பாலன் நாச்சிமுத்து

 

பண்டைய தக்காண அரசுகள்

             (சாதவாகனர்களும் காரவேலனும்)

சாதவாகனர்:

        அசோகருக்குப் பின் மகத அரசு சிதைந்து போனது. கி.மு.230 அளவில் சாதவாகனர்கள்(SATAVAHANA) தமிழரசுகளின் ஆதரவோடு தக்காணப் பகுதியில் தங்களது தனி ஆட்சியை நிறுவினர். கி.மு.230 முதல் கி.பி.220 வரை சுமார் 450 ஆண்டுகள் அவர்கள் தக்காணத்தை ஆண்டனர். சாதவாகனர்களை, தமிழில் நூற்றுவர் கன்னர் அல்லது சாதவ கன்னர்(சாதவ என்பது சதம், அதாவது நூறு ஆகும்) என்பர். இவர்கள் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் ஆட்சி மொழிகளாகக் கொண்டு ஆட்சி செய்தனர். இவர்கள் வெளியிட்ட நாணயங்களில் ஒரு பக்கம் தமிழும், மறுபக்கம் பிராகிருதமும் இருந்தன(1).        சாதவாகனர் சங்ககாலத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை தமிழகத்தோடு போர் செய்ததாகவோ, வெற்றி பெற்று தமிழகப் பகுதிகளைப் பிடித்துக் கொண்டதாகவோ தகவல் இல்லை. அவர்கள் தமிழ் அரசுகளின் கூட்டணி ஆட்சியின் கீழ் இருந்த தக்காணப் பகுதிகளைத் தாக்கி வென்றிருக்கலாம். ஆனால்  உடனடியாகத் தமிழ் அரசுகளால் அவை திரும்பக் கைபற்றப்பட்டது. கிருட்டிணா நதிக்குக் கீழ் அவர்கள் வரவில்லை. சங்ககாலம் வரை தமிழ் அரசுகள் மிக வலிமையோடு இருந்தன. கி.பி. 2ஆம் நூற்றாண்டின் இடைக்கால வாக்கில் இந்நிலை மாறியிருக்கலாம். சாகர்கள், மேற்கு சத்ரப் அரசுகள், மகத அரசு போன்ற பிற வடநாட்டு அரசுகளோடு தான் சாதவாகனர்கள் போர் புரிந்ததாக அவர்களது கல்வெட்டுகளும், அவர்களைப்பற்றிய இன்ன பிற குறிப்புகளும் கூறுகின்றன.

     டாக்டர் கே. கே. பிள்ளை,  ஆர். எசு. சர்மா ஆகிய இருவரும் தங்களது நூல்களில் சிமுகா(கி.மு. 230-207), சதகர்னி(கி.மு. 180-124),  கௌதமிபுத்ர சதகர்னி(கி.பி 106-130), வசிட்திபுத்ர புலுமாயி(கி.பி 130-160), யாஜன சதகர்னி(கி.பி. 170-199)  ஆகிய ஐந்து சாதவாகன அரசர்களை மட்டுமே குறிப்பிட்டுள்ளனர்(2). கி.பி.2ஆம் நூற்றாண்டில் ஆண்ட மூன்று முக்கிய அரசர்கள் குறித்துத்தான் ஓரளவு தரவுகள் உள்ளன. பிற அரசர்களின் ஆண்டுகள் புராணங்கள் தரும் ஆண்டுகளை வைத்தே தரப்பட்டுள்ளன. கி.மு. 180-124 வாக்கில் ஆண்ட சதகர்னி குறித்து கலிங்க மன்னன் காரவேலன் தனது அத்திக்கும்பா கல்வெட்டில் குறித்துள்ளான்.சாதவாகனர்கள் தங்கள் ஆட்சி மொழியாகத் தமிழ், பிராகிருதம் ஆகிய இரு மொழிகளையும் கொண்டிருந்தனர். தமிழர்களின் கடற்படை வலிமையை, அவர்களது ஐக்கிய கூட்டணியின் வலிமையை, பொருள் உற்பத்தி, தொழிநுட்ப மேன்மை, வணிகம் ஆகியவற்றில் தமிழர்களின் உயர்நிலையை சாதவாகனர்கள் அறிந்ததன் காரணமாக, தமிழ் அரசுகளோடு அவர்கள் ஆரம்பம் முதல் இறுதிவரை பகைமை பாராட்டாமல் இருந்தனர் எனலாம். சாதவாகனர்கள் அரசு அழிந்த உடன் தமிழகமும் களப்பிரர்களால் கைப்பற்றப்பட்டு விட்டது.

மொழிபெயர் தேயம்:

    தமிழ்மொழி இருக்கிற நிலையில் இருந்து பெயர்ந்து கொடுந்தமிழாக மாறியிருந்த நிலையை மொழி பெயர்ந்தநிலை எனவும் அவ்வாறு மொழி பெயர்ந்த நிலையில் உள்ள கொடுந்தமிழைப் பேசும் பகுதியை மொழிபெயர் தேயம் எனவும்  பண்டைய தமிழர்கள் குறிப்பிட்டனர். கி.மு.4-ஆம், 3-ஆம் நூற்றாண்டு வாக்கில் அல்லது அதற்கு முன்பு தக்காணம் முழுவதும் கொடுந்தமிழே பேசப்பட்டு வந்தது. வடக்கே பிராகிருதமும், தெற்கே தமிழும் செல்வாக்கு பெற்றிருந்தன. அதனால் தமிழர்கள் இடைப்பட்ட பகுதியை, தமிழ்மொழி தேய்ந்து, கொடுந்தமிழே பேசப்பட்ட பகுதியை, மொழிபெயர் தேயம் என்றனர். இந்த மொழிபெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருந்து வந்தது என்பதை மாமூலனாரின் அகம் 31 ஆவது பாடல் உறுதிப் படுத்துகிறது. மொழிபெயர் தேயம் தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் இருந்து வந்தது என்றால் மூவேந்தர்கள் ஒன்று சேர்ந்து செயல்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு ஒன்று சேர்ந்து செயல்பட அவர்களிடையே ஒரு ஐக்கிய கூட்டணி இருந்திருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.

கலிங்க மன்னன் காரவேலன்:

           கலிங்க மன்னர் காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டு தமிழர்களின் ஐக்கிய கூட்டணி குறித்துப் பேசுகிறது. அத்திக்கும்பா கல்வெட்டின் காலம் கி.மு.165 ஆகும். அதன் 11வது மற்றும் 13வது வரிகள் தமிழரசுகள் குறித்துப் பேசுகிறன.

Hathigumpha inscription: Sadananda Agrawal has prepared the text in Sanskrit, which has been published in his book Śri Khāravela, 2000.

Line 10-11 – And in the eleventh year [His majesty] secured jewels and precious stones from the retreating [enemies]. [His Majesty] caused to be cultivated Pithunda, founded by former kings of Kalinga, with ploughs drawn by asses. Also [His Majesty] shattered the territorial confederacy of the Tamil states having populous villages, that was existing since thirteen hundred years.

 Line 13 – [His Majesty] caused to erect towers with strong and beautiful gateways at the cost of two thousand coins. [His Majesty] obtained horses, elephants and jewels losing strange and wonderful elephants and ships. The King of Pandya caused to be brought here Kalinga various pearls, jewels and precious stones hundred thousand in number(3).

11வது வரி :     11ஆம் ஆட்சியாண்டில், 1300 ஆண்டுகளாக இருந்து வந்த, மக்கள்தொகை நிறைந்த ஊர்களையும், நகரங்களையும் கொண்ட, தமிழரசுகளின் கூட்டணியை உடைத்து முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட, “பித்துண்டா” என்ற நகரத்தைப் பிடித்து, அதனை கழுதை கொண்டு உழுது, பின் வாங்கிய எதிரிகளிடம் இருந்து விலை மதிப்பற்ற ஆபரணங்களையும், கற்களையும் கைப்பற்றிக் கொண்டேன்.”

13வது வரி :     “12ம் ஆட்சியாண்டில் பாண்டிய அரசன் நூறு ஆயிரம் அளவிலான, விலை மதிப்பற்ற கற்களையும், முத்துக்களையும், ஆபரணங்களையும் கலிங்கத்தின் தலை நகருக்கே கொண்டு வந்து ஒப்படைக்கும் சூழ்நிலையை உருவாக்கினேன்” என்கிறான் கலிங்க மன்னன் காரவேலன்

பித்துண்டா நகரம்:

      “பித்துண்டா” என்கிற நகரம் முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட நகரம் என்பதைத் தெளிவாகக் காரவேலன் கல்வெட்டு குறிப்பிடுகிறது. கலிங்கத்தில் இருந்த முந்தைய கலிங்க மன்னர்களால் உருவாக்கப்பட்ட இந்நகரம் (பித்துண்டா நகரம்)  தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் நகரமாக, அவர்களின் காவல் அரணாக இருந்து வந்துள்ளது என்கிற செய்தி, தமிழகத்தின் வட எல்லையில் இருந்து கலிங்கத்தின் தென் எல்லை வரையான கடலை ஒட்டிய இன்றைய ஆந்திரப் பகுதி முழுவதும் தமிழக ஐக்கிய கூட்டணி அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்துள்ளது என்பதை மறைமுகமாகத் தெரிவிக்கிறது எனலாம். அதன் மூலம் மொழிபெயர் தேயம் என்பது தமிழ் மூவேந்தர்களின் பாதுகாப்பின் கீழ் தான் இருந்து வந்தது என்கிற மாமூலனார் அவர்களின் செய்தி, இக்கல்வெட்டின் மூலம் உறுதிபடுத்தப்படுகிறது.

தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி :

    மேலும் இந்நகரம் மீண்டும் தமிழக ஐக்கியக் கூட்டணி  அரசுகளின்கீழ் வந்து விடக் கூடாது என்பதற்காக, அது தரை மட்டமாக்கப்பட்டு கழுதைகொண்டு உழப்பட்டுள்ளது. டி.என். சன்பக் (D.N.Shanbhag) அவர்கள், தமிழக ஐக்கியக் கூட்டணி  அரசுகள் பலமுறை கலிங்க அரசுக்கு தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும், காரவேலன் வடநாட்டின் மீது படை எடுத்துச் சென்ற போது, அவை கலிங்கத்தை தங்கள் காவல் அரணான பித்துண்டா நகரத்தைத் தலைமை இடமாகக் கொண்டு தாக்கியதாகவும், அதற்குப் பதிலடி தரும் விதமாகத்தான் காரவேலன் பித்துண்டா நகரத்தைத் தாக்கி, தமிழரசுகளின் நீண்ட கால ஐக்கியத்தை உடைத்து, விலை உயர்ந்த பொருட்களை கைப்பற்றியதாகவும், பித்துண்டா என்பது ஒரு துறைமுக நகரம் எனவும் குறிப்பிடுகிறார்(4).

     சன்பக் அவர்கள் தரும் செய்திகள், பித்துண்டா என்பது கலிங்கத்தின் தென் கிழக்கு எல்லையில் கடலோரத்தில் இருந்த தமிழக அரசுகளின் துறைமுகக் காவல் அரண் என்பதை உறுதி செய்கின்றன. தமிழக அரசுகள் மகதத்துக்கு அருகிலுள்ள வலிமையான, காரவேலனின் கலிங்க அரசுக்கு அடிக்கடி தொல்லை கொடுக்கும் அளவு வலிமை மிக்கவனாக இருந்தன என்ற அவரது செய்தி, தமிழ் அரசுகளிடையே ஐக்கியக் கூட்டணி இருந்தது என்பதை, மொழிபெயர் தேயப் பகுதிகள் இக்கூட்டணி அரசுகளின் கீழ் இருந்தன என்பதை சந்தேகமின்றி ஆதாரத்தோடு உறுதிப் படுத்துகின்றன.

     அடுத்த வருடம் (13வது வரியில்), காரவேலனின் வலிமையை உணர்ந்த பாண்டிய அரசன் தொடர்ந்து வட நாடுகளோடு வணிகம் செய்ய, காரவேலனின் ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்பதை உணர்ந்து , அவனோடு சமாதானம் செய்து கொள்ளும் பொருட்டு, பெரும் அளவிலான பரிசுப் பொருட்களை அனுப்பி, காரவேலனோடு நட்புக் கொண்டுள்ளான். அதைத்தான் காரவேலன் பாண்டியனே எனக்கு நிறைய பரிசுப்பொருட்களை அனுப்புமாறு நான் செய்வித்தேன் என்கிறான். மாமூலனாரின் பாடல்களும்  காரவேலனின் அத்திக்கும்பா கல்வெட்டும் தமிழக அரசுகளிடையே ஐக்கிய கூட்டணி ஒன்று மிக நீண்ட காலமாக இருந்து வந்தது என்பதையும், மொழிபெயர்தேயப் பகுதிகளான ஆந்திரம், கர்நாடகம் முதலியன தமிழக அரசுகளின் கூட்டணியின் கீழ் பாதுகாக்கப்பட்டு வந்தன என்பதையும் உறுதிபடுத்துகின்றன.  இந்த பித்துண்டா நகரம் குறித்து, ஒரிசாவின் பொருளாத வரலாறு என்கிற நூலும், விக்கிபீடியாவும் தரும் தகவல்களைக் காண்போம்.

     பண்டைய கலிங்கத்தின் மிக முக்கிய நகரம் பித்துண்டா((PITHUNDA) ஆகும். மகாவீரர் (கி.மு. 599-527) காலத்தில், இந்தப் பித்துண்டா நகரம் கலிங்கத்தின் மிக முக்கிய நகர் மையமாக இருந்துள்ளது என உத்தரதயான சூத்திரம் (UTTARADHAYANA  SUTRA) என்கிற சமண நூல் குறிப்பிடுகிறது. இந்த பித்துண்டா துறைமுக நகரம் குறித்து டாலமி(கி.பி. 90-168) தனது புவியியல் நூலில்(GEOGRAPHY OF PTOLEMY) குறிப்பிட்டுள்ளார். இந்தப் பித்துண்டா துறைமுகம், பண்டைய கலிங்கத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள முக்கியத் துறைமுகம் எனவும் இரண்டாவது பெரிய துறைமுகம் எனவும் விக்கிபீடியா குறிப்பிட்டுள்ளது. இந்த நகரத்தைக் காரவேலன் தமிழ் அரசுகளின் கூட்டணியிடமிருந்து கைப்பற்றிக் கழுதைகளைக் கொண்டு உழுதான் என்ற தகவலும் தரப்பட்டுள்ளது. காரவேலனின் ஆண்டு கி.மு. 209-170 எனச் சொல்லப்பட்டுள்ளது(5).

     நிகார் இரஞ்சன் பட்னாய்க் அவர்களும், விக்கிபீடியாவும் தரும் செய்திகள் இந்தப் பித்துண்டா நகரம் கலிங்கத்தின் பண்டைய இரண்டாவது பெரிய துறைமுக நகரம் என்பதையும், கலிங்கத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்த துறைமுக நகரம் என்பதையும் தமிழரசுகளின் கூட்டணியிடமிருந்து கலிங்க மன்னன் காரவேலனால் இந்நகரம் கைப்பற்றப்பட்டு கழுதை கொண்டு உழப்பட்டது என்பதையும் உறுதி செய்கின்றன. டாலமியின் புவியியல் நூலும் இந்நகரம் குறித்துக் குறிப்பிட்டுள்ளது என்கிற செய்தி இந்நகரம் முன்பிருந்தே ஒரு புகழ் பெற்ற துறைமுக நகரமாக இருந்துள்ளது என்பதை உறுதி செய்கிறது.

பார்வை:

1.இந்து ஆங்கில நாளிதழ், ஐராவதம் மகாதேவன், “An epigraphic perspective on the antiquity of Tamil”, நாள்: 24/6/2010.

2.பண்டைக்கால இந்தியா, ஆர். எசு. சர்மா-தமிழி மாஜினி,  ஜூன் 2004, பக: 260-264.  2.தென் இந்திய வரலாறு, டாக்டர் கே. கே. பிள்ளை, 8ஆம் பதிப்பு, 2011    பக்: 34-37) 3. விக்கிபீடியா(SATAVAHANA DYNASTY).

3.www.jatland.com/home/Hathigumpha– inscription & சதானந்த அகர்வால் அவர்கள் சமற்கிருதத்தில் எழுதிய “சிரி காரவேலா” என்கிற நூலில் இருந்து இணையதளம் வழியாக இப்பகுதி எடுக்கப்பட்டுள்ளது.

4.சன்பக் (D.N. Shanbhag), www.freeindia.Org/biographies/kharavela/index.htm.

5.ஒரிசாவின் பொருளாதார வரலாறு-நிகார் இரஞ்சன் பட்னாய்க், பக்: 22, 24, 131, 137. (ECONOMIC  HISTORY OF ORISSA BY  NIHAR RANJAN  PATNAIK, PAGES – 22, 24, 131,137) & பித்துண்டா(PITHUNDA)-விக்கிபீடியா

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *