தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

0

                                                 தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்

முனைவர் இரா. மதன் குமார்., இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை,

                                          கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

 

முன்னுரை              

             ‘பெருமானைப் பேசாத நாளெல்லாம், பிறவாத நாளே’ என்பது, அறுபத்துமூவர் கொண்ட வாழ்வியல்நெறியாகும். ஆனால், ‘முற்பிறப்பில் செய்த அவ்வினையால், இப்பிறப்பில் இவ்வினையைச் செய்து இளைக்கின்றோம்’ என்பதே நமது அன்றாட வாழ்வியல் அவலமாக விளங்குகிறது. இவ்வவலத்தை மாற்ற, திருநீலகண்டத்தின் மீது மாறத பற்றுடன், கைவினையாகிய தொண்டுநெறியால், இறைவனைப் பணிந்துய்வதற்கு, திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டத் திருப்பதிகம் திருநெறி காட்டுகிறது. அத்திருநெறியில் நின்று, திருநீலகண்டம் என்பதனைத் தமக்குத் திருப்பெயராகப் பெற்றும், அதனைத் தம் வாழ்வின் திருமந்திர ஆணையாக ஏற்றும்,  சோதனையிலும் வாய்மை தவறாத வன்மையாளர் எனச் சிறந்தவர், ‘திருநீலகண்ட நாயனார்’. அவர்தம் வாழ்வு, ‘உலகோரின் நெஞ்சுக்கு நீதியென’ நன்னெறி காட்டவல்ல பாங்கினை இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

நம்மைத் தீவினை தீண்டா

ஆளுடையபிள்ளையாரின் திருநீலகண்டத் திருப்பதிகமானது திருப்பாடல்தொறும், ‘திருநீலகண்டம்’ என்னும் திருப்பெயருடன் திருவருள்ஆணையாகத் திகழ்கிறது.            உலகமயக்காகிய கீழ்மைநிலைகளை நீக்கி, பிறந்த பிறப்பின் பெரும்பயனாகிய பெருமானின் திருவடியை அடைதற்குரிய உறுதியை ஊட்டுகிறது.

‘பிறந்த பிறவியிற்பேணி எஞ்செல்வன் கழலடைவான்’                         (முதல் திருமுறை: 116:11)

 பெறுதற்கு அரிய பேறாகிய திருவடிப்பேற்றுக்குத் தடையாகிய, ‘கீழான தீவினைகள், அடியாரின் சிந்தையை ஒருபோதும் தீண்டா’ என்பதும், நிகழ்செயலின் வருவினையும், திருநீலகண்டத்தின் திருவருளால், ‘தொடராது’ என்பதும் உறுதி.

 ‘சொற்றுணை வாழ்க்கை துறந்துத் திருவடி அடைந்தோம்

  செற்றெமைத் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்’                      (மேலது பதிகம்: 5)

 பெருமானை மறக்கின்ற மனத்தினையும், திருவடியில் நிலைநிறுத்தி,  பெருமானைப் பற்றி உய்யச் செய்வதாகிய அருட்சிறப்புடன் இலங்குவது, ‘திருநீலகண்டமாகிய’ பெரும்பெயராகும்.

 ‘மறக்கு மனத்தினை மாற்றியெம் ஆவியை வற்புறுத்திப்

  பிறப்பில் பெருமான் திருந்தடிக் கீழ்ப்பிழை யாதவண்ணம்

  பறித்த மலர்கொடு வந்துமை யேத்தும் பணியடியோம்

  சிறப்பிலித் தீவினை தீண்டப்பெ றாதிரு நீலகண்டம்’                          (மேலது பதிகம்: 6,7)

 உலகமயக்கில், எண்ணத்தால் எள்ளளவு நினைப்பினும், கீழ்நிலைக்குத்தள்ள வல்லதாகிய பெருமயக்காய் விளங்குவது, முறையற்ற பெண்ணின்பமாம். அதனாலேயே அருணகிரிநாதப் பெருமான்,  ‘மங்கையர் சுகத்தை வெகு இங்கிதம் எனுற்ற மனம், உன்தனை நினைத்தமைய அருள்வாயே’ என்று கொங்கணகிரிப் பெருமானிடத்தில் விண்ணப்பித்தார். அத்தகைய உயர்விண்ணப்பத்துக்கு வழிகாட்டுபவராக, திருஞானசம்பந்தப்பெருமான், திருநீலகண்டத் திருப்பதிகத்தில், அளவுகடந்த பெண்ணின்பம் முதலாகிய உலக மயக்குகள், அடியவரை நலியாதவண்ணம், திருநீலகண்டமாகிய திருமந்திரம் முன்னின்று காத்தருளும்’ என்று உறுதிபட வலியுறுத்தியுள்ளார்.

 ‘முலைத்தட மூழ்கிய போகங்களும ற்றெவையு மெல்லாம்

  விலைத்தலை யாவணங் கொண்டெமை யாண்ட விரிசடையீர்

  இலைத்தலைச் சூலமுந் தண்டு மழுவு மிவையுடையீர்

  சிலைத்தெமைத் தீவினை தீண்டப்பெ  றாதிரு நீலகண்டம்’    (மேலது பதிகம்: 3)

 மேற்கண்ட, திருப்பதிகத் திருநெறியில் அயனும் மாலும் உணர்ந்து பற்றுதற்கு அரிய பெருமான்,  ‘உண்மைஅடியார் அழைத்தால் அவர்க்குத் தவறாது காட்சியளித்து அருள்வான்!; அது திருநீலகண்டத்தின் மீது ஆணை!’ எனத் திருஞானசம்பந்தர் குறித்தருளியுள்ளார். அவர்தம் திருவாக்கு, திருநீலகண்டத்துக் குயவனாரின் திருவாழ்க்கையாக மலர்ந்து விளங்கியதைப் பெரியபுராணம் விளக்கியுரைக்கிறது.

திருநீலகண்டமும் திருநீலகண்டரும்

பெருமான், பேராயிரம் உடைய பெரியோன். ‘ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லாத அவனை, ஏதேனும் ஓர் உருவத்தால் பற்றுவதே சிற்றுயிர்க்கு இயல்பாகும். காணுகின்ற அருளுருவையும் சுருங்கச் சொல்லிச் சிற்றறிவுக்கு விளக்குவனவாக, அவனது திருப்பெயர்கள் விளங்குகின்றன. அவ்வவ்வுயிரும், தத்தமது அறிவுக்கும், வினைத்தகுதிக்கும் ஏற்ப, பெருமானின் திருப்பெயர்களுள்,  ஏதேனும் ஒன்றால் உய்வதே, திருவருளின் சித்தமாகிறது. வேதம் நான்கினும் மெய்ப்பொருளாகிய, ‘நமசிவாய’ திருமந்திரம், பாண்டி நன்நாட்டில் சைவம் தழைத்தோங்கக் கருவியானது.

கல்லில் பூட்டிக் கடலில் பாய்ச்சியபோதிலும், நமசிவாய திருமந்திரம், அப்பர்பெருமானுக்குத் திருவருள் தெப்பமாகியது. அவர், ‘சிவாயநம’ எனத் திருவாய் பொலியக் கூறி உய்ந்ததும் திருவரலாறு. ‘நற்றவா உனைநான் மறக்கினும் சொல்லும் நா நமசிவாயவே’ என்பது, சுந்தரர்பெருமானின் அருளனுபவத் திருவாக்கு. இவ்வாறு, பெருமானின் திருப்பெயருள் ஏதேனும் ஒன்றையேனும் பலகாலம் பயின்று, உள்ளத்தில் உருவேற்றி வாழ்வோருக்கு, அத்திருப்பெயரே, தீவினை தீண்டாது காக்கின்ற பெருமந்திரமாகின்றது.

அவ்வகையில், திருக்கொடிமாடச் செங்குன்றூரில், அடியாரைத் தாக்கிய குளிர்ச்சுரத்தை அகற்றியருளத் திருஞானசம்பந்தப்பெருமானுக்கு, ‘திருநீலகண்டமே’ திருமந்திரமாகியது. அதுவே, ‘அடியாரின் உடலைச் சுடுகின்ற சுரத்தை மட்டுமல்லாது, உள்ளத்தைச் சுட்டு, உயிரைக் கீழ்நிலைக்குத் தள்ளுகின்ற உலகமயக்காகிய பல்வகைச் சுரங்களையும் வேரோடு களைந்தெறிய வல்லது’ என்பதைப் பெருமானார், ‘திருநீலகண்டத் திருப்பதிகமாகவே’ அருளிச்செய்துள்ளார்.  அத்திருப்பதிக நன்நெறியினைத் தமது வாழ்வியலாகக் கொண்டவர், நாயனார்.

வழிபடு நலத்தின் மிக்கார்

                    ‘வான்புலன்கள் அகத்தடக்கி மடவாரோடும்

            பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றிப்

                        பொதுநீக்கித் தனைநினைய வல்லோர்க் கென்றும்

            பெருந்துணையைப் பெரும்பற்றப் புலியூரானைப்

            பேசாத நாளெல்லாம் பிறவா நாளே’                                 (ஆறாம் திருமுறை: 1: 5)

என்னும் திருத்தாண்டகத் தொடர்கள், அளவுகடந்த பெண்ணின்பத்தைத் துறந்தார்க்குப் பெரும்பற்றப்புலியூரன் பெருந்துணையாகவல்ல திறத்தை உணர்த்துகின்றன. இத்திருவாக்கின் பிழிவாக இல்லறத்தை நடத்தியவர்,  திருநீலகண்டத்துக் குயவனார். அவரின் பெருங்குணத்தை உலகுக்குக் காட்டியருள அம்பலக்கூத்தனார் புரிந்த அருள்விளையாடலின் மையமாக விளங்குவது, ‘திருநீலகண்டம்’ என்னும் திருமந்திரமாகும்.  இல்வாழ்க்கையும் விளங்கியது.

வழிபடு நலத்தின் மிக்கார்

          அம்பலக்கூத்தனாகிய பெருமானின் திருநடனம், ஆனந்தக்கூத்தாக விளங்குவது. அதன் அருள்வீச்சினை உயிர்கள் தாங்க வொண்ணாது என்பது அவன் திருவுள்ளம். அதனாலேயே, தனது அருள்திருநோக்கத்தைத் தனது இடப்பாகத்தில் வீற்றிருக்கின்ற அம்மையிடம் செலுத்தி, மன்னுயிர்கள் பயனுறச்செய்கின்றான். ஆனந்தக்கூத்தின் அருள்விளைவுக்கு, அம்மையாகிய சக்திபாகம் கருவியாதல்போல, நாயனாரின் சிவப்பெருவாழ்வினை நாம் உணர்வதற்கு, அவர்தம் மனைவியார் கருவியாய் அமைந்த அருள்சிறப்பு போற்றத்தக்கதாகும். மனைவியாரது  திருவாயிலிருந்து வெளிப்பட்டது, ‘எம்மை தீண்டுவீராயின் திருநீலகண்டம்’ என்னும் திருவருளாணையாகும். அதுவே,  மாந்தர்தம் இல்லறம், சிவப்பெருவாழ்வாகப் பொலிவுற என்றென்றும் நின்று நெறிகாட்டுகிறது.

            நாயனார், ‘மாது சொன்ன சூளால் இளமை துறந்து, வாய்மையில் நிலைநின்று, நன்னிலைபெற்றார். அவர்தம் புறத்தொழுக்கமே மனைவியார், திருநீலகண்டத்தின் மீது சூளுரைக்கவும் காரணமானது. நாயனாரது புராணத்தின் முதல்பாடலின் ஈற்றடியானது, ‘வாழ்த்தி வழிபடு நலத்தின் மிக்கார்’ என நிறைவுறுகிறது. பொதுநிலையில் இத்தொடரானது, ‘நாயனார் புரிகின்ற வழிபாடு சிறப்புடையது’ என்னும் பொருளையும், ‘வாழ்த்தி வழிபடத்தக்க வகையில் நாயனார் சிறப்புடையவர்’ என்பதையும் ஒருசேரக் குறிக்கிறது எனலாம்.

             ‘வேதியர் தில்லை மூதூர் வேட்கோவர் குலத்து வந்தார்

              மாதொரு பாக நோக்கி மல்குசிற் றம்ப லத்தே

              ஆதியு முடிவு மில்லா வற்புதத் தனிக்கூத் தாடு

               நாதனார் கழல்கள் வாழ்த்தி வழிபடு நலத்தின் மிக்கார்’                      (திரு.நீல.புராணம்: 1)

 

 

சைவ மெய்த் திருவானார்

          நாயனாரது மனைவாழ்க்கை, வையகம் போற்றுகின்ற நல்லறமாக, அடியார்க்குத் தொண்டு செய்கின்ற அறப்பணியாகத் திகழ்ந்தது. உடலாலும், உள்ளத்தாலும் பொய்ம்மை கடிந்து, மெய்ம்மையைப் போற்றுகின்ற சைவ மெய்த் திருவாக வாழ்ந்துவந்தார். ‘இறைவனைப் பற்றுவதற்குத் துறக்கவேண்டியவற்றைத் துறப்பதற்குக் காலம் வாய்க்கட்டும் என்றில்லாமல், இளமையும் செல்வமும் உள்ளபோதே துறப்பதால், எல்லை இல்லா பெரும்பயன் விளையும்’ என்பது வள்ளுவம். அந்நெறியினை உலகுக்கு உணர்த்த உண்ணிய திருவருள், நாயனாரைக் கருவியாகக் கொண்டது. அவர், புறத்தொழுக்கம் பூண்பவராய் அறிவு மயங்கினார். அதை அறிந்த மனைவியார், அவர்பால் புலந்தார். நாயனாரும் அவர்தம் ஊடல் தீர்க்க, நயந்து அவரை நெருங்கினார். ‘ஆயும் அறிவினர்’ என்னும் மெய்யுணர்வு கொண்டிருந்த அம்மையார், காமத்தீ தன்னையும் உய்வுபெற இயலாத கீழ்நிலைக்குத் தள்ளும்’ எனக் கருதித் தம்மை அதிலிருந்து காத்துக்கொள்ளச்  சித்தம்கொண்டார். ஆயினும், கணவனாரையும் நன்னிலையில் காத்தருளவேண்டிய கடப்பாடும், தமக்கே உண்டு என்பதனை உணர்ந்தவராக, இருவரும் ஒருசேர நன்னிலைபெறக் கருதினார். பெருமானின், நிலைபெற்ற திருப்பெயராம், ‘திருநீலகண்டத்தை’ முன்னிருத்தி, நாயனார்பால் ஆணை மொழிந்தார்.

              “தீண்டுவீ ராயி னெம்மைத் திருநீல கண்ட” மென்றார்                                     (திரு.நீல.புராணம்: 6)

சிந்தை திறம்பாத சீர்மையாளர்

            இல்லறநெறியிலும் இளமை துறந்து, சிவனடிக்கே சிந்தை பதித்த செழுமனச் செல்வியாக விளங்கியவர், ‘காரைக்காலம்மையார்’. அவர், பரமதத்தனுக்காக, பெருமானிடத்தில் மாங்கனி பெற்றளித்தார். அவ்வேளையில், ‘சிவனது திருவிளையாடலைப் பிறரிடத்தில் கூறுதற்கு வாய்ப்பில்லை’ என்ற நிலையிலும், அதனைத் தமது கணவனாரிடத்தில் மறைத்தல், ‘ இல்லற மாண்புக்கு இழுக்காகும்’ என்று வாய்மை திறம்பாதவராக, ‘சிவனருளால் பெற்ற மாங்கனி இது’ என்றே கூறி, அவர் கையில் ஒப்படைத்தார். அம்மாங்கனியும் பரமதத்தனின் கைகளிலிருந்து மறைந்து, அம்மையார் மொழிந்த வாய்மைப் பெருமொழிக்குச் சான்றாக அமைந்தது. அதன் பின்னரும்,  சிவனடியாரின் பசிப்பிணி போக்குதல் முதலான சிவத்தொண்டுக்குக் கருவியாகவே அம்மையார் தமது இல்லறத்தை நடத்திவந்தார். அதனாலேயே, கணவனாருக்குப் பயன்படாத  தசை உடம்பினைத் துறந்து, பேயுருக் கொண்டார். எந்நிலை வந்துற்றாலும், பெருமானை மறவாத அம்மையாரது பேரன்பின் திறமே,

              ‘நின் தாள்கள் போற்றும் பேய்வடிவு அடியேனுக்குப் பாங்குறவேண்டும்’     (காரை.அம்.புரா.: 49)

என்னும் விண்ணப்பமாக விளங்குகிறது. இத் திருவிண்ணப்பத்தைச் சேக்கிழார்பெருமான்,

  ‘சிந்தை ஒன்றிய நோக்கின் மிக்க உணர்வு கொண்டு உரைசெய்கின்றார்’    (காரை.அம்.புரா.: 48)

எனக் குறித்தருளியுள்ளார். இத்தகைய சிந்தை மாறாத சிவப்பற்று நாயனாரிடத்திலும், அவர்தம் மனைவியாரிடத்திலும் ஒருசேர அமைந்திருந்தது.

மனத்தினாலும் தீண்டாத திருவாளர்

          காமவயப்பட்ட நிலையிலும், அறிவழியாத உறுதித்திறமுடையவரை திருவள்ளுவர், ‘ஆயும் அறிவுடையார்’ (திருக்குறள்: வரைவின் மகளிர்: 4,8)  என்று குறிக்கின்றார்.

          அம்மையார் மொழிந்ததாகிய, திருநீலகண்டத்து ஆணையைக் கேட்ட அளவில், நாயனாரும், ‘ஆயும் அறிவுடையவர்’ ஆனார். “மெய்யன்பின் முதிர்ந்த மேன்மைகளைத் துய்த்தறிந்த மேலோர், பொருளையே போற்றி மதிக்கும், பரத்தையரின் பொய்யின்பத்தை நாடார்” (திருக்குறள்: வரைவின் மகளிர்: 3- சிற்பி பாலசுப்பிரமணியனார் உரை) என்ற மெய்யுணர்வு வாய்க்கப்பெற்றார். அம்மையாரின் அருகிலிருந்த நாயனார்,  உடனே விலகினார். அம்மையாரின் ஆணையில்,  ‘எம்மை’ என்றமைந்த சொல்லமைதியில் சிந்தை செலுத்தினார். அச்சொல், மனைவியாரை மட்டுமன்றி பெண்கள் அனைவரையும் ஒருங்கே குறிப்பதாக உணர்ந்தார். அவ்வண்ணமே, திருநீலகண்டத்து ஆணைக்கு உறுதிசேர்க்க எண்ணினார். உடனே, ‘சிந்தையாலும் மாதர் எவரையும் இனித் தீண்டேன்’ என்று உறுதிபூண்டார். அத்தகைய மனவுறுதிக்கு, அந்நாள் வரையில் அவர், ‘திருநீலகண்டம்’ என்னும் திருப்பெயரின்பால் கொண்டிருந்த பற்றுறுதியே காரணமானது.

             ‘ஆதியார் நீல கண்டத் தளவுதாங் கொண்ட வார்வம்

              பேதியா வாணை கேட்ட பெரியவர் பெயர்ந்து நீங்கி

              ஏதிலார் போல நோக்கி, “எம்மைஎன் றதனான் மற்றை

              மாதரார் தமையு மென்றன் மனத்தினும் தீண்டேன்” என்றார்’.           (திரு.நீல.புராணம்: 7)

                        நாயனாரது புறத்தொழுக்கத்தை அறிந்தவுடனேயே, மனைவியார் அதுகுறித்து அயலவர் அறியக்கூறி முறையிட்டிருக்க வாய்ப்புண்டு. அதுபோன்றே, நாயனாரும் அயலவரிடத்தில் கூறியிருப்பின், அவர்களும் அவர்தம் செய்கைக்கு நியாயம் கற்பித்து, மனைவியாரது செய்கை உலகவழக்குக்குப் பொருந்தாது எனக்கூறி, ‘இனியும் அன்புறு புணர்ச்சியால் இல்லறத்தை இனிது கழித்திருங்கள்’ என்றே உலகியலை ஒட்டி ஆற்றுப்படுத்தியிருப்பர்.

காரைக்காலம்மையார், பரமதத்தனைப் பிரிந்திருந்த வேளையிலும், கழிகின்ற இளமைக்கும், காணாத போகங்களுக்கும் ஏங்கி இளைக்கவில்லை. மாறாக, அந்நாட்களிலும், அடியவர்க்குத் தொண்டுசெய்துவந்தார். அதுவே, ‘மறை பிறர் அறியாமை’ என்னும் மனையறமாகக் கடைப்பிடிக்கப்பட்டதனைப் பெரியபுராணம் உணர்த்துகிறது.

 அதைப்போன்றே, நாயனாரும், மனைவியாரும், இல்லறத்தைப் தொண்டர் பணிக்கான களமாகவே கொண்டிருந்தனர். தம்மிடையே அன்புறு புணர்ச்சி அகன்றநிலையிலும், அன்றாடம் அடியவர்க்குத் திருவோடு வழங்குகின்ற மேன்மைப்பணியில் பழுதேதும் ஏற்படாதவாறு அன்பின்திறத்தில் சாயாதிருந்தனர்.  ‘தாங்குதற்கு, இனிக் கோலே துணையாகும்’ என்று மூத்தநிலையிலும், பெருமானின் மீதுகொண்ட உண்மையன்பில் சிறிதும் பிறழாது உயர்ந்தனர்.

 ‘இளமையின் மிக்கு ளார்க ளிருவரு மறிய நின்ற

  அளவில்சீ ராணை போற்றி யாண்டுகள் பலவுஞ் செல்ல

  வளமலி யிளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து

  தளர்வொடு சாய்ந்து மன்பு தம்பிரான் றிறத்துச் சாயார்’                       (திரு.நீல.புராணம்: 9)

 

 நடந்து வந்தார்; நயந்து தந்தார்

          பொருள் கொண்டோர், இல்லாதவர்க்கு வழங்கி உதவுதலே, உலகியல் அறமாகும். அதனை உணர்த்தவேண்டியே பெருமான் பிரமகபாலத்தைக் கையில்கொண்டு பிச்சையேற்றருள்கின்றான்.

             ‘பிச்சைய தேற்றான் பிரியா வறஞ் செய்ய’ (திருமந்திரம்: ஏழாம் தந்திரம்: 184) எனத் திருமந்திரம் குறிக்கின்றவாறு, அறங்காட்டியும், அவ்வறத்தைக் கடைப்பிடித்தொழுகி, நன்னிலை பெறவும், பக்குவம் கொண்டோரின் குற்றத்தையும் பெருமான் குணமாகக் கொள்வான்.  அப்பெருங்குணத்துக் காதலுடன்,  பக்திநெறிக்குத் தலைப்படுவாரை உயர்த்தியருளவேண்டி இறைவன், தன் திருக்கரத்தைத் தந்துதவுகின்றான். ஆயினும், வினைவயத்தால் உலகியல் மயக்குகள், ஆயிரம் அசுரக்கரம் கொண்டு,  அவ்வுயிர்களை வலிந்து இழுத்து, வினைச்சேறு மிக்க ஆழ்குழியில் வீழ்த்துகின்றன. இதுவே, பக்திநெறி நின்றாரின் அயராத மனக்கலக்கத்துக்கான சூழலாகிறது. அத்தகைய மனக்கலக்கமுற்ற நாயனாரின் வாட்டத்தை நீக்கி அருளவேண்டியே பெருமான், ஓடேந்திய கையராகிய கோலத்தை நயந்து ஏற்று,  நாயனாரின் மனையை நாடி நடந்தே வந்ததாகச் சேக்கிழார் பெருமான் குறித்துள்ளார்.

             ‘நன்னெறி யிதுவா மென்று ஞாலத்தார் விரும்பி யுய்யும்

              அந்நெறி காட்டு மாற்றா லருட்சிவ யோகி யாகி,……..                        (திரு.நீல.புராணம்: 10)

              விடும்பலிப் பாத்திர மேந்து கையராய்

              நடந்துவேட் கோவர்தம் மனையை நண்ணினார்’                                  (திரு.நீல.புராணம்: 12)

                        நாயனாரின், குற்றம் கடிந்த கொள்கை வாழ்வின் உயர்வினை உலகுக்கு உணர்த்தவேண்டி வந்தவர், தமது திருவோடு,  கொள்கின்ற (தீவினைகள்) யாவற்றையும் தூய்மையாக்கவல்லது’ என்றார். அத்தகைய சிறப்புடைய தமது திருவோட்டினைக் கொள்வதற்கு உரிய முழுத்தகுதியினையும் உடையவர் நாயனார் என்பவராக, பெருமான் அவர்பால், திருவோட்டினை ‘வாங்கு நீ’ என நயந்து கூறி ஒப்படைத்ததாகக் குறித்துள்ளார் சேக்கிழார்பெருமான்.

மெய்ம்மைநிலை விளக்க வந்தார்

          திருநீலகண்டத்தின் மீதான ஆணையினை, உள்ளத்தில் மறைத்துக் காக்கின்ற உறுதியுடன், சிவயோகி தந்த திருவோட்டினையும் தம் மனையகத்தே உற்றஇடத்தில் பிறரறியாதவாறு உரிய பாதுகாப்பில் வைத்திருந்தார் நாயனார். ஆனால், பெருமானே அதனை மறையும்படியும் செய்தார். அத்துடன், ஏதும் அறியாதவரைப்போல, மீளவும் தமது திருவோட்டினைப் பெறுவதற்கு நாயனாரின் மனைக்கு வந்தார். அதனை, ‘வாலிதா நிலைமை காட்ட முன்புபோல் வந்தார்’  (திரு.நீல.புராணம்: 19) எனப் புராணம் சுட்டுகிறது. ‘வாலிதாம் நிலைமை’ – தூயதாகிய மெய்ம்மை நிறைந்து விளங்கியநிலை’ என்பது உரைவிளக்கம் (பெரியபுராணம்-முதல் தொகுதி-சி.கே.சுப்ரமணியனார் உரை: பக்.: 681).

         

தூய்மைநிலை காட்டத் தீராவழக்கு

          வந்த சிவயோகியார், நாயனாரிடத்தில் தமது திருவோட்டினைத் திரும்பத் தரும்படிக் கேட்டவேளையில், அது குறித்த இடத்தில் இல்லாமை கண்டு, நாயனார் திகைத்தார். ‘வைப்பிடத்தில் அத்திருவோட்டினைக் காணேன்’ என்றார். அவ்வளவில் அவர்தம் அறிவையும் மறைப்பாற்றல் மறைக்கின்ற நிலையுற்றார். சிவயோகியாரிடத்தில், முன்பிலும் சிறந்த ஓட்டினைத் தாம் தந்துதவுவதாகக் கூறினார். அதைப்பெற்றுத் தமது பிழையைப் பொறுத்தருளவேண்டும்’ என வேண்டினார். ஆனால், வழக்காடி நாயனாரின் வாய்மையாம் வன்மையினை உணர்த்தவந்த சிவயோகியார் அதனை ஏற்கவில்லை. அடைக்கலப்பொருளைக் கவர்ந்துகொண்டதும் அல்லாமல், அதற்கு நாணாத குற்றத்துக்காக, குடும்பதோடு உம்மை, எம்உலகிற்குக் கொண்டு செல்வதே சிறந்த தீர்வாகும்’ என்றார். ஆயினும், நாயனார் கொண்டிருந்த பழியச்சம், அம்மொழிகளது உள்பொருளை உள்ளவாறு உணர்கின்ற தெளிவினை அவருக்குத் தரவில்லை. மாறாக, தம்பாலுள்ள உண்மையினை நிறுவுவதற்கான வாய்ப்புகளைச் சிவயோகியே தந்தருள்வார் என்ற உறுதியில் அவரது ஆணைக்குக் காத்திருந்தார். அவ்விடத்தில் சிவயோகியார், ‘நீர் களவுசெய்யாமை உண்மையாயின், உலகவர் முன்னால், ஆசை மகனுடன் நீரில் மூழ்கி எழுந்துவருக!’ என்றார்.

நஞ்சொளித்தார் தந்த பெருஞ்சோதனை               

             ‘யான் மகன் பெற்றிலேன்’; ‘அதனால் நீர் சொன்னவாறு செய்தற்கு இடமில்லை’ என நாயனார் மறுத்து உரைசெய்தார். அப்படியாயின், ‘உமது காதல் மனைவியின் கரம் பிடித்து, நீரில் மூழ்கி எழுக’ என்றார், சிவயோகியார். அதற்கும் மறுப்புரையாக, ‘யான் மட்டுமே மூழ்கி உண்மையினை உலகவர் உணர உரைப்பேன்’ என்றார் நாயனார். அதுகேட்டு வெகுண்ட யோகியார், ‘களவாடியதும் அல்லாமல், உண்மையாளன் என்றும் வாது செய்கின்றீர்; அவ்வுண்மையினைப் பிறருக்குச் சொல்ல வாய்ப்பளித்தபோதும், அதனை உரியவாறு அணுக மனமின்றி, பலவாறு மறுத்துரைக்கின்றீர்.  ‘உம்மிடமிருந்து உரிய நீதியைப் பெற, தில்லைவாழ் அந்தணர்களின் அவையினை யாம் நாடிச் செல்வோம்’ என்றார் யோகியார். அங்கு இருதரப்பு வாதங்களையும் கேட்ட அவர்கள், யோகியாரின் எண்ணப்படியே நாயனார், மனைவியாருடன் இருந்து நீரில் மூழ்கி எழுதலே சாலச் சிறந்தது’ என்று உரைத்தனர். அந்நிலையில், அவர்களது கருத்துக்கு, எதிர்க்கருத்து கூறுகின்ற மனநிலை நாயனாருக்கு இல்லை. தாம் காக்கவேண்டிய பேருண்மை என்னும், தீராதபெருங்கடமையில் நிலைநின்றார். தமது மனைவியாரைத் தீண்டியபடி,  நீரில் மூழ்கிஎழ வாய்ப்பில்லாமையை எண்ணிக் கலங்கினார். அதனைத் தவிர்க்கவேண்டுமாயின், தனது புறத்தொழுக்கத்தைக் கடிவதற்கு, மனைவியார் சொன்ன சூளுரையினை உலகறியச் சொல்கின்ற நிலை ஏற்படுமே என்று வருந்தினார். அவ்வேளையிலும் அது,  தனது தன்மானத்துக்கு இழுக்கு’ என அவர் எண்ணவில்லை.  புறத்தொழுக்கமும், திருநீலகண்டத்தின் மீதான ஆணையும், உலகறிய வெளிப்படுமானால், அதுகாறும் தாமும் மனைவியாரும் இல்லறத்தாருக்குரிய கடமைகளாகச் செய்துவந்த திருத்தொண்டின் சிறப்புக்கு குறைநேருமோ’ என்றே கலங்கினார். அதனாலேயே, சிவயோகியாரிடமும்,  தில்லைவாழ் அந்தணரிடமும்கூட ஆணை குறித்துக் கூறவில்லை.

நாயனார், தில்லைவாழ் அந்தணர் கூறியவாறு செய்துமுடிக்க, மற்றோர் உபாயத்தைக் கைக்கொண்டவராக, அனைவரோடும் திருப்புலீச்சுரமாகிய திருத்தலத்தினை அடைந்தார். பெருங்கூட்டத்தின் முன்பிருந்து, மனைவியோடும் குளத்தில் மூழ்க எண்ணினார். மூங்கில் தண்டின் இருமுனைகளையும் பற்றியவாறு மூழ்கிஎழ எத்தனித்தார். அதைக் கண்ட சிவயோகியார், யாம் கூறியவாறே, மனைவியைக் கை தீண்டி, மூழ்கி எழுக’ என்றார். இதைக் கேட்டு, ஆற்றாமை மேலும் மிகுந்து கலங்கிய நாயனார், தமக்கும், மனைவியாருக்கும் இடையேயான திருநீலகண்டத்து மீதான ஆணையை உலகவர் அறியக் கூறி, மூழ்கி எழுந்தார். முந்தைய சிவப்பொலிவிலும் அவர்தம் திருமேனி, மேலும் பொலிவுற்றுத் திகழக் கண்ட அனைவரும் திகைத்தனர். அதுகாறும், அவ்விடத்தில் நின்றிருந்த சிவயோகியார், வானில், விடைமேல் மாதொருபாகரெனத் திருக்காட்சியும் தந்தருளினார்.

             ‘மனைவியார் தம்மைக் கொண்டு மறைச்சிவ யோகி யார்முன்

              சினவிடைப் பாகர் மேவுந் திருப்புலீச் சுரத்து முன்னர்

              நனைமலர்ச் சோலை வாவி நண்ணித்தம் முண்மை காப்பார்

             புனைமணி வேணுத் தண்டி னிருதலை பிடித்துப் புக்கார்’           (திரு.நீல.புராணம்: 37)

அடியார்க்கு எளிய, ‘நீலகண்டன்’     

‘நீலகண்டம் இருவர்க்கும் வேறுபட்ட சிந்தையான்’ (இரண்டாம் திருமுறை: 100:9) என்பது திருஞானசம்பந்தர் அருள்மொழி. திருநீலகண்டனாகிய பெருமான்,  மாலுக்கும், பிரமனுக்கும் அரியவன். ஆயினும், அடியாருக்கு என்றும் எளியவன்’ என்பதற்கு, நாயனார் அருள்பெற்ற திறம் சான்றாகும்.

நாயனாரும் அவர்தம் மனைவியாரும், மேன்மேலும் சீர்பெருகு சிவத்தொண்டாற்ற அவர்களுக்குக் குறையாத இளமை அளித்தருளிய பெருமான் இன்றளவும், ‘இளமையாக்கினார்’ என்று போற்றப்பெறுகின்றார். மேலும், கணம்புல்லர், முடியால் விளக்கெரித்த இத்திருத்தலம், தில்லைத் திருத்தலத்துக்கு அருகிலேயே உள்ளது.

முடிவுரை

            திருவைந்தெழுத்தும், திருச்சிற்றம்பலமுமாகிய பலவகைத் திருப்பெயர் மந்திரங்களும், நுண்ணறிவால் மட்டுமே அணுகப்பெறுகின்ற அருமையுடையவை. அவற்றுள்,  ‘திருநீலகண்டம்’ என்னும்  திருப்பெயர், உண்மைஅன்பின் உணர்வுநிலையால், எளிமையுறப் பற்றுகின்ற மந்திரமாகிறது. அத்திருப்பெயர், ‘மன்னுயிர்க்காக, யாரும் உண்ணஇயலாத அருநஞ்சை உண்டு காத்த பெருமானின் அருந்தியாகத்தை உணர்த்துவது. திருஞானசம்பந்தப் பெருமான்,  அதன் எளிமைத்தன்மையில் கொண்ட ஈடுபாட்டினால், ‘நீலகண்டனை நித்தல் நினைமினே’ (5:57:9) என்றார். அவ்வகையில் வாழ்ந்த நாயனார்,  ‘பொய் கடிந்து அறத்தின் வாழ்வார்’ என்றும், ‘பழுதிலார்’ என்றும் போற்றப்பெறுகின்றார். அவர்தம்இல்லறம்,  காமம் கடந்து,  தொண்டுநெறியாகச் செழித்ததற்கு, ‘திருநீலகண்டமே’ கருவியானது. அத்திருப்பெயர் அன்றாட வாழ்வின் அருமந்திரமானால், நம்மைத் தீவினைத் தீண்டப்பெறாத உயர்வில். கொடிய காமவலையினை நீத்து, திருவடியினைப் பற்றி உய்யலாம்.

ஆய்வுத் துணைநூல்கள்

  1. பெரியபுராணம்-முதல் தொகுதி-சி.கே.சுப்ரமணியனார் உரைநூல்,

           பன்னிரு திருமுறை ஆய்வுமையம்,

கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21.

பதிப்பு ஆண்டு: செப்டம்பர், 2017.

  1. தேவாரத் திருப்பதிகங்கள் (அடங்கன்முறை),

பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் (பதிப்பாசிரியர்),

கங்கை புத்தக நிலைய வெளியீடு, ஐந்தாம் பதிப்பு: சனவரி, 2005.

  1. திருக்குறள், சிற்பி பாலசுப்பிரமணியனார் உரை,

தாமரை பதிப்பகம், சென்னை.  இரண்டாம் பதிப்பு: அக்ட

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *