தனிப்பட்டவர்கள் உண்டாக்கிய குறியீட்டு முறைகள்

0

-பேரா. முனைவர். வெ.இராமன்

கணினியில் தமிழ்  தோன்றியது  1980  காலப்பகுதியில்தான். இக்காலப் பகுதியில் தான்  தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக்கணினிகள் (personal desktop computers) விற்பனைக்கு விடப்பட்டன. பல தொழில் நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத்  தயாரித்து வெளியிட்டுச் சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான  இயக்கு தளங்களை  (Operating system) கொண்டிருந்தன. பின்னர்  மக் ஓ.எஸ். (Mac OS), மைக்ரோசாப்ட் டாஸ் (Microsoft DOS), ஓ.எஸ்.2 (OS2) வகை இயங்கு தளமுடைய கணினிகள் கிட்டத்தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ்வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில்1. இவை வெளிவந்து கொண்டிருக்கும் போது  தமிழ்க்  கணினி வல்லுநர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.

கணினிகள் பெரும்பாலும்  ஆங்கிலத்திலேயே  இயக்கக் கட்டளைகளையும் (operation commands) மறுமொழிகளையும் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என்று பலதரப்பட்ட சிறப்புப் பயன் பொருட்களும் கணினியின் திறமையைப் பயன்படுத்திச் சிறப்பாக இயங்குமாறு ஆங்கில மூல மென்பொருள்கள் பக்கச் சேர்ப்பாக உருவாக்கம் பெற்றன. இம்மென்பொருள்கள் மக்களின் பல தேவைகளை மிக எளிதாகச் செய்து முடிக்கப் பெரும் உதவியாக அமைந்தன.

தமிழில் முதல் மென்பொருள்

ஆங்கில மென்பொருள்களின் பயன்களைத் தமிழிலும் பெற முயன்றனர் தமிழ்க் கணினி வல்லுநர்கள். இம் முயற்சிகளின் பயனாக முதலில் தோன்றிய  மென்பொருள்களில்  ஆவணங்கள் எழுதும்  ஆதமி (Adami) என்பதும் ஒன்றாகும்2. இது  1984- இல் கனடாவில்  வாழும் முனைவர்  ஸ்ரீநிவாசன்  என்பவரால் உருவாக்கப்பட்டது3. இதன்மூலம் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இது அக்காலத்தைய  IBM DOS 2.x  இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருளும்  MS Windows இயங்குதளத்தில் பயன்படக் கூடியதாகப் பின்னாளில் உருவாக்கம் பெற்றது. இம் மென்பொருட்கள் அந்நாளில் தமிழ்க் கணினிப் பயனாளர்களிடம் பிரபலமாக இருந்தன. இதே நேரத்தில் தோன்றிய இன்னொரு மென்பொருள் பாரதி என்பதாகும். இது சிங்கப்பூர்,  மலேசியா  ஆகிய நாடுகளில் பிரபலமாக இருந்தன.

தமிழ் எழுத்துருக்கள் அறிமுகம்

80களின் பிற்பகுதியில் திரு. அர்த்தனாரி (Mr. T. S. Arthanari) ஒரு தமிழ் எழுத்துருவை உருவாக்கியதாக அறியப்படுகிறது; ஆனால் மேலதிக விபரங்கள் பெற முடியவில்லை. 1990களின் முற்பகுதியில் “மக்கின்டாஸ்” கணினியில் தமிழ் எழுத்துரு (Tamil Fonts) அறிமுகப் படுத்தப்பட்டது4. ஆதமி (1984) உருவாகும் முன்னர்ப் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் ஆப்பிள் கணினியில் தமிழ் எழுத்துருக்களை அறிமுகப்படுத்தியிருந்தார். இதே நேரத்தில் யூனிக்சு (UNIX) இயங்கு தளத்திலும் முதன்முதலாக முனைவர் பால சுவாமிநாதன் அவர்களும் அவர்தம் உடன்பிறந்தார் முனைவர் ஞானசேகர் அவர்களும் யூனிக்சில் தமிழுருக்கள் ஆக்கினர். அத்தோடு  LaTex  எழுதியில் உபயோகிக்க  wntamil  என்னும் எழுத்துரு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  ஐ-ட்ரான்ஸ் (iTrans) என்ற நிறுவனமும் யூனிக்சில் தமிழில் எழுத வசதியாக எழுத்துருக்களையும், உதவிகளையும் வழங்கியிருந்தது5. இந்த எழுத்துருக்களைக் கணினியில் அடிக்க எழுத்துப்பெயர்ப்பு (transliteration) முறையே உபயோகிக்கப்பட்டது. அதாவது அம்மா என்பதை  ammaa  என்று கணினியின் விசைப்பலகையில் அடிக்க வேண்டும்6. எழுத்துருக்கள் உருவாக்கமும் எழுதும் முறையும் இலகுவாக இருக்க, கணினிகளில் மேலதிக மென்பொருள் தேவையின்றியே தமிழில் எழுதமுடிந்தது. இக்காலகட்டத்தில் பல எழுத்துருக்களைப் பல வல்லுநர்கள் உருவாக்கத் தொடங்கினர். இதன் பயனாகப் பல எழுத்துருக்கள் கணினிகளில் உபயோகத்திற்கு வந்து கொண்டிருந்தன.

இவ்வெழுத்துருக்களில்  கனடாவில்  வாழும் முனைவர் விஜயகுமார் அவர்கள் ஆக்கிய நூற்றுக்கணக்கான எழுத்துருக்கள் குறிப்பிடத்தக்கன. இவ்வெழுத்துருக்களுக்குக் கருநாடக இசை  இராகங்களின்  பெயர்களை இட்டிருந்தார். முனைவர் பெ குப்புசாமி அவர்கள் ஆக்கிய கல்வி என்னும் பயன் மென்பொருள்களுக்குப் பயன்படுத்திய எழுத்துருக்களும், முனைவர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஆக்கிய மயிலையும் (Mylai)7, பாமினி (Bamini) 8போன்றவையும் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தன. இந்த எழுத்துருக்களின் தோற்றங்களால் பல நன்மைகள் ஏற்படலாயின. எழுத்துருக்களை வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஆங்கில மூலம் கிடைக்கும் எழுத்துக்கோர்ப்பு, கணிக்கும் அட்டவணை ஆக்கி (Word, Excel) ஆகிய மென்பொருட்களைத் தமிழில் உபயோகிக்க முடிந்தது. ஆதமி போல ஒரு தமிழ் மென்பொருள் உருவாகத்திற்கான தேவைகள் குறைந்தன. 

பொதுத் தரம் இல்லா எழுத்துருக்கள்

இப்படி உருவான எழுத்துருக்களினால் இன்னொரு சிக்கலும் இருந்தது. அதாவது, எழுத்துரு உருவாக்குபவர்கள் எந்த ஒரு  தரத்தையும்  (standards) கடைப்பிடிக்கவில்லை9. தரங்கள் ஏதும் வகுக்கப்படவில்லை. வெவ்வேறு எழுத்துருக்கள் வெவ்வேறு தனி முறைகளைக் கொண்டிருந்தன. இதனால், இந்த எழுத்துருக்கள் எல்லா வகையான ஆங்கிலமூல மென்பொருட்களிலும் நூறு விழுக்காடு சரியாக ஒத்தியங்கவில்லை.

சில சமயங்களில், சில மென்பொருள்களிலும் தொல்லைகள் இருந்தன. ஆனாலும் அடிப்படைப் பயன்பாடுகளான எழுதி, கணக்குப் பதிவுகள் போன்ற தேவைகள் அப்போது தமிழில் நிறைவேற்றக் கூடியதாக இருந்தன.

வலைக் கணினியில் (இணையத்தில்) தமிழில் மின்னஞ்சல்

தொழில்நுட்பம் வளரும்போது, தனித்தனியாகத் தன் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கணினிகள்  வலை வேலைப்பாட்டால் இணைக்கப்பட்டன. இணைக்கப்பட்ட கணினிகளும் அவற்றின் செலுத்துகைகளும் மனிதனின் தேவைகளை மேலும் செம்மையாக நிறைவு செய்யத்தொடங்கின. வலையில் இணைக்கப்பட்ட கணினிகள், இந்தக் காலகட்டத்தில் (90களில்)  தொடர்பாடல்  துணைக்கருவியாக நறுமணம்வீசத் தொடங்கின.  மின்னஞ்சல்  பயன்பாடு பெரும்புகழாகத் தொடங்கியது.

யூனிக்சு (UNIX)  இயங்குதள  (operating system) கணினிகளில் மின்னஞ்சல் தொடர்புகள் முன்னரே இருந்தும்கூட, தனிக் கணினிகளில் (Personal Computers) மின்னஞ்சல் தொடர்பாடல் பரவலாகத் தொடங்கும்போது தான் தமிழைத் தொடர்பாடலில் பயன்படுத்தும் தேவை எழுந்தது. தனிப்பட்டவரின் எழுத்துருக்கள் சீர்தரம் இல்லாச் சிக்கல்களால் இந்த இடத்தில் கொஞ்சம் இடரத் தொடங்கின.

தமிழ் மின்னஞ்சல் இடர்கள்

தனித் தனியான எழுத்துருக்களை ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்திற்கேற்பப் பயன்பாட்டில் வைத்திருந்ததால், ஒருவர், தமிழில், தன்னிடமிருக்கும் எழுத்துருவில் எழுதி அனுப்பும் மின்னஞ்சல் மற்றவரைப் போய்ச் சேரும்போது, அதைப் பெற்றுக் கொண்டவர் வாசிப்பதற்கு அனுப்பியவரின் எழுத்துரு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனுப்புபவர் அஞ்சலுடன் சேர்த்துத் தன் எழுத்துருவையும் அனுப்ப வேண்டும். அனுப்புபவர், பெறுநர் இருவரிடமும் ஒரே எழுத்துரு இருந்த வேளைகளிலும் அஞ்சல் தொடர்பு என்பது இலகான செயலாக இருக்கவில்லை. மின்னஞ்சல் மென்பொருளிலேயே தமிழில் அனுப்பப்படும் அஞ்சலை வாசிக்க முடியாது. வேறு செயலிக்கு வெட்டி ஒட்ட (cut and paste) வேண்டும்.

அனுப்பப்பட்ட அஞ்சல், வலைக் கணினிகளிடையே பயணிக்கும் போது அந்தக் கணினிகள் ஏதாவது காரணத்தால் மடல் சரியாகப் போகிறதா எனச் சோதித்துப் பார்க்கும்போது அறிமுகமில்லாத எழுத்துருக்களைக் குப்பையெனக் கருதி எறிந்து விடக்கூடும் அல்லது சிக்கலைப் பெரிதாக்கக் கூடும். ஆக, ஒட்டுமொத்தத்தில் தமிழில் மின்னஞ்சல் தொடர்பு என்பது கடினமாகவே இருந்தது.

தமிழில் மின்னஞ்சல் தீர்வுகள்

மதுரை

இப்படியான சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு மென்பொருள் தோன்றியது. அது தான்  மதுரை (Madurai) என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் ஒரு வேறுபாடான வேலையைச் செய்தது. அதாவது ஒரு  கோப்பில் தமிழ் ஆக்கங்களைத் தமிழ் ஒலிப்பை  இலத்தீன் (ஆங்கில) எழுத்துப்படி (எழுத்துப்பெயர்ப்பில்) எழுதிச் சேமித்து வைத்துக் கொண்டு  மதுரை  கட்டளையை (command) அந்தக் கோப்பின் மேல் செலுத்தினால் மறுமொழியாகத் தமிழ் எழுத்து வடிவம் திரையில் தோன்றும். இது பெருமளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை, ஆனால் எளிதாகச் சின்னச் சின்னச் சொற்களைத் தமிழ்ப்படுத்த இது மிகவும் பயனுடையதாக இருந்தது.

அத்துடன் ஒரு முக்கியக் குறிப்பு என்னவென்றால்,  மதுரையிலிருந்து கிடைத்த தமிழ் எழுத்து வடிவம் எந்தவொரு தமிழ் எழுத்துருவிலும் தங்கியிருக்கவில்லை. அவை  அஸ்கி  (ASCII) அமைப்பிலமைந்தவை. ஆங்கிலத் தட்டச்சிலிருக்கும் கோடுகள், புள்ளிகள் மற்றும் சில எழுத்துகளின் உதவியால் பெறப்பட்டவையே இந்தத் தமிழ் எழுத்துகள். ஆதலால் இவ்வெழுத்து வடிவில், தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது 1990 களின் முற்பகுதியில் செயல்படத் தொடங்கி இருந்தது. இந்த மென்பொருளை ஆக்கியவர்  முனைவர் பாலா சுவாமிநாதன்  அவர்கள்.

இதன் மூலம் கிடைக்கும் எழுத்துகள் கிட்டத்தட்ட இப்படித்தான் தெரியும்.

            |_| L |_| L |T

படபடா என எழுதுவது கிட்டத்தட்ட இப்படியாக இருக்கும்.
இதிலிருந்த பெரிய குறை. எழுத்துகள் பெரிதும் சின்னதுமாக ஆங்கிலமும் தமிழும் கலந்திருப்பது போன்ற தோற்றத்தில் இருந்ததுதான். அதனால் இந்த மென்பொருள் மக்கள் பயன்பாட்டில் பெரிதாக இடம்பெற முடியாமல் போய்விட்டது.

தனித் தீர்வு நோக்கி – முரசு அஞ்சல்

“தமிழ் மூலம் மின்னஞ்சல்” சிக்கல்களுக்குத் தீர்வு முயற்சிகளும், ஆராய்ச்சிகளும் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின. 1986ஆம் ஆண்டில் மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால்  முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். இதில் எழுத்துரு (font), எழுதி (editor), மின்னஞ்சல் செயலி (e-mail application), விசைப்பலகை (keyboard) என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம்பெற்றிருந்தன. இதன் மூலம், இந்தச் செயலியை நிறுவியுள்ள கணினிகளின் பயனர்களிடையே மின்னஞ்சல் தொடர்பாடல் இப்பொழுது இலகுவாக்கப்பட்டது.

இந்தச் செயலியில் முக்கியமான கூறு விசைப்பலகை. இந்த மென்பொருளைத் தொடங்கிவிட்டு, ஆங்கில விசைப் பலகையினூடாகவே தமிழ்-ஆங்கில  எழுத்து பெயர்ப்பு  மூலம் தமிழை எழுத முடிந்தது. அத்தோடு இந்த விசைப்பலகையில் தமிழ்த் தட்டச்சும் முறையும் இருந்தது. இப்பொழுது, தமிழ்த் தட்டச்சு தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இலகுவாகத் தமிழை எழுதத் தொடங்கினர். அது மட்டுமல்ல, தமிழை எழுத, வாசிக்கத் தெரியாத தமிழ் படிக்காத மேதைகள் கூட (ஆங்கிலம் தெரிந்திருந்தவர்கள்) எழுத்துப்பெயர்ப்பைப் பயன்படுத்தித் தமிழில் எழுத முடிந்தது. அதை அவர்கள் வாசித்துப் பிழைதிருத்த முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

முரசு அஞ்சல் வெளிவந்த மிக விரைவிலேயே,  யூடோரா (Eudora) என்ற மின்னஞ்சல் செயலி தமிழ் போன்ற பிற மொழி எழுத்துருக்களை உள்வாங்கி மின்னஞ்சல்களை எழுதி அனுப்பவும், படிக்கவும் கூடிய வசதிகளுடன் வெளிவந்து மின்னஞ்சல் தமிழை மேம்படுத்தியது.

முரசு அஞ்சல் (Murasu Anjal), இணைமதி (Inaimathi)  மயிலை  (Mylai),  ஆவரங்கால் (Avarangkal) போன்ற எழுத்துருக்கள் இதில் முக்கியப் பங்காற்றின. இந்த எழுத்துருக்களும் கூட எந்தவொரு பொது ஒழுங்கையும் கடைப்பிடித்திருக்கவில்லை. இந்நேரத்தில்,  யுனிக்ஸில் அகரம் (akarm) என்ற செயலியும்,  மக்கிண்டாசில்  சில்க்கி  (SILKey) என்ற செயலியும் தமிழைக் கணினியில் ஏற்ற உருவாகிவிட்டிருந்தன.

இது தவிர நளினம் (செல்லையா), கம்பன் (வாசுதேவன்), அணங்கு (குப்புசாமி), துணைவன் (ரவி) போன்றோரின் எழுத்துரு செயலிகளில் புழக்கத்தில் வரத்துவங்கின.

இணைய யுகம் – வைய விரி வலை

மின்னஞ்சல் தொடர்பாடல் (Communication) தமிழில் கைகூடலாகி வரும் நேரத்தில் இன்னொரு புரட்சிகரமான மாற்றம் கணினி உலகில் ஏற்படத் தொடங்கியது. இது ஒரு புது யுகத்திற்கும் வித்திட்டது. அது தான்  இணைய  யுகம். (Internet era) இணையத்தில், வைய விரி வலை  (world wide web) 1990 நடுப் பகுதியில்  கோபர் (Gopher),  மொசையிக் (Mosaic) என்ற வடிவங்களில் தகவல் பரிமாறும் தளங்கள் உருவாகி வலைக் கணினிகளின் பாவனையை ஒரு படி உயர்த்தத் தொடங்கியிருந்தன. மிக விரைவாகவே இது ஆக்கம் அடைந்து  மீயுரைக்  (HTML) குறியுடன் “நெட்ஸ்கேப்” (Netscape) உலாவிகளில் இணைய உலா முழு வடிவம் பெற்று இணைய யுகமே தொடக்கமாகியது.

சில இணைய தளங்களும் தமிழும் ஆங்கிலமும் கலந்த நிலையில் உருவாக்கம் பெறத் தொடங்கின. தமிழர் தாயகங்களிலிருந்து தனிப்பட்ட எழுத்துருக்களிலும் பல இணைய தளங்கள் பெரும்புகழாகத் தொடங்கின.  தினமலர், ஆனந்த விகடன்,  குமுதம்,  வீரகேசரி  மற்றும் பல ஏடுகள், பருவஇதழ்கள் இணையத்தில் கால்பதித்துக் கொண்டன. ஒரு தடவை அவர்களின் எழுத்துருவைத் தனிக் கணினிகளில் இறக்கம் செய்து வைத்திருந்தால் போதும் அந்த இணைய தளங்களை எப்பொழுதும் வாசிக்க முடியும்.

இணையத் தமிழ் முன்னோடி – நா. கோவிந்தசாமி

முதலில் தமிழை இணையத்தில் ஏற்றிவைத்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த  நா. கோவிந்தசாமி. 1995ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation – Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன்முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது.

இயங்கு எழுத்துரு

90 இறுதியளவில், பிற மொழி இணைய தளங்களைக் கருத்தில் கொண்டு, இயங்கு எழுத்துரு (dynamic font) என்ற எழுத்துரு பயன்பாட்டிற்கு வந்தது. இதைப் பிட்ஸ்ட்ரீம் (bit stream) என்ற ஒரு தனியார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன்மூலம் இணைய தளங்கள் தங்கள் எழுத்துருவையும் சேர்த்தே பார்வையாளர்களுக்கு அவ்வப்பொழுது வழங்கி வந்தன. இதன் அடிப்படையில், உபயோகிப்பாளர் எந்தவொரு எழுத்துருவையும் இறக்கம் செய்யாமலேயே இணைய தளங்களைப் பார்வையிட முடிந்தது.

இந்த இயங்கு எழுத்துருவைப் பயன்படுத்திப் பல தமிழ் மொழி இணையத் தளங்கள் அழகாக உருவாகத் தொடங்கின. ஒரு கட்டத்தில்,  மைக்ரோசாப்ட்  நிறுவனமும் இயங்கு எழுத்துருவுக்குக் கருவிகளை வழங்கியிருந்தது. காலப்போக்கில் இது நடைமுறை இழந்து வருவது தெரிகிறது. இப்படிப் பல துறைகளில் எழுத்துருக்கள் உருவாக்கம், பிற மொழியாளர்களை அவர்கள் மொழியில் கணினியில் பயன்படுத்த உருப்பெற்ற வண்ணமிருந்தன.

தமிழ்.நெட்

இணையப் பயனும் தமிழில் மின்னஞ்சல் கைகூடலான சூழலும் பல் வேறு நாடுகளிலுமிருந்த பல தமிழர்களைக் கணினியில் தமிழில் தொடர்பாட வைத்தன.

இந்நிலையில்,  1995  அளவில்,  ஆஸ்திரேலியாவில்  இருக்கும் திரு. பாலா பிள்ளை  என்பவர் ஒரு மடலாடற் குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஈடுபாட்டில் தமிழ்.நெட் (tamil.net) என்ற இணைய தளத்தைத் தொடங்கி அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார். தமிழார்வமுள்ள பலர் அதில் இணைந்து கொண்டு தமிழைப் பற்றியும், தமிழ்க் கணினி பற்றியும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துரையாடினர். தமிழும் தமிழர் சார்ந்த எல்லாச் செய்திகளுமே அங்கே அலசப்பட்டன. பல அறிஞர்களையும், வித்துவான்களையும் சந்திக்க வைத்து அவர்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்த தமிழ்.நெட் பெருமைக்குரியது. முரசு அஞ்சல் எழுத்துருவை ஒழுங்காகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து கொண்டிருந்தது. இவ்வாறு பல்வகையான தனியாளர்களின் பங்களிப்புடன் தமிழ் எழுத்துருக்கள் கணினியில் வலம் வரத்தொடங்கின.

*****

குறிப்புகள்

1. https://en.wikipedia.org/wiki/Personal_computer

2. http://www.sivalingam.in/computer/basics/kaaladithadam.htm

3. Ibid

4.http://www.mypno.com/index.php?view=article&catid=49%3Aeduart&id=7495%3A2013-09-11-08-30-15&tmpl=component&print=1&page=&option=com_content&Itemid=95

5. Ibid

6. https://www.vallamai.com/?p=57199

7. http://manikandanvanathi.blogspot.in/2012/04/blog-post.html

8. Ibid

9. கணினியில் தமிழ் நிகழ்வுகள் அமைப்பதில் உள்ள சிக்கல்கள், பக். 876 – 878

10. “கணினியில் தமிழ் எழுத்துருக்களும், குறியீட்டு முறைகளும்” வெ.இராமன் (2016) மதுரை காமராசர் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடு.

*****

கட்டுரையாசிரியர்
முதன்மையர், இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641021
மின்னஞ்சல்: raman600@gmail.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *