தடுமாறும் நீதித்துறை?
பவள சங்கரி
தலையங்கம்
நீதித் துறையில் நடந்துள்ள சமீபத்திய நிகழ்வுகள் வருந்தத்தக்கது, தவிர்க்கப்பட வேண்டியது. உச்சநீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவேண்டியது அல்லவா? தலைமை நீதிபதிக்கு எழுதப்பட்ட அவர்கள் சுட்டிக்காட்டிய கருத்துகள் அடங்கிய கடிதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு களையப்பட வேண்டியது அவசியம். இந்தப்பிரச்சனையிலிருந்து நடுவண் அரசு அவர்களேத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்று ஒதுங்குவது சரியா? அவர்களால் தீர்த்துக்கொள்ள முடியவில்லை என்பதாலேயே அவர்கள் மக்கள் மன்றத்திற்கு வந்துள்ளனர். இந்த நால்வரோடு மேலும் இரு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்கள் கூறியுள்ள கருத்தின்படி இந்த நிலை ஜனநாயகத்திற்கே ஆபத்தானது என்ற எச்சரிக்கை மிகவும் கவனம் கொள்ளத்தக்கது. இந்திய அரசு நிர்வாகத்தின் தலைவராகிய குடியரசுத் தலைவர் இப்பிரச்சனையைக் கையில் எடுத்து இதற்கான சரியானத் தீர்வு காணவேண்டியது அவசியம். தமிழக ஆளுநர் ஒவ்வொரு மாவட்டமாகச் சென்று ஆய்வு செய்வது சரியாக இருக்கும்பொழுது, குடியரசுத் தலைவர் நம் ஜனநாயகத்தையே ஆட்டம் காணச்செய்யும் இந்த முக்கியமானப் பிரச்சனையில் ஆய்வு செய்து தீர்வு காணவேண்டியது அவருடைய முக்கியமான கடமை அல்லவா? இப்படிப்பட்ட நேரத்திலும் அவர் மௌனம் காப்பது சரியாகுமா?