க. பாலசுப்பிரமணியன்

முன்னேற்றத்தின் ஏணிப்படிகள்

ஒரு  கார் தயாரிக்கும் தொழிற்சாலையில் அதனுடைய முதலாளி சற்றே மேற்பார்வைக்காக உள்ளே நுழைந்தார். அங்கு அந்த வண்டிகளைப் பழுது பார்க்கும் தொழிலாளி ஒருவர் இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த அந்த முதலாளி “தம்பி,  நீ எதற்க்காக இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருக்கின்றாய்? எதைத் தேடிக்கொண்டிருக்கின்றாய்”  என்று வினவினார். உடனே அந்தத் தொழிலாளி ‘”அய்யா அந்தக் கார் கீழே சென்று உள்ளே சற்றே பழுது பார்க்கவேண்டும்.  கீழே படுத்துக்கொண்டு வேலை பார்க்கும்பொழுது போட்டுக்கொண்டிருக்கும் இந்த உடுப்புகள் அழுக்காகி விடும். எனவே கீழே போட்டுக்கொள்ளுவதற்காக ஏதாவது ஒரு பொருள் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருக்கின்றேன்.” என்று பதிலளித்தார். “அப்படியா, அந்த வேலையை முடிக்க எவ்வளவு நேரம் ஆகும்?” என மீண்டுக் கேட்க அவரோ “ஒரு பத்து நிமிடங்களில் முடித்து விடலாம்.” என்று பதிலளித்தார். முதலாளி  சிரித்துக்கொண்டே “ஒரு பத்து நிமிட வேலைக்காக நீங்கள் இருபது நிமிடத்தை வீணடித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு வேலை பார்ப்பதற்காக இந்த நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட் உடுப்புத்தானே.இது.” என்று சிரித்துக்கொண்டே தன்னுடைய கோட் மற்றும் டை ஆகிவைகளைக் கழட்டிவிட்டு அந்தக் காரின் கீழே தானே உள்சென்று பழுது பார்க்க ஆரம்பித்து விட்டார். அதைக்கண்ட அந்தத் தொழிலாளி சற்றே திகைத்து செய்வதறியாமல் நின்றார்.

பல நேரங்களில் நாம் செய்ய வேண்டிய தொழில்களின் தேவை, தரம், அவசியம், மற்றும் நேரம் ஆகிவற்றைப் பற்றி சற்றும் சிந்திக்காமல் நேரங்களை வீணடித்துக்கொண்டிருக்கின்றோம். ஒரு வேலை செய்வது மாட்டும் முக்கியமானதல்ல. அதைத் திறன்படவும் புத்திசாலித்தனமாகவும் செய்தல் அவசியம். தற்காலத்தில் தொழில்களை செய்வதற்கு கொடுக்கப்பட்டுள்ள மூல மந்திரம் ” திறன், அளவு, வேகம்.’ ( SKILL, SCALE AND SPEED)

எந்த ஒரு வேலையை நாம் செய்யும் பொழுதும் அதைத் திறனுடன்( SKILL)  செய்யக் கற்றுக்கொள்ளவேண்டும். திறனில்லாமல் செய்கின்ற வேலைகள் சிறப்பாக இல்லாதது மட்டுமின்றி அவை பல சமயங்களில் எவ்வ்ளவு நேரம் அதற்குத் தேவையோ அதைவிடப் பல மடங்கு நேரத்தை விழுங்கி விடும்.  நாம்  வழக்கத்தில் கேட்ட கதை இதுதானே:

மரங்களை வெட்டுகின்ற ஒரு தொழிலாளி பல வருடங்களாக ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவனுடைய ஒரு நாள் வேளையில் அவன் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மரங்களை வெட்டிக்கொண்டிருந்தான். நாள்பட, அவன் உற்பத்தித்திறன் குறைந்ததும். அந்தத் தொழிற்கூடத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்த ஒருவன் மிகச் சிறப்பிப்பாகவும் அதிக உற்பத்தித்திறனுடனும் வேலை செய்துகொண்டிருந்ததை முதலாளி பாராட்டிய பொழுது அந்தப் பழைய தொழிலாளிக்கு மனவருத்தமும் தாழ்வு மனப்பான்மையும் ஏற்பட்டது. காரணம்? அந்தப் புதிய தொழிலாளி தினம் வேலைக்கு வரும் பொழுது தன்னுடைய கருவிகளை சீர்படுத்தி வேலைக்கு உகந்ததாக கொண்டுவந்து கொண்டிருந்தான். பழைய தொழிலாளியின் கருவிகள் பல மாதங்கலாகச் சீர்படுத்தப்படவில்லை.

நாம் வேலைக்குச் செல்லும் பொழுது நமது கருவிகள் வேலைக்கு உகந்ததாக இருக்கின்றனவா என்று நாம் சிந்திக்க வேண்டும் . அந்தக் கருவிகள் – சிந்தனைகளாக இருக்கலாம், வேலையைப் பற்றிய புதிய தேடல்களாக இருக்கலாம், வேலை செய்யும் சூழ்நிலைகள், அதைச் சார்ந்த புதிய கண்டுபிடிப்புக்கள் அல்லது புதிய செயல்முறைகளாக இருக்கலாம். அவைகள் நமக்குத் தெரியுமா? அதை எவ்வாறு கற்றுக்கொள்ளலாம் என்று நாம் சிந்திக்க வேண்டும்.

கற்றல் என்பது  வாழ்க்கையின் ஒரு தொடர் நிகழ்வு. அறிவுசால் சமுதாயத்தில்  அறிவையும் திறன்களையும் வளர்க்கும் உள்ளீட்டுக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டும் மேம்பட்டுக்கொண்டும் இருக்கின்றன. ஆகவே அந்த அறிவு நுணுக்கங்களையும் அவைகளின் பரிமாணங்களையும் அவைகளின் தாக்கங்களையும் தொடர்ந்து கண்காணிப்பது மட்டுமின்றி அவைகளைத் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். கற்றல் வெறும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் மாற்றும் நடப்பதல்ல. அறிவு உள்ளீட்டுக்களின் வேகங்களும் பரிமாணங்களும் மாறிக்கொண்டிருக்கும் நேரத்தில் நாம் அவற்றிக்குத் தகுந்தாற்போல் நம்முடைய தொழில்சார்ந்த கற்றல் திறன்களையம் வளர்த்துக்கொண்டும் மாற்றிக்கொண்டும் இருத்தல் அவசியம். அதற்கு ஈடு கொடுக்காதவர்கள் வேகத்தின் விளையாட்டில் தோற்றுப்போவது மட்டுமின்றி வளர்ச்சிப் பணிகளுக்கு உபயோகமானவர்களாக இருக்கமாட்டார்கள்.

நம்மில் பல பேர்கள் நம்முடைய படிப்புக்கள் கல்லூரி அல்லது பள்ளியிலேயே முடிந்து விட்டது என்ற தவறான கருத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் .அது நம்முடைய முன்னேற்றத்திற்கு நாமே அடித்துக்கொள்ளும் சாவு மணியாகும். விடுகின்ற ஒவ்வொரு காலையும் ஒரு புதிய சந்திப்பு. அது புதிய கருத்துக்களோடும் புதிய எதிர்பார்ப்புக்களோடும் விடுகின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் நாம் இது வரை கற்காலத்திலேயே இருந்து கொண்டிருப்போம்.

நான் ஒரு நிறுவனத்தின் தலைவரின் அறையிலே பார்த்த ஒரு சுவரொட்டி என்னை மிகவும் கவர்ந்தது. அதிலிருந்த வாசகம் இதுதான்:

“ஆப்பிரிக்கக் காடுகளில் இருக்கின்ற ஒவ்வொரு மானும் தினசரி காலையில் கண்விழிக்கும் பொழுது “நேற்றைவிட இன்று வேகமாக ஓடவேண்டும் என்ற  உறுதியோடு எழுந்திருக்கின்றது. அவ்வாறு இல்லாவிட்டால் இன்று ஏதாவது ஒரு சிங்கத்திற்குத் தான் இரையாக வேண்டும் என்ற எண்ணமே !

ஆப்பிரிக்கக் காடுகளில் இருக்கின்ற ஒவ்வொரு சிங்கமும் தினசரி காலையிலே கண்விழிக்கும் பொழுது “நேற்றைவிட இன்று வேகமாக ஓடவேண்டும்” என்ற உறுதியோடு  எழுந்திருக்கின்றது, அவ்வாறு இல்லாவிட்டால் இன்று தனக்கு இரை கிடைக்க வாய்ப்பில்லை என்ற எண்ணமே !

நீங்கள் மானாக இருந்தாலும் சரி, சிங்கமாக இருந்தாலும் சரி, தினசரி காலையிலே கண்விழிக்கும் பொழுது  நேற்றை விட இன்று சிறப்பாகச் செயல் பட வேண்டும் என்ற எண்ணத்தில் கண்விழிக்க வேண்டும்.:

என்ன உன்னதமான கருத்து!

பல நேரங்களில் பல இடங்களில் சிலருக்கு வேலை கிடைத்தவுடன் “இனிமேல் நமக்குக்  கவலையில்லை. நம்முடைய ஓய்வு காலம் வரை நம்மை யாரும் அசைக்க முடியாது ” என்ற தவறான கருத்தோடு தங்கள்  தொழில் சிறப்பை இழந்து நிற்கின்றார்கள். .இன்னும் சிலரோ “நான் என்னதான் சிறப்பாக வேலை பார்த்தாலும்

எனக்கு இன்னும் பத்து வருடங்களுக்கு வளர்ச்சி இல்லை . செய்தேன்ன பயன்? ” என்று தங்களைத் தாங்களே தோற்கடித்துக்கொண்டு வாழ்கின்றார்கள். .மற்றும் பலர் “எனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். நான் மற்றவர்களோடு போட்டிபோட்டுக்கொண்டு ஏன் கற்றுக்கொள்ளவேண்டும்.?” என்ற சிந்தனையில் வாழ்கின்றார்கள். இன்னும் சிலர் “என்னுடைய வேலை ஒப்பந்தத்தில் நான் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லையே” என்று விளையாட்டாகப் பேசி வளர்ச்சியைத் தவற விடுகின்றார்கள்.

வளர்ச்சியும் முன்னேற்றங்களும் காலமும் இவர்களுக்காகக் காத்துக்கொண்டிருப்பதில்லை. திறன் – அளவு – வேகம் (SKILL, SCALE AND SPEED): இவைதான் நம்முடைய வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் ஏணிப்படிகள்.

சற்றே முயன்று பார்க்கலாமே !

தொடரும்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *