-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. நித்தி ஆனந்தின் கைவண்ணத்தில் உருவான புகைப்படம் இது. இதனைப் ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கிறார் திருமதி. இராமலக்ஷ்மி. இவ்விருவருக்கும் என் நன்றி உரித்தாகின்றது.

படத்தில் அம்மையார் மிகுந்த அர்ப்பணிப்போடு பானம் ஆற்றுவதுகூட ஒரு தியானம் போலவே இருக்கக் காண்கிறேன்.

இனி அம்மையின் செயலைத் தமக்கே உரித்தான அழகுத்தமிழ் நடையில் செம்மையாய் வர்ணிக்கக் கவிஞர்கள் அணிவகுக்கிறார்கள்!

******

”எதிர்பார்ப்பில்லாமல் அனைவருக்கும் உழைக்கும் இந்தப் பெண்மணியல்லவோ கண்கண்ட கடவுள்“ என்று போற்றுகிறார் திருமதி. துளசி அருள்மோகன். 

தன் பசி நினையாமல் தேநீருடன்
இந்த பாச பெண்மணி இவ்வளவு மகிழ்ச்சியுடன் காத்திருப்பது
தன் கணருக்காகவோ
பிள்ளைக்காகவோ
பேரக்குழந்தைக்காகவோ
பாவம் இந்த பெண்மணியின் பசி தீர்க்க இவர்களில் யார் வருவார்?
எந்த எதிர்பார்ப்புமில்லா
பெண்ணே நீயே கடவுள்!

*****

”கோடி கொடுத்தாலும் கிட்டாத தாயன்பை மறவாதே; அன்னையைத் துறவாதே!” என்று நல்லுரை நவில்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

உண்மை தெய்வம்…

சூடாய்க் கொடுத்தால் சுடுமெனவே
சுவையாய்க் காய்ச்சி ஆறவைத்து,
தேடிப் பிள்ளை குடித்திடவே
தேனீர் தந்திடும் தாய்மறவேல்,
கோடி கொடுத்தும் கிடைக்காதே
கொட்டிக் கொடுக்கும் தாயன்பே,
வாட மட்டும் விட்டிடாதே
உண்மை தெய்வம் தாயவளே…!

*****

”தன் பசிமறந்து, அன்பைக் கலந்து உறவுகளுக்காக உற்சாக பானம் ஆற்றும் அன்னைக்கு மாற்று அகிலத்தில் இல்லை!” என்று வியக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

தன் மகனுக்கோ, கணவனுக்கோ
தேநீர் ஆற்றும் பெண்மணியே!

வாய்பொறுக்கும் சூட்டிற்குக் குடிக்க ஆற்றுகின்றாய்
உன் தாகத்தை மறந்து குடும்பத்திற்காகப் பணிசெய்கின்றாய்!

கொடுத்திடும் உன் தாயன்பிற்கு ஈடு இணையில்லை
உன் அருமை அறியாத மனிதனும் பெருமையடைவதில்லை!

இன்முகம் காட்டி, பாசத்தைத் தேநீரில் கலந்து, மகிழ்ந்து
கொடுப்பதற்காக எதிர்நோக்கும் குடும்பப் பெண்மணியே!

களைப்புடன் வீடு திரும்புவனுக்கோ இது உற்சாக பானம்
உன் கையால் கொடுப்பது அன்பும், பாசமும் கலந்த உறவாகும்!

*****

சொந்தங்களின் ஆதரவின்றி, கல்வியின் துணையின்றி, காப்பியாற்றியபடி தன்னைத்தானே தேற்றிக்கொள்ளும் முதுமையை உருக்கமாய்ப் படம்பிடித்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

இளமையில் கல்

பெற்ற மகனும்
……….பிரிந்து விட்டான்
உற்ற மகளும்
……….ஓடியே விட்டாள்
பற்றி ருப்போர்
……….பக்கத்தில் இல்லை
ஆற்றுப் படுத்த
……….அண்டியவர் இல்லை
எத்தனை துன்பம்
……….இடறிவிட்டது
கத்தினால் என்ன
……….குழப்பம் தீர்ந்ததா
என்னைப் போல
……….எவரும் இராதீர்.!
முன்பேநீ யோசி
……….முடிவிலே சுகமே.!

சிறிய வயதில்
……….சிறிதளவுக் கல்வி
அறிவு பெற்றிடும்
……….ஆவலெனக் கில்லை
முதிய வயதிலும்
……….முடியாத போதிலும்
புதிதாய் யோசித்துப்
……….பயனும் இல்லை
இளமையில் கற்பது
……….இயலாது போன(அ)து
அளவிலாத துன்பம்
……….அள்ளிக் கொடுத்தது
மூப்பு வந்தபோது
……….முக்கி முனகியிப்போ
காப்பியாற்றி வாழ்வைக்
……….கழிப்பதென் தொழிலே

*****

மென்மலர்க் கைகள் கொண்ட பெண்மை ஆயினும், இன்முகத்தோடு செய்யும் வினைகள் அகிலத்தை வெல்லும் ஆற்றல் வாய்ந்தவை என விளம்புகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

இன்முகத்தோடு செய்யும் வினைகள்… !

இன் முகத்தோடு செய்யும் வினைகள்…
இதயம் மகிழச் செய்யும் வினைகள்…
பன்முகத் திறமைகள் பளிச்சிடும் வினைகள்…
பலன்கள் பலவும் அளித்திடும் பாரீர்…!

மென் மலரொத்த கைகளே எனினும்…
மெல்லிய தேகம் கொண்டவ ரெனினும்…
அன்பைப் பொழியும் உள்ள மதற்கு…
அகிலத்தை வெல்லும் ஆற்றல் காணீர்…!

தேனீ ராற்றும் செயலே ஆயினும்…
தெய்வம் தொழுதிடும் செயலே ஆயினும்…
ஒன்றிடும் மனமது இருந்து விட்டாலே…
ஒளியாய்த் திகழ்ந்திடும் வாழ்வை உணர்வீர்…!

கண்மூடித் தனமாய் செய்யும் வினைகள்…
கடமை கருதிச் செய்யும் வினைகள்…
நன்மையை என்றும் தந்திடா வினைகள்…
நமக் குதவாது நினைவிற் கொள்வீர்…!

*****

பானம் ஆற்றும் பெண்மையின் சிறப்பைத் தம் கானத்தில் விளங்கச் சொல்லியிருக்கும் வித்தகக் கவிஞர்களைப் பாராட்டி மகிழ்கின்றேன்.

இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

அருமை மகளாகப் பூமியில பிறந்தேனே!
அப்பா மடிமேலே அரசாட்சி செஞ்சேனே!
தரைமேல நான் நடந்தா என் பாதம் நோகுமுன்னு தோளிலே சுமந்தாரு!
பதினெட்டு வயசினிலே வாழ்க்கைப்பட்டு வந்தேனே!
அப்பாவின் சொத்தெல்லாம் சீர் தனமா கொண்டு வந்தேன்!
என்னைத் தொலைச்சுப்புட்டு, கணவனைத் தேடி வந்தேன்!
என் புருசன் அழகில சுந்தரன்தான்! அறிவில சூரியன்தான்!
அம்மா பேச்சத் தட்டாத உத்தமந்தான்!
அம்மாவின் பேச்சக் கேட்டு என்ன அழவச்ச ஆம்பளதான்!
மாமியார் பதவி வந்தா மனசு கெட்டுப் போயிருமா?!
மருமகளும் பொண்ணு என்னும் உண்மை மறந்திருமா?!
மாமியார் கொடுமைய. அப்பா பாத்தாரு! வாய்விட்டு அழுதாரு!
மனுசியா நடத்தச் சொல்லி மாமியாரக் கேட்டாரு! கை கூப்பி நின்னாரு!
மாமியார் மகராசி இரக்கம் காட்டலையே!
தாலி தந்த. மகராசன் தயவு செய்யலையே!
போதும் இந்த வாழ்க்கையின்னு நானே முடிவு செஞ்சேன்!
அப்பா கண் தொடச்சு, அவரோட நான் நடந்தேன்!
வருசம் பல போச்சு! வாழ்க்கையும் தொலைஞ்சாச்சு!
சூடான காபித்தண்ணி ஆத்துனா ஆறிடுமே!
சூடான நிகழ்வுகளை காலம் தான் ஆற்றிடுமே!
உள்ளுக்குள் அழுதாலும், வெளியில சிரிக்கின்றேன்!
அம்மா சொல் கேட்டு, மனைவியை வதைக்காதே!
மனைவி சொல் கேட்டு மாதாவை ஒதுக்காதே!
இரு கண்ணில் ஒரு கண்ணை குருடாக்க நினைக்காதே!
குருடாகப் போகாதே!

மாமியார்க் கொடுமையால் மணமிழந்த தன் மணவாழ்க்கையைக் காப்பியாற்றிக்கொண்டே மனத்தில் அசைபோடும் பெண்மணியாய் இந்த அம்மையாரை அடையாளப்படுத்தி, அவர் வாழ்வின் அவலநிகழ்வுகளைத் தன் கவிதையில் சிறுகதையாய் ஓடவிட்டிருக்கும் திரு. பழ. செல்வமாணிக்கத்தை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன். 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “படக்கவிதைப் போட்டி 166-இன் முடிவுகள்

  1. ##சூடான காபித்தண்ணி ஆத்துனா ஆறிடுமே!
    சூடான நிகழ்வுகளை காலம் தான் ஆற்றிடுமே!
    உள்ளுக்குள் அழுதாலும், வெளியில சிரிக்கின்றேன்!
    அம்மா சொல் கேட்டு, மனைவியை வதைக்காதே!
    மனைவி சொல் கேட்டு மாதாவை ஒதுக்காதே!
    இரு கண்ணில் ஒரு கண்ணை குருடாக்க நினைக்காதே!###
    விழிகளை ஈரமாக்கும் வரிகள்……
    அப்பாவின் கண்ணீருக்கு அம்மாக்களின் (மகள்களின்) கண்ணீரா ? ஆண்டவா.. ……வாழ்த்துகள்
    ….. அந்தகாலம் காலம் அப்படி ! இந்தகாலமும் இப்படியா. ??

  2. உண்மை. என்ன தான் முன்னேற்றம் என்று பேசினாலும், பெண்களுக்கு இன்னும் இது போன்ற அவல நிகழ்வுகள் நடை பெற்றுக் கொண்டு தான் இருக்கின்றது.
    பெண்ணைப் பெண்ணே கொடுமைப்படுத்தும் இந்த நிலை மாறும் என நம்புவோம். பெண்ணில் பிறந்து, பெண்ணோடு வாழும் ஆண்களாகிய நாமும் பெண்மையை மதிக்கும் நாளே திரு நாளாம்.

Leave a Reply to sathiyamani

Your email address will not be published. Required fields are marked *