தோடு அழித்தவனே
சூதின்றித் தூணினிலும் துரும்பினிலும் இருப்பவனே
சூதுடைய எண்ணங்களைச் சுட்டெரிக்கும் வல்லவனே
நாடிவரும் நல்லவர்க்கு நாள்தோறும் அருள்பவனே
பாடிவந்த பாசுரங்கள் பரவசமாய்க் கேட்பவனே
பாவையிலே கோதையின் உள்ளத்தை உணர்ந்தவனே
பாவையர்கள் நோன்பிற்குப் பலனாகி நிற்பவனே
தாள்பணிந்த பீமனுக்கு அருள்செய்த மாயவனே
தவமுனிகள் தானத்தை ஏற்றிடவே மறுத்துவிட
தவறறியா மன்னவனும் அரக்கனையே ஏவிவிட
தவத்தோரைக் காத்த தன்னிகரில்லாத தயாளா !
நேசமுடன் உனைப்பாடி நாள்கழித்தேன் மார்கழியை
வாசமுள்ள மலராக நெஞ்சிருந்து மலர்ந்திருந்தாய்
பாசமுள்ள தாய்த்தமிழில் பாடிவந்தேன் புகழனைத்தும்
தேசங்கள் நூற்றெட்டும் நினைவினில் சுழன்றிடவே !
ஆழ்வார்கள் உள்ளத்தில் அருட்கனியாய் பழுத்தவனே
ஆண்டாளின் இசைகேட்டு அனுதினமும் எழுந்தவனே
காசினியில் உனைப்போலக் கருணையைக் கண்டதில்லை
காத்தருள்வாய் அரங்கத்தானே அலைமகளின் அருள்சேர்த்து !
(நிறைவு)