இருப்பது பேரின்பமன்றோ!
- Thursday, June 28, 2018, 10:04
- இலக்கியம், கவிதைகள், மரபுக் கவிதைகள்

எம்.ஜெயராமசர்மா ….. மெல்பேண் … அவுஸ்திரேலியா
பொட்டுவைத்த பூமுகத்தைத் தேடுகிறேன்
புன்சிரிப்பை மறுபடியும் எண்ணுகிறேன்
கட்டழகு உடலமைப்பை காணவில்லை
கையெல்லாம் நடுங்குவதைக் காணுகின்றேன்
சிரித்துநின்ற செவ்வாயைத் தேடுகிறேன்
சிவப்புநிறம் கறுப்பாகி நிற்குதங்கே
என்றாலும் அவளேயென் இணையேயாவாள்
இருக்கும்வரை அவளைத்தான் சொர்க்கமென்பேன்!
கருங்கூந்தல் அவளிடத்தில் காணவில்லை
கண்கூட ஒளிமங்கி வெகுநாளாச்சு
முத்துபோன்ற பல்வரிசை எங்கேபோச்சோ
மூச்சுவிட அவளிப்போ முனுகுகின்றாள்
சுவையாக உணவளித்த அவளின்கைகள்
சுவைப்பதற்கே முடியாமல் ஆகிப்போச்சு
அவள்வாயில் ஊட்டிவிடும் ஆசைகொண்டேன்
அதுவேயென் வாழ்வில் பேரின்பமாச்சு!
ஓடியாடித் திருந்தஅவள் ஓய்ந்தேவிட்டாள்
உதவிக்கு வருவார்கள் யாருமில்லை
தேடித்தேடி நான்கண்ட தேவியிப்போ
செய்திகேட்கும் செவிப்புலனை இழந்தேவிட்டாள்
வாடிவிட்ட நிலையினிலும் வடிவாயுள்ளாள்
வயிறார உண்பதற்கு இயலாதுள்ளாள்
என்றாலும் உணவதனை ஊட்டும்போது
என்வாழ்வு இனிக்குதென்று எண்ணுகின்றேன்!
பிள்ளைகளோ எம்மைவிட்டுப் பிரிந்தேவிட்டார்
தொல்லைகளே என்றுவெண்ணி தூரவுள்ளார்
நல்லபிள்ளை என்றேநாம் வளர்த்தேவிட்டோம்
நட்டத்தை எங்களுக்கே தந்தேவிட்டார்
அல்லல்தரும் வயோதிபத்தை அடைந்தேவிட்டோம்
ஆனாலும் அருகருகே இருக்கின்றோமே
எல்லையிலாத் துன்பமெமை இறுக்கிட்டாலும்
இணைபிரியா இருப்பது பேரின்பமன்றோ !
About the Author
ஜெயராமசர்மா has written 337 stories on this site.
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. "முதற்படி" என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.
Write a Comment [மறுமொழி இடவும்]
இதுவே வாழ்வின் நித்தியம். அந்திமந்தாரையின் அற்புதம்.