-மேகலா இராமமூர்த்தி

குடத்துநீரைக் கயிறுகட்டி இழுத்துச்செல்லும் சிறுவனைத் தன் காமிராவில் சுமந்துவந்திருக்கிறார் திரு. முத்துக்குமார். இப்படத்தை வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் போட்டிக்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றிகள்!

நீருக்காக நெடுந்தூரம் பயணித்துத் திரும்பியிருக்கும் இந்தப் பிஞ்சின் அவலம் நம் நெஞ்சைப் பிசைகின்றது. இந்தப் படத்துக்குப் பொருத்தமாய்க் கவியெழுதக் கவிவாணர்களைக் கனிவோடு அழைக்கிறேன்!

*****

மரத்தைவெட்டி மழையை நிறுத்திய நம் பிழையால் நீருக்குப் போராடுகின்றான் இந்தச் சிறுவன் என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

மாறுவானா மனிதன்…

மரத்தை வெட்டி யழித்துவிட்டே
மழையைத் தடுத்து நிறுத்திவிட்டோம்,
தரத்தில் மனிதன் கீழிறங்கி
தனது குடும்ப நினைவின்றி
நிரந்தர அடிமையாய் மதுவினுக்கே
நிலைத்தே விட்ட நிலையினிலே,
சிரமப் பட்டே நீர்கொணரும்
சின்னப் பிள்ளையை நினைவீரே…!

*****

சிரமப்பட்டு நீர் கொணர்ந்த பிள்ளையைக் கண்டு  அவனை சுமந்துபெற்ற அன்னையின் நீர்க்குடம் குளிர்ந்தது; அவள் கண்களில் நீர் முத்துத் துளிர்த்தது என்று உருக்கமாய்க் கவி வடித்திருக்கின்றார் திரு. கா. முருகேசன்.

நீர்க்குடம்!

அதில் நான் என்னைக் காண்கிறேன்
அந்தக் கூட்டத்தில் நானும் ஒருவன்!

ஆனால் ஒரு உண்மை…..
அது கடைகளுக்கு அல்ல என்பதில்; அது வீட்டிற்கானது!

வேலைக்குச் சென்று வீடு திரும்பி;
மீண்டும் தண்ணீர் எடுத்து வந்து;
அதிலும் குடிக்க நேரமில்லாது;
உலை வைத்து சோறுண்டு;
கிடக்கும் போது எடுக்கின்ற தாகத்திற்காகத்தான் இத்தனை ஓட்டம்!

இதன் வலியை அவர்கள் மட்டுமே உணர்வார்கள் !

சிறுவயதில் பனையோலையிலும், தென்னையோலையிலும் விளையாடியதின் – புத்திக்கூர்மை!
மண்ணில் கொஞ்சம்;
ததும்பி ததும்பி கால்களில் கொஞ்சம்;
வீடு வந்து சேர்ந்ததும் இரு துளி நீர்;
குடத்தில் அல்ல!
என்னைக் கண்ட அம்மாவின் கண்ணில் !
ஒரு குவளை நீர் தொண்டைக்குழியில் சென்றதும்,
பூரித்து போனாள் என் அன்னை!
உன்னை சுமந்த நீர்க் குடம் குளிர்ந்தாயிற்று! எனக்கு இது போதும்!

இதுதான் இக்காலத்தின் நிதர்சனம்!

*****

’குழந்தைகள் தொழில்செயும் அவலநிலை அழிய, அரசின் பார்வை ஏழைகள்மீது படவேணும்; ஏழைக்குழந்தைகளும் கல்விகற்று வாழ்வில் உயரவேணும்’ எனும் சமூகநலச் சிந்தனையைத் தன் கவிதையில் விதைத்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

குழந்தைத் தொழில்..!

எண்ணம் பலவும் எழுச்சி பெறும்
திண்ணம் கொண்ட திறமை வரும்
போற்ற வேண்டிய பிள்ளைப் பருவம்
ஆற்றவும் உளது அரிய கடமைகள்
சிறார் என்னும் சிந்தனை வந்தால்
பொறாமை உண்டு பொதுவாக நம்மிடம்
சிரித்து மகிழும் சிறிய வயதில்
வரித்த சிந்தனை விரியும் பெருகி
பள்ளி சென்று படிக்கும் பருவம்
துள்ளும் வயதில் தளும்பும் இன்பம்
புத்தகம் சுமக்கும் புதிய சூழலில்
எத்துணை துன்பம் இந்த வயதில்
பாரினில் ஏழை படிக்க வழியிலை
யாரிடம் சொல்லி எங்கே போவது
குழந்தைத் தொழிலது குற்ற மெனவும்
அழகாய் உணர்ந்து அறிய வேணும்
சட்டம் என்ன செய்யும் மகனே
விட்டு வைத்து வேடிக்கை காட்டுது
எச்சிலை பொறுக்க இளைய வயதில்
இச்சை வந்திட இனியும் வேண்டா
அரசின் பார்வை அவர்கள் மீதே
அரணாய் வந்து அணைக்க வேணும்
கொஞ்சம் இல்லை முற்றும்
அஞ்சும் தொழிலிது அறவே அழிகவே

*****

சிறுவனின் பரிதாப நிலைக்காகத் ’தாயினும் சாலப்பரிந்து’ பாப்புனைந்திருக்கும் பாவலர்களுக்கு என் பாராட்டு!

இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

கனவுகள்!

ஜீன்ஸ் பேன்டும்
ஜிகினா சட்டையுமே
அவனது கனவு!
குடிகாரத் தந்தையால்
எந்தப் பயனுமில்லை.
அனுதினமும்
வருமானத்தைச் செலவு செய்து
அவமானத்தைச் சம்பாதித்தான்.
குடியால் அவன் வயிறுதான்
தினமும் எரிந்தது.
அடுப்பு என்றோதான்
புகைந்தது!

அன்றொருநாள்
அவன் குடித்த சாராயம்
அவனையே குடித்தது.
குடும்பமே கதறித் துடித்தது.
ஐயகோ…!
அப்பாவின் வேட்டியே
அம்மாவின் புடவை ஆனது!
அம்மாவின் புடவையோ
அக்காவின் தாவணி ஆனது!
தனது ஜீன்ஸ் கனவை உதறினான்
குடும்பப் பொறுப்பை
உடுத்திக் கொண்டான்.
இதோ பிறர்வீட்டில்
தண்ணீர் ஊற்றி
தன்வீட்டு வறுமையைக் கழுவுகிறான்.
ஆம் அப்பன் தண்ணியடித்துக்
குடும்பத்தைக் கெடுத்தான்
மகனோ தண்ணீர் பிடித்துக்
குடும்பத்தை காக்கின்றான்.
தண்ணீர் அடித்து
ஊர்மக்களைக் குடிக்க வைக்கிறான்
உடன்பிறப்பைப் படிக்க வைக்கிறான்.
போதையால் அழிந்த
குடும்பத்தைச் சுமந்து
புதிய பாதையை நோக்கிப்
பயணம் செய்கிறான்.

”தந்தையின் குடிப்பழக்கத்தால் கெட்ட குடியைத் தன் உழைப்பால் சுமந்து புதிய பாதையில் பயணிக்கும் சிறுவன் இவன்! தண்ணீர் அடித்து ஊர்மக்களைக் குடிக்க வைக்கிறான்; உடன்பிறப்பைப் படிக்க வைக்கிறான்” என்று கல்லும் கசியும் சொல்லெடுத்துச் சிறுவனுக்குப் பா(ராட்டு)மாலை தொடுத்திருக்கும் திருமிகு. வசந்தி மணாளனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என அறிவிப்பதில் மகிழ்கிறேன். கவிஞருக்கு என் பாராட்டு!

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *