ஜீவா பாடல்களில் சொல்நிலை உத்திகள்

0

ஒ. அஜிதாகுமாரி,   உதவிப் பேராசிரியர், தமிழ்துறை,  என்.எஸ். எஸ். கல்லூரி,  திவனந்தபு

கர்மவீரனாகவும், கலைஞனாகவும் இருகோணங்களில் தமது நாற்பதாண்டுகளில் திறம்படத் தமிழ் மக்கள் சேவையை ஆற்றிய குமரிப்புதல்வன்     ப. ஜீவானந்தம் அவர்களின் பாடல்களில் இழையோடும் சொல்நிலை உத்திக்களைச் சுட்டிக்காட்ட இக்கட்டுகை முனைகிறது.

சொல்நிலை

            படைப்பின் சிறப்புக்குப் படைப்பாளிதாம் பயன்படுத்துகின்ற சொற்களின் தேர்வு, அவற்றைக் கையாளும் விதம், புதியவற்றை உருவாக்கும் திறமை, புதிய பொருட்களை ஏற்கும் திறமை முதலிய நடையில் உத்திகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் தேவையாகும். ஜீவா பாடல்களில் சொல்நிலை உத்திகளாகப் பழைய சொல்லாட்சி, வட்டார வழக்கு, அடுக்குத்தொடர், பிறமொழிக் கலப்புச் சொற்கள், இரட்டைக்கிளவி, ஒருபொருட் பன்மொழி, ஒலிக்குறிப்புச் சொற்கள், ஆகுபெயர், இருவடிவச் சொற்கள், அடைச் சொற்கள், பழமொழி அணிநயம் போன்றன காணப்படுகின்றன.

 சொல்லாட்சி

முன்பு வழக்கிலிருந்த ஆனால் தற்போது வழக்குப் பயிற்சியில் பயன்பாடு அருகிய நிலையிலான சொற்களாக குக்கிராமம், நத்துவோர், சுணங்கன், சுமடர் எனும் பழைய சொற்கள் காணப்படுகின்றன.

வட்டார மொழிக்கூறுகளின் பயன்பாடு மிகுதியான இடங்களில் காணப்படுகின்றன. ஜீவா பயன்படுத்திய வட்டாரச் சொற்களில் அக்கிராமம், அட்டூழியம், உண்ணலை காரியம், கங்கணம், கண்டபடி, கன்னாபின்னா கூத்தாடி, பூழ்தி எனும் சொற்கள் இன்றளவும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பயின்று வருவதனைக் காணமுடிகிறது.

பிறமொழிக் கலப்புச் சொற்கள்

கடன் வாங்குதலும் கலப்படைதலும் மொழியின் இயல்பு என்னும் கருத்துக்கிணங்க கடன் வாங்கப்பட்ட சொற்கள் (Borrowed Words) பாடல் பகுதிகளில் பயன்பாடாகியுள்ளன. இத்தன்மையில் வடமொழி, அராபியம், ஆங்கிலம், இந்தி, இந்துஸ்தானி, உருது, கன்னடம், சிங்களம், தெலுங்கு, பாரசீகம், மலையாளம் போன்ற பிறமொழிச் சொற்கள் காணப்படுகின்றன.

 வடமொழி

தொல்காப்பியர் காலம் முதல் த்மிழோடு மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள மொழி வடமொழி. வடமொழிச்சொற்கள் தமிழில் வழங்கும்போது அவ்வொலி மரபோடு இயையவே மிகுதிகள் அமைந்துள்ளன என்னும் கருத்து குறிப்பிடத்தக்கதாகும். இவரது பாடல்களில் வடமொழி எழுத்துக்கள் பயின்றும் அல்லாத நிலையிலும் உள்ளன.

வடமொழி எழுத்துக்கள் பயின்று வரும் சொற்களாக அஹித, அஷ்ட, ஆஹா, ஆஹீஹீ, ஆஷாட பூதி, கஷ்டம், கிருஷ்ணன், கொஷ்டி, சந்தோஷம், சமாஜம், நஷ்டம், நாஸ்திகம், நாஜி, நிமிஷம், பிரஸ்தாபம், பூர்ஷிவா, ரோஷம், விசேஷம், விஷம், விஷயஞானம், வேஷம், ஜவலிக்குது, ஜது, ஜண்டா, ஜந்து, ஜடம், ஜம்பம், ஜயம், ஜன்மம், சுயராஜ்ஜியம் என்பன போன்றனவும், வடமொழி எழுத்து பயின்று வராத சொற்களாக உபதேசம், சவுகரியம், உத்தேசம், சிசு, பிரசவவுகரியம், குரூரம், சர்க்கார், சத்ரு உபயோகம், சர்வாதிகாரம், பட்டவர்த்தனம் என்பன போன்ற சொற்களும் பயன்பாடாகின்றன.

ஆங்கிலேயர்களின் வருகையாலேற்பட்ட மொழிக்கலப்பு காரணமாக ஆங்கிலச் சொற்களின் கலப்பு காணப்படுகிறது. ஜீவா பாடல்களில் இண்டர் நேஷனல், மீயூசியம், கவர்மெண்டு, மெஷின், கமிஷன் என்றிவ்வாறான பல ஆங்கில வார்த்தைகளைக் காணமுடிகிறது.

மேலும், ‘ஜல்தி எனும் இந்திச் சொல்லும் அபினி, கஞ்சா, சராசரி, சாமான் எனும் உருது சொற்களும், சொத்து எனும் கன்னடச் சொல்லும், ‘அந்தோ’ எனும் சிங்களச் சொல்லும் பவிசு எனும் தெலுங்கு மொழிச் சொல்லும் ‘இங்குலாப் சிந்தாபாதி’,ஜமீன், சிபாரிசு’  எனும் பாரசீகச் சொற்களும் ‘வெள்ளம்’ எனும் மலையாளச் சொல்லும், ஜாமீன் எனும் அராபிய மழிச் சொல்லும், பிற மொழிச் சொற்களென தற்போது இனங்காணவியலாத தன்மையிலான தயார், சுமார் எனும் சொற்களும் பயனாகியுள்ளன.

பல்வகைச் சொற்கள்

ஒரு சொல் இரட்டித்து நின்று பொருள்தரின் இரட்டைக்கிளவி எனப்படும். குடுகுடு, சடசட எனும் இரட்டைக்கிளவிகள் உணர்ச்சி வேகத்திற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒரே பொருள் தரும் பல சொற்களும் இவர் பாடல்களில் பயின்று வருகின்றன. இவ்வகையில் உலகம், பெண்கள், ஆண்கள் எனும் சொற்களுக்கு பல பொருள் தருகின்ற சொற்கள் உள்ளன.

பெண்களை அடிமைப்படுத்தும் கயவர்களைப் சாடுதல் பொருச்சும் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்துப் பாதுகாக்கும் நோக்கிலும் பெண்களைக் குறிப்பிடும் அரிவை, கிளி, தையலர், தோகை, தோகஒ மயிலினத்தார், தோகையர், பாவை, பாவையர், பெட்டை, பெண், பெண்டிர், பெண்டு, பேடி, பொட்டை, மெல்லியலார் எனும் சொல்லாட்சிகளை மிகுதியாகவும் ஆண்களைக் குறிக்கும் சொற்களான ஆடவர், ஆண், ஆண்மை, தந்தை எனும் சொற்களைக் சிறுபான்மையும் பயன்படுத்துவதோடு அவனி, உலகு, செகம், ஞாலம், தரணி, தராதலம், தரை, புவி, பூதலம், பூமி, பூலோகம், மண், ஜக, ஜகம் எனும் சொற்களை உலகத்திற்கிணையான சொல்லாட்சிகளாகவும் பயன்படுத்துகிறார்.

நிகழ்ச்சி, வருணனை, உணர்ச்சி, வெளிப்பாடு இவைகளை உணர்த்தும் சொற்களான அந்தோ, திண்ணென, ஜே, அபக், திமித்தம், ஜேஜேஜே, அய்யோ, ஐயகோ, அஹீஹீ, தூ, புஸ், படீர், சீச்சீ எனும் ஒலிக்குறிப்புச் சொற்களையும், ஒரே பொருளினைத் தரும் இரு வேறுபட்ட அமைப்புடைய சொற்களான கதை- காதை, கிளி-கிள்ளை, குருதி- ரத்தம், குரீரம், கொடூரம், தரணி- தாரணி, தாய்-அன்னை எனும் சொற்களைத் தன் ஆழமிக்க கருத்தினைப் புலப்படுத்தும் கருவியாகவும் அமைத்துள்ளார். மக்கள் நலனைத் தன்னலனாகக் கொண்டு வாழ்ந்தவராதலின் ‘கோடியர்’ எனும் ஆகுபெயரினை மக்களைச் சுட்டும் தன்னையில் அமைத்துள்ளார்.

அடைச்சொற்கள்

அடைச்சொற்களின் வருகை மிகுதியாகப் பயன்பாடாகியுள்ளன. அடைச்சொற்களையும் அடைபெற்று வரும் தலைமைச் சொற்களையும் ஓரடை பெற்று வருதல் முதலாக பல அடைகள் பெற்று வருதல் நிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை,

  1. ஒரு தலைமைப்பெயர் ஓரடை பெற்றுவரல்
  2. ஒரு தலைமைப் பெயர் ஈரடை பெற்றுவருதல்
  3. ஒரு தலைமைப் பெயர் மூன்றடை பெற்றுவருதல்

எனும் நிலையில் பயன்பாடாகியுள்ளன.

மேலும் ஓரடை இரு பெயர்களைச் சிறப்பிக்கவரல் முதல் பதினான்கு பெயர்களைச் சிறப்பிக்க வரும் நிலைகளில் இடம்பெறுகின்றன.

பழமொழி

மக்களால் காலங்காலமாகப் பின்பற்றபட்டு மக்களின் வாழ்வியல் சித்திரமாகத் திகழும் பழமொழிகள் பாடல்களில் இழையோடுவதனைக் காணமுடிகிறது.

நாட்டு மக்களின் நிலையை எண்ணி வருந்திப்பாடுகின்ற ‘இந்தியாக் கண்ணிகள்’ என்ற பாடலில் ‘வெளுத்ததெல்லாம் பாலுமல்ல’ என்ற பழமொழி வாயிலாகவும் ‘தொழிலாளர் அவலநிலை மாற’ என்ற பாடல் தலைப்பில் தொழிலாளர்கள் வீணர்களால் படும்துயர் காலங்காலமாக நடைபெற்று வருவதை ‘வாழையடி வாழையாக’ என்னும் பழமொழி வழிச்சுட்டி வருந்திப் பாடியுள்ளமையைக் காணலாம்.

 அணிநயம்

தொழிலாளியின் தன்மையை இயல்பான நோக்கில் சொல்லும் தன்மையில் தன்மையணியினையும்,  பணத்திமிர் கொண்டு  வாழ்கின்ற முதலாளிகளின் உடலை நையாண்டி செய்யும் நோக்கில் உருவக அணியினையும், எதையும் சந்திக்கத்தயார் எனும் எதிர்க்கும் குரலமைப்பில் பின்வருநிலையணியும், தொழிலாளியின் அவலநிலையால் தான் வெகுண்டெழும் நிலையிலும் தொழிலாளர் நலன்கருதி அவர்தம் மனத்தினை ஆற்றுப்படுத்தும் கோணத்தில் உயர்வு நவிற்சியணியும், காக்காத கடவுளை எடுத்துக்காட்டுவமையணியாகவும், சுவையணியாகவும் பயன்படுத்தியுள்ளமை அவரது சொற்றிறமைக்குச் சான்றாகும்.

முடிவுரை

இவரது பாடல்களில் பயின்றுவரும் சொல்நிலை உத்திகள் சொல்லாடல்களாக மட்டுமின்றி கருத்தின் ஆழத்தினையும் கேடுகெட்ட சமுதாயத்தினை நல்வழிப்படுத்தும் முகமாகவும் முதலாளிகளை அடக்கும் நோக்கத்துடனும் அவரது உள்மன ஆதங்கமாக வெளிப்படுகிறது எனலாம்.

துணைநூற்பட்டியல்

  1. ப. ஜீவானந்தம் – (1990) ஜீவாவின் பாடல்கள், என். சி. பி, ஹச் பதிப்பு, சென்னை.
  2. பொன்னீலன் – ஜீவா என்றொரு மானுடன் என். சி. பி, ஹச் பதிப்பு, சென்னை.
  3. வெங்கடாசலபதி – (1992) ஜீவாவும் தமிழும், செண்பக பதிப்பகம், சென்னை.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *