தாவரங்களை சித்திரப்படுத்தும் – தமிழன்பன் கவிதைகள்
ஆ. பிந்து,
முனைவர்பட்டஆய்வாளர்,
தமிழ்த்துறை,
ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.
முன்னுரை
கவிஞர் தமிழன்பன் 1933-ம் ஆண்டு சென்னிமலையில் பிறந்தவர். ‘ஈரோடு’ என்பதை தனது குறியீட்டு பெயராகக் கொண்ட தமிழன்பன் தொடக்க காலத்தில் மரபுக்கவிதையையும் பின்பு புதுக்கவிதைகளையும் எழுதி தமிழ்கவிதை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டவர். இவர் தனது கவிதைகளில் தாவரங்கள் குறித்து நிரம்ப பதிவு செய்துள்ளார். அவை குறித்து விவாதிப்பதாக இக்கட்டுரை அமைகிறது.
சிறிய புல் பூண்டுகள் முதல் மரங்கள் வரை தாவர வகையில் அடங்குகின்றன. தாவரங்கள் சூரிய ஒளி, நீர், காற்று ஆகிய மூன்றையும் தங்கள் வளர்ச்சிக்கு வேண்டிய அளவில் பெற்று தம்மை வளர்த்துக் கொள்கின்றன. தாவரங்களின் உலகம் என்பது ஒரு தனி உலகம் என்றே கூறலாம். புல், பூண்டு, செடி, கொடி, மரம் எனும் பசுமையான இவ்உயிரினத்தை ஆங்கிலத்தில் “Plant’ என்ற சொல் குறிக்கும்” என்பார் வேங்கடசாமி. (செடிகளின் செயலியல் பண்புகள், ப.1.)
மரங்கள்
மரங்களைத் ‘தரு’ என்றும் ‘விருட்சம்’ என்றும் கூறுவர். இவை பூ, காய், கனி, இலை, நிழல், பசுமை, என மரங்கள் தங்களுடைய ஒவ்வொரு அவயங்களையும் மக்களுடைய பயன்பாட்டிற்கு அளிக்கின்றன. இத்தகைய மரத்தின் மீது கவிஞர் அன்பு வைத்துக் கவிதைகளைப் படைத்துள்ளார். மரத்தை கடவுளை விட மேலானது என்று தமிழன்பன் தமது கவிதையில் குறிப்பிடுகின்றார்.
“கேட்காமலே
நிழல் தருகிற மரத்தை விடக்
கடவுள் எப்படி மேலானவன்”
(தமிழன்பன் ஆயிரம், ப.875).
மரம் என்றாலே ஞாபகத்திற்கு வருவது கனிகள் தான். மரங்களை மனிதர்கள் அழிக்கின்றனர். எனினும் மக்களுக்கு நிழலையும், உணவுகளையும் அளித்து உதவுகின்றதென்பதை,
“கொம்பனும் கம்பிகள்மேல்
குளிரிலைத் துணியைப் போர்த்தே
எம்மிடம் வருக வென்றாய்
எழிற்குடை மரமே ! எய்தி
உம்முடல் வெட்டி னோர்க்கும்
உதவினை நிழலே!”
(தமிழன்பன் கவிதைகள் தொகுதி-2, ப-99)
என்று எடுத்துரைத்துள்ளார்.
கவிஞர் மரத்தின் மீது பாசம் கொண்டவராக காணப்படுகின்றார். தனது கவிதையில் வேப்பமரம், தென்னை மரம், அசோக மரம், கருங்காலி, ஆலமரம் என்று பல மரங்களை சுட்டிக்காட்டுகின்றார். காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் வளரக்கூடிய கருங்காலி மரத்திலிருந்து குழல் கருவிகள் செய்து பாட்டு இசைப்பர். இதனை,
“கருங்காலி குழல் செய்து பாட்டிசைக்கக்
காடுதெரு நல்லமரம் !
(தமிழன்பன் கவிதைகள் தொகுதி -1, ப.104)
என்றும் தம் கவிதையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
செடி கொடிகள்
செடிகள் சிறிய அளவில் மட்டும் வளரக்கூடியவை. கொடிகள் என்பவை வேறு மரங்களைப் பற்றுக்கோடாகக் கொண்டு படர்ந்து வளருபவை. கவிஞர் செடி கொடிகள் நன்கு செழிப்பாக வளர்ந்து காற்றில் ஆடுவதை,
“பருவச் செழிப்பும் உருவக் கொழிப்பும்
மருவிய தங்க மணிச்சிலை மங்கையர்
நூற்றுக் கணக்காய் நுண்ணிடை ஒசியக்
காற்று வெளியில் களிநட மாடினர் !
ஆடிய மங்கையர் அங்குள கொடிகள் !”
(தமிழன்பன் கவிதைகள் தொகுதி -1, ப.171)
என்று அழகுறச் சித்திரப்படுத்துகிறார்.
மேலும் தனதுக் கவிதையில் எருக்கஞ் செடியைச் சுட்டிக் காட்டுகின்றார். அச்செடி வீடுகளில் வளர்ப்பதில்லை என்றும் வீதிகள் மற்றும் சுடுகாடு போன்ற இடங்களில் தானாக வளர்ந்து நிற்பதை,
“தாவரக் குற்றவாளியா
காடு கடத்தப்பட்டு அடுக்கு வீடுகளுக்கிடையே
என் வீட்டெதிரில் இருக்கும்
இந்த எருக்கஞ் செடி ?
எல்லாச் செடிகளுக்குப் பாய்ச்சியபின்
மிஞ்சிய பச்சையை
இயற்கை
தண்ணீர் விட்டு விளாவியிருக்கிறது
இந்த எருக்கில்”
(தமிழன்பன் கவிதைகள் தொகுதி -1, பக்.623- 624)
என்று விளக்கியிருக்கிறார். அந்தச் செடியிலுள்ள இலையின் பச்சை நிறம் மற்றச் செடிகளின் இலைகளில் காணப்படுவதை விட குறைவாகவே இருப்பதையும் பதிவு செய்கின்றார்.
புல்
தரையில் தானாகவே முளைத்து வளரும் செடி வகைகளில் ஒன்று. “பச்சைப்பசேல்” என்று பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஸ்ரீநிவாசன் என்பவர், “புல் என்றால் ஏதோ ஒரு சாதாரண தாவரம் என்று தான் அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. தாவர வகைகளில் புல் மிக முக்கியமான ஒன்று. தாவரவியலில் புல் இனத் தாவரங்கள் ஒன்றாக்கப்பட்டுப் புல் குடும்பம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக் குடும்பத்தில் 4500 இனங்கள் உண்டு” (தாவரஉலகில்! 100, ப.43) என்கிறார். தமிழன்பன் புல்லின் அழகை மக்கள் ரசித்துப் பார்ப்பதை,
“தான்
பூப்பதில்லை புல் …
தன்னைப்
பார்ப்பவரைப் பூத்துவிடச் செய்கிறதே
போதாதா?
(தமிழன்பன் கவிதைகள் தொகுதி -4, ப.170)
என்று கூறியுள்ளார்.
தாவரங்களின் உறுப்புகள்
மரம், செடி, கொடிகளில் வேர் தண்டு, இலை,பூ, காய், கனி போன்ற உறுப்புகள் காணப்படுகின்றன. இவற்றுள் வேரும் தண்டும் இலையும் தாவரங்களின் வளர்ச்சியில் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன. தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குக் காரணமாக அமைவது பூக்கள், ஏனென்றால் தாவரங்கள் விதையின் மூலம் தான் இன்னொரு தாவரத்தை உண்டாக்குகின்றன.
ஒரு செடி முளைத்து வளருவதற்கு அவசியமானது விதை. ஸ்ரீனிவாசன் என்பவர். “செடியின் ஆதி மூலம் விதை. செடியே விதைக்குள் இருக்கிறது என்றாலும் குற்றமில்லை தாவரத்தின் சிசுவிதையில் இருக்கிறது” (தாவரங்களின் இல்லறம், ப.35) என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். இலக்கியத்தில் விதையானது ‘காழ்’ மற்றும் ‘அரிசி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழன்பன் பூமியில் புதைந்த விதை அழிந்து தாவரமாக வளரும் என்றுக் குறிப்பிட்டுள்ளார்.இதனை,
“விதையின் இறப்பே செடியின் பிறப்பு!
(தமிழன்பன் கவிதைகள் தொகுதி -4,ப.453).
என்று தனது கவிதையில் பதிவு செய்துள்ளார்.
தாவரங்கள் வளர்வதற்கு மிகவும் முக்கியமானவை வேர்கள். வேர்கள் பூமிக்கு அடியில் ஆழமாக சென்றால் தான் தாவரங்கள் பலமாக இருக்கும். இதனைத் தமிழன்பன்,
“விண்முட்டும் மரங்களுக்கும்
வேர்களில்தான் பலமெல்லாம்”
(தமிழன்பன் கவிதைகள் தொகுதி -2,ப.327).
என்று கூறியுள்ளார்.
பூக்களின் அழகுக்கும் வாசனைகளுக்கும் பெரியவர் முதல் சிறியவர் வரை மயங்கி நிற்பவர். இதன் வாழ்நாட்கள் என்பது மிகவும் குறைவு. அந்த நாட்களிலே அவற்றின் மணம், அழகு, நிறம் போன்றவை மக்களைக் கவர்ந்து விடுகின்றன. இதனை வர்ணிக்கும் தமிழன்பன்,
“கொடியின் வீட்டில் பிறந்தது !
குறைந்த நாட்கள் வாழ்ந்தது !
மடிந்து வீழும் முன்னரே
மதிப்பு பெற்றுக்கொண்டது!”
(தமிழன்பன் கவிதைகள் தொகுதி -2,ப.572).
என்று கூறி, மலரை போல மனிதனும் மதிப்புடன் வாழ வேண்டும் என அறிவுறுத்துகின்றார்.
முடிவுரை
இயற்கை என்பது மனிதனுக்கு கிடைத்த வரம் இந்த இயற்கையினுள் இருக்கின்ற தாவரங்கள் என்பது மனிதனுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதனால் தான் தமிழன்பன் தனது கவிதையில் இவைகளின் அழகினை, பயனை திறம்பட பதிவு செய்கின்றார். அவை இக்கட்டுரையில்ஆராயப்பட்டுள்ளது.
துணைநூற்பட்டியல்
- அமிர்தகணேசன். தி., (தொ.ஆ) – ஈரோடு தமிழன்பன் ஆயிரம்
விழிகள் பதிப்பகம்
8/எம் 139, 7 ஆம் குறுக்குத்
சென்னை- 41. மு.பதிப்பு – 2016.
- சக்கரவர்த்தி ராஜகோபால் ஆச்சாரியார் – தாவரங்களின் இல்லறம்
அல்லயன்ஸ் பிரஸ்
எம்.எஸ் 109, பிராடீஸ்ரோட்
மயிலாப்பூர். மு.பதிப்பு -1947
- வேங்கடசாமி – செடிகளின் செயலியல் பண்புகள் நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் (பி)லிட்.
41-B சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 98.
மு.பதிப்பு – 2012.
- ஜெயதேவன். வ.(தொ.ஆ) – ஈரோடு தமிழன்பன் கவிதைகள் பூம்புகார் பதிப்பகம், 127 ப. எண்: 63, சென்னை- 108. மு.பதிப்பு – 2012.
- ஸ்ரீநிவாசன். N – தாவர உலகில்! 100
70-தி. ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி
மந்தை வெளி, சென்னை- 600 028.