எம். ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா

கண்மூடிக் காதல்கொள்ளும்
-காதலினை விட்டிடுவோம்
மண்ணிலுள்ளார் மனங்கவரும்
-காதலினைச் செய்திடுவோம்
பெண்மனமும் ஆண்மனமும்
-பேதமின்றிக் கலக்கும்படி
மண்மீது காதலினை
-மலர்ந்துவிடச் செய்திடுவோம்!

அரும்பாகி   மொட்டாகி
-மலராகும் காதலினை
விரும்பாதர் இவ்வுலகில்
-இல்லையென்றே இயம்பிடலாம்
நரம்பெல்லாம் முறுக்கேற்றும்
-நற்காதல் என்றென்றும்
நம்வாழ்வின் அடித்தளமாய்
-நமையியக்கும் சக்தியன்றோ!

காதலிப்பார் வாழ்வெல்லாம்
-காணுவது பேரின்பம்
காதலனும் காதலியும்
-கனவினிலும் காதலிப்பார்
சோதியெனக் காதலங்கே
-சுடர்விட்டு  நிற்குமங்கே
சொர்க்கமதைக் காதலர்கள்
-சொந்தமாய் ஆக்கிடுவார்!

காலமெலாம் காதலுடன்
-கைகோத்துப் பாருங்கள்
காணுகின்ற அத்தனையும்
-கற்கண்டாய் ஆகிவிடும்
ஓடியோடி உழைத்தாலும்
-உள்ளமதில் காதலின்றேல்
உங்கள்வாழ்வு உலகினிலே
-உவப்புதனை ஈந்திடுமா!

காதலர்கள் தினமதிலே
-காதலினைப் போற்றிடுவோம்!
காலமெலாம் காதலது
-வாழ்கவென வாழ்த்திடுவோம்
சாதிமத பேதமின்றி
-காதலர்கள் தினமதனைப்
பூதலத்தில் பொலிகவென்று
-புகழ்ந்து கவிபாடிடுவோம்!

            

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *