-மேகலா இராமமூர்த்தி

நெகிழியின் உள்ளிருக்கும் குடத்தைத் தொட்டு நெகிழும் மக்களைத் தன் ஒளிப்படப்பெட்டிக்குள் அழகாய் ஒளித்து வந்திருக்கிறார் திரு. ஜேக்சன் ஹெர்பி. இப்படத்தைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கிறார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன்.  இவர்கள் இருவருக்கும் என் நன்றி.

இலவசங்கள்மூலம் மக்களைத் தம் வசப்படுத்தி அவற்றிற்கு அடிமையாய் அவர்களை மாற்றும் அவலத்தை ஆரம்பித்துவைத்த பெருமை அரசியல்கட்சிகளையே சாரும். சுயஉழைப்பின்றிக் கிடைக்கும் பொருட்களுக்கும் களவாடிக் கைக்கொள்ளும் பொருட்களுக்கும் பெரிய வேறுபாடில்லை. ஆதலால், இலவசப் பொருட்களைப் பொருட்படுத்தாது அவற்றை உதறித்தள்ளும் தன்மானத்தோடு மக்கள் வாழும் நாளே நன்னாள்…போற்றத்தக்க பொன்னாள்!

இனி,  கவிபாட கவிஞர்களை அழைப்போம்!

’கையூட்டு இல்லாச் சமூகம் மலர, மக்கள் கையேந்தாமல் உழைத்து வாழ உறுதி ஏற்பதே ஒரே வழி’ என்பது திரு. ஏ.ஆர்.முருகன், மயிலம்பாடியின் கருத்து.

உழைப்பே உயர்வு!!

முண்டியடித்து முன்னேறிச்சென்று
கைகளை நீட்டி யாசகம் கேட்பது
அடிக்கடி நிகழ்கின்ற அவலம்!!
ஆன்மீக விழாவோ அரசியலோ
எதுவாயினும் இலவசங்கள்
இல்லாமல் நடப்பதே யில்லை!!
வாங்கும் வசதி வாய்க்கவேண்டி
வாழ்ந்திடப் பழகிக்கணும்!!
வாக்குகளையும் விலை தந்து
வாங்கும் நிலை வந்ததினால்
அதிகம் தருபவன் வெற்றிபெற்று
அதைவிடத் திருடுபனாகிறான்!!
தவறுகளுக்குக் காரணகர்த்தா
தருபவரைவிட பெறுபவர்தானே!!
மீன்களைபெற்றால் உணவாகும்
அதைப்பிடிக்ககற்க உயர்வுவரும்!!
கையூட்டு இல்லா நல்லசமுதாயம்
கண்டிட வேணுமென்றால் யாரும்
கண்டிப்பாய் ஏந்திட மாட்டோம்
கரங்களை எனஉறுதியேற்கணும்!!
உழைத்துச்சேர்த்து பொண்டுபுள்ள
உறவு நட்புக்கு கடமை செய்வதே
உண்மையான அன்பளிப்பாகும்!!
ஊரான்காசு எதுக்கு வேணும்???..

*****

’ஏற்பது இகழ்ச்சி’ எனும் ஔவை சொல்லை அமுதமாய்க் கொண்டு உழைத்துப் பிழைப்போம் என்கிறார் திரு. பழ.செல்வமாணிக்கம்.

உழைத்து வாழ்வோம்

“ஏற்பது இகழ்ச்சி”!
இது ஔவையின் அமுத மொழி!
இதை உணர்ந்தோர் வாழ்க்கை!
என்றும் மகிழ்ச்சி வழி!
இலவசம் என்ற ஒன்று உலகில் இல்லை!
இலவசத்தின் முடிவு என்றும் தொல்லை!
தூண்டில் புழு,மீனுக்கு எமனாகும்!
இலவசம், நம் வளர்ச்சிக்கு எமனாகும்!
இதை உணர்ந்தவர் வாழ்வு என்றும் இனிதாகும்!
வாங்கும் கைகள் தாழ்ந்திருக்கும்!
உழைப்பை நாளும் மறந்திருக்கும்!
சோம்பல் தானே துணையிருக்கும்!
உழைப்பை இன்றே விதைத்திடுவோம்!
பலனை உரிமையுடன் அனுபவிப்போம்!
உழைப்பின்றி கிடைக்கும் பயனெல்லாம்!
களவில் வந்ததாய் புறக்கணிப்போம்!

***** 

’குடமும் குத்துவிளக்கும் கொடுத்து ஆட்சியைப் பிடிக்கும் மடமைக்குத் துணை போகாதீர் மானிடரே!’ என்று மக்களை எச்சரிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

பரிசாய்…

பரிசுகள் வேண்டும் வெற்றிக்கு
பார்க்கும் இலவசம் பரிசில்லை,
பெரிதாய்க் குடமும் குத்துவிளக்கும்
கொடுப்ப தில்லை வெற்றியையே,
அரசியல் அவலமாய் வந்ததிதுவே
ஆசை அதன்மேல் வேண்டாமே,
உரிய பரிசினைப் பெற்றிடவே
உழைத்திடு உண்மையாய் வாழ்வினிலே…!

***** 

’உழைப்பின் உயர்வறியா மூடர்களே…! ஈயென இரத்தல் இழிவென்பதை உணர்ந்து உழைக்க வாரீர்!’ என்று இலவசங்களில் சுகம் கண்டவரைச் சாடுகின்றார் திருமிகு. மா. பத்மபிரியா, உதவிப்பேராசிரியர், எஸ்.எஃப். ஆர். மகளிர் கல்லூரி, சிவகாசி.

இலவசங்களில் தடம்புரளும் உள்ளங்கள்
இரண்டு கரங்கள் இருந்தென்ன
இரத்தல் இழிவென புரியாதா
உழைப்பின் உயர்வறியா மூடர்களே !
உயர்த்தும் கரங்களில் கறை காணீர் !
இலவசம் வழங்கியே பிழைப்போரும்
இலவசம் வாங்கியே பிழைப்போரும்
மனிதர்களில் பிழைகளாக……
உடல் களைக்க உழைப்பவரும்
உடல் ஊனம் மறந்து உழைப்பவரும்
உணர்த்தும் நியதி புரியாது
உண்டுறங்கும் மானிடமே
இருக்கிறவர் இல்லாதவர் பேதமின்றி ……..
இலவசத்தின் வசமானவரே !
இளமையின் வேகம் இது தானா
இலட்சியம் தொலைப்பது சரி தானா
ஈயென இரத்தல் இழிவாகும்
ஈயாய் மொய்ப்பது அவமானம்
இல்லாமை ஒழிக்க இலவசமா
பிழைப்பற்ற மானுடரே !
பிழைத்தெழுவீர் இப்போது

 ***** 

ஓட்டுக்குப் பேரம் பேசும் அரசியல்வாதிகளையும் அதை நம்பி ஓட்டை விற்கும் மக்களையும் பகடிசெய்து கவிதை படைத்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

வருகின்ற தேர்தலில்..!

வருகின்ற தேர்தலில் மறக்காமல் வாக்களிக்க.
……….வாரிக் கொடுக்கிறோம் பெற்றுச் செல்லுங்கள்..!.
தருகின்ற இனாமெல்லாம் போதா தென்றால்.
……….தராசுக் கிணையாய் மேலும்பலவும் தருவோம்..!.
பொறுத்திருந்து பாரும்!நாங்கள் ஆட்சியைப்.
……….பிடித்தால் நீங்களினி பொதி சுமக்கவேணாம்..!.
தருமிந்த இனாமுக்கு வெகுமதியாக உங்கள்.
……….தங்கமான ஓட்டை எங்களுக்குத் தந்திடுவீரே..! 

இப்போது பெற்றிடுவீர் ஈதொரு அடையாளம்.
……….இந்தச்சிறிய எவர்சில்வர் குடத்தை மட்டுமே..!.
அப்போது கொடுத் திடுவோம் ஆளுக்கொரு.
……….அண்டா குண்டாவும் அரிதான வெள்ளியிலே..!.
ஒப்பாகா உங்களுயர்ந்த வாக்குரிமையை வேறு.
……….ஒருவருக்கும் விற்று விடாதீர் வேண்டுகிறோம்..!.
தப்பாது வாக்களியுங்கள் தாங்கள் மனசாட்சி.
……….தவறா தெங்களை வெற்றியுறச் செய்யுங்கள் ..!

***** 

இலவசக் குடத்துக்கு ஆசைப்பட்டு தம் குடிப்பெருமையை அடகுவைக்கும் மக்களின் மடமையை சுருக்கென்று அருமையாய்ச்  சொல்லியுள்ளார் திருமிகு. அவ்வைமகள்.

குடிமுழுக்கு

குடமொழுக்கிக் குடமுயக்கில் குடமுழுக்கிக் குடிப்பூட்டிக்
குடி வழுத்தும் குடிமுழுக்கு

*****

இலவசக் குடத்தை வைத்து மனித உளவியலை இனிய சொல்லோவியங்களாய்த் தீட்டிக் காட்டியுள்ள புலவர்களுக்கு என் பாராட்டு!

இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வாகியிருப்பது அடுத்து… 

மனிதா உணர்ந்திடு உன் ஆற்றலை…!

சுடரொளிச் கண்கள், செப்பும் நல்வாய்,
வயிரம் பாய்ந்த மரநிகர் உடம்பில்
வயதின் மூப்பு தோன்றிட வில்லை..
நாற்றம் உணர்ந்திட அமைந்தவோர் நாசியில்
நலமே யன்றி குறைவேது மில்லை…
கேட்டு இன்புறும் செவிக ளிரண்டில்
கூரிய செவித்திறன் குறையவு மில்லை…
இத்தனைச் சிறப்புகள் மெத்தவும் இருந்தும்…
இலவசம் என்பதற் கலைவதும் ஏனோ…?

ஐம்பொறி யனைத்தையும் ஒருங்கே பெற்று…
ஐயத்திற் கிடமில்லா ஆற்றலும் பெற்று…
கைகளும் கால்களும் உறுதியைப் பெற்று…
கையாளும் வினைகளில் வல்லமை பெற்று…
சுட்டும் அறிவாம் பகுத்தறி வுடனே…
சிந்திக்கும் திறமை எல்லாம் பெற்று…
இலங்கும் இனிய மானிடப் பிறப்பே…
இத்தனை இத்தனை ஆற்றல் இருந்தும்…
இரந்து வாழ்தல் என்பது நலமா…?

ஓரறிவு முதலாய் ஐந்தறிவு வரையுள்ள…
ஓர்மம் கொண்ட உயிர்கள் யாவும்…
தனக்கென் றேதும் கேட்ப தில்லை…
தனக்கென் றேதும் கொள்வ தில்லை…
இருப்பதைக் கொண்டு மகிழா விட்டால்..
இதயம் அமைதி பெற இயன்றிடுமா…? 

ஓரறிவு முதலாய் ஐயறிவுயிர்கள் ஈறாய்த் தமக்கென்று எதுவும் கேட்காமல் உழைத்துப் பிழைக்கையில், ஐம்புலன்களிலும் அளப்பரிய ஆற்றலை வரமாய்ப் பெற்றிருக்கும் மானுடர் மட்டும் ஏன் பகுத்தறிவிழந்து இலவசங்களின் வசம் சிக்கிச் சீரழிகின்றனர்? ’செல்வம் என்பது சிந்தையின் நிறைவே’ என்பதை என்றுணரும் இந்த மானுடச் சாதி? என்று தன் அறச்சீற்றத்தை அழகாய்க் கவிதையில் பதிவுசெய்திருக்கும் திரு. ஆ. செந்தில் குமார் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வுசெய்யப்படுகின்றார். அவருக்கு என் பாராட்டு!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 152-இன் முடிவுகள்

  1. படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வல்லமை மின்னிதழுக்கும் நடுவர் அவர்கட்கும் எனது மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *