குமார சம்பவம்(அல்லது பேரருள் நெற்றிக்கண் பிறப்பு)….!

0

 

சர்கம்- மூன்று
——————

ஆரால் பயனோ அவரன்றி வேறாளைப்
பாரான் எஜமான் பழகிடினும் -நூறாறு
நானூறு கண்களால் நோக்கினான் மன்மதனை
வானூறும் நட்பை விடுத்து….(124)….18-10-2010

”அமரிங்கே” என்றன்பாய் ஆசனமும் தந்து
சமமரி யாதையை செய்ய -அமரர்கோன்,
புல்லரித்த புஷ்பபாணன் போற்றியெஜ மானரிடம்
சொல்லலுற்றான் சொந்தச் சரக்கு….(125)….18-10-2010

மூவுலகில் தாங்கள் முடிக்க நினைத்ததை
ஏவுகணை என்மூலம் எய்திடுவீர் -காவலனே
ஏனைய பேரிருக்க என்னை அழைத்தனையும்
ஆணை எனக்கு அருள்….(126)….18-10-2010

வானப் பதவி விரும்பித் தவமியற்றும்
ஈனப் பிறவியார் இன்றுரைப்பீர் -பாணம்
தொடுத்தயென் வில்லால் தடுத்தவனைக் காமப்
படுக்கையில் வீழ்த்துகிறேன் பார்….(127)….18-10-2010

பிறவிப் பிணிக்கஞ்சி பேரின்ப மோட்ச
வரவுக்(கு) உமைமறந்த வீணன் -கருவத்தை
நோக்க நுதலை நெறிக்கின்ற நங்கையர்
பார்க்க மறப்பான் பரம்….(or)
தாக்கத் தவிர்ப்பான் தவம்….(128)….18-10-2010

சுக்கிராச் சாரியார் சொன்னவுப தேசத்தால்
அக்கறையாய் தர்மார்த்தம் ஆழ்ந்தவனும் -உக்கிரமாய்
பொங்கும் புனல்கரையைப் பேர்த்தலாய் ஆசையை
அங்கனுப்பக் கொள்வான் அழிவு….(129)….19-10-2010

புத்தி புகுந்தவள் பத்தினியே ஆனாலும்
சித்த சபலத்தில் சேர்த்தவளை -அத்தனுன்மேல்
இச்சையுறச் செய்வேன் இழுத்தணைக்கச் செல்லுமவள்
அச்சமட நாணம் பயிர்ப்பு….(130)….19-10-2010

காமுகரே, குற்றத்தால் காலில் விழுந்தபின்னும்
தீமுகம் காட்டிய தேவதையார் -பூமுக
வாளியால் தேகத்தை வாட்டித் தளிர்படுக்கை
நாளுமவள் நாடவைப்பேன் நான்….(131)….19-10-2010

வச்சிரம் கண்கள் வளரட்டும் ஓய்வெடுத்து
இச்சரப் பூக்களை எய்திட -அச்சுறுத்தும்
உன்னெதிரிக் கூட்டம் உதடு துடித்துறுமும்
பெண்ணெதிர்க்க ஓடும் பயந்து….(132)….19-10-2010

பூவென்(று) அலட்சியமாய்ப் பாராய், எனதுகணைப்
பூவொன்றால் அப்பினாக பாணிக்கே -நோவென்ற
உள்ளக் குலைவை உதிர்ப்பேன் வசந்தனுடன்
சொல்லித் தெரிவதில்லை சூது….(133)….19-10-2010

மடித்து தொடையில் மிடுக்காய்ப் பதித்த
அடித்தா மரையை அகற்றி – வெடுக்கென
ஆசன பீடத்தை அங்கீ கரித்தூன்றி
பேசினான் மாறனைப் பார்த்து….(134)….19-10-2010

உச்சரித்தக் கீர்த்திகள் நிச்சயமே நண்பனே
அச்சுறுத்தல் நீங்கி அகமகிழ்ந்தேன் -வச்சிரத்தை
ஒத்தவனே, உன்படைதான் சித்தமகா யோகியையும்
தத்தளிக்க வைத்திடும் தைத்து….(135)….19-10-2010

பூமியை சேடன் பொறுத்தல் திறன்கண்டே
நேமியன் நாடினான் நீள்துயில் -பூமய
வில்லாளி நண்பா விறலில் எனையொத்த
வல்லான் உனக்கோர் வழக்கு….(OR)
வல்லானுன் வாளிக்கு வாய்ப்பு….(136)….19-10-2010

காளையார் மீது கணைவிட்(டு) அவர்தவச்
சோலையை சாய்ப்பதாய் சொன்னதற்கு -வேளைபார்
வந்தது மன்மதா நொந்திருக்கும் எங்களின்
அந்தரங்க ஆசி அதற்கு….(137)….20-10-2010

ஆவலாய் தேவர்கள் அவ்வீசன் சேய்சேனைக்
காவலாய் வாய்த்திடக் காத்துள்ளார் -ஏவுவாய்
ஓரம்பால் வேதங்கள் ஆரம்பம் ஆகிடும்
வேரின்பால் ஆசை விதைத்து….(138)….20-10-2010

காரியன் நான்முகன் காரணன் ஈசனின்
வீரியம் தாங்கும் வலுவுடையாள் -கூறினன்
பார்வதி என்றே புலனடக்கம் பெற்றவளால்
பார்அவதி உந்தன் பணிக்கு….(139)….20-10-2010

வெற்பரசன் தந்தை விடுத்ததோர் உத்திரவால்
சொற்ப சிசுருஷை செய்கின்றாள் -சிற்பமாய்
உச்சி சிகரத்தில் உள்ளாழ்ந்த ஈசர்க்கு
எச்சரிக்கை அப்ஸர ஏவு….(140)….20-10-2010

முப்புறம்மண் சூழ்ந்தும் முளைக்க விதையதற்கு
அப்புவின் தேவை அவசியம்போல் -ஒப்பறியா
பார்வதியின் தோற்றப் பொலிவுதவ முற்றுமென்றால்
நேருவதற்(கு) ஆரம்பம் நீ….(141)….21-10-2010

சிந்தையில் தோன்றியும் செய்ய முடியாத
அந்தவோர் காரியத்தை ஆக்குபவன் -விந்தையாம்
அச்சிவன் மீதுமலர் அம்பெய்தி கீர்த்தியின்
உச்சிக்குப் போவாய் உயர்ந்து….(142)….21-10-2010

கொல்வதில்லை ஆனாலும் வில்வதையால் ஆனந்தம்
கொள்வதனால் காமனுனைக் கூப்பிடுவர் -நல்விதமாய்
யாசிக்கும் எங்களுக்காய் யோசிக் காதுசெய்வாய்
பூசிக்கும் பார்மூன்றும் பார்….(143)….21-10-2010

நாடாது போயினும் நண்பன் வசந்தனுன்
னோடேதான் நிற்பனென நம்புகிறேன் -ஆடாத
மொட்டனைய அக்கினியை மூண்டு வளர்த்திட
கட்டளைக்காய் காக்குமோ காற்று….(144)….22-10-2010

அனங்கன் அதைக்கேட்(டு) இணங்கி சுரர்கள்
இனங்கோனின் ஆணையை ஏற்று -வணங்க
அயிரா வதமடக்கும் ஆஜானு கையை
தயவோடு வைத்தான் தலை….(145)….23-10-2010

பயந்த ரதிவசந்தன் பின்தொடர காமன்
உயர்ந்த இமயம் அமைந்த -நயனனுதல்
ஆண்டவன் ஆசிரமம் மாண்டாலும் வெற்றியை
வேண்டியவன் சென்றான் விரைந்து….(146)….23-10-2010

சிவத்தோடு சேர்ந்தங்கு சித்தம் ஒருமித்த
தவத்தோர் தரத்தை தகர்க்க -அவித்தைக்(கு)
இசைந்த களத்தை இயற்றுவோன் ஆனான்
வசந்த ருதுவாய் வனத்து….(147)….23-10-2010

மாற்றான் மனைவிரும்பும் மூடனால் பத்தினி
ஆற்றாமை கொள்ளும் அவலமாய் -மாற்றத்தால்
விண்முகம் பானு வடக்கேக தென்திசை
தன்முகம் கொண்டாள் துயர்வு….(148)….23-10-2010

தளிர்பெண் சிலம்புத் திருவடி பட்டு
துளிர்க்கும் அசோகமரம் திடுமென்(று) -அளித்த
வசந்தத்தால் தன்னியல்பை விட்டு மலர்ந்து
இசைந்ததாம் பூக்கள் இறைத்து….(149)….24-10-2010

கொய்தமாம் பூவால் கணைக்கு சிறகமைத்து
செய்திடச்சில் வண்டுகள் சென்றதை -மொய்த்ததைப்
பார்க்கையில் மன்மதன் பேரையப் பாணத்தில்
சேர்க்க அமர்ந்ததாய் சாக்கு….(150)….24-10-2010

கனகமாய்க் கொன்றை குவிந்தும் ரசிகர்
மணமற்ற தாலே மறுப்பர் -குணமுற்றும்
கொண்டவனை நான்முகன் கொள்வதில்லை தன்படைப்பில்
கண்டனம்போல் காளிதாசன் கூற்று….(151)….24-10-2010

வனமென்ற நங்கை வசந்தனுடன் சேர்ந்த
கணத்தில் பலாசக் கிளையில் -மினுமினுத்த
கூன்பிறை மொட்டுக்கள் கீறும் நகமாக
காண்பது காளிதாசன் கண்….(152)….24-10-2010

மஞ்சாடி பூக்களவள் செஞ்சாந்து, சுற்றிவரும்
அஞ்சாத வண்டுகள் ஆங்கேபொட்(டு) -அஞ்சனம்
மாந்தளிர் வாயதரம் மேவிய செந்நிறத்தால்
காய்ந்த மதுஸ்ரீ கதிர்….(153)….24-10-2010

பருவருது கண்டு முரளமர பூக்கள்
விரவுமது கண்ணிலே வீழ்ந்தும்-திரளும்
இலையுதிர் காற்றுக் கெதிராக ஓடும்
கலைமான்கள் கொள்ளும் களிப்பு….(154)….25-10-2010

தீந்தமிழ்க்(கு) ஈடாக ஆண்குயில் கூவுதல்
மாந்தளிர் உண்டதால் மட்டுமன்று -தான்திமிர்
பூரிப்பும் கர்வமும் பெற்றவளை மாற்றிட
கோரிக்கை காமன் குரல்….(155)….25-10-2010

குளிர்பனி சென்றதால் கிம்புருடப் பெண்கள்
தளிரிதழ் தூயவெண் தேகம் -ஒளிர
நுதற்பொட்டில் கன்னக் கதுப்பு வரியில்
வெதுவெதுப்பாய் வெய்யிலின் வேர்வு….(156)….26-10-2010

அகால வசந்தத்தால் அவ்வனம் உற்ற
தகாத வனப்பால் திகைத்து -எகாலமும்
உண்மையில் வாழ்வோர் உறுதி குலைந்திடும்
தன்மையை மாற்றத் தவிப்பு….(157)….26-10-2010

நாணேற் றியதனுசு நட்புரதி சேர்க்கையில்
தானேற்ற காரியத்தைத் தீர்த்திட -கானேகி
நாடிட மன்மதன் ஜோடிகள் காதலாய்க்
கூடினர் இன்பம் கொழித்து….(158)….26-10-2010

ஆண்வண்டு காதலியோ(டு) அண்டா மலரமர்ந்து
தேனுண்டு சொக்கிட தேடிவந்த -மானொன்று
தீண்டியதால் கண்மூடி தாமதிக்கும் பெண்மானை
சீண்டியதாம் கொம்பால் சொரிந்து….(159)….26-10-2010

துதிக்கையால் தாமரைத் தேன்கலந்த நீரை
மதக்களிறுக்(கு) ஈந்து மடப்பிடி -குதிக்குமாம்
சாதகமும் தானுண்ட செங்கமலப் பூங்குருத்தை
பாதியாக்கி பத்தினிக்கு பங்கு….(160)….26-10-2010

காட்டுமலர் கள்ளுண்டு கண்சுழல கிம்புருட
வீட்டுமனை பாடுகையில் வேர்த்ததனால் -தீட்டிய
பூச்சழிய கேள்வனவன் பாட்டுக்(கு) இடையிடையே
கூர்ச்செறிந்து முத்தமிட்டான் காத்து….(161)….26-10-2010

கொத்துமலர் கொங்கை, கொடியிடை, கொங்குதளிர்
முத்தமிடும் வாயிதழ் மங்கையவள் -சுத்தும்
கரமாம் கிளையால் மரக்கா தலர்க்கு
அறமாய் அணைப்பு அளிப்பு….(162)….26-10-2010

அங்குலவும் அப்சர சங்கீதம் கேட்டாலும்
சங்கரர் யோகத்தை சார்ந்திருந்தார் -தங்களது
தாவும் மனமதை தடுத்தாண்டு கொன்றவர்மேல்
ஏவும் கணைகள்தான் ஏது….(163)….26-10-2010

கொடிமனை வாசலில் கோலூன்றி நிற்கும்
விடையன் விரலைவாய் வைத்து -அடையாள
முத்திரை காட்டி முனிவோரை எச்சரித்தான்
நித்திரையை நீக்கும் நினைப்பு….(164)….26-10-2010

அசையா மரங்கள் அசலனமாய் வண்டு
பசையிட்ட வாயாய் பறவை -விசையுறா
ஊர்வனவாய், அவ்வனம் ஏறவனின் ஆணையால்
ஓர்வரைவாய் நின்றது ஓய்ந்து….(165)….26-10-2010

சுக்கிரன் வாழ்கின்ற திக்கினில் செல்வதால்
விக்கினம் என்று விலக்கலாய் -முக்கணன்
புன்னை வனத்துள் புகுந்தனன் நந்தியின்
கண்ணை அனங்கன் கடந்து….(OR)
கண்ணுக்(கு) அனங்கன் குனிந்து….(166)….26-10-2010

காலனைக் காணாது காமன் வரிப்புலித்
தோலனை தேவதாரு தண்டடியில் -கோலமாய்
வென்று புலனடக்கி வீற்றமுக் கண்ணனை
சென்று நெருங்கினன் சாவு….(167)….27-10-2010

வேராய் விறைத்து விருட்சமாய் நீண்டுயர்ந்து
நேராய் அமர்ந்தார் நமச்சிவாயம் -வீரா
சனத்தில், விழுதாய் சிவந்தயிரு கைகள்
பிணைக்கமடி அல்லிப் பிறப்பு….(168)….27-10-2010

நாகத்தால் கட்டிய நீள்முடியும், நஞ்சுண்ட
தாகத்தால் காரொத்த தொண்டையால் (OR)
தாகத்தால் கண்டத்து தேஜசது -தேகமான்
தோலைக் கருப்பாக்க தோன்றினன் ருத்திராக்ஷ
மாலையை காதில் முடிந்து….(169)….27-10-2010

நெறியா புருவம் நகரா இமைகள்
புரியாதோர் அஞ்சிடும் பார்வை -சரிவாக
தேசொளி மூவிழியால் நாசி நுனியினை
ஈசனார் நோக்கு இருப்பு….(170)….27-10-2010

மின்னலிடி இல்லாத மேகமாய், பொங்கலை
இன்னதென்(று) அறியாத தண்ணீராய் -விண்ணென
காற்றற்று நிற்கும் குத்து விளக்காயுள்
காற்றடக்கி காட்சி கொடுப்பு….(171)….27-10-2010

முண்டக நூலினை மிஞ்சிடும் மென்மையும்
கண்டுமதி மங்கும் கிளரொளியும் -மண்டையின்
உச்சிக்கண் தோன்றும் ஒளிக்குவமை தந்தமர்ந்தான்
சச்சிதா னந்த சிவன்….(172)….27-10-2010

ஒன்பது வாயிற்கண் ஓடாது யோகத்தால்
தன்பதுமை நெஞ்சை தன்னகத்துக் -கண்புதைத்து
ஆன்றோர் உணர்ந்த அழிவற்ற ஆன்மனில்
தாந்தோன்றி தன்னுள் திளைப்பு….(173)….27-10-2010

எண்ணத்தால் கூட எதிர்க்க இயலாமுக்
கண்ணத்தன் கோலத்தால் காமனஞ்சி -என்னத்தை
செய்வதென்று சோர்வுற, சொல்லாமல் வில்லம்பு
மெய்வசத்தை நீங்கி மணல்….(174)….27-10-2010

உற்சாகம் குன்றி உருக்குலைந்த காமனுக்கு
நற்சேதி கூறலாய் நேர்ந்தது -தற்செயலாய்
பொற்சிலை பார்வதி பாங்கியிரு பெண்தொடர
சிற்சபையில் வைத்தாள் சிலம்பு….(175)….28-10-2010

ரத்தினப் பூஅசோகம் முத்தாக சிந்துவாரம்
பத்தரை மாத்துப்பொன் கர்ணிகாரம் -அத்தனை
போதும் அணியிருந்த போதும் வசந்தத்தின்
போதணிந்தாள் பார்வதிஅப் போது….(OR)
போதணிதல் பார்வதியின் போது….(176)….28-10-2010

மலைப்பூங் கொத்தால் மளுக்கென்று சாயும்
தளிர்க்கொடி போலத் துவண்ட -மலைப்பெண்
செங்கதிர் வண்ணத்தில் சேலையில் போந்துகனக்
கொங்கையாள் ஆனாள் கொடி….(177)….28-10-2010

மோகமவன் நாணுக்கு மாற்றாய் மகிழம்பூ
நாகமென மாலையை நுண்ணிடையில் -மேகலையாய்
பத்திரமாய் வைத்தனன், பார்வதி சாயுமதை
தத்தளித்தால் தாங்கித் தடுத்து….(178)….28-10-2010

வாசிவாசி என்றென்றும் நாசி சுவாசிக்கும்
வாசம் முகர்ந்திட வண்டுவந்து -மூச
இதழ்கனியைச் சுற்றி, இளங்கமல மொட்டால்
அதைவிரட்டும் பார்வதி அங்கு….(179)….28-10-2010

மாசிலா அங்கங்கள் மன்மதன் பத்தினியே
கூசுவாள் வெட்கி குனிந்துதலை -ஈசன்
தவதனுசை வெல்ல இவள்மனசே வாளி
சவமணலில் காமன் செருப்பு….(180)….28-10-2010

பதியாகப் போகின்ற பாதியின் வாசல்
சதியாய்ப் பிரிந்தவள் சேர்ந்து -மிதித்தாள் (OR) விதியால்
உவப்புடன் தன்னுள் சிவபிரான் ஆன்ம
தவப்பலன் கண்ட தினம்….(182)….29-10-2010

வாசி அடக்கிய ஈசனார் பாரத்தால்
காசினியை ஆயிரம் கைத்தலையால் -தூசென
தாங்கிடும் சேடன் தவித்திட அன்புசிவம்
ஓங்கு தவம்கலைத்தார் ஓம்….(183)….29-10-2010

பணிவிடை செய்துவந்த பார்வதியைப் பற்றி
பனிவிடை ஈசரிடம் போற்ற -கனிவாய்
புருவத்தைத் தூக்க புரிந்துகொண்ட நந்தி
வரவேற்றான் கன்றாய் வளைந்து….(OR)
வரவேற்றான் வாசல் விரித்து….(184)….29-10-2010

ஆர்வமுடன் அங்குற்ற பார்வதியின் தோழிகள்
தேர்வுசெய்த பூக்கள் தொகுதியை -நீர்விளங்கும்
வார்சடையோன் பாதத்தில் வைத்து வணங்கியபின்
கார்சிதைவாய் தூவிக் களிப்பு….(185)….29-10-2010

கூந்தலில் சூடிய கோங்குமலர் காதணி
மாந்தளிர் மண்ணில் மயங்கிவிழ -பாந்தமாய்
உச்சந் தலைதரையில் உற்றிட பார்வதி
அச்சிவன் பாதம் அடைவு (OR) அணைப்பு….(186)….29-10-2010

உன்னையன்றி வேறோர் பெண்ணை மனைவியாய்
எண்ணாத கேள்வனை ஏற்றிடுவாய் -திண்ணமாய்
மெய்யதைச் சொன்னான் மகாதேவன், மூத்தோர்கள்
பொய்யுரைப் பாரோ புகல்….(187)….30-10-2010

மூளும்தீ வாயில் முழுகப்போம் விட்டிலாய்
வேளவன் பார்வதி வந்ததால் -தோளின்வில்
நாணை வருடி நமச்சிவாயர் நெஞ்சென்ற
தூணை இலக்காய்த் துணிபு….(188)….30-10-2010

ஆகாச கங்கையில் ஆதவன் கைகளால்
வேகா(து) உலர்த்திய வாரிசத்தின் -யோகீசர்
சூடும் மணிச்சரத்தை செய்யகை பார்வதிதென்
நாடுடையோன் முன்வைத்து நிற்பு….(189)….30-10-2010

நிச்சயமாய் அன்பர் நிவேதனம் ஏற்றிடும்
அச்சிவன் மாலையை ஆகம்கொள் -அச்சமயம்
சம்மோ ஹனஅம்பை தம்வா கனவில்லுக்(கு)
அம்மால் அனங்கன் அளிப்பு….(190)….30-10-2010

சந்திரன் தோன்றிட சற்றே கலக்கமுற்று
வெண்திரை கொந்தளிக்கும் வாரிதியாய் -தன்திரம்
கொஞ்சம் கலைய ,கனியிதழ் பார்வதியை
நஞ்சுண்டோன் மூவிழியால் நோக்கு….(191)….30-10-2010

கேசரங்கள் கொண்ட கதம்பமொத்த அங்கங்கள்
ஆசையுடன் கூர்ச்செரிந்து ஆர்ப்பரிக்க -நேசமுடன்
ஓர விழியால், ஒருபக்கம் சாய்ந்தவண்ணம்
பூரணனைப் பார்வதி பார்ப்பு….(192)….30-10-2010

புலனடக்கம் செய்வதில் பேர்போன ஈசன்
நிலநடுக்க மாய்தன் நிலைக்குள் -தலையெடுத்த
போக்கைத் தகர்த்தெறிந்து தாக்கம் தனையறிய
நோக்கினார் நாற்திசையும் நன்கு….(193)….31-10-2010

வாமக்கால் தோய்ந்திட வட்டத் திகிரியாய்
காமன் வளைத்துவில்லை கண்வரை -ஆமளவு
நான்றிட தோளிரண்டும் நாணிழுத்துக் கால்வலதை
ஊன்றிடப் பார்த்தனன் உற்று….(or)

வாமக்கால் தோய்ந்திட வட்டத் திகிரியாய்
காமன் வளைத்துவில்லை, கண்வரை -ஆமளவு
நாணிழுத்துக் கால்வலதை ஊனிட தாருக
கானழித்தோன் கண்ணில் கனல்….(194)….31-10-2010

அகத்துற்ற உக்கிரம் அச்சமுறும் வண்ணம்
முகத்தில் புருவ முறிப்பாய் -விதிர்த்திட
நெற்றி விழிதன்னில் நீண்ட ஒளிபிறப்(பு)
உற்று வளர்ந்ததாம் ஊழ் (OR) ஓம்….(195)….31-10-2010

அய்யனே கோபம் அடக்குங்கள் என்றமரர்
குய்யோ முறையோ குரலொலி -உய்யும்முன்
சீறும் சிவன்கண் சுடரொளி சூழ்ந்திட
மாறன் பிடிசாம்பல் மண்….(196)….31-10-2010

என்ன நடந்ததோ என்றறியா விட்டாலும்
இன்னலென்றே நெஞ்சு இறைந்திட -தன்னவன்
சாவை அறியா சதிரதி மூர்ச்சையால்
பூவெனச் சாய்ந்தாள் புறத்து (OR) புவி….(197)….31-10-2010

இடிவிழ இற்று ஒடியும் மரமாய்
இடபர் தவத்திற்க்(கு) இடராய் -விடிந்த
அனங்கனை சாய்த்து அணங்கினை நீங்கி
கணங்களுடன் சென்றார் கலைந்து….(198)….31-10-2010

தந்தை விருப்பமும் தான்சிவன் மேல்கொண்ட
விந்தையாம் காதலும் வீணாக -நொந்தவள்
துக்கிரித் தோழியர்முன் தோற்றதால் பார்வதி
வெக்கமுடன் ஏகினாள் வீடு….(199)….31-10-2010

 

சர்கம் நான்கு
——————–

ஆங்கு மயக்கத்தில் ஆழ்ந்த அமைதிக்குத்
தாங்கொணாத் துன்பம் தெளித்திட -தீங்காம்
விதியெழுப்பிப் ‘பெண்ணே விதவைநீ’ என்று
ரதியறியச் செய்வு ரசித்து….(200)….1-11-2010

மயக்கம் தெளிந்து மருண்ட விழியால்
தயக்கமாய்க் காமனைத் தேடி -இயற்கையை
எய்து வசந்தமாய் செய்தோன் இறந்தியற்கை
எய்தியது காணாள் எழுந்து….(201)….1-11-2010

சாதலால் போனாயா ? சாதா ரணமாயா ?
காதலா ஆனதேன் காணாமல் -நாதனைத்
தேம்பி அழுதபடித் தேடியவள் கண்டனள்
சாம்பலுரு விலோர் ஜடம்….(202)….2-11-2010

அழுது தரையில் விழுந்து புரண்டு
புழுதி உடலில் படிய -விழுதாய்
குவித்தயிருள் கூந்தல் கலைந்திடக் கானும்
தவித்ததாம் தானும் துணைக்கு….(203)….2-11-2010

அழகுக்(கு) உவமையாம் அன்பரும் மேனி
கழுகுக்கும் ஊணாகா கோலப் -புழுதியைக்
கண்டும்நான் துண்டாகா பிண்டமாய்ப் போனேனே
பெண்டிர்மனம் பாறை போல்….(204)….2-11-2010

அணையுற்ற வெள்ளம் அதுவுடைய தன்னில்
பிணையுற்ற பூவைப் பிரியும் -எனைவிட்டு
எங்குநீர் போனீர் எதனால் உடைந்தின்று
முங்கியது காதல் மதகு….(205)….2-11-2010

என்மனம் கோணா எதையும்நீ செய்ததில்லை
நின்மனப் போக்கில் நடந்தவள்நான் -மன்மதா
வ்யாஜ்ஜியம் அற்றுரதி வாடிப் புலம்பநீ
பூஜ்ஜியம் ஆனதெங்கு போய்….(206)….2-11-2010

முன்னை எனையழைக்க மாற்றுப் பெயர்கூற
கண்ணை மகரந்தம் கூசிட -உன்னை
மேகலையால் கட்டிமலர் முண்டகத்தால் மொத்தியது
ஆகலையால் அற்றதோ அன்பு….(207)….2-11-2010

ரதிநீ மனதில் ரமிக்கிறாய் என்று
பதிநீ புகன்றது பொய்யே -அதுவே
நிஜமானால் நிற்பேனா நெற்குதிராய் அந்தோ
எஜமான்தன் அஸ்திக்(கு) எதிர்….(208)….2-11-2010

மறுவுலகு ஏகிடும் மன்மதா உந்தன்
அருகிருக்க நானும் அடைவேன் -வெறுவுலகு
ஆதலால் பூதலம் ஆனதுன் சாதலால்
காதலுன் கைரேகைக் கோடு….(209)….2-11-2010

போதிரவு போர்த்திடும் போதிலே காதலியை
மோதிடும் மேக முழக்கத்தால் -காதலன்
காத்துக் கிடக்குமிடம் கூட்டிக் கலங்காது
சேர்த்துவிட யாரினி சொல்….(210)….2-11-2010

கெண்டை விழிசிவந்து வண்டாய் சுழன்றிட
விண்டுரைக்கும் பேச்சில் விரகமுற -பெண்டிர்க்கு
கள்ளால் வரும்மதம் காமன்நீ இன்றி
கொள்ளாது போகும் களிப்பு….(OR)
பொல்லா குடிகாரன் பேச்சு….(211)….2-11-2010

அங்கம் எரித்ததனால் ஆனாய் சரித்திரமாய்
தங்கும் மதிவிண் தரித்திரனாய்த் -தொங்குகிறான்
துக்கம் அனுஷ்டித்த தேய்பிறைதன் தன்மையை
தக்கவைத்துக் கொண்டான் தவித்து….(OR)
வெக்கமுடன் விட்டான் வளர்ந்து….(212)….2-11-2010

இச்சையுடன் உண்ண இனிதாக ஆண்குயிலை
உச்ச சுரத்தில் உருகவைக்கும் -பச்சை
சிவப்புநிற மாம்பூவை சாகஸ அம்பாய்
உவப்பரினி யாரிங்(கு) உரை….(213)….2-11-2010

அனங்கனுன்வில் நாணில் அமர்ந்திடும் வண்டு
இனங்களின் ரீங்காரம் இன்று -சிணுங்கலாய்
மாறித், துயரத்தில் ஊறிய என்னையும்
மீறிப் புலம்புதென் முன்….(214)….3-11-2010

பயிலா மலேயே ஒயிலாகக் கூவும்
குயிலாளைக் காதல் கலவி -செயலாளாய்
பட்டமளிப் பாய்நீ பழையசுகு மாறனாய்
தொட்டணைத்துத் தீர்ப்பாய் துயர்….(215)….3-11-2010

போலியாக வெகுண்டயென் காலைநீ கவ்வியது
ஆலிங்க னித்ததுபின் ஆவிநடுங்க -காளிங்க
நர்த்தனமாய் கண்ணாநீ நாகமென்மேல் ஆடியது
அர்த்தமற்று போச்சே அனைத்து….(216)….3-11-2010ம்

வசந்தருது தந்த உசந்தமலர் கொண்டு
அசந்திடச் செய்த அழகு -கசந்ததே
பெண்ணாளும் வித்தையில் பேராண்மை கொண்டவனே
கண்ணாளா நீயின்றி காண்….(217)….3-11-2010

பஞ்சான கைகளால் பாதத்தில் நீயெனக்கு
விண்சார்ந்த தேவர்க்காய் விட்டகன்று -செஞ்சாந்து
இட்டபோது சென்றாயே ஈவிரக்கம் அற்றோர்க்காய்
தொட்டகுறை தீரவந்து தீட்டு….(218)….6-11-2010

ஊர்வசிகள் உன்னழகால் உன்மத்தம் கொண்டுன்னை
பார்வசியம் செய்வர் பதுங்கியிரு -பார்மிசையில்
அக்கினிக்(கு) ஆட்பட்(டு) அனங்கனுன் தோள்சாய
புக்கிடுவேன் சொர்க புரிக்கு….(219)….6-11-2010

பாரிந்த பாவிரதி பஞ்சணையான் போனபின்பும்
பாரிருந்தாள் என்ற பரிகாசம் -வேரூன்ற
கூசுதே அங்கங்கள், கூடநான் வந்திடுவேன்
தீசிதை தானிதற்கு தீர்வு….(220)….9-11-2010

அங்கம் இருக்குமே ஆவி பிரிந்தாலும்
இங்கிரெண்டும் இல்லையே, இவ்வுலகில் -எங்கனம்
செய்வேன் இறுதியணி செத்த உடலுக்கு
உய்வேன் உடன்கட்டை உற்று….(221)….9-11-2010

நாணிழந்த வில்மடியில் நாணிக் கிடந்திருக்க
கூனடைந்த அம்பின் குறைநிமிர்த்தி -நீநினது
நண்பன் வசந்தனுடன் வம்படிக்கும் போதென்னை
என்புறுகப் பார்ப்பாய் எழு….(222)….9-11-2010

மனதுக்(கு) இனியோன், மலர்வில்லை செய்து
நினது கரமளிக்கும் நண்பன் -சினந்த
விழியால் எரிந்து, வசந்தனும் சாம்பல்
அழிவை அடைந்தானோ அன்று….(OR) ஆள்….(223)….9-11-2010

கொஞ்சு மொழிரதியாள் கேவல் புலம்பலது
நஞ்சு கணையை நிகர்த்தெழுந்து -நெஞ்சை
துளைக்க வசந்தன் துயருற்றோள் முன்னே
முளைத்தனன் ஆறுதல் மொண்டு….(224)….9-11-2010

மதகுடைந்த வெள்ளமாய் மங்கையவள் நெஞ்சக்
கதவுடைந்து கொட்டியது கண்ணீர் -இதுவசந்தன்
பக்கம் இருக்கையில் உக்கிரம் ஆனது
துக்கதிற்(கு) ஏதடைக்கும் தாழ்….(225)….10-11-2010

சுராரிழுத்துச் சென்ற சகாபார் வசந்தா
புறாகழுத்துச் சாம்பல் பொடியாய் -தராதலத்தில்
சிந்திக் கிடப்பதை சீறும் வளியெடுத்து
எண்திசையில் அஸ்தி இறைப்பு….(226)….10-11-2010

ஆவலுடன் உன்னருமை சேவகன் காத்துள்ளான்
தாவசந்தன் காண தரிசனம் -பூவுலகில்
அன்புக்(கு) அணங்கினும் ஆதரவு ஆருயிர்
நண்பன்தான் நன்கறிவாய் நீ….(227)….10-11-2010

தாமரைநூல் நாணிழுத்து பூமருவும் அம்பேற்றி
நீமரமாய் வில்லேந்தி நிற்கையில் -சாமரமாய்
வீசும் வசந்தனன்றோ வெற்றிக்(கு) உறுதுணை
நேசன் அவன்பொருட்டு நில்….(OR)
நீசாம்பல் விட்டு நிமிர்….(228)….10-11-2010

வாயு அணைத்த விளக்கிருந்த தீபத்தின்
தேயுவாய் தோழன் தொலைந்தனனே -காயும்
திரியாய்த் திகழ்ந்து தகிக்கின்ற என்னை
பரிவாய் வசந்தனே பார்….(229)….10-11-2010

ஆதிவிதி அன்று அனங்கனைக் கொன்றது
பாதிதான் சோதரா மீதிநான் -மோதிடும்
ஆனை முறித்து அடிமரமே சாயஅது
பூணும் கொடிபடரும் புல்….(OR)
பூணும் கொடிக்கேது போக்கு….(230)….10-11-2010

உடனே எனக்கு உறவினர்கள் செய்யும்
கடனாமிக் காரியம்கை கூட -சுடலை
நெருப்பை அளித்து பொறுப்பாய் கணவன்
இருப்பில் இவளை இடு….(231)….10-11-2010

விண்ணில் நிலவு விரையுமே சந்திரன்பின்
மின்னல் மறையுமே மேகத்துடன் -எண்ணும்
அறிவற்ற பெண்பால்தன் ஆண்பாலை நாட
நெறியற்று நின்றேனே நான்….(232)….11-11-2010

சதாசிவன் கண்ணால் உதாசீனம் ஆன
கதாபுருஷன் சாம்பல் குளித்து -இதோநான்
உதாரமாய்த் தீயில் நிதானமாய் சாய்வேன்
அதானென் தளிர்பாய் அணைப்பு….(233)….11-11-2010

நெஞ்சனும் நானும் நோகா(து) உறங்கிட
பஞ்செனப் பூக்களால் பாய்விரித்து -மஞ்சத்தை
வண்ணமாய் செய்த வசந்தனே இன்றெனக்கு
திண்ணமாய்த் தீப்படுக்கை தா….(234)….11-11-2010

நானின்றி ஓர்கணமும் வீணென்பார் வில்லாளி
நீநன்(கு) அறிந்ததே நாணமேன்(நல்லதுகேள்)-நானின்று
தீநின்ற போதுடனே தென்றலால் தூர்த்ததனை
வான்நின்ற வாறு வளர்….(235)….11-11-2010

வெற்பனைய நட்பே வசந்தா இருவர்க்கும்
தர்பணமாய் தண்ணீர் தருவதற்கு -முற்படுவாய்
மாறனதை ஏந்தி மறுவுலகில் நான்வந்து
சேரவுண்பான் பங்கிடாது சேர்ந்து….(236)….11-11-2010

காமரு மாம்பூவின் கொத்தினைக் கட்டாயம்
காமனின் ஆன்மா களிப்புற -ஈமச்
சடங்கில் மறவாது சேர்ப்பாய் வசந்தா
மடந்தை ரதியாள் மனு….(237)….11-11-2010

காய்ந்த குளத்துமீன் கண்ணீர் துடைத்தது
மாய்ந்திடாது காக்கும் முதல்மழையாய் -ஓய்ந்துரதி
காயம் உகுத்திடக் காத்திருந்த போதுஆ
காயம் பொழிந்ததோர் கூற்று….(238)….11-11-2010

விதவையென்(று) எண்ணி சிதையில் புகாதே
மதனன் மலர்ந்தெழுவான் மீண்டும் -இதுவுறுதி
அன்பே சிவத்தால் அவனழிந்த காரணத்தை
உன்பால் உரைப்பேன்கேள் உற்று….(OR)
நின்பால் உரைத்திடுவேன் நான்….(239)….12-10-2010

நின்படுக்கை நாயகன் தன்துடுக்கால் நான்முகன்
கண்துடைப்பாய் அம்பெய்து கோதிழைக்க -தன்படைப்பில்
தாபமுற்ற கோபத்தால், தீக்கண்ணால் சாம்பலாக
சாபமுற்று ஆனான் சகி (0R) சவம்….(240)….12-10-2010

தருமவேள் வேண்ட திசைமுகன் பெய்தான்
வரமழையாய் சாப விமோசனம் (OR) மாற்று வழியை-பருவத
புத்திரி ஈசனுக்கு பத்தினியாய் ஆகையில்
புத்துயிராய் காமன் பிறப்பு….(241)….12-10-2010

கோடையில் அம்மணத்தை கொண்டநதி மாரிவர
ஜாடையில் மாறும் சமுத்திரமாய் -பாடொழிந்து
மாறனுடல் கொண்டுன்னை சேரும் வரைசாம்பல்
நீறிதனைக் காப்பாய் நிதம்….(or)
நீறுன் மசக்கை நினைப்பு….(242)….13-10-2010

தேவதையின் வாக்கால் தணிந்து அனுமரண
தேவைதனை கைவிட்டாள் தேவிரதி -பூவதையோன்
நண்பன் வசந்தனும் நம்பிஅச ரீரியை
தென்பளித்தான் தேறுதல் தந்து….(243)….12-10-2010

சாபம் முடிக்கும் சிவபார் வதிமணமாம்
தீபவொளிக்(கு) ஏங்கினாள் தேவிரதி -சோபை
அறவே இழந்து வரவாம் பகலில்
இரவெதிர் பார்க்குமாம் இந்து….(OR)
இரவை எதிர்பார்க்கும் இந்து….(244)….12-10-2010

சர்கம் நான்கு சுபம்….!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *