அன்பினியவர்களே!

அன்பான வணக்கங்கள். சுமார் இரண்டு வாரங்களின் பின்னால் மடல் மூலம் உங்களுடன் மனம் திறக்கிறேன். இரண்டு வாரங்கள் இரண்டே நாட்கள்போல ஓடிவிட்டன. ஆனால் இந்த இரண்டு வாரங்கள் தனக்குள் அடக்கிக் கொண்ட விடயங்களோ பற்பல. சில இனிமையானவை, சில கனமானவை, சில கசப்பானவை, சில மறக்கப்பட வேண்டியவை என எத்தனையோ ரகமான விடயங்களைத் தனக்குள் தாங்கிக் கொண்டே காலம் நடைபோடுகிறது. இந்த இரண்டு வாரங்களில் என் நிகழ்வுகளை நான் எடுத்துப் பார்க்கிறேன். இதிலே விந்தை என்னவென்றால் “இங்கிலாந்திருந்து ஒரு மடல் ” எனும் இந்தப் பத்தி இவ்வாரம் முத்தமிழின் பிறப்பிடமாம், தமிழகத்தின் தலைநகரான சென்னையிலிருந்து வரையப்படுவதுதான். ஆம் நான் எனது வருடாந்தர தமிழ்த்தேடல் தாகசாந்திக்காக மேற்கொள்ளும் சென்னை விஜயத்தின் நடுப்பகுதியில் இருக்கிறேன்.

வழமைபோல இம்முறை என் விஜயத்தின் முத்தாய்ப்பாக அமையும் சென்னைப் புத்தக விழாவினோடு இம்முறை வேறு சில நிகழ்வுகளும் எனது நெஞ்சத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. இம்மாதம் 13ஆம் திகதி எனது ஒன்பதாவது நூலான “உள்ளத்தின் மொழியே, தமிழெனும் நதியாய்” மணிமேகலைப் பிரசுரத்தினரால் அவர்களது வெளியீட்டு விழாவில் சென்னைப் புத்தக விழா மேடையில் வெளியிடப்பட்டது. இந்நூலுக்கு வாழ்த்துரை வழங்கியிருந்த மதிப்பிற்குரிய முன்னை நடிகர், தற்போதைய முன்னணிப் பேச்சாளர்களில் ஒருவரான திரு. சிவகுமார் முன்னிலையில் இந்நூல் வெளியிடப்பட்டது உள்ளத்துக்கு மேலும் மகிழ்வையளித்தது. இவ்விழாவில் நடிகை லக்ஷ்மி, இயக்குனர் எஸ்.பி.முத்துராமனுடன் மேலும் பல அறிஞர்கள் கலந்து கொண்டார்கள்.

நான் சென்னைக்குக் கிளம்பும் முன்னரே எனது இனிய நண்பர்களில் ஒருவரான “இசைக்கவி” ரமணன் அவர்கள் நான் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்வுகளைப் பற்றிய ஒரு சிறு பட்டியலையே அனுப்பியிருந்தார். இசைக்கவி ரமணன்1ரமணன் அவர்களின் அற்புத ஆற்றலை அளவின்றி ரசிப்பவன் நான். அவருடைய சொற்பொழிவுகளை இலண்டனில் தொலைக்காட்சி மூலமும், யூ ட்யூப் மூலமும் பார்த்து ரசிப்பவன். அவரின் கவித்திறனோடு எவ்வித பின்னணி இசையுமின்றி அற்புதமாகப் பாடும் அவரது ஆற்றலையும், அன்னைத் தமிழே வியந்து போகும் வண்ணம் தமிழை உச்சரிக்கும் அவரது தமிழாற்றலையும் வியப்போடும், மகிழ்வோடும் ரசிப்பவன் நான். அவரது பட்டியலில் அவர் தான் வசனமெழுதி, நடிக்கும் “பாரதி யார்?“ எனும் நாடகத்தைப் பற்றியும் அவை சென்னையில் நான் நிற்கும் வேளையில் அரங்கேறும் இடங்களையும் மிக அழகாக அட்டவணைப் படுத்தித் தந்திருந்தார். 11ஆம் திகதி காலை சென்னை வந்திறங்கினேன். 12ஆம் திகதி மாலை சென்னை ஏக்மோரில் அமைந்துள்ள “மியூசியம் ஹால் ” நாடக அரங்கில் நன்கொடையாளர்களுக்கான நிகழ்வில் எனக்காக ஓர் இடம் ஒதுக்கி ஏற்படு செய்திருந்த அன்பு நண்பர் “இசைக்கவி” ரமணன் அவர்களின் அன்பு அவரின் இனிமையான உள்ளத்துக்கும், நல்ல நட்புக்கு அவர் கொடுக்கும் முதலிடமும் எமக்கு நன்றாகப் புரிகிறது.

சரியாக மாலை 6.15க்கு நாடகம் ஆரம்பிப்பதாக இருந்தது. அன்றும் புத்தகக் கண்காட்சியில் நண்பர் காந்தி ரமணன்2கண்ணதாசன் அவர்களின் பதிப்பகம் வெளியிட்ட ” கலாம் ” எனும் நூலின் வெளியீடு நிகழ்ந்தது. அதனைக் காண்பதற்காகப் புத்தகக் கண்காட்சிக்குச் சென்ற நான் சரியாக ஆறுமணிக்கு அந்த நாடக அரங்கிலே இருக்க வேண்டும் என்று கூறியதன் பிரகாரம் நேரத்துக்கு முதன்மையளிக்கும் எனது மற்றொரு உற்ற நண்பரான ரவி தமிழ்வாணன் அவர்கள் என்னைச் சரியாக 5.55 மணிக்கு அந்த நாடக அரங்க வாயிலிலே இறக்கி விட்டிருந்தார். நாடகமும் சரியான நேரத்துக்கு ஆரம்பித்தது.

அழகான அந்த ஆங்கிலேயக் காலத்து புராதனக் கட்டிட அரங்கம் தனக்கேயுரிய மிடுக்குடன் காட்சியளித்தது. கணினியின் உதவியுடன் அழகிய ரமணன்3பின்னணிக் காட்சிகளை நாடக அரங்கிற்குள் கொண்டு வந்திருந்தார்கள். மகாகவி பாரதியாரைப் பற்றி ஏறக்குறைய அனைத்துத் தமிழர்களும் ஏதோ ஓர் அளவில் அறிந்திருப்பார்கள். என்னைப் போன்ற கவிதை எனும் ஆழியின் கரையிலிருந்து மணல்வீடு கட்டி விளையாடுவோர் ஆர்வ மிகுதியால் பாரதியாரின் வாழ்வுச் சரிதத்தை எம்மால் படிக்கக் கூடிய அளவிற்குப் படிப்போம். ஆனால் இந்த நாடகமோ ஒரு புதுப்பரிணாமத்தில் பாரதியாரை எமக்கு எடுத்துக் காட்டியது. ஒரு விளக்கவுரையுடன் , மாபெரும் தீச்சுவலையுடன் ஆரம்பித்த அந்நாடகத்தின் ஆரம்பச்சுவாலை அந்த மகாகவியின் நெஞ்சத்தில் எரிந்த கவிதைக் கனலை எனக்கு ஞாபகமூட்டியது.

இந்நாடகத்தின் அமைப்பு அற்புதமானது, பாராட்டத்தக்கது. பாரதியாரின் கவிதைகளில் மிகவும் புகழ்பெற்ற கவிதைகள் பாடப்பட்ட காலத்தையும், அக்கவிதை பாடப்பட்ட இடத்தையும் கட்டம் கட்டமாகப் பிரித்து அக்கவிதையின் பிறப்புக்கான ரமணன்4பின்னணியை நாடகக் காட்சிகளாகக் கொடுத்திருந்தார்கள். இதற்காக அவர்கள் பாரதியாரின் வாழ்வு பற்றிய ஆராய்ச்சியை எத்தனைத் துல்லியமாகச் செய்திருப்பார்கள் என்பதை எம்மால் உணர முடிகிறது. காட்சியமைப்பு,  அக்காட்சிகளுக்கான விளக்கம், அதனோடு சம்பந்தப்பட்ட பின்னணிக் காட்சிகளை நாடகத் திரையில் கணினியின் உதவியோடு ஏற்றிய நேர்த்தி அனைத்தும் நாடக உலகின் முத்திரையாய் இந்நாடகத்தை முன்னிலைப்படுத்தியுள்ளது.

இந்நாடகத்தின் நாயகன் மகாகவி பாரதியாரே என்பது நான் சொல்லித் தெரிவதில்லை. அப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் எனது இனிய இசைக்கவி ரமணன். பாரதியார் எனும் வேடமல்ல அவர் மகாகவி பாரதியாராகவே மாறிவிட்டார். எனது வாழ்க்கைக் காலத்திலே இதுவரை எத்தனையோமுறை நான் சென்னை வந்திருக்கிறேன். எனது சென்னை விஜயங்களில் எது என்னை அவ்விஜயத்தை மேற்கொண்டதன் முழுப்பயனையும் அடைய வைத்தது எனும் கேள்வி எழுப்பப்பட்டால் அது 2018 விஜயம் என்பதே எனது விடையாகும். ஏனென்கிறீர்களா ? அவ்விஜயத்தின் போது நான் எது நடக்க முடியாது என்று எண்ணியிருந்தேனோ அது நடந்து விட்டது. ஆம் நான் “மகாகவி” பாரதியாரை நேரடியாகத் தரிசித்து விட்டேன்!  இசைக்கவி ரமணன் பாரதியாரை எமது முன்னால் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். இதுவரை வீரபாண்டிய கட்டபொம்மன், சிவபெருமான், வீரவாகு, அப்பர், இராஜஇராஜ சோழன், வ.உ.சி ஜயா அவர்களை எமது கண்முன்னால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கொண்டு வந்து நிறுத்தினார். இன்று நடிகர் திலகம் இருந்திருந்தால் நண்பர் இசைக்கவி ரமணன் அவர்களைப் பாரதியாராக மேடையில் பார்த்தப் பின்பு அவரை பாரதியார் வேடம் ஏற்கச் சொன்னால் தயங்கியிருப்பார் என்றே சொல்ல வேண்டும்.

அத்தகையதோர் அருமையான இயற்கையான நடிப்பு. பாரதியாரின் வசனங்களை அவர் உச்சரித்த விதம், உச்சரிக்கும் போது அவர் காட்டிய பாவங்கள், கவிதைகளைத் தெளிவுற வீரமாகப் பேசிய விதம், பேச்சிலிருந்த தெளிவு, ஏற்ற இறக்கங்கள் அப்பப்பா ! இதைச் சொல்லில் விவரிப்பது மிகவும் கடினம். நாடகப் பயிற்சிக்கென இயங்கும் அமைப்புகள் அனைத்தும் தமது மாணவர்களை இந்நாடகத்துக்கு அழைத்து வரவேண்டிய கட்டாயத்தை இந்நாடகம் உருவாக்கியுள்ளது என்றே கூற வேண்டும்.

இந்நாடகத்தில் பங்கு பற்றி நடித்த அனைவருமே தமக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரப் படைப்புகளை திறம்பட, அழகுறச் செய்தது பாரதியாராக வேடமேற்ற ரமணன் அவர்களின் நடிப்புக்கு பெருந்துணையாக இருந்தது என்பது மிகையாகாது. குறிப்பாக செல்லம்மாவாக நடித்தவரும், பாரதியாரின் நண்பராக நடித்தவரும் அப்பாத்திரங்களில் அபாரமாக நடித்திருந்தனர். இந்த நாடகத்தைப் பார்த்த பின்னால் பாரதியாரின் வாழ்வில் நடந்த பல நிகழ்வுகளைப் பற்றி அறிவதோடு பாரதியார் தன் வாழ்வில் எத்துணைத் துயரங்களை எதிர்கொண்டார் என்பதையும், அதனை எவ்வாறு தாங்கிக் கொண்டார் என்பதனையும் தத்ரூபமாக நடித்துக் காட்டியிருந்த ரமணனின் நடிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்நாடகத்தைப் பார்த்த சில நாட்களின் பின்னால் நண்பர் சொல்வேந்தர் சுகி சிவம் அவர்களைப் பார்க்கப் போயிருந்தேன். அன்று சாயந்தரம் இந்நாடகம் ரசிக ரஞ்சன சபாவில் நடைபெறுவதாக இருந்தது; நான்கூட இரண்டாவது தடவையாகப் போவதாக இருந்தேன். தானும் அன்று மாலை இந்நாடகத்திற்குப் போகப் போவதாக சொல்வேந்தர் குறிப்பிட்டார். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் என்னால் அன்று மாலை போக முடியவில்லை. ஆனால் அன்று மாலை ரசிக ரஞ்சன சபா ஹால் நிரம்பி வழிந்ததாகவும் நூற்றுக்கும் அதிகமானோர் உள்ளே செல்ல முடியா நிலையில் இருந்ததாகவும் அறிந்தேன். அத்துடன் இந்நாடக இறுதியில் சில வார்த்தைகள் பேசும்படி விடுக்கப்பட்ட அழைப்பிற்கிணங்க பேச எழுந்த சொல்வேந்தர் தொண்டை கரகரக்க உணர்ச்சிவசப்பட்டு அந்நாடகம் கொடுத்த தாக்கத்தின் உணர்ச்சிகளை வெளிக்காட்டினார் என்பது இந்நாடகத்தின் ஆழத்தைத் தொட்டுக் காட்டுவதோடு நண்பர் இசைக்கவி ரமணனின் நடிப்பாற்றலை எடுத்தியம்புகிறது.

இந்நாடகம் தொடர்ந்து மதுரை மற்றும் பல நகரங்களில் மேடையேற்றப்படுகிறது. மீண்டும் மார்ச் மாதம் 11ஆம் திகதி வாணி மஹாலில் மேடையேற்றப்படுகிறது. இந்நாடகத்தைப் பார்க்கத் தவறினால் வாழ்வில் ஒரு மிகப்பெரிய அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டவர்களாவீர்கள் என்பது திண்ணம். “பாரதி யார்?” எனும் கேள்விக்கு “பாரதியார்” தமிழரின் சரித்திர அடையாளம் என்பது அசைக்க முடியாத உண்மையாகிறது. அதைக் கண்முன்னால் கொண்டுவந்த நண்பர் இசைக்கவி ரமணன் இதுபோல இன்னும் பல அற்புத ஆக்கங்களை அளிக்க எல்லாம்வல்ல பராசக்தி துணை புரிவாளாக.

மீண்டும் அடுத்த மடலில்…

அன்புடன்
சக்தி சக்திதாசன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *