ஆற்றுப்படைகளில் துன்பவியல் மெய்ப்பாடுகள்

0

-கி. ரேவதி

அகவுணர்வு மெய்த்தோற்றம் கொள்ளுதலை மெய்ப்பாடு என அறியலாம் அது காதல் உணர்வை மட்டுமல்லாமல் வாழ்வின் நிகழ்வுகளைக் காணும் தோறும் உள்ளுக்குள் எழும் உணர்வுகளை மெய் பிரதிபலிக்கின்றது. அதனைக் காண்பார்க்குக் காட்சியளிக்கின்றது. தமிழர் பண்பாட்டில் காணப்பட்டுவந்த ஒவ்வொரு நிகழ்வும் அக்கால இலக்கியங்கள், கல்வெட்டுகள், சுவடிகள் முதலியவற்றில் மெய்ப்பாடுகள் குறித்த பதிவுகளாக அதிக அளவில் காணப்படுகின்றன என்று துணியலாம்.

பரிசில் பெறாதவரின் வறுமை நிலை

வறுமை என்பது வெறுமையைக் குறிக்கும். ஒருவனிடம் பொருள், கல்வி, அறிவு இவைகள் இல்லையென்றால் அவன் வறியவன் ஆவான். கொடியது வறுமை. வறுமைக்கு உவமை சொல்ல வந்த வள்ளுவருக்கு வறுமையே உவமையானது வறுமையின் அழுத்தச் சித்திரம்.

‘இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னாதது’1
(திருக்.1041)

என்கிறார் திருவள்ளுவர். இத்தகைய வறுமைநிலையை விளக்குமுகத்தான் பொருநராற்றுப்படையில் மன்னனிடம் பரிசில் பெறாதவரின் வறுமை நிலையும், பரிசில் பெற்றவரின் முன்னர் வறுமைநிலையும் சித்தரிக்கப்படுகிறது.

‘ஆடுபசி உழந்தநின் இரும்பேர் ஒக்கலொடு
நீடுபசி ஓராஅல் வேண்டின், நீடு இன்று
…………………………………………………

இருசீர்ப் பாணிக்கு ஏற்ப, விரிகதிர்
வெள்ளி முளைத்த நள்இருள் விடியல்
ஒன்றுயான் பெட்டா அளவையின்’2
(பொருந.61-74)

என்ற பாடல் வரிகளின் மூலம் மிகுந்த புகழுடைய நான் கூறுவதைக் கேள்! கொல்லுகின்ற பசித்துயரால் வருந்துகின்ற உன் சுற்றத்தாருடைய நீண்டநாள் பசியைத் தீர்க்க நீ விருப்பம் உடையவனானால் இன்றே புறப்படு! ஏழிசை யாழ் நரம்புக்கு உரிமையுடையனே உடனே செல்!

பழுத்த பழமரங்களை விரும்பித் தேடிச்செல்லும் பறவைபோல நானும் முன்பு உன்னைப் போல வறுமையுற்றிருந்தபோது இழுமென்னும் ஓசையுடன்  முரசொலித்துக் கொண்டிருக்கும் கரிகாற்பெருவளத்தானை அணுகித் தன் வறுமைதீர உண்பதாகப் பரிசில்பெற்ற பொருநன் தன் வறுமை நிலையையும் பரிசில்பெறாப் பொருநன் வறுமை நிலையையும் உரைப்பதை அறியலாம். வறுமை மிகும்போது அழுகை மெய்ப்பாடு தோன்றியுள்ளது. பெரும்பாணாற்றுப்படையில் பரிசில்பெறாப் பெரும்பாணனின் வறுமை நிலையினை,

‘வெந்தெறற் கனலியொடு மதிவலம் திரிதரும்
தண்கடல் வரைப்பில், தாங்குநர்ப் பெறாது
பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்
பழுமரம் தேரும் பறவை போல,
கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரித்தரும்
புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண’3
(பெரும்.17-22)

என்ற பாடல் வரிகளில் ஞாயிறும் திங்களும் வலம் வருகின்ற கடல்சூழ் உலகில், மழை வறந்தமையால் புகை எழுகின்ற மலையின்கண், நின்னைப் புரப்பாரைப் பெறாமையால், பழுத்த மரத்தை நாடித்திரியும் பறவைபோன்று, அழுது புலம்பும் சுற்றத்தினருடன், ஓரிடத்து இல்லாமல் பயனின்றி ஓடித் திரிகின்ற பொலிவிழந்த வடிவினையும், கற்ற கல்வியை வெறுத்துப் பேசுகின்ற வாயினையும் உடைய பாணனே! என்று பாணனின் வறுமையைக் கூறி அவனை விளிக்கிறான். வறுமை வருமிடத்து அழுகை என்பது இயல்பாக தோன்றுகிறது.

வழி நடந்த சோர்வால் அடைந்த வருத்தம்

ஒவ்வொரு மனிதனுக்கும் துன்பம் வரும் பொழுது தான் வருத்தப்படுவான். மனிதன் வறுமையால் வருத்தம் அடைகின்றான், வழி நடந்த சோர்வால் வருத்தம் அடைகின்றான். இவ்வருத்தம் பொருநர் ஆற்றுப்படையில் ஓரிடத்திலும், சிறுபாணாற்றுப்படையில் இரு இடங்களிலும் இடம் பெறுகின்றது.

பொருநராற்றுப்படையில் காடுறை தெய்வங்களை வணங்கி, கடன்செய்து செல்லுங்கள் என்று கூறவந்த பொருநன் பாடினி பாடின தாளத்திற்கு பொருந்துமாறு, நாள்தோறும் வழி செல் வருத்தம் தாங்கி இருப்பவன் என்று பொருநனை உரைக்கிறான். ஆறு என்பது வழியை குறிக்கும். தினந்தோறும் நடந்த வருத்தத்தை குறிக்கும் இதனை,

‘பாடின பாணிக்கு ஏற்ப, நாள்தோறும்
…………………………………………
இலைஇல் மராஅத்து, எவ்வம் தாங்கி’4
(பொருந.48-50)

என்ற பாடல் வரிகளின் வழி அறியலாம்.

சிறுபாணாற்றுப்படையில் விறலியரையும் பாணரையும் விளிக்க, விறலியர்க்கு வருணனை அளித்த பாணன் வறுமை ஆற்றுப்படுத்தலால், வழி நடந்த வருத்தம் தீர்ந்திருந்த அறிவு வளர்த்தற்கு உரிய தொழிலினையுடைய இரவலனே! என்கிறான் இவ்வருத்தம் என்பது பாடலில் பயின்று வந்துள்ளது இதனை,

‘துனிகூர் எவ்வமொடு துயர்ஆற்றுப் படுப்ப
முனிவு இகந்திருந்த முதுவாய் இரவல’5
(பொருந.39-40)

என்ற பாடல் வரிகளின் மூலம் அறியலாம். மேலும் சிறுபாணன் தன் வருத்தம் போக்கிய வன்மை சிறப்பிர் வருத்த நிலையை

‘……………இந்நாள்
திறவாக் கண்ண சாய்செவிக் குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது

……………………………………………
ஒல்குபசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல்
வளைக்கை, கிணைமகள் வள்உகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்புஇலி வெந்ததை
மடவோர் காட்சி நாணி, கடைஅடைந்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஉடன் மிசையும்
அழிபசி வருத்தம் வீட……………………
…………………………………………………….
பால் அவன் நின்றும் வருதும்’6
  (சிறுபாண்.129-140)

என்ற வரிகளில் விழிக்காத கண்ணையும், சாய்ந்த செவிகளையும் உடைய குட்டிகள், பிறரால் கறக்கப்படாத பாலினை உடைய முலையை உண்ணுதலைத் தன் பசிமிகுதியால் பொறுக்க இயலாது. அண்மையில் ஈன்ற நாய் குரைக்கின்ற, கழிகள் கட்டற்று வீழ்ந்து கிடக்கும் பழைய சுவர், அச்சுவரில் தோன்றிய கறையான் அரித்துச் சேர்த்த புழுதியிடத்துக் காளான் பூத்துவியங்கும் அட்டில், இத்தகைய நல்குரவினால், இளைத்த உடலை உடைய நுண்மருங்குல் கிணைமகள் கடும்பசிக்கு ஆற்றாது குப்பையில் நின்ற வேளைக் கீரையை நகத்தால் கிள்ளி வந்தாள். சுவை பயத்தற்கு இடும் உப்பும் இல்லாத வறுமை, உப்பின்றி அட்டிலிலே பக்குவம்செய்து கீரையைப் புறங்கூறுவோர் காணுவதை நாணித் தலைவாசற் கதவை அடைத்து எம் சுற்றத்தோடு பகிர்ந்து உண்போம், இத்தகைய வறுமை என்னை விட்டு அகலவும் அறிவு முதலியன அழிதற்குக் காரணமாகிய பசியால் உளதாகிய வருத்தங்கள் அறவே ஒழிந்தது என்று உரைக்கிறான்.

பொருநனின் வழிநடை வருத்தம்

மென்மை என்பது வலிமையின்மை ஆகும். வலிமை இல்லாத ஒருவன் செயல்கள் (வேலை) செய்வது கடினமான ஒன்றாகும். பொருநர் ஆற்றப்படையில் அரசனின் விருந்தோம்பல் சிறப்பினைக் கூறவந்த பொருநனின் வழிநடை வருத்தம் போகும்படி கள்ளினைப் பருகி மன வருத்தம் நீங்கும்படி அரசன் இருந்தான் என்று உரைக்கிறான் அதனை,

‘வாங்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர உண்டு பேரஞர் போக்கி’7
   (பொருந.87-89)

என்ற வரிகளின் வழி அறியலாம். வருத்தம் என்பதற்கு வழிநடையாலும் பசியாலும் உண்டான துன்பம் என்பது பொருள். இது வலிமையின்மையின் ஏற்பட்ட துன்பம் ஆகும்.

இளந்திரையினது காவல் சிறப்பு

விலங்கு என்பது ஐந்தறிவு உயிரினம், விலங்கு மனிதனாகிய விலங்கைக் கண்டு அச்சம் கொண்டு அவனை தாக்கும் போது அவன் விலங்கின் மீது அச்சம் கொள்கிறான். பெரும்பாணாற்றுப்படையில் இளந்திரையினது காவல் சிறப்பினைக் கூறுமிடத்து விலங்குகளால் ஏற்படும் அச்சம் குறித்து இடம்பெறுகிறது.

‘உருமும் உரறாது அரவும் தப்பா
காட்டு மாவும் உறுகண் செய்யா’8
(பெரும்பாண்.42-43)

என்ற வரிகளின் மூலம் பாம்புகளும் கொல்லும் தொழிலைச் செய்யா; காட்டு விலங்குகள் கூட யாருக்கும் வருத்தம் செய்யமாட்டா. ஆதலால் அவ்வறம் நிகழும் நாட்டில், விரும்பிய இடத்து அச்சமின்றிச் செல்லலாம் என்று உரைக்கிறான் பெரும்பாணன் என்பதை அறியலாம். சங்க காலத்தில் காட்டு வழியினைக் கடந்தே செல்ல வேண்டும் புதியதோர் இடத்திற்கு செல்லும் பாணன் அச்சம் கொள்வது இயல்பு.

கரிகாலனது கொடைச்சிறப்பு

கொலை என்பது அறிவு முதலானவற்றைக் கொல்லுதல் என்பது பொருளாகும். மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும், பறவைகளும்கூட இந்த உணர்ச்சிக்கு ஆளாவதை பார்க்கின்றோம். நகைச்சுவை மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம். இந்தக் கோபம் செடிகொடிகளுக்கும்கூட உண்டாம். நம்மைத் துன்புறுத்துபவர்கள் அருகில் வந்தால் அவை கூடக் கோபத்தோடு விலகிக் கொள்கின்றனவாம்.

விலங்காகிய கொலைத் தொழிலைச் செய்யக்கூடிய யானை வெளியுடையது என்று பொருநராற்றுப்படையில்,

‘வெருவரு செலவின் வெகுளி வேழம்’  11(பொருந.172)

என்ற வரியில் கரிகாலனது கொடைச்சிறப்பினை கூறவந்த பொருநன் கரிகாலன் அளித்த பொருட்களை அதன் பண்புகளோடும் வருணனையோடும் கூறுவதாக அமைந்துள்ளது. இவ்வகையில் கரிகாலன் அளித்த யானையின் சிறப்பை அச்சம் தரும் பறைகள் முழங்கி செல்லும் செலவினையுடய பரிய பெரிய வனைந்த கையினையும் வெகுளியையும் உடைய நல்ல பல யானைகளையும் தரும் தொழிலை உடையவன் என்று உரைக்கிறான். யானையின் இயல்புகளில் ஒன்றாக வெகுளியை உரைக்கிறான்.

தொகுப்புரை

பத்துப்பாட்டு ஆற்றுப்படைகளில் சிறுபாண், பெரும்பாண் ஆகியவற்றில் தொல்காப்பிய எண்வகை மெய்ப்பாடுகளில் அழுகை, இளிவரல், பெருமிதம், மருட்கை, அச்சம், உவகை, வெகுளி ஆகிய ஏழு வகையான மெய்ப்பாடுகள்  விளக்கப்பட்டுள்ளன; இன்பமும் துன்பமும் சேர்ந்ததே மனித வாழ்வு என்பதை இவை குறிக்கின்றன என்பதை அறியலாம்.

அடிக்குறிப்புகள்

  1. மாணிக்கவாசகன்.ஞ(உ.ஆ), பத்துப்பாட்டு(தொகு), பொருந. பா.அ,61-74,ப.59
  2. மேலது, பெரும், பா.அ. 17-22, ப.120
  3. மேலது, பொருந, பா.அ. 48-50, ப.57
  4. மேலது, பா.அ. 39-40 ப.56
  5. மேலது, சிறுபாண், பா.அ. 129-140, பக்.100-101
  6. மேலது, பொருந, பா.அ. 87-88, ப.61
  7. மேலது, பெரும், பா.அ. 42-43, ப.124
  8. மேலது, பொருந. பா.அடி,131,ப.66
  9. மேலது, பா.அடி,168,ப.71
  10. மேலது, பா.அடி,172,ப.71

*****

கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
விழுப்புரம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *