ஏன் இயற்கை அழிக்கின்றீர் !

0
 

              எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

 

 

மரம் அழிக்கும் மானிடரே

மரம்  வளர்க்க  வாருங்கள்

மரம் அழித்து  நிற்பதனால்

மரத்ததுவா உங்கள்  மனம்

நிலம்  காக்கும்  மரத்தையெலாம்

நிர்மூலம் ஆக்கி  நின்றால்

நிச்சயமாய் இயற்கை அன்னை

நிம்மதியை இழந்து  நிற்பாள்  !

 

 

வயல்  நிலங்கள் எல்லாமே

மாடி  மனை  ஆகிறது

வளம் விழுங்கும் அரக்கர்களாய்

மனிதர் பலர் மாறுகிறார்

தொழிற்சாலை எனும் உருவில்

தூசு மழை  குவிகிறது

தூய  நீரை தேடிநின்று

துவழ்கின்றார் மக்கள் எலாம் !

 

எடுத்து  நிற்கும்  செயலாலே

இயற்கை வளம் குலைகிறது

இயற்கை எனும்  அமைப்புதான்

இவ்  உலகின் அரணாகும்

இயற்கை எனும் கவசத்தை

எடுத்துப்  பிய்த்து எறிவதனால்

இயற்கை அன்னை கோபமது

எமைத்  தாக்கி   நிற்கிறதே  !

 

ஓயாமல்  மழை  பெய்து

ஒரு பக்கம் அழிகிறது

பேயாகக் காற்று  வந்து

பேர் அழிவைச்  செய்கிறது

எதிர்பாரா தீ  வந்து

இடர் கொடுத்து நிற்கிறது

இவை பார்த்தும் மானிடரே

ஏன் இயற்கை அழிக்கின்றீர் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *