புலவர் இராமமூர்த்தி

 

திருவாரூரில் வாழ்ந்த வேளாண்  குடியினரைப் பற்றிச் சேக்கிழார்  இப்பாடலில் கூறுகிறார்!  அவர்கள்தம்  நிலத்தில் விளைந்த பயிர்களில் ஆறில் ஒரு பங்கினை உடனே அரசுக்குச்  செலுத்திவிடுவர். அதன் பின்னர் எஞ்சிய விளை பொருளைக் கொண்டு ஐவகைக் கடமைகளை செய்தனர். ஐவகைக் கடமைகள் யாவை? அவை முன்னரே திருவள்ளுவரால் கூறப்பெற்றன. அவை,

‘’தென்புலத்தார்,    தெய்வம்,   விருந்து, ஒக்கல்,   தான் என்றாங்கு

  ஐம்புலத்தார்   ஓம்பல்  கடன்!’’

என்பனவாகும். இவ்வைந்தையும் பேணுதலே  அறம் ஆகும். இவற்றைப் ‘’பரவரும் கடவுள் போற்றிக், குறவரும், விருந்தும் , பண்பின் விரவிய கிளையும் ‘’ எனப் பாடிச்  சேக்கிழார் விளக்குகிறார்.இவற்றால் குடிகளே ஓங்குவர்  என்கிறார்.

‘’வரப்புயர நெல்லுயரும், நெல்லுயரப்  பயிர் உயரும், பயிர் உயரக்  குடியுயரும் , குடியுயரக் கோன் உயர்வான் ‘’ என்பது ஒளவை வாக்கு! பயிர் உயர்ந்தால் கோனுக்கு வரி செலுத்தலாம், தென்புலத்தாராகிய முன்னோர் வழிபாடு செய்யலாம், தெய்வ வழிபாடும் செய்யலாம் ,புதியவராகிய விருந்தினரை உபசரிக்கலாம், தம் சுற்றத்தாரையும் பேணலாம். இவ்வகையில் முழுமையான அறத்தைச் செய்தலே  இல்லறம் எனப்படும். இவற்றால் ஒருவனுடைய குடிமக்கள் அனைவருமே புகழ் பெறுவர்.  இதனைச் சேக்கிழார் சுவாமிகள்,

‘’ அரசுகொள்   கடன்கள் ஆற்றி , மிகுதி கொண்டு அறங்கள் பேணிப்

  பரவரும்    கடவுள்    போற்றிக்    குரவரும்  விருந்தும்,  பண்பின்

  விரவிய  கிளையுந்     தாங்கி  விரவிய  குடிக   ளோங்கி

  வரைபுரை  மாடநீடி  மலர்ந்துள  பதிக  ளெங்கும் ‘’

என்று பாடுகிறார். இப்பாடலில்  வேளாண் குடியினர் தம் வயலில் விளைந்த நெல்லில் ஆறில் ஒரு பகுதியை , அறுத்தவுடனே , அப்போதே அரசாங்கத்துக்குச் செலுத்தி விடுகின்றனர். இன்றைய வரி விதிப்பை நோக்க , ஆறில் ஒருபங்கு வருமானம்  ஏறத்தாழ பதினாறு விழுக்காட்டுக்கு மேல் அமைகிறது. அவ்வாறு அதிக வரி பெற்ற அரசன், நிலத்துக்குத் தேவையான நீர், உரம், மற்றும் வேளாண் இடுபொருள்களை வழங்கி விடுவான். மேலும் எரிவாரியத்தின் மூலம் நீர்ப்பாசனத்துக்கு உதவுவான். பஞ்சவார  வாரியத்தின் மூலம், எதிர்பாராத இயற்கை நிகழ்வுகளால் உருவாகும் பஞ்சம் என்கின்ற வற்கடம் நேர்ந்தால் வேளாண் மக்களுக்கு வேண்டிய இடுபொருள்களையும்,  நிதி உதவிகளையும் அரசனே வழங்கி விடுவான் ஆதலால் விளைச்சலைப் பெற்றபோதே, ஆறில்  ஒருபங்கு வரியை மக்கள் மகிழ்ச்சியுடன் செலுத்தி விடுவர். அதன் பின்னரே மற்ற செலவுகளை செய்வர் . இதனைச் சேக்கிழார், ‘’அரசுகொள் கடன்கள் ஆற்றி, மிகுதி கொண்டு அறங்கள்பேணி ‘’ என்கிறார். அதாவது அடுத்த ஆறிலொரு பங்கு வருவாயை , வழிபாட்டுக்கு உரிய திருக்கோயில்களுக்கு  நிவந்தம் வழங்கி, மேலும்  திருவிழா, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றுக்காகப் பயன் படுத்திக்  குடும்ப நலம் பேணுவர். இதனைச் சேக்கிழார், ‘’ பரவரும் கடவுள் போற்றி ‘’  என்று    குறிக்கிறார்.   அடுத்த   ஆறிலொரு   பங்கை ,   வழிப்போக்கராகவும், கூத்தாடிகளாகவும் , இசை வாணர்களாகவும் தம் ஊர் நோக்கி வந்த புதியவர்களாகிய  விருந்தினரைப்  பேணப்  பயன்படுத்துவர். அதற்காக சத்திரம், சாவடி ஆகியவற்றை அமைத்து ஊர்நலம் பேணுவர். மேலும் அடுத்த ஆறிலொரு பங்கினை முன்னோர் வழிபாட்டுக்காகப் பயன் படுத்திப் பரம்பரை நலத்தை உறுதி செய்து கொள்வர். இனி எஞ்சிய ஆறிலொரு பங்கினை உற்றார், உறவினர் ஆகியோருக்கு ஆற்ற வேண்டிய இல்லறக் கடமைகளை நிறைவேற்றி இம்மை வாழ்வின் இன்பங்களை உறுதி செய்து கொள்வர். இவ்வகைகளில் செலவு செய்யும்போதே எஞ்சிய பொருள்களின் மூலம் தம் வாழ்விடமாகிய வீடுகளைக் கட்டிக்கொண்டும், மாடு, முதலான வீட்டு விலங்குகளை வளர்த்தும் இனிய வாழ்க்கையை மேற்கொள்வர். இதனைக் கவிஞர், ‘’குரவரும், விருந்தும் பண்பின் விரவிய  கிளையும் தாங்கி ‘’ என்று பாடுகிறார். ‘’ விரவிய குடிகள் ஓங்கி ‘’ என்ற தொடரால் குடிமக்களின் ஒற்றுமை , பழக்க வழக்கங்கள் இவற்றால் ஊர்மக்களின் இணைந்த வாழ்க்கை வளத்தைச் சேக்கிழார் புலப்படுத்துகிறார்.ஆதலால் தெருக்களும், ஊர்மன்றங்  களும், சாலைகளும், சாத்திரங்களும் , அமைந்து விளங்கின. இதனைப்  புலவர் பெருமான், ‘’வரை புரை மாடம் நீடி மலர்ந்துள பதிகள் எங்கும்!’’ என்று பாடுகிறார்.

ஆகவே ஊரில் வாழும் ஒவ்வொருவரும் வேளாண்மையால், பக்திநெறியால், குடும்பவளத்தினால், துணைத்தொழில்களால், விருந்தோம்பலால் ஒருங்கி ணைந்து அரசனைப்  போற்றி அன்புடன் வாழ்ந்தனர், என்பதை இப்பாடலால் சேக்கிழார் கூறுகிறார். ‘’ மேழிச்செல்வம் கோழை படாது!’’ ‘’உழுதுண்டு வாழவாரே  வாழ்வர் ‘’ என்ற அனுபவ மொழிகளின்  ஆழமான நுட்பத்தை நாம் உணர்ந்து கொள்கிறோம்!

=========================================================

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *