பழந்தமிழக வரலாறு – 8
கணியன்பாலன்
பண்டைய வடஇந்திய அரசுகள்
கி.மு. 6ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3ஆம் நூற்றாண்டு வரையிலான வட இந்தியக் காலகட்டமே சங்ககால வரலாற்றுக் காலகட்டமாகும். பழங்காலத்தமிழக வரலாற்றை முழுமையாகக் கட்டமைக்க, அக்காலகட்ட தக்காண, வடஇந்திய அரசுகளின் வரலாறு குறித்தப் புரிதல் தேவை என்பதால் அவை இங்கு சுருக்கமாகத் தரப்பட்டுள்ளன. கி.மு. 8ஆம், 7ஆம் நூற்றாண்டுகளில் 16 ஜனபதங்கள் எனப்படுகிற 16 நகர்மைய அரசுகள் வட இந்தியாவில் இருந்தன. கி.மு. 6ஆம் நூற்றாண்டு வாக்கில் அவைகளுக்கிடையே நடந்த போட்டிகளில் மகத அரசு வெற்றி பெற்று ஒரு பேரரசாக வளர்ச்சிபெற்றது. அரியங்கா(கி.மு. 600-413) வம்சத்தைச்சேர்ந்த பிம்பிசாரனும்(கி.மு. 543-493), அவனது மகன் அசாத்சத்ருவும்(கி.மு. 493-461) மகதத்தைப் பேரரசாக ஆக்குகின்றனர். அரியங்கா வம்சத்திற்குப்பின் கி.மு. 413இல் சிசுநாகர் வம்சம்(கி.மு. 413-345) தோன்றுகிறது. அதன் அழிவில் நந்த வம்சம்(கி.மு. 345-323) உருவாகிறது. நந்த வம்சத்தின் மகாபத்ம நந்தன் மகத அரசை இந்தியாவெங்கும் புகழ்பெற்ற ஒரு பேரரசாக ஆக்குகிறான். அதன்பின் அந்த நந்த வம்சத்தின் அழிவில்தான் மௌரிய வம்சம் உருவாகிறது.
இந்த ஆட்சிமாற்றத்தின் போதுதான் மாமூலனார் என்கிற பெரும் வரலாற்றுப்புலவர் தமிழகத்தில் வாழ்ந்துள்ளார். மௌரிய வம்சம் கி.மு. 323-187 வரை இருந்தது. அலெக்சாந்தர் கி.மு. 327இல் வடஇந்தியா மீது படையெடுக்கிறான். கி.மு. 325இல் வடஇந்தியாவைவிட்டு வெளியேறி கி.மு. 323இல் இறந்து விடுகிறான். அவன் வடஇந்தியாவை விட்டு வெளியேறிய உடன் சந்திரகுப்த மௌரியன் நந்தர்களைத் தாக்கி வென்று கி.மு. 321 வாக்கில் மகத அரசின் அரியனையில் அமருகிறான். 24 ஆண்டுகள் அவன் அரசாள்கிறான். அதன் பின் கி.மு. 297இல் அவனது மகன் பிந்துசாரன் அரசனாகிறான். அவனது ஆட்சிக்காலம் என்பது கி.மு. 297-272 வரையான 25 வருடங்கள் ஆகும். அதன்பின் அவனது மகன் அசோகர் கி.மு. 268இல்தான் முடிசூடுகிறார். அவரது ஆட்சிக்காலம் கி.மு. 268-232 வரையான சுமார் 34 வருடங்கள் ஆகும். அசோகருக்குப்பின் வந்தவர்கள் பலவீனமானவர்களாக இருந்தனர். அதன் கடைசி அரசனை, புசுயமித்திரன் என்கிற பிராமணத்தளபதி கொன்றுவிட்டு சுங்க வம்சத்தைத் தொடங்குகிறான். சுங்க வம்சத்தின் காலம் கி.மு. 187-75 ஆகும். அதன்பின் கன்வ வம்சம் கி.மு. 75-30 வரை 45 வருடம் ஆள்கிறது. சுங்கவம்சம், கன்வவம்சம் இரண்டும் பிராமண வம்சங்கள் ஆகும். அதன்பின் மகத அரசு இல்லாதுபோகிறது. மகதத்தைச்சுற்றி பல சிறு சிறு இனக்குழு அரசுகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்கின்றன.
மௌரியர்களுக்குப்பின் சுங்க வம்ச ஆட்சிக் காலத்தில் வட மேற்கிலிருந்து கிரேக்கர்கள் மகத அரசைத் தொடர்ந்து தாக்கி வந்தனர். அவர்களுள் மினான்டர்(கி.மு. 150-135) என்பவன் பாடலிபுத்திரம் வரை படையெடுத்து வந்தான் எனப்படுகிறது. இந்தோகிரேக்க மன்னர்களில் இவனே புகழ்பெற்றவன் ஆவான். இந்தோ கிரேக்கர் ஆட்சி நீண்டகாலம் நீடிக்க வில்லை. சைத்தியர்கள் எனப்படும் சாகர்கள் இவர்களை கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து வடக்கிலிருந்து தாக்கத் தொடங்கினர். அவர்கள் பெரிய எதிர்ப்புகள் இல்லாமல் இந்தியாவின் பல பகுதிகளை வென்றனர். சாகர்கள் கிரேக்கர்களைவிட பலபகுதிகளை இந்தியாவில் ஆண்டனர். சாகர்களில் ஐந்து பிரிவினர், ஆப்கானிஸ்தான், தட்சசீலம், மதுரா, மேற்கு இந்தியா, மேல்தக்காணம் ஆகிய ஐந்து இடங்களில் ஆண்டனர். இதே காலகட்டத்திலும் கி.பி. முதல் நூற்றாண்டிலும் பல இனக்குழுக்கள் வடக்கிலிருந்து இந்தியாவைத் தாக்கின. மதுராவைத் தலைநகராகக் கொண்ட சாகர்கள் 200 ஆண்டுகள் ஆண்டனர். மேற்கு இந்தியாவில் இருந்த மேற்கு சத்ரப் எனப்படும் சாகர்களின் ஆட்சிதான் கி.பி. 400 வரை நீடித்தது. இவர்களில் புகழ்பெற்றவன் இருத்ரதாமன்(கி.பி. 130-150) ஆவான். அந்நிய அரசனான இவன்தான் முதன் முதலாக சமற்கிருதத்தில் ஒரு நீண்ட கல்வெட்டுப் பொறிப்பை உருவாக்கினான். மேற்கு சத்ரப் அல்லது சாகர்களின் ஆட்சி என்பது கி.பி. 35 முதல் கி.பி. 405 வரை நீடித்தது.
சாகர்கள் மேற்கு இந்தியாவில் ஆட்சியைத் தொடங்கிய போது குசானர்கள் இந்தியாவின் வடக்கே தங்கள் ஆட்சியைத் தொடங்கினர். அவர்களது ஆட்சி கி.பி. 30 முதல் கி.பி. 230வரை இருந்தது. இதில் புகழ்பெற்றவர் கி.பி. 78இல் ஆட்சியைத் தொடங்கிய கனிசுகர் ஆவார். இவர்தான் கி.பி. 78இல் தொடங்கிய, சக சகாப்தம் என்பதைத் தொடங்கியவர் ஆவார். இவர் கிழக்கில் பாடலிபுத்திரம் வரை படையெடுத்தார். கனிசுகர் ஆட்சிக்காலம் என்பது கி.பி. 78-101 வரையாகும். சுங்க, கன்வ மகத அரச வம்சங்கள், சாதவாகனர்கள், சாகர்கள், குசானர்கள் ஆகிய ஐந்து அரச வம்சங்கள் தான் இக்காலத்தில் வடக்கிலும் தக்காணத்திலும் ஆண்டவர்கள் ஆவர். சாதவாகனர்கள் குறித்து முன்பே சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. சுமார் கி.மு. 230இல் இருந்து கி.பி 220 முடிய 450 வருடம் சாதவாகனர்கள் தக்காணத்தில் ஆண்டனர். இடையே கலிங்கமன்னன் காரவேலன் போன்றவர்கள் ஆண்டனர். இந்தக் காலகட்டத்தில்தான் தமிழ் அரசுகளின் வட படையெடுப்புகள் இருந்தது. ஆகவே வட அரசுகளின் காலத்தை அறிதல் ஒரு தெளிவை வழங்கும்.
வட இந்திய அரசுகள்(கால அட்டவணை)
வம்சம் அரசன் காலம் ஆண்டுகள்
அரியங்கா வம்சம் கி.மு. 600-413 187
அரியங்கா வம்சம் பிம்பிசாரன் கி.மு. 543-493 50
அரியங்கா வம்சம் அசாத்சத்ரு கி.மு. 493-461 32
சிசுநாகர் வம்சம் கி.மு. 413-345 68
நந்த வம்சம் கி.மு. 345-325 20
கலவரங்களும், குழப்பங்களும் கி.மு. 325-322 04
இமயவரம்பனின் வடபடையெடுப்பு கி.மு 325-323 03*
மௌரிய வம்சம் கி.மு. 322-187 135
சந்திரகுப்த மௌரியன் கி.மு. 321-297 24
பிந்துசாரன் கி.மு. 297-272 25
மௌரியப்படையின் தோல்வி கி.மு 297-288 11*
அசோகர் ஆட்சிக்காலம் கி.மு. 268-232 36
செங்குட்டுவனின் வடபடையெடுப்பு கி.மு. 232-230 03*
சாதவாகன வம்சம் கி.மு. 230-கி.பி. 220 450
சாதவாகன வம்சம் சிமுகா கி.மு. 230-207 23
இந்தோகிரேக்கர் டெமிட்ரியசு-1 கி.மு. 200-180 34
சுங்க வம்சம்(மகதம்) கி.மு. 187-75 112
கலிங்கம் காரவேலன் கி.மு. 180-165 15
சாதவாகன வம்சம் சதகர்னி கி.மு. 180-124 56
இந்தோகிரேக்கர் மினான்டர் கி.மு. 150-135 15
நலங்கிள்ளியின் உச்சயினி படையெடுப்பு கி.மு. 82-80 03*
சுங்க வம்சத்தின் இறுதி ஆண்டு கி.மு. 75 –
கன்வ வம்சம்(மகதம்) கி.மு. 75-30 45
சாதவாகன வம்சம் புலுமாயி கி.மு. 30-6 24
குசான வம்சம் கி.பி. 30-230 200
மேற்குசத்ரப்,சாகா வம்சம் கி.பி. 35-405 370
குசான வம்சம் கனிஷ்கர் கி.பி. 78-101 23
சக சகாப்தம் தொடங்கிய ஆண்டு கி.பி. 78 –
சாதவாகன கௌதமிபுத்ர சதகர்னி கி.பி. 106-130 24
சாதவாகன வசிட்திபுத்ர புலுமாயி கி.பி. 130-160 30
மேற்கு சத்ரப் உருத்ரதாமன் கி.பி. 130-150 20
சாதவாகன யாஜன சதகர்னி கி.பி. 170-199 29
குறிப்பு: * இக்குறியிட்டவை தமிழகம் சார்ந்த தகவல்கள் ஆகும்.
“மௌரியர்களுக்குப்பின் வந்த வடஇந்திய அரச வம்சங்களின் காலவரிசை ஒரு பொழுதும் சரியானவாறு வரையறுக்கப்படவில்லை எனவும் கி.மு.327இல் அலெக்சாந்தர் நிகழ்த்திய பஞ்சாப் படையெடுப்புதான் முதன்முதலாக ஒரு வரலாற்றுக் காலத்தை(வடஇந்தியாவுக்கு) உறுதி செய்தது எனவும்” கூறுகிறார் டி.டி. கோசாம்பி(1). “கி.மு. முதல் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரையிலான இந்திய அரசியல் வரலாறு தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்ளும் இனக்குழுக்கள், மன்னர்கள், வீரமிக்க ஆக்ரமிப்பாளர்கள் ஆகியோரைப்பற்றிய ஒரு குழப்பமான சித்திரத்தைதான் அளிக்கின்றன” என்கிறார் டி. என். ஜா(2). ஆகவே கி.மு. 1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 2ஆம் நூற்றாண்டு வரை வட இந்தியாவில் ஒரு குழப்பமான நிலைதான் இருந்து வந்தது எனலாம்..
பார்வை & ஆதார நூல்கள்:
1.பண்டைய இந்தியா, டி.டி. கோசாம்பி, தமிழில் ஆர்.எசு. நாராயணன், NCBH வெளியீடு, செப்டம்பர்-2006. பக்:386; பக்; 286
2.பண்டைக்கால இந்தியா, டி. என். ஜா, தமிழில் அசோகன் முத்துசாமி, பாரதி புத்தகாலயம், டிசம்பர் 2011, பக்: 150.
பிறஆதார நூல்கள்: 3.இந்திய வரலாறு ஒரு அறிமுகம், டி.டி. கோசாம்பி அவர்கள், தமிழில் சிங்கராயர், விடியல் பதிப்பகம், அக்டோபர்-2011,.
4.அசோகர், விசென்ட்.சுமித், தமிழில் சிவமுருகேசன், 2009.
5.தென் இந்திய வரலாறு, டாக்டர் கே.கே. பிள்ளை, எட்டாம் பதிப்பு-2011.
6.சாதவாகனர்கள், குசானர்கள், சாகர்கள், மகத அரசுகள், இந்தோ கிரேக்கர்கள், மன்னன் காரவேலன் ஆகியோர் பற்றிய விக்கிபீடியா, இணைய தள தரவுகள்.