பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

 ரகுநாத் மோகனன் எடுத்து, ராமலஷ்மி ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கும் இந்தப் படத்திற்கு  ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (26.05.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

 

பதிவாசிரியரைப் பற்றி

6 thoughts on “படக்கவிதைப் போட்டி (162)

  1. ————————————————————
    வந்தாய் என் வழித்துணையாய்
    ————————————————————
    கண்ணே உன் காதோர கம்மல்
    என்னை கவிபாட சொல்லுதம்மா
    பெண்ணே உன் விழி பேசும் மொழியின்
    மின்சாரத் தாக்கம் என் உயிருக்குள் செல்லுதம்மா

    மன்னனானேன் நானுனக்கு மாலையிட்டு மகிழ்வுடனே
    புன்னகையின் புது வெள்ளமதில் என்னை நீந்தவைக்கும்
    மென்னகையாளே வாழ்க்கை என்னும் பூவனத்தில்
    என்னோடு வழித்துணையாய் என்றும் வருபவளே

    கொஞ்சும் மழலைச் செல்வங்களிரண்டு
    கொஞ்சி மகிழ்ந்திட தந்தாயே – திரை கூப்பி வெண்
    பஞ்சாய் தலை நரைக்கும் காலத்திலும்
    நெஞ்சமிரண்டும் அன்புடன் இணைந்திருப்போமே

    வேலைமுடித்து நான் கலைத்து வரும்
    வேளையிலே கோலமயிலே நீ என்
    கலைப்பு தீர அன்பு நீர் குவளை தனை ஆசையோடு
    வளைகரங்களில் தாங்கி வந்து தருவாயே

    கவலை மறந்து சிரித்திருப்போம்
    கதைகள் பல பேசி மகிழ்ந்திருப்போம்
    கருணை மாறாது பல்லுயிர்க்கும் உதவிடுவோம்
    காலங்கள் கடந்தும் வாழ்ந்திருப்போம்

    முல்லை மல்லிகை மலர்களைப் போல
    வெள்ளை மனம்தான் கொண்டவள் நீ
    எல்லையில்லா அன்போடு என்றும் நன்றாய் வாழ்வோம்
    தில்லையாண்டவன் துணையோடு நாம்.

    சு.பாஸ்கரன்
    22-ஓலப்பாளையம்
    புன்னம் சத்திரம் அஞ்சல்
    கரூர் மாவட்டம்- 639136
    9789739679, 8903292398
    http://noyyal.blogspot.in/

  2. நல்லறம்…

    சண்டை போட்டுக் கொண்டிருந்தால்
    சரிவரா திந்த இல்லறமே,
    அண்டை அயலார் மெச்சிடவே
    அன்பாய்ப் பேசி இருவருமே
    பண்புடன் வாழத் தெரிந்துகொண்டால்
    பார்த்திதைப் பிறரும் தெரிந்திடுவர்,
    பெண்ணும் ஆணும் புரிந்துதம்முள்
    பழகி வாழ்தல் நல்லறமே…!

    செண்பக ஜெகதீசன்…

  3. பெண்டாட்டி தாசன்..!
    ====================

    மண்ணுலகில் பிறவியெடுத்து மனிதனாய் வாழ
    ……….மனைவியும் அமைய வேண்டும் நல்லவளாக.!
    கண்ணாளனாக அமைய வேண்டும் கணவனும்
    ……….காலமதற்கு ஓரளவேனும் கைகூட வேண்டும்.!
    எண்ணத்தில் எத்துணையோ ஆசைகள் நிறைய
    ……….ஏங்கும் மனைவியின் தேவையும் அறியவேணும்.!
    வண்ணத் துணிமணிகளை வாங்கித் தருவீர்
    ……….வகையாய் கம்மல் ஜிமிக்கி அன்பளிப்பாக்குவீர்.!

    தவமிருந்து பெற்றதைப்போல் அவளுமே நல்ல
    ……….தாரமாக அமைதல் வேண்டும் இறையருளால்.!
    அவள் கொடுக்கும் அன்புக்கு வெகுமதியாக
    ……….ஆராய்ந்து பரிசளிப்பீர் இல்லறம் செழிக்கவே.!
    தவறென்று அவளெதையும் சுட்டிக் காட்டினால்
    ……….தவறாமலவை நடக்காது பார்த்துக் கொள்வீர்.!
    சுவரை வைத்தே சித்திரமும் என்பதுபோல்
    ……….சுகமாய் குறைவிலாமல் கவனித்துக் கொள்வீர்.!

    இலக்கு ஒன்றை நிர்ணயித்து இல்வாழ்க்கை
    ……….இன்பமாக்க இல்லாளின் துணை அவசியமே.!
    அலக்கழித்து அவளை அல்லல் படவைத்தால்
    ……….அத்துணையும் பாழாகும்! வாழ்வு நரகமாகும்.!
    சலசலப்பு இல்லாத சஞ்சலமற்ற வாழ்க்கை
    ……….சம்சாரியின் கையில்தான் என்பதை உணருக.!
    குலக்கொழுந் தாயவள் தளிர்விட குடும்பத்தில்
    ……….கட்டியவளுக்கு தாச னானாலும் தவறில்லை.!

  4. மணியோசையவள்! அவள் பின்னே தப்பாமல் வருஞ்சாமான்- எம்
    மணிமாடத்தவை எத்தனை நாள் சாகையோ? அவளொன்றே அதுவறிவள்!
    பணித்தமகனாய்ப் பகட்டத்திறந்து கைத்தலத்து ஒத்தாசை தரவேணும்
    கணித்துக் காசுரைத்தால் எது தெறிக்குமெது பறக்கும் ஏதறியேன் நான்கணவன்
    துணிக்குக் கூடையா தூக்குப்பெட்டியா பாக்குப்பாயா பிளாஸ்டிக் கட்டிலா ஏன்
    ஏணிக்கும் கூட வீட்டில் எண்ணிக்கையில்லை எம்பரணிலோ இமியிடமில்லை
    ஆணியடித்து ஓய்ந்து போயிற்று அலமாரிகள் வளர்த்து ஓய்ந்து போயிற்று
    அணியணியாய்ச்சேரும் அட்டைப்பெட்டி வளருதலிங்கே மாபெரும் சாதனை
    வேணி முடிப்புக்கு மூணு மேசைகள் அரிதாரம் பூச நாலு கண்ணாடிகள் புதுப்
    பாணியென்றே குப்பி-தொப்பிகள்! சந்தைவிரிக்கலாம் சுரிதார்கள் நிஜார்கள்!
    மணிபார்க்க மாத்திரம் பத்து கடியாரங்கள் எனினும் நிதமும் தாமதச் சமையல்
    பணிபாணியிலிங்கே நவீனப்புரட்சி! நான் வீட்டிலிருந்தே வேலைசெய்பவன்!!
    மணிக்குமணியமர்ந்துழைக்கும் மணியன்; வீட்டிற்குமோர் இலவச நாயகன்
    மணியழைப்போயா வாசற்படியில் பணிவிட்டெழுவது எனக்குடற்பயிற்சி
    கணினிஆடவர் வாழ்க்கை போகுது! வயதேறிப் போனால் சிக்கலே மிஞ்சுது!
    மணியாய்ப் பொறுமை உண்டெனக்கேன்றே பேசிமுடித்த இல்லறபந்தம்
    “மணி!” மனைவிமக்கள் அழைப்பொலி! அவரடிபட நானொரு நல்மணி தானே?
    துணியோ பொன்னோ போக்குவரத்தோ யாதுக்கும் நானொரு சத்தியச் சாட்சி
    துணிந்து சொல்ல வாயிறந்தவன்; துணித்துப்போகவும் மனமில்லாதவன்
    பணியில் நட்டம் எனக்காகாது! நானா அவரை முறைப்பேன்? எதிர்ப்பேன்?
    பணிந்து போவதே பாதுகாப்பென மவுனம் காக்கும் நான் சிரிப்பொலி சித்தன்!

  5. அச்சாரம் போட்டுட்டேன்டி என் அத்த மகளே – இந்த
    மச்சான நீ கட்டிக்கடி என் அத்த மகளே…
    அச்சாணி இல்லாம வண்டி ஓடுமா? .. இந்த
    மச்சானும் இல்லாம உன் வாழ்க்கை இனிக்குமா…?

    ஒட்டியானம் வாங்கி போட்டு அழகு பார்பேன்டி.. கழுத்துக்கு
    ரெட்டவட சங்கிலியும் பூட்டிப் பார்ப்பேன்டி…
    மாட்டலோட கம்மலும் வாங்கித் தருவேன்டி. உன்ன
    பட்டணத்து கடைக்கெல்லாம் கூட்டிப் போவேன்டி…!

    சச்சரவு இல்லாத வாழ்க்கை வாழுவோம்.. ஊரார்
    மெச்சும்படி நல்லதோர் குடும்பம் நடத்துவோம்…
    கச்சிதமாய் இருக்குமொரு நெலத்த வாங்குவோம்.. அதிலே
    மச்சிவீடு ஒன்னு நாம பார்த்துக் கட்டுவோம்…!

    உன்ன அச்சில்வார்த்த குழந்தையொன்னு பொறக்கவேணுன்டி.. அந்த
    கண்மணியும் மழலை மொழி பேச வேணுன்டி..
    சின்னச்சின்ன சேட்டையெல்லாம் செய்ய வேணுன்டி.. அதை
    கண்டு நானும் ஆனந்தமா துள்ள வேணுன்டி..

  6. அன்பு உள்ளமே, பொங்கும் புன்சிரிப்பே

    கண் எதிரே நிற்கின்றாய், கனிமுகத்தைக் காட்டுகின்றாய்

    என்னை என்னவென்று உன் கண்ணால் கேட்கின்றாய்

    மாலையிட்ட மணாளனை கண்டவுடன் உனக்கு

    மனதிலே பல்வேறு நினைவுகள் தோன்றுதே உனக்கு !

    ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று பெற்றோம்

    கொஞ்சி மகிழ்ந்திட, இதுவே நம்முலகம் என்றோம்

    வேலைமுடித்து வரும்போது களைப்பு தீர தாகம் தீர்த்து,

    வளைக் கரங்களில் நீ தரும் நண்ணிரே என் பசி தீர்க்கும் !

    வேலை செய்த அன்று, சிரிப்புடன் நடந்ததை பகிர்வேன்

    அதனை வேடிக்கையாய் கேட்டு உனக்குள்ளே சிரிப்பாய்

    கவலைகள் மறந்து, கதைகள் பேசி இரவினைக் கழித்தோம்

    என்றும் நமது உள்ளமே, பொங்கும் மகிழ்ச்சி என அறிந்தோம் !

    நல்ல குடும்பம் ஒரு பல்கலைக்கழகம் எனச் சொல்வதுண்டு

    விட்டுக்கொடுத்து வாழ்ந்தாலே, இல்லறம் கெட்டுப்போவதில்லை

    என்றும் நம்மிடம் பிரிவில்லை, வாழ்க்கையில் ஒன்றானபின்னே

    ஆனந்தம் இன்று ஆரம்பம், அன்பில் பிணைந்தாலே பேரின்பம்

    நான் குடும்பப்பெண் என நினைக்கு ம் போதினிலே

    என் எண்ணம் என்றும் ஈடேறும் போதினிலே

    உன் முகச்சிரிப்பினை என் அருகினிலே
    கண்டு கொண்டேன் என் ஆசை மணாளனை நேரினிலே !

    ரா.பார்த்தசாரதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *