மூதாட்டியைப் புணர்ந்த முனியன்

0

முனைவர் ஆ.சந்திரன்

உதவிப்பேராசிரியர்

தமிழ்த் துறை

தூயநெஞ்சக் கல்லூரி

திருப்பத்தூர் வேலூர்

————————————–

மார்பெலும்பை நன்றாகக் கவ்விய தூண்டில் முள்ளின் இழுவிசையில் நடந்துகொண்டிருந்தது சுகமாய் இருந்தது. மங்களான வெளிச்சத்தில் கால்கள் தரையில் படும் இடமும் தெளிவாகத் தெரியவில்லை. நிலவின் ஒளியற்ற இருளில் கண்களுக்கு காட்சிகள் மங்களாகவே தெரிந்தது. தெளிவற்ற பிம்பங்களைப் பார்த்தவாறே மெல்ல நடந்துகொண்டிருந்தான் முனியன்.

புருவத்தின் ஓரம் லேசாகக் கீரிச்சென்ற முள்ளின் சுவடு குருதியாய்க் கன்னத்தில் வழிந்தபோதுதான் இடது பக்கம் முள்செடிகள் இருப்பது அவனுக்குப் புரிந்தது. ஏனோ! அதுவும் அவனுக்கு இன்பமாகவே தோன்றியது.

இருளின் அடர்த்தி மெல்ல மெல்ல கூடிக்கொண்டே இருந்ததால் கல்களை எச்சரிக்கையாக எடுத்துவைத்து மெல்ல நடந்துகொண்டிருந்தான்.

சுற்றுமுற்றும் பார்த்து மெதுவாக நடந்துகொண்டிருந்த அவனுடைய கண்களில் தொலைவில் கொழுந்துவிட்டு எரியும் தீயின் ஒளி தென்பட்டது.

ஓடும் ரயிலை எட்டிப்பிடிப்பவன் போல் வேகமெடுத்த அவனுடைய கால்கள் ஒளி வந்த அந்த இடத்தை அடைந்து பிறகுதான் நின்றன. பூனையைப் போல் மெல்ல அருகில் சென்றபோது அங்கு கண்ட காட்சி அவனுக்கு அதிர்ச்சியைத் தந்தது.

அதற்குக் காரணம் யாருமற்ற அந்த வனாந்திரத்தில் ஒரு மூதாட்டி அடுப்பில் எதையே வேகவைத்துக் கொண்டிருந்தாள். அந்த இடத்தில் அவளைத் தவிர வேறு யாரும் இருக்கவில்லை.

நரைத்த கூந்தல். சுருக்கங்கள் பீடித்த தேகம். தளர்ந்த நடை என அணிவகுத்து நின்ற உறவுகளைப் பெற்ற மகிழ்ச்சி அவளது முகத்தில் தெரிந்தது.

கால்கடுக்க நெடுந்தூரம் நடந்த களைப்புடன் பசியும் கூட்டணி அமைத்து தாக்க மூதாட்டியிடம் உண்ண ஏதாவது கேட்கலாமா? என்று முனியன் யோசித்த போது, “இந்தா தம்பி” என்று ஒரு சிறு மண்பாண்டத்தில் எதையோ உண்ணத் தந்தாள்.

பசியில் “அது என்ன என்று ஆராயுமுன்” வயிற்றில் அடைக்கலம் அடைந்தது.

பசி நீங்கிய உடன் அந்த மூதாட்டியிடம் ஏதோ கேட்க வேண்டும் என்று நினைத்தான்.

ஆனால் அதற்குள் அவன் பயணம் மீண்டும் தொடர்ந்தது.

கொஞ்ச தூரம் நடந்ததும் அதுவரை இழுத்துவந்த தூண்டில் அவனை விட்டு திடீரென மறைந்தது.

ஏன் தூண்டில் காணாமல் போனது? எங்கு போனது? தன்னை ஏன் இங்கு இழுத்து வந்தது? போன்ற கேள்விகள் அவனைத் தொலைத்துக் கொண்டிருந்தபோது, சர்ர்ர்…னு வந்த அம்பு ஒன்று அவனது மார்பில் ஊடுருவி புற்றில் நுழைந்த நாகம் போல் முதுகில் தலையை எட்டிப்பார்த்தது.

அம்பைத் தொட்ட அவனது கரங்களை அருவி நீராய் பீரிட்ட குருதி நனைக்க சூரைக்காற்றில் சிக்குண்ட வாழை குலையாய்த் தலைசுற்றி மண்ணில் வீழ்ந்தான்.

திடுக்கிட்டு அலறிஅடித்துக்கொண்டு எழுந்த முனியனுக்குத் தன் மார்பில் ஏதும் இல்லாததை அறிந்த போதுதான் அனைத்தும் கனவென்று புரிந்தது.

கனவு அவனது நினைவைப் பின்னிக்கொள்ள உறக்கம் அவனை உதறிதள்ளிவிட்டு ஓடியது.

எழுந்து விளக்கைப் போட போன போது மின்சாரம் தடைப்பட்டிருப்பது தெரிந்தது.

படுக்கையில் ஊடல் கொண்ட காதலியுடன் போராடுவது போல் போரடித் தோற்றுப் போனதால் மீண்டும் மின்சாரம் வந்துள்ளதா? என்று பார்த்து ஏமாந்தவன், பூசையறையில் இருந்த மண் விளக்கை எடுத்து தீப்பந்தந்தைப் போல் எரியச் செய்தான்.

ஜன்னல் வழியாக சில்லென்று வந்த காற்று அவனைத் தழுவத்துடித்தது. அவனுக்கும் அதே உணர்வு வந்தால் ஜன்னலை நோக்கிப் போனான்.

வங்கி சேமிப்பில் சேர்ந்திருந்த பணத்தில் கட்டிய வீட்டில் நல்ல தரமான பளிங்கு கற்களை பலகடைகள் ஏறி இறங்கி தேர்வு செய்து பதித்தான். புதுமனை புகுவிழாவிற்கு வந்த நண்பர்கள் வீட்டை சுற்றிப்பார்த்துக்கொண்டிருந்த போது  “டிசைன் சூப்பர். செம்ம கலர். ஆனா.. யூ.பி. எஸ் போட்டிருந்தா நல்லா யிருக்கும்” என்று பேசிக்கொண்டிருந்தது முனியன் காதில் விழுந்தது. அதைக் கேட்காதவன் போல் அப்போது அவன் நடந்துகொண்டான்.

தீப்பந்தம் போல் எரிந்த விளக்கில் வெளியான வேம்பின் வாடை அவனைத் தழுவிக்கொள்ள ஜன்னல் நோக்கி வந்தது.

சில் காற்றில் தவழ்ந்து வந்த முல்லையின் மணமும் அகல்விளக்கில் இருந்து வந்த வேம்பின் மணமும் நான் நீ என மோதிக் கொள்வதை அவன் உணர்ந்தபோது வாழை இலையின் மேல் விழுந்த மழைத்துளிகள் அவன் காதில் சந்தடியில்லாமல் நுழைந்துகொண்டிருந்தன.

ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தான். பூமித்தாயின் வயிறு நிறைந்திருந்தது. மின்மினி போன்ற மின்னலின் ஒளியில் அது நன்றாகத் தெரிந்தது.

அப்போது கனவில் கண்ட மங்கிய இருள் அவனை வேதாளம் போல் பின் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

மங்கிய வெளிச்சித்தில் பார்த்த மூதாட்டியின் முகமோ? அவள் தந்த உணவோ? தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் அவற்றைத் தெளிவாகப் பார்க்க பகீரதனாய் முயன்று கொண்டிருந்தான்.

இறுதியாக வடக்கு நோக்கிச் செல்லும் பேருந்தில் ஏறி பயணப்பட்டான்.

பாதியில் குறுக்கிட்ட ஆற்றில் வெண்ணிற அலைகள் திருடனைத் துரத்துவது போல் ஓடிக்கொண்டிருந்தது.

சில மணிநேர பணயத்திற்குப் பிறகு பேருந்திலிருந்து இறங்கியவன் புற்களுக்கிடையே காலடிகள் பட்டுத்தேய்ந்த பாதையில் நடக்க ஆரம்பித்தான். தன் முதுகில் தொங்கிய பையை அவ்வப்போது சரிசெய்தபடியே நடந்துகொண்டிருந்தான்.

உழவர்கள் வயலில் மூழ்கியிருந்தனர். அவர்களைக் கண்டு அஞ்சிய சர்ப்பம் ஒன்று முனியனின் பாதையில் நாலடிமுன்னார் உயிர் பிழைத்துக்கொள்ள ஓடியது. வளைந்து நெளிந்து தாவிக் குதித்தோடிய அதன் அழகை ரசித்தபடியே படம் பிடித்தவன் பாம்பின் உருவம் மறைந்ததும் அங்கிருந்து புறப்பட்டான்.

அவனது இடப்பக்கத்தைத் தாக்கிக்கொண்டிருந்த சூரியனின் கதிர்கள் இப்போது அவனது தலையை மட்டும் குறிவைத்து தாக்க ஆரம்பித்தது. அதனால் களைத்துப்போனவன் பையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான். அதில் இருந்த தண்ணீரைத் தேடி அதை நாக்கில் படும்படிசெய்தான்.

தன்னைக் கடந்து போன மேகத்துண்டுகளைப் பார்த்து அவ்வப்போது நன்றி கூறியவாறு நடந்துகொண்டிருந்தவன் நாவறண்டு தண்ணீர் எங்கு கிடைக்கும் என்று தேட ஆரம்பித்தான்.

ஒரு வழியாக இடப்பக்கமாக இருந்த ஓரு நீரோடை அவனது கண்ணில் பட திருவிழாவில் தொலைந்த குழந்தையைத் திரும்பப்பெற்றவர் போல் அதை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றான்.

மலையிலிருந்து பள்ளத்தை நோக்கிச் செல்லும் காட்டாற்றில் தண்ணீர் தெள்ளத் தெளிவாக இருந்தது.

அதைப் பார்த்ததும் பருகவேண்டும் என்ற ஆவல் மேலிட தன்முதுகில் இருந்த பையை இறக்கி அருகிலிருந்த ஒரு சிறு கல்லின் மேல் வைத்தான். மெல்ல தண்ணீரின் மேற்பரப்பைத் தன் உள்ளங்கையால் இருபுறமும் விளக்கியபோது அவன் முன்னர் ஒரு சிட்டுக் குருவி படபடத்துக்கொண்டிருந்தைப் பார்த்தான்.

பேருந்து நிறுத்ததில் இறங்கிபோது அக்குருவியைப் பார்த்ததாக ஒரு நினைவு அவனுள் தோன்றி மறைந்தது.

அதே நினைவுடன் இருகையால் தண்ணீரை அள்ளி வாயருகே கொண்டு சென்றபோது அவன் காதுகளை அடைந்த அந்தக் குரல் கையிலிருந்த தண்ணீரை கை கழுவ செய்தது.

“அண்ணே! அந்தத் தண்ணீரைக் குடிக்காதீங்க” என்று கத்தியபடி ஒரு சிறுவன் முனியனை நோக்கி மூச்சிறைக்க ஓடிவந்தான்.

அது நல்ல தண்ணி இல்லண்ணே! குடிக்க தண்ணி வேணுமா? வாங்க என்று அழைத்தான்.

“தண்ணீர் நல்லா தானே இருக்கு. ஏன் குடிக்கக் கூடாது?” என்று தெள்ளத் தெளிவாக இருந்த அதன் தோற்றம் அவனைக் கேட்க வைத்தது.

ஆனால் கோவணத்துடன் இருந்த அச்சிறுவனிடம் அதைப் பற்றி ஏதும் கேட்க வில்லை.

மஞ்சு புற்கள் நிறைந்த இங்கொன்றும் அங்கொன்றும் சிதறிக்கிடந்த தேயாத கால்தடங்கள் தென்பட்ட பாதையில் நடக்க ஆரம்பித்த சிறுவன் வலப்பக்கத்தில் கொஞ்ச தொலைவில் இருந்த பாறையைச் சுட்டிக்காட்டி “அதோ அந்தப் பாறையில் ஒரு சுனை இருக்கு. அங்க நல்ல தண்ணீ கிடைக்கும் வாங்க“ என்று கூறியவாறே தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

“ஆமா? தம்பி நீ இங்க தனியா என்ன பண்ற? ஸ்கூல் போகறதுதில்லையா?” என்று முனியன் கேட்டான்.

அம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல அதனால ஸ்கூலுக்கு லீவு போட்டுட்டு மாடு மேய்க்க வந்துட்டேன்.

என்ற பதிலைக் கேட்டு முனியன் அடுத்த கேள்வியைத் தயக்கமின்றி கேட்டான். என்ன வகுப்பு படிக்கிறாய் என்று.

“எட்டாம் வகுப்பு“ என்று ஆங்கிலத்தில் கூறியது அவனது மண்டையில் ஆணி அடித்தது போல் அழுத்தமாய் பதிந்தது.

தான் கனவில் கண்ட காட்சியைப் பற்றிக் கூறி மூதாட்டி பற்றி விசாரித்தான்.

அவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த சிறுவன் புன்னகைப்பதாக அவனுக்குத் தோன்றினாலும் ஏன் சிரிக்கின்றாய் என்று கேட்கவில்லை.

அதற்குள் தண்ணீர் இருந்த சுனையை அடைந்ததால் முனியன் தன்தாகத்தைத் தீர்த்துக்கொண்டான்.

தாகம் தணிந்த தெம்பில் “தம்பி இங்க பாம்புமலை எங்கிருக்கு என்று கேட்க” சற்றும் தாமதிக்காத அந்தச் சிறுவன் வடக்கு திசையை நோக்கியிருந்த மலையைச் சுட்டிக்காட்டி “அதோ தெரியுதே அந்த ஆர்ப்பு மரக்காட்டைத் தண்டினால் நீங்கத் தேடிவந்தது கிடைக்கும்” என்று கூறிய சிறுவன் மாடுகள் பற்றிய நினைவு வந்தவனாய் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

தன்னுடைய  இலக்கு கண்ணில் தெரிந்த தெம்பில் வேகமாக நடந்த முனியன் ஆர்ப்பு மரக்காட்டை நெருங்கியபோது தான் கனவில் கண்ட பாதை எதிர்படுவதாய் உணர ஆரம்பித்தான்.

அதனால் இன்னும் வேகமாய் நடக்க ஆரம்பித்தான். இங்கொன்னும் அங்கொன்றுமாய் இருந்த நெல்லி மரங்களில் சிலவற்றில் மட்டும் நெல்லிக்காய் காய்த்திருப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டே சென்றவனின் கண்முன்னர் பெரிய யானையை ஒத்த பாறை திடீரெனத் தோன்றியது. அதன் உச்சியில் பிரண்டைக் கொடிகள் பாம்புகள் போல் காற்றில் அசைந்து கொண்டிருந்தன.

அதைக் கடந்தவனுக்கு பிரமிப்பு அதிகமானது அச்சு அசல் கடந்து வந்த மலையைப் போன்ற மற்றொரு மலை எதிரில் கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது. அதைக் கடந்தவனுக்கு மயக்கம் வருவது போல் ஆனது. மீண்டும் ஒரு மலை அதே போல் இருந்தது.

திரும்பிப் போய் விடலாம் என்று கூட அவன் நினைத்தான். ஆனால் ஏதோ ஒன்று அவனைத் தொடர்ந்து முன்னேறிச் செல்லத் தூண்டுவதாய் அவன் உணர்ந்தான்.

ஏழு மலைகளைத் தாண்டியபோது இதுவரை கடந்துவந்த மலைகளை ஒன்று சேர்த்ததுபோல் பருத்த பாறை கண்ணில் பட்டது. அந்தப் பாறையின் நடுவில் ஒரு பெரிய நுழைவு வாயில் போன்ற தோற்றம் இருந்தது. அதனருகே சென்றான். அதுவரை உடன் வந்த சிட்டுக் குருவி திடீரெனக் காணாமல் போனது.

தயக்கத்துடன் அந்த வாயிலினுள் நுழைந்தவன் கனவில் கண்ட மூதாட்டியை நேரில் பார்த்தான். ஆனால் இப்போது அவனுக்கு பிரமிப்பு ஏதும் ஏற்படவில்லை.

அவனைப் பார்த்த அந்த மூதாட்டி தன்னிருக்கரங்களை நீட்டி அவனை தன்னருகே அழைத்தாள். அவளுடைய நெற்றியில் இருந்த திலகத்தைப் பார்த்தவாறே சென்று அருகில் நின்றான் பித்துப் பிடித்தவனாய்.

நீட்டிய கரங்களால் அவனை ஆரத்தழுவினாள் அம்மூதாட்டி.. அவளுடைய கொங்கைகள் அவனுடைய மார்பில் ஈட்டியாய்த் துளைத்தது.

அவளை விளக்க முயன்றகொண்டிருந்த போது மூதாட்டியின் சாயம் மெல்ல மெல்லவிலகியது.

உடுத்தியிருந்த இருவரின் ஆடைகளும் மண்ணைத் தஞ்சமடைந்தன.

இருவரின் சரீரங்களும் பாம்புகளாய்ப் பின்னிக்கொண்டு நின்றன.

சூரியன் பூமியை நோக்கி வீசியெறிந்த ஒளிக்கதிர்களுக்கு அஞ்சி இருவரும் காற்றில் மறைத்துக்கொண்டார்கள்.

அது சரி முனியன் பற்றி கூறும் நீ யார்? என்று கேட்கிறீர்களா?

ம்…. ம்…. புரிகிறது

………………………… நான் தான் முனியனின் நிழல்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *