தீபா சரவணன்
உதவிப்பேராசிரியர்
ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
கோவை.

நித்திரை தொடராமல் கனவில்லை

ஒரு வடிவம் உருவகப்படுகிறது. நீட்டிப்பிடித்த கைத்தலங்களின் இரயில். ஓவர் பிரிட்ஜிற்கு நேராக தெற்கிலிருந்து வருகின்ற இரயில். மரணம், ஃபாஸ்பென்டர் கூறியதுபோல தண்மையானதா? என்று இப்போது தெரியும். ’ஆக்ஷன்!’ கைகள் அசைந்தது. கைவரிசை கடக்கத்தான் வேண்டியிருந்தது. கொஞ்சம் கூட ஈடுபாடில்லை. பாதி தூரத்தை அடையும் முன்பு ஷோர்ட் ஃப்ரீஸ் செய்து கடைசி டைட்டில் அதன் மேல் ‘தி என்ட்’. மனதிற்குள் ஒரு மின்வெட்டு பாய்ந்தது.

எ ஃபிலிம் ஈஸ்…………, எ ஃபிலிம் ஈஸ்………….. எ ஃபிலிம்…………….

நினைவுகள் அவ்வளவும் அடங்கியது. கண்களை இறுக மூடினான்.மறுபடியும் அதை திறப்பதற்குள் எலக்ட்ரிக் ட்ரெயின் சென்று விட்டிருந்தது. ஏதோ ஒரு பெண் நெருக்கமாகப் பின்னால் நிற்கிறாள். தோள்வரை நீண்ட முடி. கண்ணாடி. நீல நிற ஜீன்ஸும், பிங்க் நிற டாப்பும். மாநிறம். தோளில் பை. கையில் ஆந்த்ரே ஆர்கோவ்ஸ் கியின் நூல். லான்ட்மார்க்கிலிருந்து வாங்கியிருப்பாள் புதியதாக இருந்தது.

‘இங்கேயே பாத்தது என்னோட அதிர்ஷ்டம். நான் வீட்டுக்கு வருவதாக இருந்தேன்’ அவள் கூறினாள்.

“எதுக்கு?” கேட்காமலிருக்க முடியவில்லை. நினைத்திருந்தால் கொஞ்சம்

மென்மையாக மயமாகக் கேட்டிருக்கலாம். சத்தத்தின் உச்சத்தை அவள் கவனிக்கவில்லை.

“அறிமுகப்படுத்ததா என் பேரு சோஃபி”. அவள் கைநீட்டினாள். இளமை அவளது விரல் நுனிவரை நிறைந்து நின்றது. அதன் வீர்யம் தெரிய வந்தது.

“முழுப்பெயர் சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ்”, என்று கையை விடுவிக்கும் முன்பு கூறினாள்.

நல்ல பெயர் என்று கூடக் கூறவில்லை. அவள் பாலத்தின் கைச்சுவரில் சாய்ந்து நின்றாள். காற்று வீசியது. முடியைக்கட்டி வைத்திருக்கவில்லை. அவள் முடியொதுக்காமல் எதையோ சாதித்த நினைப்பில், நோர்த் உஸ்மான் ரோட்டில் உள்ள அசோசியேஷன் ஆபீஸிலிருந்து முகவரிதேடி அடைந்ததைப் பற்றி விளக்குவதற்குள், பாலத்தின் வழியாக மூன்று வண்டிகள் கடந்துபோயின. ஓவர் பிரிட்ஜில் எப்போதும் வழக்கம்போல உள்ள கூட்டம்தான். இரயில்வே டிராக்கின் இருபுறத்திலும் வாழ்க்கையின் இரம்பல் ஓசை. நகரச்சுற்றுவட்டாரத்தில் ஆங்காங்கே சின்னச் சின்ன ப்ளெக்ஸ் போர்டுகள். பல காட்சிகள். மங்கிய வெயில், வறண்ட காற்று. இரும்புப் பாதையின் வழிகள் மறுபடியும் நிறைந்தது.

“சரி……”அறிமுகப்படுத்துவதை அப்படியே முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன். ஆனால் அவள் அதற்கு ஒத்துவரவில்லை. அவளிடம் ஒரு சி.டி. இருந்தது. என்ன சி.டி.? அவளே தயாரித்தக் குறும்பட சி.டி. ஓ………. விஷ்வல் கம்யூனிகேஷனில் டிப்ளமோ படித்திருக்கிறாள் நல்லதுதான். அவள் தோள் பைக்குள் கையிட்டு சி.டி.யை வெளியே எடுக்க முயற்சித்தபோது அவசரமாக விலக்கினேன்.

“வேண்டா, பாக்க நேரமிருக்காது”.

“இன்னக்கே பாக்கணும்னு இல்ல சார்”

“நா … கொஞ்சம் பிசி”

“தெரியும் சார்”. அவள் அதற்குள் சி.டி.யை வெளியிலெடுத்திருந்தாள்.

“நா எதுக்கு இத பாக்கணும். ஏதாவது ஷோர்ட் ஃபிலிம் பெஸ்டிவெலுக்கு அனுப்ப வேண்டியதுதானே”.

“அதில்ல சார்”

“அப்புறம்”

“அதிகமா யாரிடமும் நா இத காமிக்கல. சாரோட கருத்து என்னான்னு தெரியணும் அதுதா”…

“என்னோட கருத்திலொண்ணும் பெரிய காரியமில்ல…… போம்மா…”

மீண்டும் காட்சியில் இரயில் வண்டிகளும், தற்கொலைக்கு முயற்சிப்பவர்களும், காத்துக் கிடக்கும் இரயில் பாலங்களும் வந்தன. அங்கே தூரத்தில் ஏதோ சேரிக்கி அருகில் புகைச்சுருளுகள் உயர்ந்தது. சிதையிலிருந்து வந்ததாக இருக்காது. அப்படி இருந்தாலும் சொல்வதற்கில்லை.

“சார்………”

திரும்பிப் பார்த்தேன். சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ் போகவில்லை. முகத்தில் ஒரு விண்ணப்ப பாவம்.

“ஒரு ரிக்வஸ்ட் இருக்கு சார். சாவகாசமாக சி.டி.யை பாத்தபின்னர்,

“நான் அதுக்குத் தகுதியுடையவள்னா மட்டும் போதும்”.

“புரியல”

“எனக்கு சாரோட அசிஸ்டென்ட் ஆனா பரவால்லேன்னு இருக்கு. என்னோட பெரிய ஆச சார் அது”

சத்தமாக சிரித்துவிட்டேன், அப்படி சிரிக்க முடியுமென்று எதிர்பார்க்கவில்லை. அது கட்டுப்பாட்டை மீறி வந்தது. ஒரு திருடன் பயணியின் முன்பு குதித்தது போன்ற சிரிப்பு. அப்பெண்ணின் முகத்தில் ஆச்சர்யம் படர்ந்திருந்தது. கண்களின் பார்வை கூர்மையானது.

“நா ஒரு படம் எடுத்து வருஷம் ஏழாச்சு, ஒனக்கு அது தெரியாது இல்லயாம்மா…”

மறுபடியும் சிரிப்பு அடக்க முடியவில்லை. இப்படி சிரிச்சு ரொம்ப காலமாச்சு. நல்ல ஜோக்குகள் சமீபமாக கேட்பதேயில்லை. கொஞ்சம் சிரிப்பதற்காக தொலைக்காட்சி சேனல்களைத் தேடிப்பார்த்தால் அதுவும் எல்லா துக்கமாத்தான் இருக்கும். சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ். சிரிக்க வைக்கக் கூடிய பெரிய திறனாளி.

ஒத்துக்காமல் முடியல

“லுக். ஐ ஆம் சீரியஸ். ஜோக்குக்காக சொல்லல”.அவளின் முகபாவம் மாறியது.

”வேறு யாருடனும் வேலைசெய்யவிருப்பமில்லை. காத்திருக்கத் தயார்.”

“எவ்வளவு நாள்?”

“எவ்வளவு நாள் வேணும்னாலும். டு பி ப்ராங்க். ஐ ஹேவ் எ டெரிபிள் பேஷன் ஃபோர் யு. சாரோட எல்லா படமும் எனக்குப் பிடிக்கும்.

“அதெல்லாமே முழுக்க தோல்வியடைந்தவை. அதெல்லா தெரியாது இல்லையா?”

“தியேட்டர்களில வேண்டிய அளவு ஓடலேங்கறதுக்காக, அதெ அப்படி மதிக்கலாமா?”.

“என்னமோ……. நா இப்போ அதோட பேருகூட நினைக்கறதில்ல”

அவற்றில் ஒன்றுகூட மறுபடியும் கண்டெடுக்க முடியாது உயிரற்றவை. இல்லை அதிசயமொன்றும் சம்பவிக்காது.

“சார் வாக்கிங் வந்தது தானே”?

“உம்”

“கொஞ்சநேரம் நானும் கூடவரட்டுமா?”

ஒரு ஹெலிகாப்டரின் இரம்பல் சத்தம் கேட்டு முகமுயர்த்திய போது ‘லாடோள்ஸ்’ விற்ற ஞாபகம் வந்தது. ஹெலிகாப்டரில் தொங்கிநின்று நகர்வலம் வருகின்ற கிறிஸ்து உருவம் ஃபெல்லினியாவின் மேஜிக். அடுத்த நிமிடத்தில் சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸ் சி.டி. கைமாறினாள். அதுவும் மேஜிக். வானம் இருண்டது. கையில் சிடியுடன் நிற்கும்போதே பச்சைநிற பஸ்ஸில் சோஃபி குதித்து ஏறினாள். பின்னால் திரும்பி கொஞ்சமாக கைஆட்ட மறக்கவில்லை.

பா…ய்…

வீட்டின் தனிமைக்குத் திரும்பி வருவோமென்று நினைக்கவில்லை. சாவியெடுத்துக் கதவைத் திறந்தான். மக்கள் ஓடி வந்து கட்டிப்பிடிப்பதற்கோ, அவர்களின் அம்மா காபியும் கொண்டு சமையலறையிலிருந்து வெளியில் வருவதோ எதிர்பார்ப்பதற்கில்லை. குளிர்ந்த வரவேற்பறை, செய்தித்தாள்களும் புத்தகங்களும் ஆங்காங்கே சிதறிக்கிடந்திருந்தது. அவற்றின் காவல்காரன் என்பதுபோல சுவரில் சாப்ளினுடைய சல்யூட் மறுபடியும் பார்க்க முடிந்ததில் சந்தோஷம். கொஞ்சம் பிராண்டி குடிப்பது ஒருவேளை உறங்குவதற்கு உதவும். சியர்ஸ். இனி செய்ய வேண்டிய ஒரு செயல் சோஃபி எஸ்தர் ஆண்ட்ரூஸின் குறும்படம் பார்ப்பது. ’காஸ்பர் தோமஸ் என்ற வயதானவரின் கதை எழுபத்தி நான்கு வயதான அவர் பஸ்ஸை விட்டிறங்கி ஒரு பேகையும் பிடித்துக்கொண்டு கிராமத்தின் மிகப்பழமையான ஆலயத்தை நோக்கி நடந்தார். நிறைய கற்படிகள் ஏறினால்தான் ஆலய முற்றத்தை அடையமுடியும். அவர் தளர்ச்சியுடன் ஒவ்வொரு படியும் ஏறினார். அவர் முகத்தைப் பார்த்தால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாரத்தைத் தன் முதுகில் சுமக்கிறார் எனத்தோன்றும். கடந்தகால வாழ்க்கை வேதனை நிறைந்ததாக இருந்தது என்பதை அவருடைய அங்கங்கள் வெளிப்படுத்தின. தேவாலயக் கட்டடிடத்தின் வெள்ளை நிற முகப்போடு சேர்ந்து மின்னுகின்ற சிலுவை வானம் வரை உயர்ந்து நின்றது. காஸ்பர் தோமஸ், ஃபாதர் ஜோனின் முன்னால் வந்தார்.

“யாரது? தெரியலையே……………” ஃபாதர் சொன்னார். ஃபாதருக்கு அம்பது வயதுக்கு மேலிருக்கும் மேசைமேல் உள்ள கம்ப்யூட்டரில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார்.

“என் பேரு காஸ்பர் தோமஸ்”. அவர் தன்னை அறிமுகப்படுத்தினார். ஃபாதர் இதற்கு முன்பு அவரைப் பார்த்ததில்லை. இருவரும் முற்றிலும் பழக்கமில்லாதவர்கள்.

“நான் உட்காரட்டுமா?” அவர் கேட்டார்

“ஐ ஆம் ஸோரி. நான் அதெ சொல்ல மறந்திட்டேன்” என்று திடுக்கத்தில் கூறினார் ஃபாதர். அவர் சந்தோஷப்பட்டார்.

“நான் கொஞ்சகாலம் வெளியிலிருந்தேன். இதே ஊர்க்காரன் தான் நானும். திருமுழுக்கும், கல்யாணமும் இங்கதான் நடந்துச்சு”.

“பார்க்க முடிந்ததில மனம் நிறைந்த மகிழ்ச்சி. நா இங்க சார்ஜெடுத்து ரொம்பக் காலமாகல” ஃபாதர் ஜோன் கூறினார்.

“இங்கிருந்து போகும்போது ஜோஸஃப் கிழக்கன் காலேலச்சனாயிருந்தார்.” காஸ்பர் தோமஸ் கூறினார்.

“அது ரொம்பக்காலமாச்சே” ஃபாதர் கேட்டார்.

“ஆமா” அவர் கூறினார். இருவரும் நேருக்கு நேராகப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜன்னலுக்கு வெளியில் ஜாதி மரத்தின் இலைகள் காற்றில் ஆடின. மரத்திற்கு அப்புறம் பலப்பல செடிகள் கடும்பச்சை நிறத்தில் தளிர்த்திருந்தன.

“இந்த வரவிற்குக் காரணம் ஏதாவது!…………”

“உண்டு” அவர் அதைக்கூற கொஞ்ச நேரம் தயங்கினார். சுலபமாக மனம் திறக்கவில்லை.

நாற்பது ஆண்டுகளாக அவர் சென்னை நகரத்தின் ஒரு மூலையில் பிஸினஸ் செய்து கொண்டிருந்தார். பிஸினஸிலும் வாழ்க்கையிலும் துணையானஹில்டா சில மாதங்களுக்கு முன்பு இறைவனடடி சேர்ந்துவிட்டாள். பிறகு அவருக்குத் தனிமைதான். ஒரு மகள் ஜெர்மனியில் மகன் அமெரிக்காவில் இரண்டாவது மகள் நெதர்லான்டில். அவங்க யாரும் போனதுகப்பறம் வரவேயில்லை. ஹில்டா இறந்தபோது அவர் அவர்களை மிகவும் எதிர்பார்த்தார் ஆனால் அவர்களின் துர்பாக்யம் வரமுடியல ஃபாதர் ஜோன் தனக்குத் அறிமுகமில்லாத ஹில்டாவின் ஆத்மாவிற்கு நித்ய சாந்தி வேண்டினார். காஸ்பர் தோமஸ் கவலையுடன் இருந்தார். சௌன்ட் ட்ராக்கில் கவலையில் ஸ்ருதி அது அப்படியே தொடர்ந்தது.

கொஞ்சம் கூட பிராண்டி அதற்கிடையிலும் ஸ்க்ரீனிலிருந்து கண்ணெடுக்கவில்லை. காஸ்பர் தோமஸ் தனக்கு வேண்டி ஒரு கல்லறை செய்யச் சொல்லியிருந்தார். கோன்ட்ராக்ட் காரன் நதானியலும் ரெண்டு வேலக்காரர்களும், பார்வையாளராக ஃபாதர் ஜோனும். கல்லறைக் கட்டி முடித்து காஸ்பர் தோமஸ் மரணம் வரும் வரை காத்து மீதி நாட்களை இடவகயில் கழிக்கலாம் என்று தீர்மானித்திருந்தார். ஃபாதர் அவரின் தீர்க்கமான முடிவிற்குக் கீழ்படிந்தார். கல்லறை வேலை தீர்ப்பதற்கும், தொடர்ந்துள்ள வாழ்க்கைக்குமான பணம் போக மீதமிருக்கும் தனது வருவாய் அனைத்தையும் பள்ளிக்கு என வாக்குமூலம் கொடுத்தார். யாரோ மயானம் வழியாக வந்தார். அவர் உற்சாகமாக இருந்தார்.

“என்னா அதிசயமிது? குஞ்ஞாச்சியா……….. நான் கொச்சும்மன்”

காஸ்பர் தோமஸ் விழித்தார். குஞ்ஞாச்சி என்பதும் காஸ்பர் தோமஸின் பேர்தான். ஆனால் பல ஆண்டுகளாக அப்பெயரில் யாரும் அவரை அழைத்ததில்லை.

“கொச்சும்மன்!” அவர் அற்புதப்பட்டார்.

“ஆமாண்டா உங்கூட ஆத்திலயும் காயல்லயும் மீன்பிடிக்க வர்ற அதே நண்பந்தா. நாம நெறய வராலும், வற்றயும் கரிமீனுமெல்லா புடிச்சத மறந்திட்டியா?.

கொச்சும்மன் அவசரமாகக் கூறினான். இருவரும் இறுக்கமாகக் கட்டிக்கொண்டனர். விதும்பினர் ஃபாதர் ஜோனும், நதானியலும், வேலைக்காரர்களும் செயலற்று நின்றனர். அவர் சிறு ஆறுகளில் விளையாடும் உயிர்களைப் பற்றியும், சேற்றில் பறந்து இறங்கும் பறவைகளைப் பற்றியும், வாத்தின் சிறகுகளைக் குறித்தும் கூறிக்கொண்டிருந்தனர். காஸ்பர் தோமஸ் என்ற குஞ்ஞாச்சியும், கொச்சும்மனும் இளமை நினைவில் துள்ளிக் கொண்டிருந்தனர். ஆற்றின் ஓரத்தில் நீர்ப்பறவைகள் சத்தமிட்டன. எங்கிருந்தோ ஒரு குக்கூ சத்தம்; மறு குக்கூ சத்தமும் கேட்டது. சேற்று வயலிலிருந்து பறவைகள் பறந்தன. ஆரவாரம் கேட்டு வாத்தின் கால்கள் நகர்ந்தன.

“குஞ்ஞாச்சி எனக்கு என்னோட மனைவியையும் மக்களயும் பார்க்க வேண்டாமா?”

“நானும் அதத்தா சொல்ல வந்தே” காஸ்பர் தோமஸ் கூறினார். அவர்கள் கைகள் கோர்த்தனர்.

“நாங்க போறோம்” கொச்சும்மன் ஃபாதர் ஜோனைப் பார்த்து சொன்னான்.

ஃபாதர் ஸ்தம்பித்து நின்று கொண்டிருந்தார். அவருடைய காட்சியில் கொச்சும்மனும் காஸ்பர் தோமஸும் சிறுவர்களைப்போல நடந்து அகன்றனர். கொச்சும்மன் சத்தமாகக் கூப்பிடும்போது வீட்டிற்குப் பின்னால் உள்ள கோழிக்கூட்டிற்கருகில் ரஜீனாம்மா மீன் கழுவிக் கொண்டிருந்தாள். கோழிகள் நாலைந்து ரஜீனாம்மாவைச் சுற்றி நின்று கொண்டிருந்தன.

“இங்க கொஞ்சம் வா என்னோட ரஜீனாம்மா…….” கொச்சம்மன் கத்தினான்.

ரஜீனாம்மா கத்தியும் மண்சட்டியுமாக எழுந்தாள், சட்டியில் சின்னச்சின்ன மீன்கள்.

“ரஜீனாம்மா … இது என்னோட சின்ன வயது நண்பன் குஞ்ஞாச்சி. நா சொல்லிருக்கேல்ல உங்கிட்ட ரொம்ப காலத்துக்கப்பறம் நாங்க ரெண்டு பேரும் பாக்கறோம். நா இதக் கொண்டாடுவே. நம்மோட சேவல் வாத்து எங்கே?”.

கொச்சம்மன் நான்கு புறமும் பார்த்துக்கொண்டு இரைபிடிக்கத் தக்க நேரம் பார்த்து உற்சாகத்தோடு காத்துக் கொண்டிருக்கும் காட்டு விலங்கைப் போல தேடி மறைந்தார்.

“இங்க உட்காரலாமே. அவர் இப்ப வருவாரு” ரஜீனாம்மா காஸ்பர் தோமஸிடம் கூறினாள்.

எங்கிருந்தோ வாத்தின் அலறல் கேட்டது. கொச்சம்மனின் வெற்றியும் அதில் கலந்திருந்தது. நீரில் உயிரினங்கள் துடித்தது. கொச்சமனும் காஸ்பர் தோமஸும் ஒரு துணியின் இரண்டு முனையையும் பிடித்து குனிந்து நின்றனர். மீன்குட்டிகள் நிறைய துணியில் வந்தது. சில மீன்கள் ஈரத்தோடு குதித்தன. கொச்சமனும் அவன் நண்பனும் அவற்றை மீண்டும் தண்ணீரிலேயே விடுகின்றனர். இருவரும் ஆழமில்லாத நீர்ப்பரப்பில் தண்ணீரை கைகளால் சிதறிக் கொண்டு ஓடுகின்றனர். அடுத்தக் காட்சி பள்ளியில் வைத்து கொச்சமாவின் மகள் மெட்டீல்டாவின் திருமணச் சடங்கு. காஸ்பர் தோமஸ் மகிழ்ச்சியோடு நிற்கின்ற கொச்சமாவின் தோளில் கை வைத்தார். கொச்சமன் உணர்வுப்பூர்வமாக தனது கையை அக்கைகள் மீது வைத்து அமர்த்தினான். ‘எபனீசர்’ சவப்பெட்டிகளுக்கு நடுவில் காஸ்பர் தோமஸைக் காத்துக்கிடந்தார். சவப்பெட்டிகளிலொன்று சித்திரவேலைகள் முடிந்து ஜொலித்துக் கொண்டிருந்தது. அது காஸ்பர் தோமஸின் அவசியத்திற்கிணங்க எபனீசர் செய்து முடித்த வேலை. நதானியல் வேகவேகமாக நடந்து வந்தான்.

‘எடா நீ அந்த வெளிநாட்டுக்காரன எங்கயாவது பாத்தயா?”. அவன் எபனீசரிடம் கேட்டான்.

“யார அந்த காஸ்பரையா?”

“அவரையேதா”

“அது சரி நானினி அவரத் தேடாத இடமில்ல. ஒன்னு பாத்தாலோ மின்னல் போல மறஞ்சிடறாரு………..

“பிணம் எறக்கி வைக்குமளவுக்கு கல்லறயோட வேல முடிஞ்சு எவ்வளவு நாளாச்சுன்னு தெரியுமா?. கொச்சும்மனைப் பாத்தபின்ன அந்தப் பக்கமே வறல”.

“அதோ அங்க பாரு” எபனீசர் கை நீட்டினான்.

நதானியல் அங்கே பார்த்தான். பாதையருகில் ஒரு சைக்கிள் வந்து கொண்டிருந்தது. காஸ்பர் தோமஸ் அதன் பின்சீட்டில் ஒரு பாகமாகத் திரும்பி உட்கார்ந்திருந்தார். கொச்சம்மன் அழுத்தி ஓட்டிக் கொண்டிருந்தார். காஸ்பர் தோமஸின் கையில் கறுப்புநிற கரிமீன்கள் அவை வெயிலேற்று மின்னின.

“கொஞ்சம் நில்லுங்க” நதானியலும் எபனீசரும் ஒரே குரலில் கூறினர். கொச்சம்மன் சைக்கிளின் வேகத்தை கொஞ்சம் கூட குறைக்கவில்லை.

“நாங்க கொஞ்சம் வேலயா இருக்கோம்……..” காஸ்பர் தோமஸ் கூறினார். எபனீசர் ஏற்கனவே சொன்னதேதான் நடந்தது. ஒரு மின்னல் போல அவர்கள் மறைந்தனர். மெதுவாக ஸ்கிரீன் இமேஜுகள் இல்லாமல் ஆனது. அதில் ஒரு பெயர் தெளிந்தது.

“சோஃபி எஸ்தர் ஆன்ட்ரூஸ்”.

ஃபோனின் மறுமுனையில் அவள்……… நான் உறங்கவில்லையென்றும் நேரம் தவறி தான் அழைத்து தொந்தரவு செய்யவில்லை என்றும் உறுதிப்படுத்திக் கொண்டாள்.

“படம் பாத்தீங்களான்னு தெரிவதற்காகத்தான்”.

“ஆமாம் பாத்து இப்பத்தா முடிச்சேன். நல்லா இருக்கு”

“ரியலி!………….”

“உம்”

அவள் குதூகலமடைந்தாள். பெரியநகரத்தின் இரவில் அலையின் அசைவுகள்.

“நாளைக்கு பார்க்க முடியுமா?………..” சோஃபி கேட்கிறாள்,.

” ஏ முடியாது? பார்க்கலாமே”

“குட் நைட்.”

“குட் நைட்.”

பிறகு உறங்க சென்றபோது சோஃபியின் கதாபாத்திரத்தின் முகம் தானாக நினைவுக்கு வந்தது. படத்தில் இல்லாத ஒரு க்ளோஸ்அப். …. ’காஸ்பர் தோமஸ்!’……………. ஏதோ கனவு கண்டு உறக்கத்தில் சிரிக்கிறார்.

காட்சி மாய்வதில்லை
ஒரு நிமிடம்
இரண்டு நிமிடம்
அவரின் உறக்கம் தொடர்ந்தது
மூன்று ……
நாலு ……
அஞ்சு ……

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *