படக்கவிதைப் போட்டி 174-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
முகம் முழுவதையும் முக்காடிட்டு மறைத்து விழிவழியே கவிபாடும் காரிகையின் நிழற்படத்தை எடுத்து வந்திருப்பவர் PicturesQueLFS. இதனை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு வழங்கியிருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
துணியிட்டு முகத்தை மறைத்தாலும் கள்ளமற்ற மணிவிழிகள் அகத்தின் அழகைத் தெற்றெனக் காட்டுகின்றனவே!
இப்படத்திற்குப் பொருத்தமாய்க் கவியெழுத கவிஞர்களை அழைக்கின்றேன்!
*****
”ஆயிழையே! வாய்வழியே சொல்லவேண்டிய மொழிகளையெல்லாம் உன் எழில் விழிகளே அழகாய்ச் சொல்லிவிடுவதால் அதற்குப் போடவேண்டாம் திரை” என்று நிழற்படப் பெண்ணிடம் நளினமாய் உரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
விழியே…
முகத்தை மூடிக் கொண்டாலும்
மொழிகள் பலவும் பேசுகின்ற
வகையில் உள்ளன உன்கண்கள்
வாயின் வேலையைத் தான்செய்தே,
நகையில் உடையில் வந்திடாத
நல்ல வுந்தன் அழகினையே
மிகையாய்ப் பார்வை தருவதாலே
மூட வேண்டாம் கண்களையே…!
இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு இக்கவிதை மட்டுமே வந்திருப்பதால் போட்டி ஏதுமின்றி இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வாகின்றார் திரு. செண்பக ஜெகதீசன். விடாமுயற்சியோடு ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து படக்கவிதைப் போட்டியில் பங்கேற்றுவரும் அவரின் ஆர்வத்தையும் அயரா உழைப்பையும் பெரிதும் பாராட்டுகின்றேன்.