======================

திருச்சி புலவர் இராமமூர்த்தி.

—————————————————

 

தற்கு  முன் எழுதிய கட்டுரையில்  சேய்மையிலிருந்து அண்மைநோக்கி வரும்

காட்சியின்  அழகு கூறப்பெற்றது. இனி, இக்கட்டுரையில்  அண்மையிலிருந்து  சேய்மையை  நோக்கும் காட்சி கூறப்பெறுகிறது.  திருக்குறளிலும் , இத்தகைய காட்சி உண்டு. ஒரு குளத்தில் மீன்கள் அங்குமிங்கும் நீந்துகின்றன. அந்தக் குளத்தருகே இரவுநேரத்தில் பெண்ணொருத்தி வருகிறாள். அக்காலத்து நீரினுள்  எட்டிப் பார்க்கிறாள். அந்தப் பெண்ணின் முகம் நீரில் தெரிகிறது. அருகில் வானத்து நிலவின் பிம்பமும் தெரிகிறது. அந்த நீரில் மீன்கள் அங்குமிங்கும் அலைகின்றன!  அதைக் கண்ட வள்ளுவர், மீன்கள் கலங்கித்திரிவதற்குக்  காரணம் கற்பிக்கிறார். அவை எதையோ பார்த்துக் கலங்கி விலகி, விலகி ஓடுவது போல் தெரிகிறது. இயல்பாகத் தம் அருகில் வரும் பெண்ணின் முகத்தைக் கண்டு அஞ்சி விலகாத மீன்கள் வானத்து நிலசுவின் வெண்திரை ஒளியைக் கண்டு வேறுபாடாக உணர்ந்து விலகுகின்றன!  அதாவது வழக்கமாக நாள்தோறும் இரவில் வரும் பெண்களைப்  போலில்லாமல், வெண்மை  ஒளிவீசி விளங்கும் நிலவைக் கண்டு மீன்கள் விலகி நீந்துவதாகத் தன்  குறிப்பை  ஏற்றிக் கூறுகிறார். அதே மீன்கள், வானத்தில் உள்ள விண்மீன்களும் நிலவின் பிம்பத்துடன் தெரியும் பெண்ணின் முகநிழலும் தோன்றுவதால், அவையும் கலங்கித்  திரிகின்றன, என்று கருத்து கின்றன, என்று வள்ளுவர் தன்குறிப்பை  ஏற்றிக் கூறுகிறார் ! அருகிலுள்ள நீரில் தெரியும் பிம்பங்களிலிருந்து குளத்து மீன்களையும், அதற்கும் மேலே தெரியும் வானத்து மீன்களையும் காண்பது, அண்மையிலிருந்து சேய்மையைக் காணும் காட்சியைக்  குறிக்கிறது! இதனை,

’மதியும்  மடந்தை முகனும்  அறியா 

  பதியிற்  கலங்கின  மீன்!’’

என்ற திருக்குறள் புலப்படுத்துகிறது. பெரிய புராணத்திலும்  கரும்புகலின் அருகில் நின்ற கடைசியர், அக்கரும்புகள், மூங்கில்போல்பருத்து  அடர்ந்து வளர்ந்திருப்பது  காடுபோல் இருப்பதாகக் கருதுகின்றனர். அதனைக்

’காடெலாம்  கழைக் கரும்பு ‘’

என்ற தொடறால் சேக்கிழார் விளக்குகிறார்! இன்னும் சற்றே எட்டிப் பார்த்தால்  அங்குள்ள சோலைகளின் செடி ,கொடிகளில் உள்ள சிறுகிளைகளாகிய குழைகளில்  இலைகள் தளிர்த்து அரும்புவது தோன்றுகின்றது! இதனைக்

‘’  காவெல்லாம் குழைக்கு  அரும்பு’’

என்று சேக்கிழார் பாடுகிறார். அதன்பின்னர் சற்றுத் தொலைவில் தெரியும் , வயல் நீரில்  கருமையான குவளைப்பூக்கள் மலர்கின்றன. அதனை அடுத்துள்ள நீரில், சங்குகள் நெருங்கி யுள்ளன! இதனைச் சேக்கிழார்,

‘’மாடெல்லாம்  கருங்குவளை, வயலெல்லாம் நெருங்கும் வளை ‘’

எனப்படுகிறார்! அவற்றை அடுத்து வெளியில் தெரியும் மரக்கிளைகளில்  மென்மையான அன்னங்கள் அமர்ந்திருக்கின்றன! அவற்றை அடுத்துப் புறத்தே தெரியும் குளங்களில்    எங்கெங்கும்  கடலன்னங்கள் எனப்படும் நாரைகள்  விளங்குகின்றன! இதனை,

‘’கோடெல்லாம் மடவன்னம்,  குளமெல்லாம்  கடலன்னம் ‘’

என்று புலவர் பாடுகின்றார். அதனையும் அடுத்து பக்கத்து நாடுகளை அப்பெண்கள் பார்க்கின்றனர்! அந்த நாடுகளை  நீர்வளம் பெருகிய சோழநாடு என்று கருதுகின்றனர்;  அதற்கும் அப்புறத்தே உள்ள நாடுகள் இச்சோழ நாட்டுக்கு இணையானவை அல்ல! என்றும் கருதுகின்றனர்! இதனைச் சேக்கிழார் ,

‘’நாடெல்லாம் நீர்நாடு  தனையொவ்வா  நலமெங்கும் ‘’

என்கிறார். இனி முழுப் பாடலையும் காண்போம் ,

‘’காடெல்லாம்  கழைக்கரும்பு  காவெல்லாம்  குழைக்கரும்பு

 மாடெல்லாம்  கருங்குவளை  வயலெல்லாம்  நெருங்குவளை

 கோடெல்லாம் மடவண்ணம்  குளமெல்லாம்  கடலன்னம்

 நாடெல்லாம்  நீர்நாடு  தனையொவ்வா  நலமெல்லாம்!’’

இப்பாடல் அருகிலிருந்து தொலைவில் பார்க்கும் நிலையைத் தெளிவாக்கு கின்றது.முதலில் கரும்பு வயல்,பின்னர் சோலைகளில் அரும்பும் குழைகள்,அடுத்து வயல்கள், அடுத்து வரப்புகள் , அடுத்து குளங்கள்,அடுத்து சோழ நாடு , அடுத்து உலகநாடுகள்  புலனாகின்றன.

இதில் சிந்தாந்தம் குறிக்கும் தியான நிலையை உய்த்துணரலாம். தியானம் செய்யும் போது அனைத்தும் உள்ளே ஒடுங்கி இறைமையை யோக நிலையில் அருகில் உணரலாம். அந்த ஒடுக்கத்தினுள், வெளிப்பிரபஞ்சம் யாவும் அடங்கி நிற்கும்! அதில் வெளியில் உள்ள பிரபஞ்ச தரிசனம் கிட்டும். உள்ளிருந்தே புறமெங்கும் கண்டறியும் சித்தி, தியான யோகத்தினர்க்கு  வாய்க்கும் என்ற தத்துவ உண்மையை, தெய்வச் சேக்கிழார் ஸ்வாமிகள் இப்பாடல் மூலம்  விளக்கியருளுகின்றார்.

========================================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *