-மேகலா இராமமூர்த்தி

சுட்டிக் குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டிருக்கும் அன்னையைப் படம்பிடித்து வந்திருப்பவர் திரு. அண்ணாகண்ணன். இப்புகைப்படத்தை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருப்பவர் திருமதி. இராமலக்ஷ்மி. இவர்கள் இருவருக்கும் என் நனிநன்றி!

முந்தித் தவமிருந்து, தொந்திசரிய முந்நூறு நாள்சுமந்து பெற்ற குழந்தையை, பெற்ற பின்பும் கீழே இறக்காது தூளிகட்டிச் சுமக்கும் தாயன்பின் முன்னே தெய்வமும் மண்டியிடும்!

தாயும் சேயும் இணைந்து நிற்கும் கண்கொள்ளாக் காட்சியிதனைக் கவிக்கண் கொண்டு நோக்கிக் கருத்தமைந்த பாடல்களைப் பொருத்தமாய்த் தர கவிஞர்களை அன்புபாராட்டி அழைக்கின்றேன்.

*****

கங்காருக் குட்டிபோல் தன் குழந்தையை முதுகில்கட்டிச் சுமக்கும் இந்தத் தன்னலமற்ற தாயன்புதான் போரில்லாப் புதிய உலகைப் படைக்கும் என்று பகர்கின்றார் திரு. ஏ. ஆர். முருகன்மயிலம்பாடி.

வீட்டுமுற்றத்திலே தூளி கட்டி
ஆட்டிஅழகு பார்க்கும்
அம்மாமார் பார்த்ததுண்டு..
மரக்கிளையில் சேலை கட்டி
மழலை தனைத்தூங்கவைக்கும்
மாதாக்கள் இங்கு உண்டு
எட்டி ஓடுகிற கங்காரு – தன்
குட்டி சுமக்கின்றலாவகம் போல்
மட்டிலா மகிழ்ச்சி ததும்ப
சுட்டிக்குழந்தையை முதுகிலே
கட்டித்தூக்கிச்செல்லும் தாய்!!
எந்த ஊரோ? ..எந்த நாடோ?
எங்கேயிருந்தாலும்-அன்பை
மங்காமல் காப்பாற்றுவதில்
இங்கு பங்கு இருப்பதாய்
உலகத்தோர் எல்லோர்க்கும்
உரக்க உரைப்பதுவாய்
உயிர்களுக்கு உணர்த்துகிற
பாங்கினைப்போற்றினால்
பாருயரும்! பண்புயரும்!!!
அன்புப் பரிமாற்றம் ஒன்றுதான்
சண்டையில்லா உலகத்தை
சாத்தியமாக்கிடும் என்பதுவே
சத்தியத்திலும் சத்தியம்!!….

*****
கட்டிக்கொண்டவன் கள்ளுக்கடையிலேயே காலந்தள்ளுவதால் தான் வேலைசெய்யும் இடத்துக்கும் குழந்தையைத் தோளில் சுமந்துசெல்லும் இந்த அன்னையின் ஒரே ஆசை, ’இந்தக் குழந்தையேனும் உருப்படியாய் வளரவேணும்’ என்பதுதான் என்கிறார் திரு. அ. இராஜகோபாலன்.

அவசரம்

கட்டிக்கொண்டவன்
கவலையற்று,
வெட்டியாய்க்
கள்ளுக்கடையில் காலந்தள்ள

விட்டுச் செல்ல வழியின்றி
வேலைக்குப் போகும்போதும்
கூடவே
கட்டுத் துணியில்
முதுகில் குழந்தை.

கைப் பிடித்து நடக்கவே
இன்னும் காலம் உண்டு.
அதற்குள்
காலுக்குச் செருப்பெதற்கு?

அப்பனைப் போல் ஆகிவிடாமல்
ஆகாத காலத்துக்கு,
எனக்கு
அரை வயிற்றுக்கேனும் கஞ்சி ஊற்ற
உழைத்துச் சம்பாதிக்க
உருப்படியாய் வளரவேணும்.
அவசரமாய்.

*****

”வயிற்றில் சுமந்தது போதாதென்று முதுகிலும் சுமக்கும் அன்னையே! உன்னை இறைவன் படைத்தது பிள்ளைகள் செய்த பேறே!” என்று நெகிழ்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

சுமை தாங்கி 

பத்து மாதம் பிள்ளையைச் சுமந்தாய்
உன் உதிரத்தை உணவாய்த் தந்தாய்!
கண்ணை இமை காப்பது போல!
பிள்ளையைக் காத்தாய்!
பிள்ளையைக் கருவில் சுமந்தாய்!
கணவனை உள்ளத்தில் சுமந்தாய்!
குடும்பத்தைத் தோளில் சுமந்தாய்!
உன் சுகத்தை நினைக்க மறந்தாய்!
வலியை நெஞ்சில் புதைத்தாய்!
வயிற்றில் சுமந்தது போதாதென்றா!
முதுகிலும் நீ சுமந்தாய்!
சுமப்பதைக்கூட சுகமாய் நினைத்தாயோ!
சுமப்பதினால் பூமியும் தாயானாள்!
தாயன்பிற்கு உலகில் ஈடென்பதேது!
தாயைக் கடவுள் படைத்தது பிள்ளைகள் செய்த பேறு!

 *****

”ஐயிரண்டு திங்கள் காத்திருந்து கருவுயிர்த்து, நீராட்டிச் சீராட்டி, கனமென்று கருதாது கணப்பொழுதும் பிரியாது தாய் சுமக்கும் சுகமான சுமைதான் இந்தச் சேய்” என்று அன்னைக்குப் பாராட்டு மடல் வாசிக்கின்றார் திருமிகு. சக்திப்ரபா.

தாயன்பு

ஐயிரண்டு திங்கள் காத்திருந்து கருப்பையில்
பச்சிளம் மேனியை பதவிசாய் மார்பில்
நீராட்டிச் சீராட்டி மிருதுவாய் முன்னங்கால்களில்
துணியிலே தூளியிட்டு நெடுந்தூரம் முதுகில்
மழலை மொழிகேட்டு முத்தமிட்டு மடியில்
இமைப்பொழுதும் நீங்காத சிந்தனைச் சுவடுகளில்
உயிருள்ள வரையிலும் உறையும் நினைவுகளில்
உயிரற்று உதிர்ந்தாலும் தொடரும் உணர்வுகளில்
புன்னகை விரித்துப் பொழுதெல்லாம் ரசித்து
கனமென்று சிறு கணம் கூட கருதாமல்
தாயுள்ளம் தாங்கும் சுமையற்ற சுகங்கள்

*****

”தொட்டில் கட்டி வீட்டில் விட்டால் கவனிக்க ஆளில்லையென்றுத் தோளில் தூளிகட்டிப் பசியாற்றும் அன்புநிறை அன்னையிவள்” என்று வியக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

முதுகிலே…

தொட்டில் கட்டி விட்டுவந்தால்
தூங்க வில்லை வீட்டினிலே,
விட்டுப் போன கணவனாலே
வேலை பார்த்துப் பிழைக்கவேண்டும்,
எட்டிப் பார்த்துப் பசியாற்ற
எளிய வழியைத் தாய்கண்டாள்,
கட்டிச் சுமக்கும் தூளியிலே
கொண்டாள் பிள்ளையை முதுகினிலே…!

***** 

”குழந்தை பெற்றும் குடும்பமில்லாத அன்னையிவள்; அதனால் வயிற்றில் சுமந்த மகவை விடாது தோளிலும் சுமந்து உழைக்கிறாள்” என்று வேதனைப்படுகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

உழைக்கும் அன்னை..!

வயிற்றில் சுமந்தது
……….வளையும் முதுகில்
பயிற்சி வேண்டும்
……….பணிவாய்ச் சுமக்க
குழந்தை பெற்றும்
……….குடும்பம் இல்லை
அழுதால் மட்டுமே
……….அன்னை வருவாள்
வியர்வை சிந்தி
……….வேலை செய்தும்
துயரை நீக்கத்
……….தூளியே ஆறுதல்
தாய்ப் பாசம்
……….தானாக வருவது
தாய்மை என்பது
……….தரத்தினில் ஒன்றே

தொட்டிலில் இட்டுக்
……….தாலாட்டி அன்னை
பாட்டு ஒன்றைப்
……….பாடவும் முடியா
கயிற்றுத் தூளியில்
……….குழந்தை போட்டால்
வயிற்றை நிரப்ப
……….வழியிலா தாகிடும்
பெற்ற குழவியால்
……….பெருமை உற்றும்
பற்றுக் கொண்டு
……….பகல் முழுதும்
அன்னை முதுகில்
……….அதுவே சுமை
தன்னைக் காக்க
……….தனிமை உழைப்பே

*****

”கொடிக்குக் காய் பாரமில்லை; குழந்தை தாய்க்கு பாரமில்லை! பெற்றெடுத்த மகவைக் கல்விபுகட்டி  நல்லறிஞனாய் வளர்ப்பாய்! நாளை உனக்கிவன் துணையாவான்!” எனத் தன் கவிதையில் நம்பிக்கை விதைக்கின்றார் திரு. ரா. பார்த்தசாரதி.

தாயும் குழந்தையும்

மண்ணுக்கு மரம் பாரமாகுமா?
மரத்திற்கு கிளை பாரமாகுமா?
கொடிக்குக் காய் பாரமாகுமா?
குழந்தை தாய்க்கு பாரமாகுமா?
பிழைப்பிற்காகக் குழந்தையைத்
தோளை தூளியாக்கிச் சுமந்து
வயிற்று பிழைப்பிற்காகத் தினம்
சுமந்து செல்லும் மலைஜாதிப்
பெண்ணே!

உடலில் வலுவும், நெஞ்சில் துணிவுடன்
உழைத்துப் பிள்ளையை காப்பாற்று
கல்வியை புகட்டி, அறிவினை பெருக்கி
நல்லறிஞனாய் வளர்ப்பாயாக!

இன்று உன் நிழலில் உன் பிள்ளை
நாளை அவன் மடியில் உன் தலை
அவனே உன்னை தாங்கும் தூண்!
என எண்ணிச் செயலாற்று!

*****

மகவைத் தோளில் சுமந்துநிற்கும் மகத்தான தாய்க்கு ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தம் நன்மொழிகளில் ஊட்டியிருக்கும் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்!

இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

மகிழ்ச்சியாய் வாழக் கற்றுக்கொள்வோம்!

உலர்ந்த நிலப் பரப்பில்… பொழிந்திட்ட மழையைப் போல…
அலர்ந்த மலர் ஒன்று… பரப்பிட்ட மணத்தைப் போல…
வளர்ந்த தரு வொன்று… தந்திட்ட நிழலைப் போல…
புலர்ந்த பொழு தெனவே… பிறந்த தன் மகவினாலே…
குளிர்ந்த நில வெனவெ… இருக்கிறது அத்தாயின் முகமும்…!

மலர் போன்ற பிள்ளைதன்னை… தன் முதுகில் சுமந்துகொண்டு…
தளர்வறியாச் சூரியன் போன்று… தன் பணியைச் செய்வதுகண்டு…
சிலரேனும் நினைத் திருப்பர்… சிக்கலான வாழ்க்கை யென்று…
அளறுவென நினைக்கும் படி… அவனி வாழ்க்கை இருந்தாலும்…
பலர் போற்ற வாழ்வோரும்… பாரினிலே மெத்த உண்டு…!

எத்தனை எத்தனை இன்பங்கள்… இறைவன் படைப்பில் இருந்தாலும்…
அத்தனையும் நமக் கில்லை… என்பது போல் இருந்துவிட்டால்…
மொத்தமாய்த் துன்பமே மேலோங்கும்… என்பதை நன்கு ணர்ந்து…
இத்தாயின் உறுதி கண்டு… சளைக்காத வலிமை கண்டு…
எதற்குமயராத நிலை கொண்டால்… மகிழ்ச்சி நமக்கு உண்டு…!

”உலர்ந்த நிலத்தில் பொழிந்த மழையாய், அலர்ந்த மலராய், புலர்ந்த பொழுதாய்த் தன் வாழ்வுக்கு ஒளியூட்ட வந்த மகவால் களிகொண்ட அன்னையிவள் உழைக்கும் உறுதிகொண்டாள்; தன் துன்பத்துக்கு இறுதி கண்டாள். இவள்போல் மனவலிமை கொண்டால் மகிழ்ச்சி நமக்குண்டு!” என்று துன்பவாழ்வை வெல்லும் நல்வழியைச் சொல்லும் இக்கவிதையின் படைப்பாளி திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “படக்கவிதைப் போட்டி 165-இன் முடிவுகள்

  1. இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுத்த நடுவர் அவர்கட்கும், என்னைப் படிக்கவும் படைக்கவும் தூண்டிய வல்லமைக்கும், சக கவிஞர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *