-மேகலா இராமமூர்த்தி

காலா…!    
பயனிலா மாக்களே பல்லாண்டு வாழ்வதும்
பயனுடை மக்களோ சில்லாண்டில் வீழ்வதும்   (சில்லாண்டு – சில ஆண்டு)
முறையா தகுமா என்றே வினவினேன்!  
கூர்ந்தெனை நோக்கிய காலனும் கூறினான்
ஓர்ந்துதான் செய்கிறேன் நானுமே என்பணி   (ஓர்ந்து – ஆய்ந்து)
செப்புவேன் அதனைநான் செவிமடு சற்றுநீ

என்றுரைத்த காலனும் சொல்லிய கருத்திது…

”அறிவுடைச் சான்றோர்கள் எவருக்கும் பயனுளார்
அறிவற்ற வீணரோ எமனுக்கும் பயன்படார்!
ஆதலின் நானுமே பயனுளாரைக் கொள்ளுவேன்
கோதனைய வீணரைப் பற்றிடாது தள்ளுவேன்  (கோது – சக்கை)
என்தொழில் சூட்சுமம் புரிந்ததா நங்கையே…
என்றெனைக் கேட்டனன் நகைப்புடன் காலனும்
என்சொல அவனிடம் திகைக்கிறேன் நானுமே!!??

*****

மேற்கண்ட கவிதை பின்வரும் நாலடியார்ப் பாடலின் எளிய வடிவம்:

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் வீயவும்
கல்லாதார் வாழ்வ தறிதிரேல் – கல்லாதார்
சேதனம் என்னுமச் சேறகத் தின்மையால்
கோதென்று கொள்ளாதாம் கூற்று.  (நாலடி – 106)

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *