எஸ் வி வேணுகோபாலன்

 

குழந்தைகள் நம்மைப் பரவசம் கொள்ள வைப்பவர்கள். சிரிக்காத உதடுகளையும் கீறி அதில் புன்னகை பூக்கவைக்கும் மந்திரம் குழந்தைகளுக்கு வாய்த்திருக்கிறது. கனத்த இதயத்தை இலேசாக்கிவிடும் வித்தை அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ‘அடுத்தது காட்டும் பளிங்கு போல்’, நமது நெஞ்சம் கடுத்தது காட்டும் கண்ணாடி அவர்களது கண்கள்! குழந்தைகள் தினத்தில் மட்டுமல்ல, எப்போதுமே குழந்தைகளைக் கொண்டாடுவோம்!

எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியான சமூக, பொருளாதார பின்னணியில் பிறப்பதில்லை. அவர்களது எதிர்காலத்தை அவரவர் வாழ்விடமும், சூழலும் தீர்மானிக்கின்றன. அதுவும் பெண் குழந்தைகள் எனில், பிறக்க அனுமதிக்கப்படுவதே சாதனை. அதன்பிறகும் தொடரும் கொடுமைகள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை.

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன்வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டுக்
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி ….

என்று ‘துலாபாரம்’ எனும் திரைப்படத்திற்கான பாடல் ஒன்றில் எழுதினார் கவிஞர் கண்ணதாசன்.

ஆண்டுதோறும் 6 லட்சம் குழந்தைகள், பிறந்த 28 நாட்களுக்குள் கண்ணை மூடிவிடுகின்றன என்கிறது யூனிசெஃப் நிறுவனத்தின் அறிக்கை. தப்பி வளரும் குழந்தைகளில் உடல் வலுவோடு இருப்போர் எண்ணிக்கையும் சுவாரசியம் அற்றது. 20 சதவீத குழந்தைகள் மிக மிக உடல்வலு குறைவான – ஊட்டச்சத்து போதாத எண்ணிக்கையில் இருக்கின்றனர். நாம்தான் உலக பட்டினி நாடுகள் வரிசையில் 103வது இடத்தில் இருப்பவர்கள் ஆயிற்றே!

51 சதவீத பெண்கள் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதிலும், கர்ப்பிணிப் பெண்களில் 65 முதல் 80 சதவீதம் வரை இந்த பிரச்சனையால் பாதிப்புற்று இருப்பவர்கள். இவர்கள் சுமக்கும் பிள்ளைகள் எப்படி வலுவாகப் பிறந்து உடல் நலத்தோடு வளர முடியும்? பட்டினிக் கொடுஞ்சிறைக்குள் பதறி வாழும் மனிதருக்கெல்லாம்.. முதலில் வயிற்றுக்குச் சோறிட வேண்டும்.

 

குழந்தைகளைக் கொண்டாட வேண்டும் எனில், அவர்களது இளமைக்காலம் துடிப்புடன் இருக்க வேண்டும். கல்வி பெறும் வயதில் பாடசாலை போகவேண்டும் பாப்பா எழுந்திரு என்று பாட்டுப்பாடி அனுப்ப வேண்டும். ‘தலைவாரி பூச்சூட்டி உன்னைப் பாடசாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை…’ என்று பாவேந்தர் இனிமையாகச் சொல்வதுபோல் ஆசை தீர அனுப்பிவைக்க வேண்டும். ஆனால், நிலைமை என்ன?

கிட்டத்தட்ட ஒரு கோடி குழந்தைகள் பள்ளிக்கூட வாசல் மிதிப்பதில்லை. மகிழ்ச்சிக்கான குறியீட்டு வரிசையில் நமது எண் 133. ‘ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்த மானிடர்கள்’ நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் தேசம் இந்தியா. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், 2009 -17 ஆண்டுகளில் மூன்று பங்கு அதிகரித்திருப்பதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் கூறுகிறது. 90 ஆயிரத்திற்கும் அதிகமான கொடுமைகள், வன்முறைகள், கடத்தல், பாலியல் அத்துமீறல்கள், அராஜக தாக்குதல்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்படுகின்றன.காஷ்மீர் மாநிலத்தில் கதுவா சிறுமி, எட்டு வயதில் எதிர்கொண்ட அதிர்ச்சிக் கொடுமையை நினைத்துப் பார்த்தால், குழந்தைகள் தினத்தை நினைவூட்டும் தகுதி கூட நமக்கு உண்டா என்று கலங்குகிறது நெஞ்சம். குழந்தை திருமணங்கள் இன்னும் நிற்காத நாடு.

குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்புச் சட்டம் எங்கோ உறங்கிக்கொண்டிருக்க, நாடு முழுவதும் சிறுவர், சிறுமியர் கணக்கற்றோர் அன்றாடம் சுரண்டப்படுகின்றனர். குழந்தைகள் இப்படி அலைமோதுவதை எழுத்தாளர் சுஜாதா தமது கவிதை ஒன்றில் குறிப்பிட்டிருந்தார்:

கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்
சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய் ……..***

(முழு கவிதை கீழே தரப்பட்டுள்ளது)

என்று நீளும் அந்தக் கவிதை, சம காலத்திலும் தொடரும் குழந்தைத் தொழிலாளர் அவலத்தை எண்ணி சமூகத்தை வெட்கமுறச் செய்யும்.

Ural Rahul, 15, works on a car at a repair garage in Dimapur, India’s northeastern state of Nagaland, on June 12, 2013, the World Day Against Child Labour. The day, first observed in 2002 and sanctioned by the International Labour Organization (ILO), aims to highlight the plight of children engaged in work that deprives them of adequate education, health, leisure and basic freedoms, violating their rights. AFP PHOTO/CAISII MAO (Photo credit should read Caisii Mao/AFP/Getty Images)

இப்படிப்பட்ட சூழலில்தான், குழந்தைகள் தினத்தை நாம் கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. குழந்தைகள் தினம் என்பது, ஆரோக்கியமான தலைமுறையை அன்போடு வளர்த்தெடுக்க வேண்டிய பொறுப்பை சமூகத்திற்கு நினைவூட்டுகிறது. ஆண், பெண் வேறுபாடின்றி குழந்தைகளை சமமாக பாவிக்க வற்புறுத்துகிறது. வீட்டு வேலைகள் செய்யப்பழக்குவதிலிருந்து விரும்பிய கல்வி பெறச் செய்வது உள்ளிட்டு இரு பாலரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கும் உணர்வை ஊட்டுகிறது.

பாலியல் சீண்டல், பாலியல் வக்கிரம் மற்றும் பலவிதமான பாலியல் கொடுமைகளுக்கு சிறார்கள் அதிகம் உள்ளாகும் செய்திகள் நம்மை உலுக்கி எடுக்கின்றன. பிள்ளைகளுக்கு இவை குறித்து எளிய முறையில் அறிவுறுத்தி, எக்குத்தப்பாக யாரும் நடந்து கொள்வதை சகிக்காத துணிவும், அப்படி நடக்க எத்தனிப்போர் குறித்து உடனே தாயிடம் பகிர்ந்து கொள்ளும் நேர்த்தியும் பழக்க வேண்டியது நம் கடமை.

கற்பனையும், கைவண்ணமும், கனவுகளும் சிறகடிக்கும் பருவம் குழந்தைப் பருவம். குழந்தைகள் உலகம் குதூகலமிக்கது. குழந்தைகள் உள்ளம் பரந்துவிரிந்தது. குழந்தைகள் எளிதில் கோபமுறவும், மிக எளிதில் குளிர்ந்து புன்னகைக்கவும் வரம் பெற்றவர்கள். பாட புத்தகங்களுக்கு வெளியே உற்சாகமான வாசிப்புக்குக் காத்திருக்கும் நூல்கள் குழந்தைகள் கைபடக் காத்திருக்கின்றன. கண்களை அகலமாக விரித்து அவர்கள் மேற்கொள்ளும் வாசிப்பு அனுபவம் கவித்துவமானது. முன்னேற்றமான மாற்றங்களுக்கான நம்பிக்கையின் வேரில் குழந்தைகள் மிக அழகாகத் தண்ணீர் ஊற்ற முடியும். குழந்தைகள் தினம் அதைத்தான் கோருகிறது.

குழந்தைகள் தினம், வளர்ந்த மனிதருக்குள்ளும் குழந்தைத் தன்மை மலர்வதை .வண்ணமுறக் கொண்டாடி வருகிறது. எல்லோருக்குமான உலகத்தை சமைக்கும் பாதையில் குழந்தைகள் தினம் கூடுதல் மகிழ்ச்சியை வீடெங்கும் நிரப்பிக் கொடுக்க வருகிறது. குழந்தைகள் தினம் வாழ்க!.

நன்றி: மகளிர் சிந்தனை (நவம்பர் 2018)

சர்வதேசக்குழந்தைகள் ஆண்டை முன்னிட்டு, இந்தியக் குழந்தைகள்பற்றி சுஜாதா எழுதிய கவிதையை அப்போதே குமுதம் இதழில் வாசித்திருக்கிறேன்… பெரும்பாலான வரிகள் நினைவில் உண்டு. இப்போது இணையத்தில் தேடிப்பார்த்தேன்.. எழுத்துப் பிழையோடும் சில தளங்களில் கண்டேன்… குமுதம் கவிதையைக் கண்ணில் பாராமல் இதை ஏற்றுக் கொள்ள மனம் தயாராக இல்லை. எனினும் கிடைத்தை நீங்களும் வாசிக்கலாம்: (இன்னின்ன வேலைகளையெல்லாம் செய்வாய் என்று குழந்தையிடம் மனம் வெதும்பி உரையாடுவதுபோல் எழுதப்பட்டிருக்கும் இந்தக் கவிதையின் கடைசி வரி, அவன் பிச்சையும் எடுக்க வைக்கப்படுகிறான் என்பதைக் கண்ணில் நீர் வரச் சொல்லி முடிகிறது)

கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்

கூட்டமுள்ள ஹோட்டலில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்

பாயின்றிப் படுத்திருப்பாய் ப்ளாட்பாரத்தில் குளிப்பாய்

பட்டரையில் வெட்டிரும்பால் பகலிரவாய் தட்டிடுவாய்

சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்

சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்

காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல் உடைப்பாய்

கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்

மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்

மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்

கூஜா எடுத்துப்போய் குடிதண்ணீர் கொணர்வாய்

கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்

ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்

ராஜ்ஜியம் முழுவதுமே விழா எடுக்கப்போகின்றோம்

திரைப்படங்கள் எடுப்போம் திண்பண்டம் தந்திடுவோம்

தீவிரமாய் உன் நிலைமை உயர்த்துவதுபற்றி

வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைப்பிடித்து

வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்

குறைபட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு

கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்

சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்

சில்லறையாய் இல்லை, போய்விட்டு அப்புறம் வா ..

*****************************

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “எல்லோருக்குமான உலகத்தை நோக்கி….

  1. தமிழிலே( ஜீவி) த்திருக்கும் ஜீவி
    நீவிர் சிறந்து வாழ்வீர் நீடூழி

  2. There is a pain while not only reading this but also while knowing all these things. We should do something for the betterment of these children. What to do.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *