எங்கே இருக்கிறது ஜனநாயகம்?
நாகேஸ்வரி அண்ணாமலை
கர்நாடகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. எல்லாக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன. முதல் அமைச்சர் பதவிக்கு பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருப்பவர் எடியூரப்பா. இவர் ஊழலிலே திளைத்து ஊறிப்போனவர்; சிறைக்குச் சென்றவர். ஊழலற்ற இந்தியாவை உருவாக்கப் போகிறோம் என்று சொன்ன பா.ஜ.க.வின் வேட்பாளர். மோதி இவரை வெகுவாகப் புகழ்ந்து பேசி, மக்களுக்கு அறிமுகப்படுத்தும் படம் தினசரிகளில் வெளியானது. ஜி.எஸ்.டி.., பணமதிப்பிழப்பு, நீட் தேர்வு என்று பல திட்டங்களை அறிவித்து நாட்டில் கள்ளப் பணத்தை ஒழித்து, ஊழலே இல்லாத நாடாக ஆக்கப் போவதாக அறிவித்த மோதியின் கையாலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் எடியூரப்பா. இதை எப்படி ஜீரணித்துக்கொள்வது என்று தெரியவில்லை. இவர் மட்டுமல்ல, கர்நாடகத்தில் பல வேட்பாளர்கள் இவரைப்போல் மெகா ஊழல் புரிந்தவர்கள்தான்.
காஷ்மீரில் ஒரு எட்டு வயது முஸ்லீம் சிறுமிக்கு நடந்த கொடூரம் அமெரிக்காவரை வந்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் தலையங்கம் எழுதுபவர்களும் பத்தி எழுதுபவர்களும் இந்தியப் பிரதமர் அந்தச் சம்பவத்தைப் பற்றி மௌனம் சாதித்ததைக் கண்டிக்கும் அளவுக்கு உலகத்தின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவள் என்பதாலேயே அந்தச் சிறுமி இத்தகையக் கொடூரத்திற்கு ஆளாகியிருக்கிறாள் என்பதை அறியும்போது காந்திஜியும் நேருவும் கட்டிக் காத்த சமயச் சார்பற்ற இந்தியா எங்கே என்று அலற வேண்டும்போல் இருக்கிறது.
தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் இன்னும் பெரிய சோகக் கதை. அம்மையார் இறந்த பிறகு நிலைமை சீர்ப்படும் என்று எண்ணியிருந்த என் போன்றவர்களுக்கு பெரிய அடி, தாங்கிக்கொள்ள முடியாத அடி. அம்மையார் இறந்த பிறகு அந்தக் கட்சிகுள்ளேயே பலத்த அடி, தடி நடக்கும், அதில் அந்தக் கட்சியே சிதறிப் போகும் என்று நினைத்தால், அம்மையார் இருந்தபோது இருந்த மாதிரியே மோதியின் ஆதரவில் காலம் தள்ளும் அதிமுக ஆட்சியில் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற நிலை தொடருகிறது. மோதியின் தயவால் அதிகமாகியிருக்கிறது என்றுகூடச் சொல்லலாம். எடப்பாடி அரசு எடுபிடி அரசாக மாறித் தமிழ்நாட்டை மத்திய அரசுக்கு சாசனம் எழுதிக் கொடுத்துவிட்டது என்றே சொல்லலாம். ஆங்கிலத்தில் ‘win win situation’ என்பார்கள். இரு தரப்பாருக்கும் வெற்றி என்று அர்த்தம். எதிலுமே ஒருவர் ஜெயித்தால் இன்னொருவர் தோற்றே ஆக வேண்டும். தமிழ்நாட்டில் இப்போது நிலவுகின்ற சூழ்நிலையில் மட்டும் மேற்கூறிய ஆங்கிலத் தொடரின்படி இரண்டு பேருக்கும் வெற்றி கிடைத்துக்கொண்டிருகிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை பா.ஜ.க. தமிழ்நாட்டில் காலூன்றவும் தன் கொள்கைகளைத் திணிக்கவும் ஒரு வாய்ப்புக் கிடைக்கிறது. தமிழக அரசைப் பொறுத்தவரை அதிமுக தொடர்ந்து ஊழல் புரிய வாய்ப்புக் கிடைத்துக்கொண்டிருக்கிறது. இது இருவருக்கும் வெற்றி என்பதைத்தானே குறிக்கிறது?
இதற்கிடையில் கல்லூரிப் பேராசிரியர் நிர்மலா தேவி கதை நெஞ்சைக் குதறி எடுப்பதுபோல் இருக்கிறது. அந்த விசாரனை, இந்த விசாரணை என்று பேசுகிறார்களே தவிர உண்மை வெளிப்படுமா என்று தெரியவில்லை. இதில் ஆளுநருக்கும் பங்கு இருப்பதாகக் கூறுகிறார்களே. என்ன அவலம்! நல்ல வேளை, கல்லூரிக்குப் போகும் வயதில் குடும்பத்தில் பெண் இல்லை என்று நினைத்து ஆறுதலடைவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?
உலகில் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகள் என்று கருதப்படுபவை இந்தியாவும் அமெரிக்காவும். இந்தியாவில்தான் இப்படி நடக்கிறது என்றால் அமெரிக்காவிலும் அரசியலில் ஊழல் தலையெடுப்பதாகத் தெரிகிறது. ஊழல் புரிந்து சிறைக்குச் சென்ற எடியூரப்பா இந்தியப் பிரதமராலேயே பெருமையாக முதல் மந்திரி பதவிக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார் என்றால் அமெரிக்காவில் 2018-இல் வரப் போகும் பாராளுமன்றத் தேர்தலில் தன்னுடைய நிலக்கரிச் சுரங்கம் வெடித்து 29 பேர் பலியானதால் ஒரு வருடம் சிறைத் தண்டனை பெற்ற டான் பிளேக்கென்ஷிப் என்பவர் போட்டியிடப் போகிறார். வெற்றி வாய்ப்பு இருக்கிறது. சட்டப்படி சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாததால்தான் விபத்து ஏற்பட்டது என்பதால் சிறைத் தண்டனை பெற்றார். இப்போது சட்டம் இயற்றும் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படலாம். இந்தியாவில் சட்டத்தை மீறிய குற்றங்களுக்குத் தண்டனை கிடைக்குமா என்று தெரியவில்லை. எல்லாவற்றையும் பணம் கொடுத்து ‘சரிக்கட்டிவிடுவார்கள். அமெரிக்காவில் அது நடக்காது என்றாலும் சிறைத் தண்டனை பெற்றவர் தேர்தலில் போட்டியிடுவது அமெரிக்காவில் புதிது என்றே சொல்லலாம். கர்நாடகத்தில் சுரங்க கொள்ளையில் ஈடுபட்ட ரெட்டி சகோதரர்கள் பி.ஜே.பி. சார்பில் தேர்தலுக்கு நிற்கிறார்கள். ஜெயிக்கவும் செய்யலாம்
அடிக்கடி என் கணவர் அமெரிக்க அரசியல்வாதிகளும் இந்திய அரசியல்வாதிகள் போல் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்பார். ‘தயவுசெய்து அமெரிக்காவை இந்தியாவோடு ஒப்பிடாதீர்கள்’ என்பேன் நான். இன்னும் அப்படித்தான் சொல்கிறேன். தினமும் பொய்களாகக் கூறிக்கொண்டிருக்கும் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்தும் இந்தியா அளவுக்கு அமெரிக்கா தாழ்ந்து போகவில்லை என்றே சொல்வேன். சட்டங்களின் ஆட்சி என்பது இன்னும் உண்மை.. ஆனாலும் இந்த அமெரிக்காவிலும் இப்படி நடக்கிறதே என்றால் மனம் கலங்கத்தான் செய்கிறது. ஜனநாயகத் தேர்தல் இப்படிப்பட்ட விளைவுகளைத் தடுக்க முடியவில்லையே என்பது வேதனையாக இருக்கிறது. எத்தனை ‘இசங்களை’ மனிதன் உருவாக்கினாலும் மொத்தத்தில் பின்னோக்கித்தான் செல்கிறானா? இதற்கு விடிவே இல்லையா?
என்ன அவலம்! நல்ல வேளை, கல்லூரிக்குப் போகும் வயதில் குடும்பத்தில் பெண் இல்லை என்று நினைத்து ஆறுதலடைவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?