மீனாட்ஷி திருக்கல்யாணம்….!
——————————–

160731 Meenakshi Sudareshwara Kalyanam – lr wedding card -Vijaya Satyanarayana Watercolour A3

ஈசனார் மீனாள் இணைந்த திருமணத்தை
பூசலா நாயனார் போலவே -யோசனையில்
கண்டு களித்ததை கூறிடக் கற்பகத்தின்
குண்டு குமாரனே காப்பு….(1)
———————————————————-
கல்யாணக் கதை கதையாம் காரணமாம்
—————————————————-

சென்றமுறை பார்வதி சம்பு திருமணத்(து)
அன்றமர்ந்தான் தெற்கில் அகத்தியன் -குன்றென
இந்தமுறை காண மதுரையில் மீனாட்சி
சுந்தரேசன் கல்யாணம் ஓம்….(2)

பெண்வீட்டார் – பிள்ளை வீட்டார் அறிமுகம்
———————————————————–

மண்சுமந்தோன் பிட்டுக்கு மாப்பிள்ளை, மைத்துனனோ
மண்சுமந்த வாயன், மணமகளோ -மண்புகுந்த
மேனாள் இமவான் மகளான மாதங்கி
மீனாளாய் வந்த மலைப்பூ….(3)

நிச்சயதார்த்தம்
———————

சித்திரைத் திங்களில் சித்திறை சொக்கனுக்கு
இத்தரை வந்த, இமவானின் -புத்திரியை,
தத்தாய் மலயத் துவசன் வளர்த்தவளை,
முத்தண்ணா செய்தார் மணம்….(4)….!

கல்யாணப் பத்திரிகை
——————————–

சித்திரைத் திங்கள் சனிக்கிழமை அன்றுபகல்
இத்தரையில் மீன இலக்கினத்தில் -பத்தரைக்கு
பின்னாலே மீனாளை அண்ணா மஹாவிஷ்ணு
கன்னிகா தானம்சொக் கர்க்கு….(5)

கல்யாணச் சத்திரம்
————————-

அத்தனைபேர் வந்ததால், ஆலவாயில் தங்கிட
சத்திரம் இல்லாமல் சம்புமையாள் -கைத்தலம்
பற்றுவதை மச்சான் பெருமாள் தமுக்கத்தின்
வெற்றிடத்தில் வைத்தான்பார் விஷ்ணு….(6)

சீர் வரிசை
————–

பிள்ளைக்கு சீராகப் பொன்னில் திருவோடும்
வெள்ளி முலாமிட்ட வெண்ணீறும் -கொள்ளியிடும்
குச்சிக்குப் பூணிட்டு காளைக்கு லாடமிட்டார்
மச்சினர் மல்லாந்த மால்….(7)

வரதட்சிணை
—————

குவளைக்குள் பிச்சைக்கூழ் கொள்வோன் கறாராய்
அவலுக்(கு) அளித்தேழை ஆன -குவளைக்கண்
மாலோனை முன்ஜாமீன் மன்றாடி கேட்பதற்குள்
பாலாழிக் கண்ணஅம் பேல்….(8)

ஜான்வாசம்
————–

சித்திரை வீதியில் ஜான்வாசம், கொட்டாவி
நித்திரை மைத்துனர் நீட்டிவிட -பித்தனமர்
அக்காளை அஞ்சி அலங்காநல் லூர்சென்று
உட்கார ஊர்வலத்திற்க்(கு) ஓய்வு….(9)

கண்ணூஞ்சல்

—————–

கண்ணூஞ்சல் ஆடினர் பெண்ணும்மாப் பிள்ளையும்
விண்ணூறும் தேவர்கள் வீசிட -மண்ணூறும்
மக்களண் ணாந்துமண மக்களைக் காட்டியிட்டார்
கக்கமுறை சேய்களுக்குக் கூழ்….(10)
மாப்பிளைக் கண்ணுக்கு மையிடுதல்
———————————————-

மாப்பிள்ளை கண்ணுக்கு மையிட்டோர் கைகளில்
தீப்புண் தகிக்க தவித்தனர் -கூப்பிட்ட
மைத்துனர் மாலன் மருத்துவனால் பச்சிலையை
வைத்தணைத்தார் நெற்றிக்கண் வீச்சு….(11)

காசியாத்திரை-மாப்பிள்ளைத் தோழன்
———————————————-

யாப்பில்லை என்றாலும் ஏழை தருமிக்கு
மாப்பிள்ளைத் தோழன் மரியாதை -கூப்பிட்டு
காசியாத்தி ரைக்கு குடைவிசிறி தந்தனன்
ஈசன் விளையாடல் இது….(12)

சிவகாசி யாத்திரை செல்லல் தடுக்க
விவகா ரமானமச்சான் விஷ்ணு -சிவகேசம்
மேலமர்ந்த கங்கையை மொண்டு தரையிலிட
ஆலவாய் காசிநகர் ஆச்சு….(13)

சம்பந்தி சண்டை
———————

சொக்கன்கல் யாணத்தில் சம்மந்தி சண்டையிட
விக்கினமாய் யாரும் வராததால் -சக்களத்தி
கங்கை குதித்திறங்க செங்கண்மால் தம்பதிக்கு
தன்கையில் ஏந்தித் தெளிப்பு….(14)

மாப்பிள்ளை-முறுக்கு
————————-

குனித்த தலையாய், குதிகால் நடையாய்
பனித்த விழியாய் பயந்து -தனித்திருந்து
புக்ககக் கூடலில் பூனையாய் வால்சுருட்டி
முக்கண்ணன் சொக்கன் முழிப்பு….(15)

மீனாளைப் பார்த்து மதுரை மயங்கியதில்
மானாளை முற்றும் மறந்தது -தூணாளும்
ஆய்ப்பிள்ளை மச்சான் அநுதா பமாயளிக்க
மாப்பிள்ளை வாயில் முறுக்கு….(16)

கன்னிகாதானம்
——————-

தாரையை வார்க்கையில் தன்சார்பில் தந்தையாய்
யாரை நிறுத்துவது என்றீசர் -பாரமுறப்
பாக்கையில் வந்தார் பெரிய புராணத்து
சேக்கிழார் சாமி சபைக்கு….(17)….!

பாம்பலையில் தூங்கும் பெருமாள் சுபாவமாம்
சோம்பலை விட்டு சுறுசுறுப்பாய் -மாம்பலம்
நல்லிகுப்பு சாமியிடம் செல்ல சகோதரிக்காய்
அள்ளிவந்தார் சேலை அலைந்து….(18)

கண்ணைப் பறிக்கின்ற கூறைப் புடவையில்
மின்னலென மேடையில் மீனாள்தன் -அண்ணன்
மடியமர நான்முகன் மாங்கல்யம் ஏந்த
முடிந்தான் அரன்முடிச்சு மூன்று….(19)

அம்மி மிதித்தேறி அருந்ததி பார்த்தல்
————————————————

சொக்கனுடம் மீனாட்சி அக்கினியைச் சுற்றிவரல்
வக்கணையாய்க் காண வசிட்டனுடன் -அக்கணம்
அம்மிமிதித்(து) ஏறி அருந்ததி பார்த்தனள்
விம்மிஆ னந்தநீர் விட்டு….(20)

கல்யாணத்திற்கு வந்த VIP பிள்ளைகள்
————————————————

கல்யானைக்(கு) அன்றுயிர் கொள்ளவைத்த சொக்கனைக்
கல்யாணம் கொள்கிறாள் கன்னிமீனாள் -தொல்யானைப்
பிள்ளையும் வேலனும் பார்த்ததால் பெற்றோர்க்கு
இல்லையொண் ணாத இனிப்பு….(21)

கல்யாணச் சாப்பாடு
—————————-

உண்ட பெருவிருந்தால் குண்டோ தரன்கொண்ட
தொண்டை அடைத்திடும் தாகத்தைக் -கண்டசிவன்
கைவை எனச்சொல்லக் கைமாற்றி வைத்தவன்முன்
வைகை விரைந்தாள் வளைந்து….(22)

மொய் எழுதுதல்
——————–
மாப்பிள்ளை சொக்கன் மணமகள் மீனாளைக்
காப்பிட்டுக் கொள்கிறார் கல்யாணம் -சாப்பிட்டு
மொய்யெழுது வோர்க்குமச்சான் மாலோலன் தாம்பூலப்
பையேந்தி நிற்பார் பணிந்து….(23)

நலங்கு
———

விடக்கண்டன் சொக்கன் விடாக்கண்டன் ஆகி
விடமறுத்தான் தேங்காய் நலங்கில் -படபடத்த
கெண்டை விழிமீனாள் கோபிக்க அஞ்சியரன்
அண்டத்துக் கோளை அளிப்பு….(24)

மாலை வரவேற்பு
——————–

மச்சினன் வேண்டியதால் மாலை வரவேற்பில்
அச்சிவன் தாண்டவம் ஆடிட -உச்சத்தில்
ஓடிவந்து மீனாள் ஒயிலாக சேர்ந்துகொள்ள
கூடலுக்குக் கூடுதல் கூத்து….(25)

சாந்தி முகூர்த்தம்
———————–

முதலிரவில் மீனாள் கதவடைத்துச் சொன்னாள்
மதுரைவாழ் மக்களின் மாண்பு –
பதவிசாய் நாகரீகப் பண்பு -பொதுவிடத்தில்
மாட்டோடும் ஓட்டோடும் மானத்தை வாங்காதீர்
வீட்டோட மாப்பிள்ளை வாள்….(26)

இச்சென்று முத்தமிட ஈசன் நெருங்கிட
நச்சென்று நாகம் நெளிந்தது -அச்சச்சோ
என்றலறி மீனாள் எகிறி குதித்தோட
அன்றுசிவ ராத்திரி ஆச்சு….(27)

பாலிகை கரைப்பு
———————–

மாளிகை மீனாள் மயானனை ஏற்றிட
பாலிகையை பெண்கள் பகிஷ்கரிப்பு -நாலுகை
மைத்துனன் வைகையில் மோகினியாய் தானியத்தைக்
கைத்தலம் ஏந்திக் கரைப்பு….(28)

கட்டுச் சாதக் கூடை
—————————

கழுத்தரவம் தன்னை கடாசி எறிந்தான்
அழுத்தியுமை யாளை அணைக்க -பழித்தனர்
கட்டு விரியன்கள் கட்டிக் குலாவிடும்
கட்டுச்சா தக்கூடை கண்டு….(29)

மலயத்துவசன் பிரிவோபசாரம்
—————————————

கலையத் துவங்கினர் கல்யாணம் கண்டோர்
அலையில் படுத்தான் அரிமால் -மலயத்
துவசன் வளர்ப்பை தழுவிப் பகர்ந்தான்
கவசமே கூடலைக் கா….(30)

சிவசிவ என்று சிரத்தில் மலையத்
துவசனார் குட்டித் தொழுது -அவசரமாய்
கெஞ்சினார் ”நஞ்சுண்டா மிஞ்சினாலும் மீனாளை
நெஞ்சில் அமிழ்தாய் நிறுத்து”….(31)

கோயிலுக்குல் புகுதல்
—————————-

சித்தரின் சன்னிதியில் சொக்கனும் மீனாளும்
சுத்திவந்து தம்பதியாய் சேவித்து -தத்தம்
கருவறைக்குள் செல்வதைக் கண்ட மதுரை
அரஹர சம்போவென்(று) ஆர்ப்பு….(32)
\

பல ஸ்ருதி
————-

மாதரசி மீனாள் மஹாதே வனைமணந்த
போதரிசி வாழ்த்தைப் பொழிந்தோர்க்கும் -காதுருசி
கொண்டதைக் கேட்டோர்க்கும் கேட்டதை சொன்னோர்க்கும்
விண்டதெலாம் வாணியவள் வாக்கு….(33)….!
——————————————————————————————————————————————————————————————————————————-

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

  1. முதல் ராத்திரிக்கும் சிவன் ராத்திரிக்கும்
    இதில் புரிந்தது விளக்கம்

  2. மீனாளின் கல்யாணம் இன்று போல் நிறையப் பிறந்தநாட்கள் காண வாழ்த்துகள். இது போல் உங்களின் நகைச்சுவைகளோடு வல்லமையும் வளர்க

Leave a Reply to Sathiyamani

Your email address will not be published. Required fields are marked *