மரணவாசல் போகின்றார் !
- Tuesday, July 3, 2018, 22:41
- இலக்கியம், கவிதைகள்

எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா
பணத்தினால் போதை வரும்
பதவியினால் போதை வரும்
பட்டம் பல பெற்றாலும்
போதை தலைக் கேறிவிடும்
இதனாலே வரும் போதை
எல்லோர்க்கும் இடைஞ்சல் தரா
போதை ஊட்டும் பொருளன்றோ
பொல்லாத விளைவைத் தரும் !
போதையூட்டும் பல பொருட்கள்
புதுப் புதிதாய் வருகிறது
காதலுடன் பலர் வாங்கிக்
காணுகிறார் இன்ப நிலை
இன்பமென எண்ணி எண்ணி
ஏற்றுநிற்கும் பல பொருட்கள்
துன்பமாய் அமையும் என்று
துளிகூட அவர் நினையார் !
போதை தரும் பலவற்றை
பொழுது போக்காய் பயன்படுத்தி
பாதை தடுமாறி நின்று
பலர் வாழ்வை இழந்துவிட்டார்
சாதனைகள் பல இருக்க
சன்மார்க்க வழி இருக்க
போதையினை தலைக் கேற்றி
பொசுக்குகின்றார் நாளை எல்லாம் !
போதைப் பொருள் ஏற்பதனால்
பொறி புலன்கள் தடுமாறும்
வீதி தனில் செல்கையிலே
வில்லங்கம் செய்யத் தூண்டும்
நாடி வரும் நற்குணங்கள்
நம்மை விட்டே அகன்றுவிடும்
நமக்கு நாமே புதைகுழியை
நாம் வெட்டி நின்றிடுவோம் !
கொள்ளை அடியென நினைக்கும்
குணம் அங்கே வந்துநிற்கும்
கொலை செய்து கற்பழிக்கும்
குரூரமும் கூட நிற்கும்
நல்ல வல்ல எக்குணமும்
நம்மிடத்து வந்து விடா
பொல்லாத செய் என்றே
போதை அங்கு வழிநடத்தும் !
நீதி நேர்மை பார்க்காது
நெஞ்சு உருக நினைக்காது
வாதமிடும் போர்க் குணத்தை
வளர்த்து விடும் போதையது
புவி மீது வாழ்கின்றார்
போதைப் பொருள் ஏற்பதனால்
மதியிழந்து வாழ் விழந்து
மரண வாசல் போகின்றார் !
About the Author
ஜெயராமசர்மா has written 337 stories on this site.
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. "முதற்படி" என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.
Write a Comment [மறுமொழி இடவும்]