செண்பக ஜெகதீசன்

 

கடுமொழியுங் கையிகந்த தண்டமும் வேந்த                                                                 

னடுமுரண் தேய்க்கும் அரம்.

       -திருக்குறள் -567(வெருவந்த செய்யாமை)

 

புதுக் கவிதையில்…

 

கண்டிப்பில் கடுமையான சொல்லும்,

தண்டனை

அளவுக்கு அதிகமாவதும்,

அரசனின்

வெல்லும் வலிமையெனும்

இரும்பறுக்கும் அரமே…!

 

குறும்பாவில்…

கடுஞ்சொல் கண்டிப்பும், காவலனின்  

கூடுதல் தண்டனையும், வெல்லுமவன்  

வலிமை இரும்பறுக்கும் அரமாகும்…!

 

மரபுக் கவிதையில்…

 

நாட்டை யாழும் மன்னவர்க்கு

     நல்ல தல்லாக் கொடுஞ்சொல்லும்,

காட்டிக் கொடுக்கும் வஞ்சகர்க்குக்

     கொடுக்கும் அதிக தண்டனையும்,

ஆட்டம் காட்டிடும் அரசினுக்கே,

     அரமாய் அவையே அறுத்தழிக்கும்

ஓட்டம் பிடிக்கப் பகையழிக்கும்

     வலிமை யென்னும் இரும்பினையே…!

 

லிமரைக்கூ..

 

கண்டிக்கும் கொடிய சொல்லும்,

கொடுந்தண்டனையும், மன்னனின் வலிமையாமிரும்பை

அரமாகி அறுத்துச் செல்லும்…!

 

கிராமிய பாணியில்…

 

நல்லதில்ல நல்லதில்ல

ராசாவுக்கு நல்லதில்ல,

கோவத்தல சொல்லுற கொடுஞ்சொல்லும்

குடுக்கிற தண்டனயக்

கூடுதலாக் குடுகிறதும் நல்லதில்ல..

 

அதெல்லஞ் சேந்து

அவுரு செயிக்கிற

வலிமங்கிற இரும்ப

அரம்போல அறுத்திடுமே..

 

அதால,

நல்லதில்ல நல்லதில்ல

ராசாவுக்கு நல்லதில்ல,

கொடுஞ்சொல்லும்

கூடுதல் தண்டனயும் நல்லதில்ல…!

 

-செண்பக ஜெகதீசன்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *