நான் அறிந்த சிலம்பு – 242
-மலர் சபா
மதுரைக் காண்டம் – கட்டுரை காதை
சோதிட வார்த்தை
ஆடிமாதத்தின்
கிருஷ்ண பட்சத்து அஷ்டமியும்
கார்த்திகையின் குறையும் சேர்ந்த
வெள்ளிக் கிழமையில்,
தெளிவாக அமைந்த தீக்கதுவினாலே,
புகழில் சிறந்த மதுரை நகரத்துடன் சேர்ந்து
மன்னனும் கேடு வாய்க்கப் பெறுவான்
என்ற வாக்கு உண்டானது.
பாண்டியன் முறைபிழைத்த காரணம்
கோவலனின் முற்பிறப்பு வரலாறு
மணம் மிக்க சோலைகள் சூழ்ந்த
கலிங்க நாட்டில்
இனிமையான நீர் நிறைந்த
மருதநிலம் அமைந்த சிங்கபுரத்திலும்
மூங்கில் காடுகள் நிறைந்த கபிலபுரத்திலும்
அரசை ஆள்கின்ற செல்வம் உடைய
நேர்த்தியான மாலையணிந்த
அரசனாகிய
திருவேலினை ஏந்திய
பெரிய கையை உடைய
வசு என்பவனும்
குமரன் என்பவனும்
என்றும் அழியாத செல்வமுடைய
சிறந்த குடியில் தோன்றிய
இந்த இருவரும்
தம்முள் பகையுற்றனர்.
ஆறு காவதத்துக்கு
இடைப்பட்ட நிலத்தில்
ஒருவரை ஒருவர் வெற்றி கொள்ளப்
போர் தொடுத்தனர்.