======================

திருச்சி புலவர் இராமமூர்த்தி

————————————————-

 

தென்னாட்டின்  தனிச் சிறப்பு இங்கே காவிரி பாய்ந்து வளந்தருவதே! இக்காவிரி பாயும் நாட்டில் தான் சுந்தரரின் அவதாரமும், சைவப் பணிகளும்  வளர்ந்தன! கங்கைக்கு நிகரான காவிரி பாயும் சோழநாடே  சுந்தரரின் வாழ்விடமாகும். ‘’சோழநாடு சோறுடைத்து‘’ என்ற அனுபவ மொழி, சித்தாந்த நெறியில்  ஆன்மலாபத்தையும்  குறிக்கும். குடகு நாட்டில் தோன்றி தமிழ்நாட்டில் பாய்ந்து சோழநாட்டை வளங்கொ ழிக்கும்  பூமியாய் மாற்றும் காவிரி,  பெரியபுராணத்தில் திருநாட்டுச்  சிறப்பில்  பாடப் பெறுகிறது.

இந்நதி தான் பாய்ந்துவரும் சோழத்  திருநாட்டில் இருகரைகளிலும் உள்ள திருக்கோயில் களில்  எழுந்தருளும் இறைவனை வழிபட்டுக்  கொண்டே செல்கிறதாம். இறைவழிபாட்டுக்கு மிக்க கரைந்த தேவை, நீரும்,பூவும்  ஆகும்! வடமொழி வேதம் ‘’பத்ரம், புஷ்பம், பலம், தோயம் எனப்படும் இலை , பூ, கனி, நீர் ஆகியவை  இறை வழிபாட்டுக்கு உகந்தன என்று கூறுகிறது. அவ்வாறு வழிபாடு செய்வோரை  அடியார்கள் என்று தமிழ்த் திருமுறை பாடுகிறது. காவிரியாறு  இருமருங்கிலும் உள்ள திருக்கோ யில்களை வலம் வந்து வழிபாடு செய்கிறதாம்

புத்தம் புதிதாய்ப் பூக்கும் மலர்களே இறைவழிபாட்டுக்குரியன! காவிரியின் இருமருங்கிலும் உள்ள சோலைகளில் அன்றாடம் புதுப்புது  மலர்கள் அரும்பி மலர்கின்றன. அவை காற்றில் உதிர்ந்து காவிரியில் விழுந்து மிதக்கின்றன. ‘’புனலாறன்று இது பூம்புனலாறு ‘’ என்று இலக்கியம் கூறுகிறது.

‘’மருங்குவண்டு  சிறந்தார்ப்ப  மணிப்பூவாடை அதுபோர்த்திக் 

 கருங்கயல்கண்  விழித்தொல்கி  நடந்தாய் வாழி காவேரி!’’

என்று காவிரி பாயும் அழகைச்  சிலப்பதிகாரம்  பாடுகிறது. இவ்வாறு பூக்களையும் கனிகளையும் சுமந்து வந்த காவிரி,  கரையில் உள்ள திருக்கோயில்களில் எழுந்தருளும் இறைவன் மேல் புனிதப் புது நீரால்  அபிடேகம் செய்கின்றதாம். அப்போதே அது வாரிக்கொண்டு வந்த மலர்களையும்  தூவி அருச்சிக்கின்றதாம். மலர்களில் மொய்க்கும் வண்டின் ரீங்காரம் இறைவனைத் துதித்துப் பாடுவது போல் ஒலிக்கின்றதாம்!இதனைத் திருஞானசம்பந்தர்,

’நுகர் ஆரமொடு  ஏலம் மணி  செம்பொன்  நுரை உந்தி

  பகராவரு  புனல்காவிரி  பரவி பணிஒந்து ஏத்தும் ‘’

என்றும், சுந்தரர் ,

’கிளர்புனற்  காவிரி ,

 வட்ட  வாசிகை  கொண்ட  டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடி’’

என்றும்  பாடுகின்றனர். இவற்றைக்  கருத்தில் கொண்டு, இறை வழிபாட்டுக்கு  உரிய நீரையும் இலை களையும்  பூவையும் கனிகளையும் சிதறிக் காவிரியாறு வழிபடுவது , காவிரிக் கரை நெடுகிலும் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபாடு செய்யும் சிவனடியார்களின் வழிபாடு போல் உள்ளதாம். இதனைச்  சேக்கிழார் ,

‘’வம்பு     லாமலர்      நீரால்        வழிபட்டுச்

 செம்பொன்   வார்கரை  யெண்ணில்   சிவாலயத்

 தெம்பி     ரானை     யிறைஞ்சலி    னீர்ம்பொன்னி

 உம்பர்   நாயகற்   கன்பரு   மொக்குமால்.’’

என்று பாடுகிறார்!  திருஞானசம்பந்தர் தம் முதற்பாடலில்,

’ஏடுடைய மலரால்  முனை நாள் பணிந்து ஏத்த அருள்செய்த ‘’

என்று பாடுகிறார்.  அப்பரடிகளோ,

‘’சலம் பூவொடு தூபம் மறந்தறியேன்! 

  தமிழோடிசை பாடல் மறந்தறியேன்!’’

 என்கிறார். சுந்தரர்,

’முட்டாமே  நாள்தோறும்   நீர்மூழ்கிப்  பூப்பறித்து  

                 மூன்று போதும்

கட்டார்ந்த  இண்டை கொண்டு அடிசேர்த்தும் ‘’

என்று பாடுகிறார். இவற்றால் சிவனடியார்கள் நீர், மலர் கொண்டு இறைவனை வழிபட்டார்கள் என்பது புலனாகிறது. அவர்கள் காவிரியாற்றின் இரு கரைகளிலும்  உள்ள எண்ணற்ற சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்டார்கள். இவ்வாறே காவிரியும் பூ, நீர் கனி கொண்டு , இருகரைகளிலும் உள்ள எண்ணற்ற சிவாலயங்களில் வழிபாடு செய்தது என்பதைச் சேக்கிழார்,

’வம்பு     லாமலர்      நீரால்        வழிபட்டுச்

 செம்பொன்   வார்கரை  யெண்ணில்   சிவாலயத்

 தெம்பி     ரானை     யிறைஞ்சலி    னீர்ம்பொன்னி ‘’

என்று பாடுகிறார். அச்செயல் சிவனடியார்களின் செயலுக்கு இணையாக விளங்குகிறது. இதனைச்  சேக்கிழார்,

 

 ‘’உம்பர்   நாயகற்   கன்பரு   மொக்குமால்.’’

 

எனப்பாடுகிறார். ‘’உம்பர் நாயகற்கு  அன்பர்’’ என்ற தொடர் பொதுவாகச்  சிவனடியார்களைக்  குறித்தாலும் , சிறப்பாகக்  கயிலைமலையில்  சிவ பெருமானுக்கு அன்பராய் விளங்கிய  சுந்தரமூர்த்தி நாயனாரையே குறிக்கிறது!  இப்புராணத்தின் கதைத்தலைவராகிய சுந்தரர்கைலை கைலை மலையில் சிவபெருமான் வழிபாட்டுக்கு உரிய மலர்களை பறித்து நல்கும் தொண்டினைச் செய்தவர். மேலும் அவர்  முப்போதும் திருமேனி தீண்டிப்  பூசிக்கும்  சிவவேதியர் மரபில் தோன்றியவர் என்பதையும் சேக்கிழார் இங்கே  நினைவுகூர்ந்து  குறிப்பிடுவது நினைந்து மகிழ்தற்குரியது.

========================================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *