குறளின் கதிர்களாய்…(204)
-செண்பக ஜெகதீசன்
அமைந்தாங் கொழுகா னளவறியான் றன்னை
வியந்தான் விரைந்து கெடும். (திருக்குறள் -474: வலியறிதல்)
புதுக் கவிதையில்…
மனம் ஒன்றிப்
பிறருடன் பழகாதவன்,
தன் வலிமையின்
அளவை அறியாதவன்,
தன்னையே வியந்துபேசிப்
பிறரைப் பகைத்த அரசன்
கெடுவான் விரைவில்…!
குறும்பாவில்…
பிறருடன் பழகாது தன்வலிமை அறியாமல்,
தன்பெருமை பேசிப் பகைவளர்க்கும்
மன்னன் கெடுவான் விரைவில்…!
மரபுக் கவிதையில்
மன்னன் என்போன் தன்னையொத்த
மன்னர் பலருடன் பழகவேண்டும்
என்பதை மறந்தே, தன்வலிமை
என்ன யென்பதை யறியாதே,
தன்னைப் பற்றியே பெருமையாகத்
தினமும் பேசிப் பகைவளர்த்தால்,
முன்னே வந்து முகங்ககட்டும்
முடிவைத் தந்திடும் கேடதுவே…!
லிமரைக்கூ…
பழகிடப் பிறரையென்றும் நாடு,
தன்பலமறியாது தற்பெருமை பேசும்
மன்னனுக்கு வரும்விரைவில் கேடு…!
கிராமிய பாணியில்…
தெரியணும் தெரியணும்
நம்மபெலம் நமக்குத் தெரியணும்…
நாடளும் ராசாண்ணாலும்
நாலுபேரோட நல்லாப்பழகணும்,
நம்ம பெலத்த நல்லாத்தெரியணும்…
இதுயில்லாம
தற்பெரும பேசித்திரிஞ்சா
நாடு வெளங்காது
கேடுதான் வருமே…
அதால
தெரியணும் தெரியணும்
நம்மபெலம் நமக்குத் தெரியணும்…!