க. பாலசுப்பிரமணியன்

தோல்விகளுக்கு யார் காரணம் ?

பல நேரங்களில் நாம் நம்முடைய தோல்விகளுக்கு மற்றவர்களைப் பொறுப்பாக்குகின்றோம். எப்பொழுதுமே நமது தோல்விகளுக்கு நாமே காரணமாக இருக்கின்றோம் என்பதை உணருவதில்லை அல்லது உணர மறுக்கின்றோம். தோல்விகளில் நம்முடைய பங்கு எவ்வளவு உண்மையானது என்பதை உணர்ந்தால் தன்னுடைய சுய கௌரவத்திற்கு தாக்குதல் ஏற்படுமோ என்ற பயத்தில் உண்மையிலிருந்து விலகி நிற்கின்றோம்.  மற்றவர்கள் நம்முடைய தோல்விக்காக நாம் ஏற்படுத்தும் சூழ்நிலைகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். நாம் ஏன் மற்றவர்களை நம்முடைய தோல்விகளுக்கு பொறுப்பாக்குகின்றோம்? இதற்கு சில காரணங்கள் இருக்கின்றன.

  1. நாம் நம்முடைய சுய தனித்திறன்களை அறிந்து கொள்வதிலும் . நம்முடைய தனித்திறன்கள் மீதும் நம்பிக்கை வைப்பதில்லை. அவைகளைக் குறைத்து மதிப்பிடுகின்றோம். அல்லது நமது திறன்கள் விலைபோகுமா என்ற ஒரு சந்தேகம் நமக்கு இருந்து கொண்டே இருக்கின்றது. நாம் நம்மை மற்றவர்களிடம் ஒப்பிடும் பொழுது பல நேரங்களில் நமது திறன்கள் மீது நாம் கொண்ட பார்வை துல்லியமாக இல்லாமல் பாரபட்சமாகவோ அல்லது ஒருவித தயக்கத்துடனோ இருக்கின்றது. இதை மற்றவர்கள் அறிந்து தங்களுடைய நம்பிக்கைகளின் அடிப்படையிலும் தங்களுடைய புத்திசாலித்தனமான உள்ளீடுகள் மூலமாகவும் தங்களுக்குச் சாதகமாக மாற்றிவிடுகின்றனர்.
  1. வெற்றிப்பாதைகளுக்கு ஏற்றவாறு நாம் நமது திறன்களை புதிப்பித்துக்கொள்வதில்லை. பல நேரங்களில் நாம் நம்முடைய பழைய அறிவுகள், சிந்தனைகள், கற்றல்கள், திறன்கள் ஆகியவற்றை பெரும் சொத்தாக நினைத்து அவைகளின் அடிவாரகங்களில் கட்டப்பட்ட மாளிகைகளில் சொகுசாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காலப் போக்கில் இவைகள் உபயோகமற்றவைகளாகவும் தேவையற்றவைகளாகவும்  மாறி நமக்கு உதவாமல் உளுத்துப் போகின்றன. வேகமாக மாறிவரும் அறிவு மற்றும் திறன்களின் சந்தையில் நாம் தனிமரமாக தோல்வியின் சின்னமாக நின்றுவிடுகின்றோம். இதற்கு யார் பொறுப்பு? மற்றவர்களோ தங்கள் அறிவினையும் சிந்தனைகளையும் திறன்களையும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாகக் கூர்மையாக்கிக் கொண்டு வருகின்றனர்.  வெற்றிக்கனியை பிடிப்பதற்குத் தங்களை தயார் செய்து கொண்டு வருகின்றனர். பல நேரங்களில் அவர்கள் நம்மை விட அனுபவத்தில் குறைந்தவர்களாகவும் வயதில் குறைந்தவர்களாகவும் இருக்க வாய்ப்புண்டு. அந்த நேரங்களில் நாம் அவர்களைக் கண்டு பொறாமை கொண்டோ அல்லது வெறுப்புக் கொண்டோ அவர்களை நம்முடைய தோல்விகளுக்கு காரணமாகக் காட்டுகின்றோம். இதை வெல்ல ஒரே ஒரு வழி – நித்தம் நம்முடைய அறிவையும் திறன்களையும் சீர் செய்து கொண்டு இருப்பதுதான் !
  1. தோல்விகளைக் கண்டு துவளாமல் உயர்வது எப்படி என்று நாம் சிந்திப்பதில்லை.  ஒருமுறை எட்மண்ட் ஹில்லாரி (Edmund Hillary) எவரெஸ்ட் சிகரத்தை அடைவதற்காக தன்னுடைய முதல் முயற்சியை மேற்கொண்ட பொழுது தோல்வியைத் தழுவினார். அவர் இமயத்தை விட்டு கீழே இறங்கியதும் அந்தச் சிகரத்தை ஒரு முறை நோக்கி சொன்னார்: ” நீ இதைவிட பெரியதாக உயரமுடியாது. ஆனால் நான் இப்பொழுது இருப்பதைவிட பெரியவனாக உயர முடியும்.” என்னே! ஒரு மனப்பான்மை. தோல்விகள் நமக்கு கற்றலையும் துணிவையும் கொடுக்கக்கூடியவை. அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளாமல் மற்றவர்களை அந்தத் தோல்விக்கு காரணமாக ஆக்குவது நமது குறுகிய மனப்பான்மையையும் நமது இயலாமையின் வெளிப்பாட்டையும் காட்டுகின்றது.
  1. சில நேரங்களில் தோல்விகளின் தாக்குதல்களிருந்து விடுபட நாம் மாறுபட்ட சிந்தனைகளைக் (Out of Box thinking) கையாள வேண்டும். நேர்கோட்டுச் சிந்தனை (Linear thinking) முறைகள் பல நேரங்களில் பயன் அளிப்பதில்லை. எனவே ஒவ்வொரு நேரத்தில் எப்படிப்பட்ட வழிமுறைகளைக் கையாள வேண்டும் என்று சிந்தித்து அதற்குத் தக்கவாறு கையாள வேண்டும். செகப்பிரியர் (Shakespeare) எழுதிய “வெனிஸ் நாடு வியாபாரி” (The Merchant of Venice) என்ற கதையிலே தன்னுடைய தேவைக்காக ஷைலக் (Shylock) என்பவரிடம் ஒரு தொகையைக் கடன் வாங்கிய அன்டோனியோ (Antonio) என்பவர் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் அந்தக் கடனைத் திருப்பித் தருவதாக வாக்குறுதி அளிக்க, அது தவறினால் தன்னுடைய இதயத்திலிருக்கும் சந்தையிலிருந்து ஒரு பவுண்டு சதையைத் தருவதாக வாக்குறுதி அளிக்கின்றார். குறிப்பிட்ட காலத்தில் அந்தப் பணத்தை திருப்பித் தர முடியாததால் ஷைலக் ஒரு பவுண்டு இதயச் சதையைக் கேட்க பல நண்பர்கள் அதற்குப் பதிலாக பலமுறை அதிகமாகப் பணம் தருவதாகவும் தன்னுடைய கோரிக்கையைக் கைவிட்டுவிடுமாறும் ஷைலக்கை கேட்கின்றனர். இதற்குப் பணியாத அந்த வியாபாரி ஷைலக்கிடம் மாறுவேடத்தில் ஒரு வழக்குரைஞராக வந்த போர்ஷியா (Portia) என்ற பெண் அந்தக் கோரிக்கையை ஏற்று “உங்களுக்கு ஒரு பவுண்டு இதயச் சதை நிச்சயமாகக் கிடைக்கும். ஆனால் அதை எடுக்கும் பொழுது ஒரு துளி இரத்தம் வந்தாலும் உங்களுடைய பணம் மட்டுமின்றி உங்கள் வாழ்வும் போய்விடும் என்று கூறி அந்த வழக்கை வென்று விடுகின்றார். இந்த கதை ஒரு மாறுபட்ட சிந்தைக்கு (Lateral thinking) முகாந்திரமாக அமைகின்றது. பல நேரங்களில் மாறுபட்ட சிந்தனைகள் பல பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தோல்விகளைத் தவிர்ப்பதற்கும் ஏதுவாக அமைகின்றது.
  2. தோல்விகள் நிரந்தரம் அல்ல; மற்றும் தோல்விகள் ஒரு முடிவின் வெளிப்பாடு அல்ல. வாழ்க்கை என்ற பயணத்திலும் முன்னேற்றம் என்ற பாதையிலும் தோல்விகள் சில நேரங்களில் தடைக்கற்கள். அவைகளைக் கடந்து செல்ல நாம் பயில வேண்டும். இந்த வழியிலே வெற்றிகண்டவர்கள் சரித்திரம் படைக்கின்றார்கள் ஆபிரஹாம் லிங்கனின் (Abraham Lincoln) வாழ்க்கை இதற்கு ஒரு சான்று. இது போன்று சரித்திரம் படைத்தவர்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை நமக்கு பாடங்கள் சொல்லித் தருகின்றன. அவர்கள் வழிகள் நம்முடைய பாதைகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அனுபவங்கள் ஆசானாக இருக்கும்பொழுது தோல்விகளுக்குத் தோள்கொடுக்கத் துயரங்கள் வருவதில்லை. தோல்விகளைப் பாராட்டுபவர்கள் இருக்கும் இடத்திலேயே நின்று குரல் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுடைய கதைகளைக் கேட்பதற்கு நபர்கள் மிகக் குறைவு.

எனவே நாம் நிமிர்ந்து நிற்கப் பழகிக் கொள்ளவேண்டும். தோல்விகளைச்  சிறிய நிகழ்வுகளாகக் கருதி மேலே வாழ்க்கைப் பயணத்தைத் தொடர கற்றுக்கொள்ள வேண்டும்.

என்ன, முயன்று பார்க்கலாமா ?

(தொடரும் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *