காலனிடம் ஒரு கேள்வி!
-மேகலா இராமமூர்த்தி
காலா…!
பயனிலா மாக்களே பல்லாண்டு வாழ்வதும்
பயனுடை மக்களோ சில்லாண்டில் வீழ்வதும் (சில்லாண்டு – சில ஆண்டு)
முறையா தகுமா என்றே வினவினேன்!
கூர்ந்தெனை நோக்கிய காலனும் கூறினான்
ஓர்ந்துதான் செய்கிறேன் நானுமே என்பணி (ஓர்ந்து – ஆய்ந்து)
செப்புவேன் அதனைநான் செவிமடு சற்றுநீ
என்றுரைத்த காலனும் சொல்லிய கருத்திது…
”அறிவுடைச் சான்றோர்கள் எவருக்கும் பயனுளார்
அறிவற்ற வீணரோ எமனுக்கும் பயன்படார்!
ஆதலின் நானுமே பயனுளாரைக் கொள்ளுவேன்
கோதனைய வீணரைப் பற்றிடாது தள்ளுவேன் (கோது – சக்கை)
என்தொழில் சூட்சுமம் புரிந்ததா நங்கையே…
என்றெனைக் கேட்டனன் நகைப்புடன் காலனும்
என்சொல அவனிடம் திகைக்கிறேன் நானுமே!!??
*****
மேற்கண்ட கவிதை பின்வரும் நாலடியார்ப் பாடலின் எளிய வடிவம்:
பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிதிரேல் – கல்லாதார்
சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று. (நாலடி – 106)