க. பாலசுப்பிரமணியன்

 

மகிழ்வும் திறனும் தொழிலுக்குத் தேவை

பல நேரங்களில் நமக்கு நாம் விரும்பிய தொழிலோ அல்லது வேலைகளோ கிடைப்பதில்லை. எவ்வளவுதான் ஆர்வம் நமக்கு இருந்தாலும் குறிப்பிட்ட சில கல்வித்தகுதிகள் இல்லாததாலோ அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ நாம் விரும்பிய தொழில்களில் ஈடுபட முடிவதில்லை. ஆனாலும் நம் உள்மனதில் அந்தத் தொழிலைப் பற்றிய ஆர்வம் மற்றும் ஈடுபாடு இருந்துகொண்டே இருக்கின்றது. நாம் அந்த விருப்பங்களுக்கும் ஆர்வங்களும் மாறுபட்ட நிலையில் வேறு ஏதாவது ஒரு தொழிலில் ஈடுபட்டு விடுகின்றோம். சில சந்தர்பங்களில் இந்த மாதிரியான நிர்பந்தங்கள் குடும்பச்  சூழ்நிலைகளாலோ அல்லது பொருளாதாரச் சூழ்நிலைகளாலோ அல்லது சமுதாய கட்டுப்பாடுகள் மற்றும் சட்டதிட்டங்கள் காரணமாகவோ அமையக்கூடும். அந்த நேரங்களில் பலருக்கு ஒரு தோல்வி மனப்பான்மையோ  அல்லது ஏமாற்றமோ ஏற்பட வாய்ப்புக்கள்  உண்டு. இந்தச் சூழ்நிலைகள் நமக்குத் தாழ்வு மனப்பான்மை, மன அமைதியின்மை. மன அழுத்தங்கள் மற்றும் வாழ்க்கையைப் பற்றிய ஒரு தவறான பார்வையை ஏற்படுத்தலாம். இதிலிருந்து மீண்டு நாம் எந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளோமோ அதையே ஒரு பரிசாக ஏற்று அந்தத் தொழிலை மகிழ்வுடனும் சிறப்பாகவும்  செய்ய கற்றுக்கொள்ளவும் முயலவும் வேண்டும்.

எந்தத் தொழிலைச் செய்தாலும் அதில் மகிழ்வும் ஈடுபாடும் இல்லாமல் செய்யும் பொழுது அது நமக்கு மிகப்பெரிய சுமையாக மாறிவிடுகின்றது. அதையே மகிழ்வோடு செய்யும் பொழுது அது நல்வாழ்வுக்கு உரமாக மாறிவிடுகின்றது. உலகின் மிகப் பெரிய தத்துவ மேதை அரிஸ்டாட்டல் கூறுகின்றார் “மகிழ்வோடு செய்யும் எந்த வேலையும் மிகச் சிறப்பாக அமைகின்றது.”

சில நேரங்களில் நாம் தொழிலில் நமக்கு அதைச் செய்வதற்கான வெகுமானமும் சம்பளமும் கிடைக்காததால் நம்முடைய ஈடுபாடுகளையும் மகிழ்வையும் குறைத்துக்கொள்கின்றோம். அது மட்டுமல்ல, நாம் நம்மைப் போன்ற பலருடன் நம்மை ஒப்பிட்டு நம்முடைய தரத்தை உயர்த்தியோ குறைத்தோ மதிப்பீடு செய்கின்றோம். இது ஒரு தவறான நோக்கு. இந்த ஒப்பீடுகள் ஓரளவிற்கு நம்முடைய திறனுக்கு அளவுகோலாக இருக்குமேயன்றி எல்லா நேரங்களிலும் நம்முடைய ஈடுபாட்டிற்கும் திறனுக்கும் நிரந்தரச் சான்று அல்ல. எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடோடு செய்யும் பொழுது நமது திறன் ஒளிர்கின்றது. அதில் கிடைக்கும் மகிழ்வே அந்தச் செயலை சரியாகச் செய்வதற்கான கூலியாக அமைகின்றது. இதையே பகவத் கீதையின் கர்மயோகத்தில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. “கர்மண்யேவாதிகாரஸ்தே; மா பலேஷு கதாசன” என்ற கூற்றில் கண்ணன் அர்ச்சுனனுக்கு கூறுகின்றார் “பலனை எதிர்பார்க்காமல் உன் கடமையைச் செய்.”

சில நேரங்களில் நாம் மற்றவர்களிடம் சென்று “நான் என்னவெல்லாம் செய்திருக்கிறேன் தெரியுமா” என்று தங்களுடைய திறன்களையும் தொழில் வளர்ச்சியையும் பற்றி தற்பெருமையுடன் சொல்வதைக் கண்கூடாகக் காண்கின்றோம். சிறப்பாகத் தொழில் செய்பவர்களுக்கு இதற்கான அவசியம் இல்லை. “ஒரு சிறந்த வேலைக்காரனுக்கு அவன் தொழில் திறனே முகவரியாக அமைகின்றது”  என்று சொல்லப்படுகின்றது. அறிவுசால் சமுதாயத்தில் அறிவும் திறனும் உள்ளவர்களைத் தேடி உலகம் செல்கின்றது. இது நடைமுறை உண்மை. அவர்களுக்கு ஒரு விளம்பரமோ அல்லது பரிந்துரையோ தேவையில்லை. விளம்பரமும் பரிந்துரைகளும் கொண்டு தொழிலிலும் வாழ்விலும் முன்னேறுபவர்கள் அவர்களுடைய ஒவ்வொரு படியின் முன்னேற்றத்திலும் யாரையாவது தேடிக்கொண்டிருப்பார்கள். மற்றவர்களுடைய தயவும் ஒத்துழைப்பும் இல்லாமல் தங்களுடைய முன்னேற்றத்தின் சரித்திரத்தை அவர்களால் எழுத முடியாது.

பல நேரங்களில் நல்ல திறனுள்ளவர்கள் என்ன திறமையிருந்தாலும் நமக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும்’ என்ற ஒரு பிற்போக்கான கருத்தை மனதில் நிறுத்தி தாங்கள் செய்யும் வேளையிலும் தொழிலும் தங்களுடைய முழுமையான உழைப்பை செலுத்தாமல் இருப்பார்கள். இவர்கள் அநேகமாகத் தோல்வியையே சந்திப்பார்கள். காரணம்- என்னதான் திறமையிருந்தாலும் கடின உழைப்புக்கு இணை ஏதுமில்லை. அமெரிக்க மனநல மற்றும் சமூகச் சிந்தனையாளர் மால்கம் கிளாட்வெல் என்பவர் கூறுகின்றார். “திறன்கள் மட்டும் போதுமானதல்ல. அந்தத் திறன்கள் அமைதியாக இருக்கும் பொழுது உங்களுடைய கடின உழைப்பு உங்களுக்காகப் பேசுகின்றது.”  சில சமயங்களில் நாம் நம்முடைய திறன்களை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. ஒரு நிறுவனத்தில் ஒரு தொழிலாளியிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது கேட்டேன் “உங்களுக்கு இந்தத் திறன்களெல்லாம் உண்டென்று உங்கள் மேற்பார்வையாளருக்குத் தெரியுமா?”

அவர் அளித்த பதில் என்னைத் திகைப்படையச் செய்ததது. “இல்லை அய்யா. நான் அதெல்லாம் தெரியும் என்று சொன்னால் என்னை அதையெல்லாம் செய் என்று சொல்லுவார்கள். கொடுக்கின்ற சம்பளத்திற்கு அவர்கள் சொல்லுவதை மட்டும் செய்துவிட்டுப் போகவேண்டும்.” இந்த நோக்கு சரியானது அல்ல. நம்முடைய திறன்களை சரியான நேரங்களில் நாம் வெளிக்காட்டாவிட்டால் அவைகளின் பயன் என்ன? நமக்கு நம்மைத் தவிர யார் வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்?

நாம் எந்தத் தொழில் செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய முயற்சி செய்யலாமே  !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *