சதீஷ் குமார் டோக்ரா

நம் முன்னோர்கள் அகம்-புறம் என்று நம் மனதிற்குள் செயல்படும் உள்ளுணர்வுகளையும் வெளியில் செயல்படும் புற உலகையும் வகுத்தனர். அகத்தின் பாதிப்பினால் புறமும், புறத்தின் பாதிப்பினால் அகமும் மாறுபடுகின்றது. அப்படித்தான் கடந்த 20-30 ஆண்டுகளில் வெளியுலகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் நமது உள் உணர்வுகளையும் மாற்றியமைத்துவிட்டன. இந்த மாற்றங்களில் மிக முக்கியமானதாக இருப்பது நம் சுயபிம்பத்தைப் பற்றி நாம் அளவுக்கு அதிகமாக கவலைப்படுவது. நான் குழந்தையாக இருந்தகாலத்தில் யாரும் தனது உண்மையான இயல்பை மறைத்துவிட்டு, தனக்கு சாதகமான ஒரு பிம்பத்தை வெளிக்காட்ட முயலமாட்டார்கள். தாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே மற்றவர்கள் தம்மைப் பார்க்கட்டும் என்கிற எளிமையோடு இருந்தார்கள். இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட குணாதிசயம் சிலரிடம் ஓங்கி நிற்கும். அதை வைத்துக்கொண்டே அந்த நபருக்கு நண்பர்கள் வட்டமோ அல்லது அறிமுகமானவர்கள் வட்டமோ ஒரு புனைப்பெயர் சூட்டிவிடுவார்கள். அந்த வகையில் அதிகமாகப் பேசுபவர் “லூசு” என்றும் எளிதாக ஏமாற்றப்படுபவர் “கோமாளி” என்றும் பெயர் பெறுவார்கள்.

நான் பிறந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தசராவுக்கு முன் ராமலீலா நடைபெறும். ராமபகவானின் முழு கதையையும் நாடகமாக மேடைகளில் நடித்துக் காட்டுவார்கள். இடையிடையே கொடை வழங்குபவர்களுக்கான விளம்பரங்கள் வரும். இதேபோல ஒரு விளம்பரத்தின்போது ஒருவர் பியாரா என்பவரின் கடையைக் குறிப்பிட்டு அங்கேதான் பொருள்கள் வாங்க வேண்டும். அங்கே தரமுள்ள பொருள்கள் கிடைக்கும் என்று விளம்பரம் செய்ய, அடுத்தவர், “எந்த பியாரா? அந்த லூசா?” என்று சொல்லிவிட, உடனே நாடகத்தின் இயக்குநர் அவசர அவசரமாக மேடைக்கு வந்து மன்னிப்பு கேட்டார்.

ஆனால், வேடிக்கையான உண்மை என்னவென்றால் ஊரில் பியாரா என்ற பெயருடன் சுற்றிக்கொண்டிருந்த பதினைந்து நபர்களில் “லூசு” என்று சொன்னால்தான் இவருடைய அடையாளம் தெளிவாகும். ஏனென்றால் யாரும் அவரைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதே இல்லை.

சில வாரங்களுக்கு முன் என் 95-வயது சித்தி பஞ்சாபிலிருந்து வந்தார். சற்றே உணர்வுப்பூர்வமான விஷயமாக இருந்தால் கண்ணீர் விட்டு அழத்தொடங்குவார். மனதிற்குள் என்ன இருக்கிறதோ அதனை அப்படியே வெளிப்படுத்தும் எளிமையான சுபாவம் கொண்டவர். தன் இயல்பை மீறி போலி பிம்பத்தை வெளிப்படுத்தும் எந்த முயற்சியும் அவரிடம் இல்லை.

கடந்த முப்பது ஆண்டுகளின் தலைமுறையினர் சுயபிம்பத்தைப் பற்றிய கவலைகளை அதிகம் கொண்டிருக்கிறார்கள். அதாவது எப்போது சிரிக்க வேண்டும், எப்போது அழ வேண்டும், எப்போது கோபப்பட வேண்டும், எவ்வளவு தூரத்திற்கு இந்த உணர்வுகளை வெளியில் காட்ட வேண்டுமென அந்தந்த சூழ்நிலைக்கேற்ப கணக்குப் போட்டுச் செய்கிறது இன்றைய தலைமுறை.

என் குழந்தைப்பருவத்தில் ஆங்கில திரைப்படங்களில் ஒரு மரணம் நடந்து உடலடக்கம் நடைபெறும்போது பளபளப்பான துணிகளில் இரங்கல் தெரிவிக்க வந்திருப்பவர்களையும், இறந்தவரின் மனைவியையும் அநாதையாகியுள்ள மகனையும் சோகமாக ஆனால் அமைதியாக நின்றிருப்பதை நம் நாட்டில் இறப்பின்போது வீட்டு உறுப்பினர்கள் உருண்டு உருண்டு அழுவதுடன் ஒப்பிட்டு “நம் நாட்டினர் உணர்வுகளுக்கு அடிமையானவர்கள்” என்று மன்னிப்புத் தொனியில் கூறுவோம்.

மேலை நாடுகளில் அன்றிலிருந்தது தொடரும் உணர்வுகளின் கட்டுப்பாடுகளுடன் வெளிப்படும் தேற்றத்தைக் காட்டும் வழக்கம் நம் நாட்டில் இன்னும் பரவவில்லை. உணர்வுகள் மனதிலும் உடலிலும் பரவி தண்ணீர் வடிந்து போவது போல் நீங்கிவிடும். இவ்வாறு உணர்வுகள் பரவி வடிந்து போவதை கிரேக்கர்கள் கதார்ஸிஸ் என்ற வருணிப்பார்கள். இப்பொழுது சுயபிம்பத்தைக் கெடுக்க விரும்பாத இளைஞர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மனதிற்குள்ளேயே பொத்தி வைப்பதால் மனஉளைச்சல் ஏற்படுகின்றது.

மகிழ்ச்சி எல்லையைத் தாண்டிப் போகும்போது பைத்தியமாக நடந்துகொள்ள மனம் துடிக்கிறது. சோகம் வரும்போது வெடித்து அழத் தோன்றுகிறது. ஆனால், நம் சுயபிம்பம் “அழாதே!” என்று கட்டளையிடுகிறது. முன்காலத்தில் அக்கம் பக்கத்து வீட்டிலுள்ள பெண்கள் ஒன்று கூடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அனைவரின் மகிழ்விலும், சோகத்திலும் பங்குதாரர்களாக இருப்பார்கள்.

இன்றைய உலகத்தில் மகிழ்ச்சியும் சோகமும் நம் தனிப்பட்ட சுமையாகிவிட்டது. அதைத் தனியாகவே சுமந்துகொண்டு போக வேண்டியுள்ளது.

மற்றவர்கள் உங்கள் சுமையைப் பகிரும் வகையில் அதற்கு வசதியாக சமூக ஊடகங்கள் பலவிதமான இமோஜிகள் கொடுத்துள்ளன. முன்பு சோகம் விசாரிக்க நண்பர்கள் கூட்டம் வரும். இப்பொழுது இமோஜிகள் கூட்டம் வருகின்றன. சோகமான இமோஜியின் சோகமுகமும் மாறாது. அதன் கண்ணுக்கு சற்று கீழே வழியும் கண்ணீரும் வழிந்து கொண்டுதான் இருக்கும். என்றைக்கும் தன் சோகத்தைச் சிரிப்பாக மாற்றாத, வழியும் கண்ணீரைத் துடைக்காத உங்கள் நண்பரால் அனுப்பப்பட்ட அந்த இமோஜி உங்கள் கணினியின் தரையிலோ, கைபேசியின் திரையிலோ அமர்ந்து உங்கள் சோகத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
============================================
Read my websites:
English: csprep.in
http://kambaramayanam.in/index.html
Tamil: dogratamil.com

My contact number:
+91 98400 93148

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *