மாணவர்கள் விழிவழியே கலைநயத்தைக் காட்டும் லலித் கலா அகாடமி.
–விவேக்பாரதி
துவாரகா தாஸ் கோவர்த்தன தாஸ் வைணவக் கல்லூரியின் காட்சித் தொடர்பியல் துறை மாணவர்களில் இளங்கலைஞர்களின் கற்பனை மற்றும் கலைத்திறனை வெளிக்கொணர நிகழ்த்தப்படும் புகைப்படம் மற்றும் ஓவியக் கண்காட்சியே Perceptiones 2K18. சென்னை கிரீம்ஸ் சாலையில், லலித் கலா அகாடமி வளாகத்தில் சுமார் 150 கலைப்படைப்புகள் காட்சிப் படுத்தபட்டிருக்கின்றன.
வெவ்வேறு உணர்வுத் தளங்களைப் பிரதிபலிக்கும் 50 ஒவியங்களும் 100 புகைப்படங்களும் பொது மக்களின் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பார்த்ததும் ஈர்த்து நம் சிந்தனைகளைக் கவர்ந்திழுக்கும் மாணவக் கலைஞர்களின் கலைநயங்களைக் காண மக்கள் திரளாய்க் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். 10.10.2018 டில் பிரபல புகைப்படக் கலைஞர் திரு. வெங்கட் ராம் அவர்களால் து.கோ. வைணவக் கல்லூரியின் முதல்வர், டாக்டர் கணேசன், கல்லூரி பொருளாளர் திரு அஷோக் கேடியா மற்றும் காட்சித் தொடர்பியல் துறைத்தலைவர் திருமதி வசந்த் அவர்களது முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
தொடங்கிவைத்து படைப்புகளை ரசித்துப் பார்வையிட்ட புகைப்பட வல்லுநர் வெங்கட் ராம் அவர்கள் “இந்த உலகம் நாளுக்கு நாள் தன்னை விரிவுப் படுத்தி மேம்பட்டுக் கொண்டே இருக்கிறது. நாமும் நமது விருப்பம் மற்றும் ஆர்வத்தைக் குறைக்காமல் அந்த மேம்பாட்டுக்குத் தக்கவாறு நம்மையும் தயார்ப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.” என்று மாணவர்களுக்கு அன்பான அறிவுரையும் வழங்கினார். அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை காட்சிக்கு இருக்கும் அரிய விழி விருந்தினைக் கண்டு ரசிக்க கலையுணர்வு கொண்ட மனங்கள் காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை வரவேற்கப்படுகின்றனர். மாணவர்களின் கலைப் பார்வையைக் காட்டும் காட்சிக் களமாக இன்னும் சில நாட்கள் நல்ல பொலிவோடு விளங்கவிருக்கின்ற லலித் கலா அகாடமி நோக்கி கலா ரசிகர்களை அழைக்கிறோம்.