முனைவர் சே.கல்பனா

உதவிப்பேராசிரியர்

தமிழியல்துறை

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

 தமிழ் சூழலில் இடையறவு படாமல் வாசிக்கப்பட்டு, ஆய்வுகள் செய்யப்பட்ட/ செய்யப்படும் பிரதியாக விளங்குவது திருக்குறள். இடைக்காலமாகிய 9 ஆம் நூற்றாண்டிலிருந்து 13 ஆம் நூற்றாண்டு வரை தமிழ்ப் பனுவல்களுக்கு உரைகள் பல தோன்றின. இடைக்காலத்தை உரையெனும் கயிற்றால் பிணிக்கப்பட்ட காலம் என்பர் வ.சுப. மாணிக்கனார். திருக்குறளுக்கு எழுந்த முதலுரை/கிடைத்த உரை மணக்குடவர் உரை. இருப்பினும் பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் பல பதிப்புகளைக் கண்டதும் மிகுதியாக வாசிக்கப்பட்டதும், உரைக்கே பல உரை தோன்றியதும் பரிமேலழகர் உரை. பரிமேலழகருக்கு முந்தைய உரையாளர்கள் ஒவ்வொரு அதிகாரத்துள்ளும் குறள் வைப்புமுறையைத் தங்கள் வாசிப்புக்குத் தக மாற்றி வாசித்திருந்தாலும் இன்று நாம் பரிமேலழகர் குறள் வைப்பு முறையினையே பின்பற்றுகின்றோம்.

ஆய்வுலகில் புதிய புதிய முறைமைகளைப் பயன்படுத்தும் இற்றை நாட்களில் பழம் பிரதிகளை மறு வாசிப்பிற்கு உட்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அந்நிலையில் பரிமேலழகருக்கு முன் திருக்குறளுக்கு உரையெழுதிய பரிதியாரைப் பற்றிய உரையாடல் அவசியமாகின்றது.

பரிதியின் உரையில் இலக்கணச் செறிவோ, இலக்கிய நுட்பமோ இருப்பதைப் பார்க்க முடியாது. ஆனாலும் இவர் உரையினை வாசிக்கப் புகும் வாசகன் அவ்வுரையில் ஒரு எளிமைத் தன்மை இருப்பதை உணரலாம். பரிதியார் வைதீகப் பின்னணியில் சைவ சமயம் சார்ந்த கருத்தாடலைக் குறள் விளக்கத்திற்குப் பயன்படுத்துகின்றார். இவரது உரை பொழிப்புரை போன்றோ விளக்கவுரை போன்றோ அமையாமல் குறள் கருத்தினையறிந்து கொண்டு தம் விருப்பத்திற்கேற்ப, மிகுத்தும் குறைத்தும் பொருள் கூறுகின்றார். மேலும் சில குறள்களுக்கு விளக்கம் தரும்போது ஒற்றை வரியிலும், சில குறள்களுக்குப் புராணக் கதைகளை மேற்கோளாகவும், பிரசங்கம் போலவும், காணப்படுகிறது. சில இடங்களில் குறளுக்கும் பொருளுக்கும் தொடர்பு இல்லாத நிலையிலும் உள்ளது. வடசொற்களும், வழக்குச் சொற்களும் மிகுந்து காணப்படுகின்றன. குறளையும் இவரது உரையையும் ஒற்றுமைப்படுத்தி அறிந்து கொள்ளுதல் ஒரு கயிற்றலாகிய பாலத்தில் காவிரியைக் கடக்க நினைத்தலை ஒக்கும் என்பர் ச.தண்டபாணி தேசிகர். இவரது உரையில் பாலின் தொடக்கத்தில் விளக்கவுரையோ, இயல் பிரிப்புப் பற்றிய ஆராய்ச்சியோ இல்லை. அதிகார முறை வைப்பைத் தொடர்ப்புபடுத்திக் காட்டல், ஒரே அதிகாரத்திற்குள் குறட்பாக்களைப் பொருள் நோக்கிப் பிரித்து அமைத்தல் ஆகிய முறைகளும் இல்லை.

பெயர் விளக்கம்

பருதியார், பரிதியார் என இவர் அழைக்கப்பெறுகின்றார். பரிதி பருதி இரண்டுமே வட்டதைக் குறித்து ஞாயிற்றைக் குறிக்கும் பெயர்கள். பரிதியார் என்னும் பெயர் பாடலின் எதுகை நோக்கி பருதியார் என வழங்கப்பட்டது எனலாம்.

பரிதியார் என்னும் பெயரினைக் கொண்டு இவர் ஊர் தஞ்சைக்கு அருகில் உள்ள திருப்பரிதி நியமமாகயிருக்கலாம் என மு.வை. அரவிந்தன் கருதுகின்றார். இக்கோயில் பாடல் பெற்ற தலமாக அமைந்துள்ளது. திருஞான சம்பந்தர் தேவாரப் பாடலில் இவ்வூரைப் பண்கொண்ட வண்டினம் பாடியாடும் பரிதி நியமம் எனக் குறிப்பிடுகின்றார்.

பரிதியார் உரை – பதிப்பு

1812 – இல் திருக்குறள் மூலநூல் அச்சேற்றப்படுகின்றது. அதன் பிறகு பரிமேலழகர் உரையுடன் பலமுறை அச்சேற்றப்பட்டது. பரிதியின் உரை 1935- இல் பதிப்பிக்கப்பட்டதாக ச.தண்டபாணி தேசிகரும் 1938- இல் பதிப்பிக்கப்பட்டதாக ச.மெய்ப்பன் வள்ளுவம் இதழிலும் குறிப்பிடுகின்றனர். பதிப்பித்தவர் துடிசைகிழார் என்னும் குறிப்பும் காணப்பெறுகிறது. பதிப்பினைத் துடிசைகிழார் கிருஷ்ண விலாச பிரஸ், கோயம்புத்தூரில் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பு மறைமலையடிகள் நூலகத்தில் 14 அதிகாரத்துக்கு மட்டும் கிடைத்துள்ளது. இப் பதிப்பில் பரிதியாரின் குறள் வைப்பினைப் பின்பற்றி, மணக்குடவர், பரிமேலழகர் வைப்பு முறைகளின் எண்ணைக் குறிப்பிட்டுப் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இதன் முகப்புப் பக்கத்தில் திருக்குறள் – பரிதியுரை By துடியைகிழார் என்றும் கிருஷ்ண விலாசபிரஸ், கோயம்புத்தூர் என்ற குறிப்பு மட்டும் காணப்படுகின்றது. ஆண்டு பற்றிய எந்த குறிப்பும் குறிப்பிடப்படவில்லை.

இதன் பிறகு பரிதியார் உரை தனித்துப் பதிப்பிக்கப்பட்டாதாகத் தெரியவில்லை. 1951- இல் திருக்குறள் பழைய உரைகள் தொகுப்புகளாகத் தொகுக்கப்பட்ட போது பரிதியின் உரையும் தொகுக்கப்பட்டுள்ளது.

ச.தண்பாணி தேசிகர் 1951 – இல் தொகுத்த திருக்குறள் உரைவளம் பதிப்பு முன்னுரையில்,

இப்பதிப்பு வெளிவர ஒப்புநோக்கக் கிடைத்த ஏடுகள் பல செய்யாமற் செய்த உதவியையுடைய ஏடு தேடித் தந்த இன்றமிழ்ப் பெருமக்களை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.

  1. வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் பரிதியுரை 1
  2. வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டர் காலிங்கர் உரை 1
  3. இலக்கண விளக்கம் சோமசுந்தர தேசிகர் வீட்டுப் பிரதி பழைய உரை 1
  4. தரும்புர ஆதீனத்துப் புத்தகசாலைப் பிரதி, பரிமேலழகர் உரை

இங்ஙனம் ஏடுகள் அளித்துத் தமிழாக்கத்திற்கு உதவிய அனைவருக்கும் அடியேன் செய்யும் கைமாறு யாதுளது என்று குறிப்பிடுகின்றார்.

இதனைத் தொடர்ந்து 1963 – இல் கோவை இராம கிருஷ்ணா மடம் வெளியிட்ட திருக்குறள் ஆராய்ச்சிப் பதிப்பு என்னும் தொகுப்பிலும், 1969 – இல் திருப்பனந்தாள் காசிமடம் வெளியிட்டுள்ள திருக்குறள் உரைக்கொத்திலும் பரிதியின் உரை தொகுத்து பதிப்பிக்கப் பட்டுள்ளது. ச. தண்டபானி தேசிகர் 1981 – இல் மீண்டும் மதுரைப் பதிப்பகத்தின் வழி திருக்குறள் உரைக் களஞ்சியம் என்னும் தொகுப்பினைக் கொண்டு வந்துள்ளார்.

காலம்

பரிதியாரின் காலத்தைச் சில அகப் புறச் சான்றுகளின் வழி அறியலாம். கி.பி. 13 – ஆம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த விசய கண்ட கோபாலன் என்னும் தெலுங்கு சோழனின் 22 – ஆம் ஆட்சியாண்டில் கி.பி (1271) கிடைத்த கல்வெட்டு ஒன்று வண் துவரப் பெருமாளான பரிமேலழகிய பெருமாள் தாதன் என்னும் பெயரைக் குறிப்பிடுகின்றது. இப்பெயர் பரிமேலழகரையே குறிக்கிறது என்பர். பெருந்தொகைப் பாடல் ஒன்று,

செவ்வி முப்பாலுக்கு

ஒர்உரை யின்றி ஒன்பது சென்றும்

ஐயுற வாக நையுறு காலை

குறட்பாத் தமிழ்மனு நூலிற்கு

விழுபொருள் தோன்ற விரித்தினிது உரைத்தனன்

பரிமேலழகன் எனப் பெயர் படைத்துத்

தரைமேல் உதித்த தலைமை யோனே

எனக் குறிப்பிடுவதால், பரிமேலழகருக்கு முன் ஒன்பது உரையாசிரியர்கள் இருந்துள்ளனர் என்பதும் அவர்களுள் பரிதியாரும் ஒருவர் என்பதும் தெளிவாகின்றது. அத்துடன் தனிப்பாடலும் பரிமேலழகருக்கு முன் பரிதியாரைக் குறிப்பிடுகின்றது. மேலும்,

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்

குலனுடையான் கண்ணே உள (223)

என்ற குறளுக்கு யான் வறியவன் என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான் பிறர்கண் சொல்லாமையும், அதனைத் தன்கண் சொன்னார்க்கு மாற்றாது ஈதலும், இவை இரண்டும் உளவாவன குடிப்பிறந்தான் கண்ணே என்று விளக்கம் கூறிய பின்னர், பரிமேலழகர் இனி இலனென்னும் எவ்வம் உரையாமை என்பதற்கு அவ்விளிவரவை ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன் குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும் பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையில் கொடுத்தல் எனவும் உரைப்பார் உளர் என மணக்குடவர் மற்றும் பரிதியின் உரைகளை எடுத்துக்காட்டுவர். அதே போல்

நகையும் உவகையும் கொல்லும் சினத்திற்

பகையும் உளவோ பிற (304)

என்னும் குறளுக்கு முகத்தில் சிரிப்பும் மனத்தில் களிப்பும் கொல்லுகின்ற சினத்திலும் எனப் பரிதியார் உரையைப் பின்பற்றி பரிமேலழகர் முகத்தின்கண் நகையும், மனத்தின்கண் உவகையும் கொன்று கொண்டு எழுகின்ற சினம் என உரைக்கின்றார்.

பரிதியார் அவருக்கு முன் வாழ்ந்த காலிங்கரின் உரையைச் சில குறளில் அப்படியே எடுத்து ஆண்டுள்ளார். ஒழுக்காறாக் கொள்க(616), கொடுப்பது அழுக்கறுப்பான்(163), அவ்வித்து அழுக்காறு(167),பல்லார் முனிய(191),நயனிலன்(193) நயன்சாரா(194) அதேபோல குறள் வைப்பு முறையிலும் காலிங்கரும் பரிதியும் பெரிதும் ஒத்துக்காணப்படுகின்றனர்.

புறப்பொருள் வெண்பா மாலையில் குறிப்பிடப்படும் எண்வகை மாலையினையும், ஆண்டாள் குறிப்பிடும் மார்கழி நீராடலையும் பரிதியார் தமது உரையினில் குறிப்பிடுவதால் அவர்களுக்குப் பின் வாழ்ந்தவர் என அறியமுடிகின்றது

பரிமேலழகருக்கு முன் ஒன்பது உரையாசிரியர்கள் இருந்துள்ளனர் என்பதும், பரிமேலழர் உரையில் பரிதியார் உரையை எடுத்துக்காட்டியும் அவர் உரையைப் பின்பற்றி உரை எழுதியுள்ளமையிலிருந்தும் பரிதியார் அவருக்கு முன் வாழ்ந்த காலிங்கரின் உரையை பின்பற்றுவதாலும். ஐயனாரிதனார், ஆண்டாள் பாடல்களில் காணப்படும் எட்டுவகை மாலை மார்கழி தீர்த்தம், பற்றி பரிதியார் உரையில் குறிப்பிடுவதில் இருந்தும், பரிதியார் கி.பி 13 – ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர் எனக் கருதலாம். எனவே பரிதியாரின் காலம் பரிமேலழகருக்கு  காலத்திற்கு முன், அதாவது 13 – ஆம் நூற்றாண்டின் முற்பகுதி எனக் கொள்ளலாம்.

சமயம்

பரிதியார் சைவ சமயம் சார்ந்தவர் என்பதற்கு இவரது உரையிலேயே பல சான்றுகள் உள்ளன. கடவுள் வாழ்த்தில் கற்றதனாலாய என்னும் குறளுரையில் நற்றாள் என்பதற்குச் சிவன் ஸ்ரீபாதம் என்று பொருள் உரைக்கின்றார். மலர் மிசை ஏகினான் என்பதற்கு, பக்தசனங்களிட்ட புஷ்பத்தின் மேல் எழுந்தருளியிருக்கும் சிவன் ஸ்ரீபாதம் எனவும் இறைவன் பொருள் சேர் புகழ் என்பதற்குச் சிவகீர்த்தி என்றும் அறவாழி அந்தணன் என்பதற்கு, தன்மம் என்னும் சமுத்திரமாகவுள்ள பரமேசுவரன் என்றும் பொருள் கூறுகின்றார். கோளிற் பொறியில் குணமிலவே (9) என்னும் குறளில் எண்குணத்தான் என்பதற்கு எட்டுகுணமாவன அனந்த ஞானம், அனந்த வீரியம், அனந்த குணம், அனந்த தெரிசனம், நாம மின்மை, கோத்திரமின்மை, அவா வின்மை, அழியா இயல்பு எனச் சைவ சமயச் சார்பாக விளக்கம் தருகின்றார்.

வாய்மை அதிகாரத்தில் உள்ள பொய்யாமை அன்ன என்னும் குறளில்(269) எல்லா அறமும் தரும் என்பதற்குச் சிவபுண்ணியம் எல்லாம் உண்டாம் என்கிறார்.

பொருட்பாலில் முறைசெய்து என்னும குறளுரையில்(388) மக்கட்கு இறை என்று வைக்கப்படும் என்பதற்கு உலகத்தை இரட்சிக்கின்ற பரமேஸ்வரன் என்று எண்ணப்படும் என்றும் யான் எனது(310) என்னும் குறளுரையில் துறந்தார் என்பதற்கு, தொண்ணூற்றாறு தத்துவத்தையும் உடலோடே துறந்தார் என்றும் பொருள் கொள்கிறார்.

உரையில்  மணிப்பிரவாளம் நடை

மலர்மிசை (3) – பக்த சனங்களிட்ட புஷ்பத்தின்மேல் எழுந்தருளி இருக்கும் சிவன் ஸ்ரீபாதத்தை மனசிலே பற்ற வைத்தார் பூமியின் கண் சகல பாக்கியமும் அனுபவிப்பார்.

வீழ்நாள் படாஅமை(35) – அவமே நாட்போகாமல் தன்மமே செய்க. அது இனிமேல் சென்மமே இல்லாமல் சென்ம வழியை அடைக்கும் கல்.

புகழ்புரிந்(59) – இன்னாள் பதிவிரதை என்று சொல்லும் சொல் பெறாத மடவாரை மனையாளாகவும் உடையான். தன்னை வேண்டார் முன்னே இன்னார் ரிஷபம் போல திரிகிறான் என்று ஏசுதற்கு இடமாவான்.

இடிப்பாரை(447) – அடிச்சுப் புத்தி சொல்லுகின்ற பெரியோரையல்லாமல் தன் விபரீத புத்தியினாலே மிகுந்த மன்னவன், கெடுப்பார் இல்லாத போதும் தானே கெடுவான்.

இருநோக்கு(1091)  இரண்டு பார்வை உண்டு நாயகிக்கு ஒரு பார்வை விரகம் தரும். ஒரு பார்வை விரகத்துக்கு மருந்தாகிய அமுதப் பார்வை கொடுக்கும்.

உரையில் வழக்குச் சொல்

நானாபதார்த்தம்(52),வேணும்(116) கனவிலும் பிறவாது(139) எப்படி என்றால்(140)வயிறு வளர்ப்பது(183) சுட்டுப்போடும்(202),பூமிவெட்டுகிற பேரையும் தாங்கும்(151) தன்ஆன்மா ஈடேறப் பார்பானை(268) சுட்டசோறு, மண்ணினால் பண்ணின பொம்மை(407) சிரிக்கச் சொல்லிக் கெடுக்காமல், அடிச்சு புத்தி சொல்லுகின்ற பேர்(447)

கதையுடன் கூடிய உரை

பெற்றார் பெறின் பெறுவர் பெண்டிர் பொருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு(58)

பர்த்தாவும் பூலோகமும் இவன் பதிவிரதை என்னும் மனமகிழ்ந்த கற்பினால் பெறுவள், தேவர்கள் செய்யும் சிறப்பை. இதற்கு ஒப்புமையாகக் கண்ணகியாளைக் கண்டு கொள்க.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்கு(269)

தலையெழுத்து முடிந்துவர அப்போது கூற்றுவனையும் வெல்லலாம். தவத்திற் பெரியர்க்கு அதற்கு நந்திகேசுவர தேவனையும் மார்கண்டேயனையும் கண்டு கொள்க.

யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்

வாய்மையின் நல்ல பிற(300)

ஆத்மாவைச் சென்னத்திலே தள்ளாமல் திருவடியிலே சேர்ப்பது சத்தியவாக்கியம் அன்றி, வெறொன்று கண்டிலேம்; அசத்தியம் சொன்ன தரும்புத்திரன் நரகங்கண்டான் சத்தியம் சொன்ன அரிச்சந்திரன் ஸ்ரீ பரமேஸ்வரன் பாதம் கண்டு சிவலோகம் சேர்ந்தான்.

பிரசங்கம் போன்ற உரை

நோயெல்லாம் நோய்செய்தார் மேலாவாம் நோய்செய்யார்

நோயின்மை வேண்டு பவர்(326)

ஒருவருக்குத் தான் செய்த விதனம், பின்பு தனக்கு வருகின்ற படியினாலே ஒருவருக்கும் தாங்கள் விதனஞ் செய்யார். அஃது எப்படி என்றால், பிரம்மராட்சதன் ஒரு ராசாவின் மகளைப் பற்றி நின்று சந்தியாவதனம் செய்ய ஆற்றங்கரையிலே வந்து நின்றளவில், பிராமணப் பிள்ளையின் பிள்ளை வாசிக்கிறவனுக்கு அன்றையிற் பாடம் இந்தக் குறள் ஆகையால் அவன் முகசுத்தி பண்ண வந்தான். இதைப் பிரம்மராட்சதன் கேட்டுத் தானொரு பிராமணவடிவாய், இந்தப் பிள்ளை வாய்பாடத்தை இரண்டு பிரகாரங் கேட்டு , நாம் இராசாவின் மகளை நோய் செய்தோமே, நமக்கு அந்த விதனம் பிறகே வரும் என்று பயப்பட்டு, இந்தப் பிள்ளை முன்னிலையாக இராச குமாரத்தியை விட்டுப்போச்சு .

கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கு அதுவிளிந் தற்றே(332)

சந்தையிற் கூட்டம் நாலுபேரும் ஆறுபேரும் வந்து சந்தையில் காரியங்கண்டு மீண்டும் போவார்கள். அப்படி அல்ல செல்வம் எப்படி என்றால், கூத்தாடல் பார்க்க நாலு பேரும் ஆறுபேரும் வந்து கூத்துக்கண்டு, கூத்துக் குலைந்த போது ஒருகாலே பிரிந்து ஒடுவார்கள். அதற்கு ஒக்குமே செல்வத்தின் கூட்டம், எப்படி என்றால் இவன் செய்த புண்ணியத்திற்குத் தக்கதாக இலட்சுமி இருப்பாள், இவன் தவசு மாறி இலட்சுமி போன பின்பு அக்கினி, கள்ளார், இராசா, ஆறு இவையிற்றினாலே செல்வம்போம், இஃது அறிந்து உள்ளபோதே தன்மம் செய்வான் என்றவாறு?

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்

அனைத்தே புலவர் தொழில்

நல்லோரும் நல்லோரும் மனப்பூரணமாகக் கூடியிருந்து. பிரிகிறபோது ஒருவரை ஒருவர் அனவரதகாலமும் நினைத்திருப்பர்.அதுபோல,கற்கும்போது பிரியத்துடனே கற்க, கற்றுவிட்டால் கற்ற கல்வியை மறவாது அதிகரிக்க.

குறளினும் சுருங்கியபொருள்

ஏரி னூழார்அ ருழவர் புயலென்னும்                       

வாரி வளங்குன்றிக் கால்

உழவர் ஏருழார் ; மேகம் மழை பெய்யாவிடில்

அகனமர்ந்து செய்யா ளுரையு முகனமர்ந்து

நல்விருந் தோம்புவா னில்(82)

மனமகிழ்ந்து விருந்து செய்வானிடத்தில் லட்சுமி உறையும்

உறங்கு வதுகோலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு(339)

நித்திரை போல மரணம் விழிப்பது போல பிறப்பு

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை

ஆரஞர் உற்றன கண்(907)

நாயகர் வாராக்காலும் நித்திரை இல்லை ; வந்தாலும் கலவியினால் நித்திரை இல்லை.

சமூக நிலை

பொறை ஒருங்கு(733(கேடறிய(736)ஆங்கமை(740) என்னும் குறள்களில் வேந்து, இறை என்னும் சொல்லுக்குப் பிற உரையாசிரியர்கள் அரசன், வேந்தன், காவலன் என்று உரையெழுத பரிதியார் நாட்டாமைகாரண் என்றே எழுதுகிறார்.

தெய்வம் தொழாஅள்(55)  இதற்குக் குலதெய்வம் கும்பிட்டாள் தன் பர்த்தாவை தெய்யவமென்று தொழுதபடியால் அவள் சொல்ல மழைபொழியும் மார்கழித் தீர்த்தம், மகா தீர்தம் ஆடல் என்றும் யாண்டுச்சென் றியாண்டும்(895) என்பதற்கு எங்கு சென்றாலும் எனப் பிற உரையாசிரியர்கள் உரையெழுத எந்த தேசத்தில் போய் பல தீர்த்தம் ஆடினாலும் என உரை வரைகின்றார்.

வறியார்க்கொன்(221) இதற்கு வறியார்க்குக் கொடுப்பதே கொடை மற்றெல்லாம் வட்டிக்குக் கொடுப்பதை ஒக்கும் என்றும் உள்ளத்தா லுள்ளலுந்த தீதே(282)  என்னும் குறளுக்குத் தவஞ்செய்வார்க்குப் பக்தர்கள் இரங்கிக் கொடுக்கும் பொருள் அன்றியிலே ஒரு திருப்பணி போலே காட்டி வாங்குதல். தன்னுயிர் நீப்பினும்(237) என்பதற்குத் தன்னுயிர் துறக்கும் காலமாகினும் இது பிழைக்கும் என்று ஆடு, கோழி, பன்றியினைப் பிராத்தனைச் செய்வான்  என்றும் விளக்கமளிக்கிறார்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்

அணிஎன்ப நாட்டிற்கிவ் வைந்து (738)

என்னும் குறளுக்கு விளைவு என்பதற்கு விளைவுடமை என மணக்குடவரும், பரிப்பெருமாளும்

பொருளுரைக்க, விளைநுகர் பொருளெனக் காலிங்கரும்  பரிமேலழகர் விளைச்சல் என்றும் கூறப் பரிதியார் பதினாறு தானிய விளைவு என்று கூறுகின்றார் நெல், புல், வருகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, இருசி, எள்ளு, கொள்ளு, பயறு, உளுந்து, அவரை, கடலை, துவரை, மொச்சை சந்தை குறித்த செய்தி பதிவுசெய்கிறார். பரிதியார் தாம் வாழும் காலத்து நடைமுறைகளில் இருந்த சில பழக்கவழக்கங்களைத் தமது குறள் விளக்கத்திற்குப் பயன்படுத்தியுள்ளார்.

குறள் வைப்புமுறை

பரிதியார் பால் குறித்த விளக்கங்களோ, குறள் வைப்புமுறை குறித்த ஆராய்ச்சியோ செய்யவில்லை. அதிகாரத்திற்கு விளக்கம் சுருங்கிய வடிவில் கூறுகிறார். 36 அதிகாரங்களுக்கு விளக்கம் கிடைக்கவில்லை. தெரிந்து தெளிதல் என்னும் அதிகாரத்திற்கு விளக்கம் கூறுகையில் யாதொரு காரியமும் பதறாமல் விசாரித்துச் செய்யவேணும் எனக் கூறுவது, மணக்குடவரும் பரிமேலழகரும் அமைச்சர் முதலாயினரை ஆராய்ந்து தெளிதல் என்று கூறும் விளக்கத்தினும் செய்யும் வினையை ஆராய்ந்து செய்யவேண்டும் எனக் கூறுவது சிறப்புடையதாக உள்ளது.

குறள் வைப்பு முறையில் உரையாசிரியர்கள் பலரும் முதற் குறளில் 22 அதிகாரங்களிலும், இறுதிக் குறளில் ஒன்பது அதிகாரங்களிலும் ஒன்றுபடுகின்றனர். சிலருக்குத் தொடக்கக் குறளாக அமைந்தது பிறருக்கு முடிவாவும், பிறர் முடிவாகக் கொண்ட குறள் மற்றவருக்குத் தொடக்கமாகவும் அமைந்துள்ள தன்மையினைக் காணமுடிகின்றது. முதற்குறளில் பரிதியும் காலிங்கரும் பெரும்பான்மை ஒத்துச் செல்கின்றனர்.

பாடவேறுபாடு

பரிதியார் பிறர் கொண்ட மூலப்பாடத்திலிருந்து 21 குறட்பாக்களில் 22 இடங்களில் வேறுபடுகின்றார்.

பாடவேறுபாட்டுக்கான காரணம்

  1. ஏடெழுதுவோர் பிழைபட எழுதுதல்
  2. ஏடுபடிப்போர் பிழையாகப் படித்தல்.
  3. ஏடுபடித்து சுவைப்போர் பாடங்களை மாற்றுதல்
  4. ஏடுகளைப் பதிப்போர் திருத்தியும், புதுக்கியும் வெளியிடுதல்.

பரிதியார் – பரிமேலழகர்

1.துப்பாற்குத், துப்பார்க்குத்(12)

2.கணமேனும், கணமேயுங்(29)

3.தீண்டில், தீண்டல்(65)

4.சொற்கேட்கில், சொற்கேட்டல்(65)

5.இமைப்பிற்கெடும், நினைக்கப்படும்(169)

6.நன்மையும்நீங்கும், நன்மையின் நீங்கும் (194)

7.நல்லார் எனினும், நல்லாறு எனினும்(222)

8.ஆகும், ஆளும்(251)

9.கொள்வேம், கள்வேம்(282)

10.தனத்தொடு, தவத்தொடு(295)

11.அனைய, அனையர்(310)

12.இன்னாசெய்யாமை, மாணாசெய்யாமை(317)

13.நலன், இலன்(314)

14.செவிக்குணர்வு, செவிக்குணவு(412)

15.செவியுணர்வின், செவியுணவின்(413)

16.கேள்வியஃதில்லார், கேள்வி அல்லார்(419)

17.கைதீமை, கலந்தீமை(1000)

18.தானைக் ண்டன்ன, தானைக்கொண்டன்ன(1082)

19.பேரமர்க்கட்பட்டு ,பேரமர்க்கட்டு(1083)

20.விழியுமென், விளியுமென்(1209)

21.அழியின்மை ,அளியின்மை(1209)

22.நோவேல் அவரைக், நோவேம் இவர்தம்(1236)

மேற்கண்ட பட்டியலில் பாடம் வேறுபாடு, மூலபாடத்தில் சில எழுத்துகளை மட்டும் மாற்றி உள்ளார் (‘ர்’ ‘ற்’ ’ங்’ ‘ம்’),  அதுபோலவே ஒரே பொருளைத் தரக்கூடிய நிகரன் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார் இமைப்பிற்’ நினைக்கப்படும்) எனவும் ஒரூஉ நடைகேற்ற பாடம் ‘மனத்தொடு’ ‘தனத்தொடு’ எனவும் அமைந்துள்ளதைக் காணலாம்.

நயமுடைய பாடம்

கொள்வேம் எனப் பாடங் கொண்டு திருப்பணி போலே காட்டி வாங்குதல் எனப் பொருள் விளக்கம் செய்கின்றார். இவ்விளக்கம் உலகியலுக்கு ஒதத்தாகக் காணப்படுகின்றது. அதுபோல நல்லார், தனத்தொடு, கேள்வியல்லாதில்லார் எனக் கொள்ளும் பாடங்களும் நயமுடையதாக இருக்கின்றது.

பொருந்தாப் பாடம்

அனைய, நலன், கைதீமை, தானைக்கண்டன்ன எனப் பாடங்கொண்டு உரையெழுதும் இடங்கள் பொருத்த முடையதாக அமையவில்லை.

உரைவேறுபாடு

பரிதியார் 25 இடங்களில் பிற உரையாசிரியர்கள் உரையிலிருந்து வேறுபடுகின்றார்.

உரை வேறுபடுவதற்கான காரணங்களாக,

  1. பாடவேறுபாடு
  2. சொற்பிரிப்பு
  3. கொண்டுகூட்டு
  4. காலமரபு
  5. இலக்கண வேறுபாடு
  6. தொகைப்பெயர் விளக்கம்
  7. ஒரு சொல்லுக்குப் பலபொருள்
  8. நயம் கூறல்
  9. விளக்கம் கூறல்
  10. பிற இலக்கியச் செய்தியைப் புகுத்துதல்
  11. கதையைப் பொருத்துதல்
  12. கொள்கை முனைப்பு

எனப் பேரா. இரா. சாராங்கபாணி பட்டியலைக் கொடுக்கிறார். இதனடிப்படையில் பரிதியார் உரையை நோக்குழி,

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்

பற்றிலர் நாணார் பழி(506)

இக்குறளில் அற்றார் என்பதற்கு ஒழுக்கம் அற்றார் என மணக்குடவர் உரையெழுதுகின்றார். பரிதியார் பொருளும் கிளையும் கல்வியும் அற்றாரை என விளக்கமாகப் பொருளுரைக்கின்றார்.

மணக்குடவர் கூறும் ஒழுக்கம் அற்றார் என்பதில் ஒழுக்கம், நற்குணம், நற்செயல் அனைத்தும் பொது சொல். ஆனால் பிரிதியார் கூறும் விளக்கம் பொருளற்றார் வறுமையாலும், கிளையற்றார் உலகில் ஒரு பற்றுக்கோடும் இல்லாமையானும் கல்வியற்றார் அறியாமையினாலும் தீய செயல்கள் செய்வாராகலின் அவரை நம்பாதே என்று கூறுவது மணக்குடவர் உரையினும் சிறப்புடையது.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்

உயிர்நீப்பர் மானம் வரின்(969)

என்னும் குறளுக்கு மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர்,பரிமேலழகர் ஆகியோர் ஒரு மயிர் நீங்கினால் கவரிமான் உயிர் விடும் என்ற ஒரே கருத்தைக் கூறுகின்றனர். பரிதியார் ஒரு மயிர் சிக்கினாலே என்று பொருள் கொள்கின்றார். மயிர் திரள்களில் ஒன்று சிக்கிய மாத்திரத்திலேயே உயிர் விடும் கவரிமான். தன் வாழ்க்கையில் மனத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்படுமாயின் உயிர்விடுவர் சான்றோர் என்பதைக் குறிப்பிட மயிர்ச்சிக்கலைக் கூறுகின்றார் .இக்க்ருத்து பிற உரையாசியரினும் வேறுபட்டு நுட்பமாக உள்ளது.

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்(69)  என்னும் குறளுக்கு, தான் பெற்ற காலத்தினும் மகிழும் என மணக்குடவரும் மற்றிவனைத் தான் முன்னம் ஈன்றெடுத்த அப்பொழுதினும் பெரிதும் மனமகிழும் எனக் காலிங்கரும் யாதும் அறியாத பெண்டிரும் மகிழ்வர் எனப் பரிப்பெருமாளும் தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மனம்மகிழும் எனப் பரிமேழகரும் பொருளுரைக்க ஈன்ற காலத்தில் ஆண்பிள்ளை என்று சொல்லக் கேட்ட மகிழ்ச்சியிலும் எனப் பரிதியார் பொருள் உரைக்கின்றார்.

பிறர் கூறா விளக்கங்கள் பரிதி உரையில் மட்டும் காணப்படுபவை

மனத்தது மாசாக மாண்டார் நீராடி(278) – மார்கழி தீர்த்தம், மகா தீர்த்தம்

நாளது ஒன்றுபோற் காட்டி(334) – ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி என்று தோன்றும் நாள்

எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும்(435) நெருப்பின் முன்னர் வைக்கோற் போர் பட்டது போலவும், தூறு போலவும் கெடும்.

கண்டு கேட்டு உண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்(1101) – விளக்குக் கண்டு அழிந்த விட்டிலும், யாழ் கேட்டு அழிந்த அசுணமும், இரை கண்டு அழிந்த மீனும், சென்பக மணம் உண்டு அழிந்த வண்டும்,   மெய்யின்பம் கண்டு அழிந்த யானையும் ஒவ்வொரு புலனால் அழிந்தன.

உறுதோ றுயிர்தளிர்ப்பத் தீண்டலால்(1106) – தென்றற் கொடுமையாலும் சந்திரன் கொடுமையாலும் வற்றின சரீரத்தை நாயகி தீண்டச் தளிர்கையினாலே

சிறப்பான உரைப் பகுதி

ஆண்மை(148) – சமர்களத்தில் வெட்டி மீண்டு வருகின்ற ஆண்மையல்ல, பிறர்மனை நோக்காமை இருத்தலே ஆண்மை.

வன்மை(153) – வன்மையாவது மலையின் உச்சியின் மேலே ஒரு கல்லை ஏற்றுதல் கடுகிலே கடலை அடக்குதல் முதலியன.

பயன்மரம்(216) – பயன்படு மாமரம், பலாமரம், பனைமரம்

துறந்தார்(310) – தொண்ணூற்றாறு த்த்துவத்தையும் உடலோடு இருக்கையிலே புளியம்பழம் ஓடும் போலே துறந்தார்.

எழுபிறப்பு(62) – தேவர், மனிதர், மிருகம், ஊர்வன, நீர்வாழ்வன, பட்சி, தாவரம்

கோட்டுப்பூ (1313) – செண்பகப் பூ, பாதிரிப்பூ, புன்னைப்பூச் சூடினும்.

பொருந்தா உரைகள் போல் தோன்றுவன

பீலீபெய் சாக்காடும் அச்சிறும் பண்டம்

சாம மிகுத்துப் பெயின்(475)

இக்குறள் வலியறிதல் அதிகாரத்தில் மாற்றானின் வலியறிதலைப் பற்றி பேசுகின்றது அதனை அதிகார விளக்கத்தில் வலியறிதலாவது மாற்றான் சத்துவத்தை அறியவேண்டுமெனப் பரிதியாரும் பிற உரையாசிரியர்களும் பொருளுரைக்கின்றனர். இக்குறளுக்கு எளியவர் என்று பலரோடு பகை கொள்வான் தான் வலியனேயாயினும் பலர் தொக்கவழி வலியழியும் () என்று பொருள்படும்படிப் பரிமேலழகர் கூற, பரிதியார் நொய்ய பீலியாகிலும் கனமாக ஏற்றினால் வண்டி அச்சு முறியும்; அதுபோலப் பெலமில்லாதார் பலர் கூடினாலும் சத்துவமாம்; ஆகையால் அரசன் வீரராகாத பேரையும் கனம்பெறக் கூட்டிக் கொள்ளுவான் என அரசன் வலிமையில்லாதவர்களையும் தன் படையில் சேர்த்துக்கொள்ளவான் எனப் பொருள்பட உரையெழுதுகின்றார்.

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா

உவகையும் ஏதம் இறைக்கு (432)

வேண்டும் வழி பொருள் கொடாமையும் நன்மையினீங்கிய மானமும் அளவிறந்த வுவகையும் அரசனுக்கு குற்றம் எனப் பரிமேலழகர் உரைக்க பரிதி குற்றம் என்றதும் தன் பேரிலே வராமல் அழகு உண்டாக நடப்பானாகில், இறையென்று சொல்லப்பட்ட சிவனும் இவனைப் பிரியமாக மனத்துக்குள்ளே கண்டிருப்பர் என விளக்கும் உரையில் இறையென்று சொல்லப்படும் சிவனும் இவனைப் பிரியமாக மனத்துள்ளே கண்டிருப்பார் என்று கூறுவது பொருத்தமாக அமையவில்லை.

நுனிக்கொம்ப ரேரினா ரஃதிறந் தூக்கி

னுயிர்க்கிறுதி யாகி விடும்(476)

அடிப்பனையில் நின்று மரத்தில் பழம் பறிக்காமல் நுனிக்கொம்பிலே ஏறினார் போல, கெட்ட புத்தியை எண்ணாமல் உறுதியான காரியத்தை விசாரிக்கில் அக்காரியம் பலிக்கும் எனப் பரிதியார் கொள்ளும் உரையில் கிளையில்லாத பனையைக் காட்டி உரை வகுத்தமை பொருந்தாது.

தும்மச் செறுப்ப வழுதா ணுமருள்ள

லெம்மை மறைத்திரோ வென்று(1318)

தும்மல் உண்டாகக் கண்ட நாயகி அழுதாள்; உமது நாயகி வாழ்த்தத் தும்முவ தன்றி இவள் வாழ்த்துத் தும்ம ஒண்ணாது என்று ஊடினாள். செறுப்ப என்பதற்று உண்டாக என்னும் பரிதியின் பொருள் எம்மை மறைத்திரோ என்னும் வரும் தொடரோடு இயையவில்லை. அதற்கு அடக்க என்னும் பொருளே பொருந்தும்.

பொருள்கோடல்

 பரிதியார் திருக்குறளைப் புரிந்துகொள்ளுவதற்கு /பொருள் கொள்வதற்கு அடிப்படையாக சைவசமயத்தையும, புராணகதைகளையும், வழக்கில் பயன்பாட்டில் இருக்க கூடிய கதைகளையும் உவமைகளையும், வழக்குச் சொற்களையும கொண்டு, குறளின் கருத்தினை அறிந்து கொண்டு மேற்சொன்னவைகளை அடிப்படையாகக் கொண்டு பொருள்விளக்கம் செய்கின்றார்.

நிறைவாக

பரிதியாரின் உரையைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது,

  • பரிதியார் 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர்.
  • திருக்குறளை சைவசமயம் சார்ந்து கட்டமைக்கின்றார்.
  • திருக்குறளை பொதுஜன தளத்திற்கு கொண்டுசெல்லும் விதமாக மிக எளிய

முறையில் உரைவரைகிறார்.

  • வடசொல் மிகுதியாக ஆளுகிறார்.
  • பிற உரையாசிரியர்கள் கொண்ட குறள் வைப்புமுறை, பாடம் கொள்ளும் முறை இருந்தும் சிற்சில இடங்களில் உரையிலிருந்து வேறுபட்டும் ஒன்றுபட்டும் அமைந்துள்ளது.
  • வழக்கில் உள்ள புராணீகக் கதைகளையும் அவர் காலத்தில் புழக்கத்தில் உள்ள சொற்களையும் சமூக பழக்கவழக்கங்களையும் தமது உரையில் பயன்படுத்தியுள்ளார்.
  • இவருடைய உரைகள் சில பொருத்தமாகவும், பிறர் கூறும் உரையிலிருந்து சிறப்பாகவும் அமைந்திருக்கிறது.
  • ஆனால் சில குறளுக்கு விளக்கம் கூறுமிடத்துக் குறளுக்கும் பொருளுக்கும் பொருந்தவனவாக இல்லை என்பதை அறியமுடிகிறது.  ஒரு காலத்தின் தேவையைக் கருதியே ஒரு பிரதி வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.  அவ்வாசிப்பில் உருப்பெற்ற விளக்கங்களின் வழியே அக்கால சமூக முறைமைகளை அறிய இயலும். அந்த வகையில் பரிதியின் உரை  தவிர்க்க இயலாத திருக்குறள் வாசிப்பு .

உசாத்துணை

  1. தண்டபாணி தேசிகர், 1981,1983,1986, 1990. திருக்குறள் உரைக் களஞ்சியம், மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்.
  2. சாரங்கபாணி, இரா.1989,1992. திருக்குறள் உரைவேற்றுமை, அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
  3. சே. கல்பனா, 2009.பரிதியார் உரை, சென்னை: தமிழ்மண் பதிப்பகம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருக்குறள் பரிதியார் உரை

  1. வணக்கம் தாங்கள் பதிப்பித்த பரிதியார் உரை / உரைத்திறன் புத்தகங்கள் கிடைக்கவில்லை…..தமிழ்மண் பதிப்பகத்திலும் இருப்பு இல்லை…கிடைக்குமாறு வழி செய்யுங்கள் அம்மா
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *